Wednesday, June 22, 2011

இலையுதிரும் சத்தம் - ஒன்று


இந்த ஜூன் 11-ல் தளம் தொடங்கி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. ஜெத்தா, ரியாத் பயணங்களில் இந்தப் பதிவு தாமதமாகி விட்டது.

'இல்லாவிட்டாலும் நேரத்திற்கு எதையும் செய்பவன்தான் நீ' என நீங்கள் புலம்புவது கேட்கிறது. (ப்ளீஸ் மெதுவாகப் புலம்பவும்)

ஆம்! 'இலையுதிரும் சத்தம்'

இந்தத் தலைப்பின் கீழ் இனி ரெகுலரா புலம்பத்தான் போறேன். புரை ஏறும் மனிதர்கள் அப்படியே கிடக்கிறது இதில் புதுசா ஒரு தொடரா? 'நாய் வாய் வைத்தது போல கொத்திக் கொதறி சாப்பிடாமல் ஒழுங்கா சாப்டுடா' என்பாள் அம்மா. அம்மா கிடக்காள். அப்ப உள்ளவன்தானே இப்பவும்?

##

பிரதி ஞாயிறு சவுதி நேரம் எட்டு மணியில் இருந்து ஒன்பது மணிக்குள் கேபிள் சங்கரின் கொத்து புரட்டா வாசித்து விடுகிறேன்.

ஜாக்கி சேகர் இன்னும் ஒரு படி மேல். 'இரண்டு மணிநேரம், பத்து நிமிடம், நாப்பத்தைந்து செகெண்ட் தாமதமாகிவிட்டது இந்த மினி சான்ட்விஜ் & நான்வெஜ் வெளியிட' என தன் வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறார்.

வாசகர்களும் அவரை மன்னித்து வாசித்து விடுகிறார்கள் / விடுகிறோம். 'எப்படி இப்படியெல்லாம் நேரத்திற்கு எதையும் செய்து விடுகிறார்கள்?' என்று பொறாமையாக வருகிறது.

'வியாழக்கிழமைன்னா விகடன் வரும்' என்கிற நினைப்பைத் தருவது எவ்வளவு உன்னதமோ அவ்வளவு உன்னதம் இந்த நேரந்தவறாமையும். இல்லையா? சரி..ஜெயிக்கப் பிறந்தவர்களோடு எதுக்கு எனக்குப் போட்டி?

என்னையும் நம்பி 397 பேர்கள் 2 வருஷமா பொறுமையாக காத்திருப்பதை நினைத்தால் ஒரு வசனம் நினைவு வருகிறது.

'பாவம் யாரு பெத்த பிள்ளைகளோ'.

சமர்த்து செல்லங்களா..நன்றி!

##

போன வருடம் இதே ஜூன் 11-ல் முதல் தொகுப்பு, 'கருவேலநிழல்' வந்து விட்டது. தளம் தொடங்கியதின் மஹா சாதனை இது. காரணம் நீங்கள்தான். 50, 60, கமெண்ட்ஸ்ல்லாம் தட்டி விட்டதில், 'இவன் கவிதைகளை தொகுப்பா போட்டா நல்லா விற்குமோ என்ற சிந்தனையை பதிப்பகத்தாருக்கு அளித்தீர்கள். பலன், 'கருவேல நிழல்' தொகுப்பாகி விட்டது.

மறு பக்கம், தொகுப்பு வெளியிட்ட வகையில் பதிப்பகத்தாரான வாசுவிற்கு 248 கோடி வருவாய் இழப்பு எனக் கேள்வி. (நஷ்ட்டத்தை இப்ப இப்படித்தான் பேசுறீங்களாமே தமிழ் நாட்ல?). வாசு என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் செய்த தவறுகளுக்கு நான் என்ன செய்வேன் மக்களே?

கொஞ்சம் வாசுவிடம் சொல்லுங்கள். மீறி, வாசு என்னை தண்டித்துதான் ஆகவேணும் என விரும்பினால், திகார் ஜெயிலுக்காவது பரிந்துரை செய்யவும். அங்குதான் அந்த மனுஷி இருக்கிறார்.

அவர் கண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நேரில் அந்தக் கண்களைப் பார்த்து விட வேணும் என்பது என் வாழ்நாள் பிரார்த்தனை.

புரியாமல் உடன் பிறப்புகள் ஆட்டோ எடுக்க வேண்டாம். நான் சவுதியில் இருக்கிறேன். நேரம் மற்றும் பொருள் விரயம் . 'வீட்டுக்கு விட்ரா வண்டியை' என யோசிப்பீர்கள் எனில் அங்குதான் என் மனைவி இருக்கிறாள். அவள் ஒரு 'ஒன் உமன் ஆர்மி'

ஒருமுறை, கோபத்தில் இரண்டு நாட்களாக வீட்டில் சாப்பிடாமல் இருந்தேன். எவ்வளவு சின்னப் பிரச்சினை இது?. இதுக்குப் போய் கையை 360 டிகிரி வலமிருந்து இடமாக ஒரு முறையும், இடமிருந்து வலமாக ஒரு முறையுமாக முறுக்கி, முதுகில் ஒரு குத்து விட்டாள். சும்மா, 'டிங்கி டிங்கி டிங்கி டிங்கி டிங்கி' என்கிற சத்தத்துடன் கண்களில் பூச்சிகள் பறந்தன.

