Tuesday, March 30, 2010

கவிஞனில் திரியும் மனிதன்


(Picture by cc license Thanks runran)

திட்டமிடலைப் போன்றே
சோர்வேற்படுத்துகிறது
தொலைத்த பொருளின் நினைவு.

துக்கம் பிதுக்கி
திகைக்க வைக்கிறது
பின் மதியத்தில் கூவும்
ஒற்றைக் குயில்.

லைக்க வைக்கிறது
விளக்கு பொருத்தி, திரியையும் தூண்டி
எண்ணையில் மூழ்கி
காத்திருக்கும் தீக்குச்சி.

"பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த.." என
பேருந்தில் பாடி வருகிற
கூலிங்கிளாஸ் காரரின் குரல் மட்டும்
ஏனோ பழகி விடுகிறது.

Sunday, March 28, 2010

மண்டுகள் துப்பும் மொழி - 3


(Picture by cc license Thanks mckaysavage's)

தாத்தா பெயர் கொண்ட தம்பியை
சின்னவனே என்றழைக்கிற பாட்டி
என்னை வடுவா என்பாள்.

ண்ணி தர
மாத்திரை எடுக்க
கால் அமுக்க
கதை சொல்ல
எல்லாத்துக்குமே
சின்னவனேதான்.

தாத்தாவின் கதை சொல்லிக் கொண்டிருந்த
நாளொன்றில் பாட்டியிடம் கேட்டான்
தம்பியும்,
"தாத்தா ஓடிப் போயிட்டாரா பாட்டி?"

பிறகெப்போதும்
கதை சொல்லி பார்க்கலை பாட்டியை.

ம்பியைக் கூட
சின்ன வடுவா என்றழைத்தாள்.

Thursday, March 25, 2010

மண்டுகள் துப்பும் மொழி - 2


(Picture by cc license Thanks Miss_rogue)

முதல் எழுத்து, கடைசி எழுத்தில்
சினிமா பெயர் கண்டுபிடித்து
விளையாடிக் கொண்டிருந்தார்கள்
குழந்தைகள்.

முதல் எழுத்து ம, கடைசி எழுத்து மி
கண்டு பிடிங்க பார்க்கலாமென
குழந்தையானேன் நானும்.

"சினிமா பெயர் ஒன்னும்
சொல்லலை ஒங்கப்பா" வென
முறைத்துப் போனாள்
கை வேலையாக வந்த மனைவி.

"காலக்ஷ்மி"
கூவினார்கள் குழந்தைகள்.

"ப்பு" என்றேன், பாதி தப்பிக்க.

"னைவி மண்டு லேது சாமி.
தெலுங்குப் படம்." என்றேன்
மீதி தப்பிக்க.

Monday, March 22, 2010

மண்டுகள் துப்பும் மொழி - 1


(Picture by cc license Thanks Forever Wiser)

வீட்டிற்கு பலசரக்கு
வாங்க வரும்போதோ

னைவிக்கு ஜவுளி எடுக்க
போகும் போதோ

.சி.யூ.வில் இருக்கும் குழந்தைக்கு
மருந்து வாங்கப் போன இடத்திலோ

பிடி பட்டிருக்கும் போல
இக்கூண்டில் இருக்கும் பச்சைக் கிளி.

த்தனை தடவை
சொல்லிக் கொடுத்தாலும்
"அக்கக்கோ"
என்பதை
"அச்சச்சோ"
என்கிறது.



Friday, March 19, 2010

பிடித்த பத்து பெண்கள்

தேனு மக்கா கூப்பிட்டு இருந்தாங்க, இந்த தொடருக்கு. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான். ரொம்ப நல்ல்ல்லல்ல்வன்னு வேறு சொல்லிட்டாங்க. ரொம்ப நன்றிங்க மக்கோய்...

ரூல்ஸை பாருங்கங்க..

1.சொந்தக்காரங்களா இருக்கக் கூடாதாம். (நல்ல எண்ணம்யா...)

2.வரிசை முக்கியமில்லையாம் (ரொம்ப முக்கியம்..)

3.ஒரே துறையில் பல பெண் மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்குமாம். ஆனால், அதுல்லாம் இங்க செல்லாதாம். இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள். சரியா?(வெளங்கிருச்சு! இதுல "சரியா?"வேறு...)

ஆகட்டுங்கக்கோய்...