நாளைக்கு, 'சொல்லலையே பாசு?' ன்னு சொல்லக் கூடாது பாருங்க.

##

பதிவுகள் குறைந்து போனதற்கு கூகுள் பஸ் பிரதானமாகிறது. செம ஜாலியா இருக்கு மக்களே அங்கு. நான் இங்கு மாதிரி அங்கிருப்பதில்லை. சண்டையெல்லாம் போடுகிறேன். அவர்களும், 'சரி. போயி வீட்ல யாராவது பெரிய ஆள் இருந்தா வரச் சொல்லு' என்கிறார்கள். டொப்புன்னு படத்த கீழ போட்டுட்டு நலுக்குப் படாமல் ஓடியாந்துருவேன். மறு நாள் 'ஆறிலும் சாவு நூறிலும் சாவு' எனக் கிளம்பி விடுவதும் உண்டு.

சரி இனி பஸ்'சை கொஞ்சம் குறைச்சுக்கிட்டு தளத்தில் பதிவெழுதலாம். நீங்களும் வழக்கம் போல 50, 60 கமெண்ட்டுகளைத் தட்டி விடவும்.

காரணம் இருக்கு. இந்தப் புத்தக சந்தைக்குள் இரண்டாவது கவிதை தொகுப்பையும், புரை ஏறும் மனிதர்களையும் புத்தகமாகப் பார்த்து விட தீர்மானம் இருக்கிறது. வாசு இல்லாவிட்டாலும் வேறு யாராவது ஏமாறாமலா போய் விடுவார்கள்?

இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கு, 'மண்டுகள் துப்பும் மொழி' என்பது தலைப்பு. நல்லாருக்கா மக்கா?

##

அப்புறம், இந்த போகன் ராஸ்கலின் கவிதையைப் பாருங்கள்..

குழித் துறையின்
குறுகலான இடுக்கில்
சைக்கிளைத் திருப்புகையில்
எதிர்பாராத விதமாய்
எதிரே வந்துவிட்டது ஒரு யானை.

ஆனையை அங்கு பார்த்ததும்
திடுக்கிட்டேன்
ஆனையும் என்னைக் கண்டு திடுக்கிட்டது

நான் சிறிய அளவில்
ஆனை பெரிய அளவில்

அவரவர் அளவுக்கேற்றார் போலதானே
திடுக்கிடவேண்டும்?

-போகன்

##

ஏழுகடை நண்பர்களில் ஆகச் சின்னவன் செந்தில்தான். 24 வயது. முத்துராமலிங்கம் கடையில் வேலைக்கு இருக்கிறான். செந்திலால் நடக்க இயலாது. ட்ரை சைக்கிளில் வீட்டில் இருந்து கடைக்கு வருவான். கடை வாசலில் சைக்கிளை நிறுத்தி தவழ்ந்து படியேறி கடையில் அமர்வான்.

கல்யாணம் காட்சிகளுக்கு அவனை பைக்கில் அமர்த்திக் கொண்டு போவோம். இறங்கி, குழந்தை போல நெஞ்சில் அவனை சுமந்து சென்று எங்கள் அருகில் அமரச் செய்வோம்.

இந்த செந்திலுக்கு திடீரென நடக்க ஆசை வந்து விட்டது போல. பேப்பரில் விளம்பரம் பார்த்து ஆந்திராவில் எங்கோ அறுவை சிகிச்சை மூலமாக நடக்கச் செய்வதாக எங்களிடம் கொண்டு வந்தான்.

எங்கள் என்கிற நாங்கள் ஒரு 40 பேர்கள் இருப்போம், 'ஏழு கடை நண்பர்கள்' எனச் சொல்லிக் கொண்டு. நாலஞ்சு பேர்கள் மட்டும் வெளி நாடுகளில் இருக்கிறோம் என்றாலும் எல்லோருமே அன்றாடங் காய்ச்சிகள்தான்.

செலவோ ரெண்டு லட்சத்துக்கு கிட்டக்க. ஆனாலும் முடிவு செய்தோம். நணபன் சரவணன் மட்டும் கப்பலில் கேப்டனாக இருக்கிறான். அவன் செலவில் பெரும் பகுதியை ஏற்றுக் கொண்டான். அறுவை சிகிச்சை முடிந்தது.

மஹா திருமணத்தில் வண்டியில் வந்திறங்கிய செந்திலைத் தூக்கி வரவில்லை. முத்துராமலிங்கம் கழுத்தில் கையை மாலை போல போட்டுக் கொண்டு 'நடந்து, நடந்து, நடந்து, நடந்து, நடந்து, நடந்து' வந்து இருக்கையில் அமர்ந்தான்.