**

1.தோழி நாகேஸ்வரி

"யார் என்ன சொன்னால் என்னடா? நம்ம மனசுல தப்பு இல்லைல? நீ என் நண்பன்டா"என்று சொல்பவர்கள். நான் தெருவில் கிடந்த போது என்னை கையில் எடுத்து கொண்டவர்கள். "இப்ப பிரச்சினைகள் இல்லாமல் இருக்கியே இதுவே போதும்" என்று தொலைவில் நிற்கிறார்கள். எங்கு நின்றால் என்ன தோழி? இப்பவும் மனசில் நிற்கிறீர்கள்! உறவுகளை சொல்லக் கூடாதாம் என்ற போது-முதலாவதாய்!

2.அம்பை

பெண் எழுத்தாளர். ரொம்பவும் முன்னால் வாசித்தது. இப்பவும் மனசில் நிற்பவர்கள்!

3.செல்வநாயகி

நின்று போயிருந்த வாசிப்பை மீண்டும் திறந்து தந்தது இந்த வலை உலகம்தான். நேசன் மூலமாக இவர் தளம் அறிந்து தொடர்ந்து வாசித்து வருகிறேன். பிரமிப்பு ஏற்படுத்தும் எழுத்து,உயரம்!நிறைய நேரம் வாசித்து,பின்னூட்டம் கூட போட பயந்து ஓடி வந்துருவேன். என் வலைத் துறையில்,ரிசப்சன் பிரிவில் இருக்காங்க.(யோவ்..யாருயா குரல் கொடுக்குறது.படம் போட்டாச்சுல்ல பாருங்கையா..)

4.அமித்தம்மா

(ஹல்லோவ்...ரூல்ஸ் காரவுகளே..உங்களைதான்! ஒரே ஆபிசு,வேறு வேறு டிபார்ட்மென்ட் இருப்பதில்லையா? அந்த கேட்டகரிலதான் பேசுறேன்...சும்மா,சும்மா குறுக்க வரக் கூடாது. தெரியும்ல, சிவகங்கையான்கள?..விடுறா தம்பி. நீ எதுக்கு பொருள எடுக்குற? அண்ணன்தான் பேசிகிட்டு இருக்கேன்ல? பாசக் கார பயபுள்ளைகளா...)

என்ன சொன்னேன்? ஆங்...அமித்தம்மா!

சிறுகதை டிபார்ட்மென்ட்ல இருக்காங்க பாஸ்! உண்மையில் இருந்து உண்மையை எடுத்து உண்மையாலுமே எழுதுறாங்க. அமித்து அப்டேட்சும் ரொம்ப பிடிக்கும். என்னவோ, சிறுகதையில் கரைந்து போகிறேன்.

5.முல்லை

பத்தியா? சமூகமா? அரசியலா? இலக்கியமா? நகைச்சுவையா? கூப்புடுறா முல்லையை என்று குரல் கொடுக்கலாம்! என்றாலும் டிபார்ட்மென்ட் சொல்லணும் இல்லையா? பப்பு டைம்ஸ் மச்சி! சிரிச்சு சிரிச்சு நிறைந்து போகிறேன்.

6.வித்யா(vidhoosh)

முல்லை டிபார்ட்மென்ட்தான்! ஆபீஸ் வேற. அடையார் பிராஞ் மாதிரி...எதை கொடுத்தாலும் பேசுவாங்க. மேட்டர் பார்ட்டி மாப்ள. ஏகப்பட்ட stuff! ஆபீசா?..முல்லை ஆபீசுல இருந்து வெளில வர்றீங்கல்ல லெப்ட்ல திரும்புங்க. பிள்ளையார் கோயில் வரும். பிள்ளையார்ட்ட கேட்டாக் கூட சொல்லுவாரு. சுறுக்கமா, சகலகலா டிபார்ட்மென்ட்ன்னு வச்சுக்குங்களேன். அப்படில்லாம் டிபார்ட்மென்ட் இல்லையா? யார் சொன்னது?எங்க ஊருல இருக்கு!

7.தமயந்தி

இங்கிட்டு தமயந்தி!..அங்கிட்டு? (அதட்டாதீங்க..அழுதுருவேன்) பாராங்க (கிடு..கிடு..கிடு)

8.லாவண்யா

இந்த டிபார்ட்மென்ட்ல கூட்டம் ஜாஸ்த்திதாம்ப்பு. தள்ளு முல்லா இருக்கும். ஒண்ணுக்கு பத்தா சொல்லலாம்தான். ரூல்ஸை மீறக் கூடாதுல. நூல் பிடிச்சது மாதிரி போகணும் பாருங்க...நாளைக்கு ஒண்ணுன்னா ஊரை பேசி புடுவாய்ங்கயா..கவிதை டிபார்ட்மென்ட்டுங்க-இந்த லாவண்யா!