மகள் திருமணத்திற்காக கண் கலங்கினேனா.. செந்தில் நடந்ததைக் கண்டு கண் கலங்கினேனா? தெரியல. ஆனால் செந்தில் நடந்தான். இப்பவும் நடக்கிறான்.

ஏழு கடை நண்பர்கள் போலவே கூகுள் பஸ்'சிலும் ஒரு இயக்கத்தைப் பார்க்கிறேன்.வெட்டி அரட்டை மட்டும் அங்கில்லை. கேவிஆர் ஒரு பஸ் விடுகிறார்.

 'ப்ளஸ் டூவில் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவியால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை. உதவி தேவை' என்பது போல. உடன் நண்பர்கள் இணைகிறோம். கிடு கிடுவென காரியம் ஆகிறது. ஆகிக் கொண்டே இருக்கிறது...

சீக்கிரம் படிக்கத் தொடங்கி விடுவாள் அந்த மாணவி. பிறகென்ன செய்வாள்? அவள் குழந்தை அல்லாத வேறு குழந்தைகளை படிக்க வைப்பாள்.

படிப்பு வாழ்க்கையையும் தருகிறது. படிக்கவும் வைக்கிறது. இல்லையா?

ஏழுகடை விரிந்து உலகம் ஆகி விட்டதா, உலகம் சுருங்கி ஏழு கடை ஆகி விட்டதா என்றிருக்கிறது எனக்கு.

இதை தளத்தில் வெளியிட விரும்பி குழுவில் கேட்டேன். 'க்ளோஸ்ட் சர்க்கிளா இருந்தா நல்லது பெரியப்பு' என அபிப்ராயப்பட்டார் முகிலன். என் க்ளோஸ்ட் சர்க்கிள் நீங்களும்தானே. எனவே வெளியில் சொல்ல வேண்டாம். முக்கியமா முகிலனுக்கு

.ஏழு கடை என்கிற இணய உலகில் இணைய விரும்பினால், நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணனும். கேட்டீங்களா? 'போறான் லூசு'ன்னு குழு அனுமதிக்கும் போது கூப்பிடுவேன் ..

##

அப்புறம், ஏழுகடை நண்பர்களிடம் இன்னொரு விசேஷம் உண்டு. ஏழுகடைக்காரனை சிவகங்கையில் யாரும் கை வைத்து விட முடியாது. இவன் மேலேயே தவறு இருந்தாலும் அடித்தவனை அடித்து விட்டுத்தான் எங்க ஆளை விசாரிப்போம். இதன் மார்க்கமாக 15 நாட்கள் ஜெயிலில் இருந்த அனுபவமெல்லாம் உண்டு.

போலீஸ் ஸ்டேசன் என்றாலே ஒண்ணுக்கு போகிற குடும்பத்தில் இருந்து வந்தவன்தான். (அப்ப 15 நாள் ஜெயிலில் இருந்தால் எவ்வளவு ஒண்ணுக்கு போயிருப்பார்கள் என்கிற கவலை இப்ப வரையில் இருக்கு)

இது வேறு. இதைப் பிறகு பேசுவோம். இவ்வளவு நாட்கள் இதைப் பேசாததற்கு மஹாவிற்கு மாப்பிள்ளை கிடைக்காதோ என்கிற பயம்தான்... இனி என்ன?

இதை எதுக்கு சொல்ல வர்றேனா,

நம் ஏழுகடைக்காரனான நம் (ரெண்டு நம் போடுறனோ. பரவால்ல இருக்கட்டும்) நேசமித்திரன் ஒரு உதவி கேட்டிருந்தான். இப்படி..

'எனது மரியாதைக்குரிய நாடகவியலாளர் ச.முருகபூபதி இயக்கும் புதிய நாடக ஒத்திகை 10-06- 2011 முதல் துவங்கியது.மிக பிரம்மாதமான காட்சிவரிசை, மண் ஒட்டியிருக்கும் வசனங்கள் என பித்தனுபவமாய் இருக்கிறது.உதவிகள் வேண்டி தவிக்கிறது குழு'

என்னைக்குப் போய் வாய் விட்டு கேட்டிருக்கிறார்கள் நம்மாட்கள்? நாமளா நகர்ந்தாத்தான் உண்டு. நான் நகர்ந்து விட்டேன். விருப்பம் எனில் நீங்களும் நகரலாம்.

இது விபரம்,

S.Murugaboopathy
A/C No 31223125664
SBI,Thiruthangal Branch,code-12767

'என்னடாது காசு விஷயமாகவே கொண்டு வருகிறான்?' என்றால்..

வேறு யாரிடம் போவேன் மக்கா?

போக,

இலை உதிரும் சத்தம் நமக்கு கேட்டிருக்கா?

- தொடரும்



Thursday, June 2, 2011

காப்பீட்டுக் குரல்


(Picture by cc licence GilbertoFilho)

மூன்றாவது மாடியிலிருந்து
தவறி விழுவதாக
ஒரு கனவு.

டக்கும் இரண்டாவது மாடியில்
எக்ஸ்கியுஸ் மீ
குரல் வேறு

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!