9.விக்னேஸ்வரி

confident டிபார்ட்மென்ட் பாஸ்! எழுத்தில் நம்பிக்கை தெறிக்கும். துரை சார்ந்த கண்,பார்வை,பேச்சு,எழுத்து!போனில் பேசும் போது கூட,"மாம்சு, உங்க கலருக்கு(பார்க்காமயே கலரை கண்டு பிடிக்கிறாய்ங்கைய்யா..) வேஷ்ட்டி,சட்டை,வெள்ளை பெல்ட்,ஹவாய் செப்பல்,கையில ஒரு மஞ்சப் பையி புடிச்சிங்கன்னா மகளுக்கு கல்யாணப் பத்திரிக்கை கொடுக்குற தோரணை வந்துரும். அப்புறம் வேற என்ன வேணும் உங்களுக்கு?" என்பார்கள். சர்தானுங்க மருமகளே என்று இந்த டிபார்ட்மென்ட்டை ஒதுக்கியாச்சு.

10.கார்த்திகா வாசுதேவன்.

புத்தக விமர்சனமெல்லாம் ரொம்ப நல்லா பண்றாங்க மாப்ள! கருவேலநிழல்ன்னு ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் எழுதி இருந்தாங்க பாரு...நானே விசில் பிரிச்சிட்டேன்னா பாரேன். மாப்ள கேளேன்...மாப்ள நீ கேளேன்...அதுனால விமர்சனம் செக்சனுக்கு மேனஜேர் ஆக்கிட்டேன்.

இன்னும் அனேகர் உளர். அபிஷ்ட்டு..கூடாதுடா என்கிறது கமிட்டி. ஷேமம்...நல்லாருங்கோ கமிட்டிவாள்!

உஷ்..அப்பாடா!

பெண்கள் தினமாம்! அதுனால பிடிச்ச பத்து பெண்களை பத்திப் பேசணுமாம். எங்களுக்கு தினம் தினம்தான் தினம்! நாங்க எதுனா பேசுறோமா? என்னா கொடுமை சார் இது?...

மூணு பேரை வேறு கூப்பிடனுமாமே? வாங்க,ஜெஸ்வந்தி, சுசி, சித்ரா!

மாறுதலுக்கு பிடித்த பத்து ஆண்களைப் பற்றி பேசுங்களேன்...அம்மா, நீங்க பேசுங்களேன்...தாயே நீங்க பேசுங்களேன்...அக்கோவ்..நீங்க பேசுங்களேன்...

இப்பப் பார்த்து சிக்னல் எடுக்காதே?..

Tuesday, March 16, 2010

புரை ஏறும் மனிதர்கள்-ஏழு

பொன்னுச்சாமி (எ) செல்லப்பா பெரியப்பா

"பெரியப்பா பயணம் சொல்லிக்கிற ஆரம்பிச்சிட்டார்டா. மூணு நாளாய் தண்ணி மட்டும்தான் இறங்குது. கனடாவில் இருந்து மதி, கண்ணனும், அமெரிக்காவில் இருந்து பிரசாத்தும் பேசிட்டான்கள். நீயும் பேசிரு. நல்லபடியா போய்ட்டு வாங்க பெரியப்பான்னு சொல்லிரு" என்று அண்ணாத்துரை சித்தப்பா அழை பேசினார்கள். போன் வரும்போது வேலையில் இருந்தேன். வேக வேகமாய் நடந்து கொண்டிருக்கும் போது, சட்டை நுனி, ஆணியிலோ தாழ்பாளிலோ மாட்டி விக் என சுண்டி நிற்போமே, அப்படி நின்றேன்.

போனில் தொடர்பு கொண்டேன்.மங்கை அக்கா எடுத்தார்கள்.

"பெரியப்பாவோட பேசனும்க்கா" என்றேன்.

"பெரியப்பா பேசுற கண்டிசன்ல இல்லைடா" என்றார்கள் மங்கை அக்கா. மூழ்கிக் கொண்டிருக்கிற அப்பாவை பார்த்துக் கொண்டிருக்கிற மகளின் குரல் அது.

"தெரியும்க்கா. சித்தப்பா சொன்னார். மொபைலை பெரியப்பா காதில் வைங்க. கொஞ்சம் பேசனும்க்கா"என்றேன்.

"பேசுடா"என்ற மங்கை அக்காவின் குரலுக்கு பிறகு ஒரு மௌனம் தட்டுப் பட்டது. நான் சந்தித்ததிலேயே ஆக கொடுமையான மௌனம் அது.

"பெரியப்பா..பெரியப்பா"என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன். சும்மாவே இருந்தார் பெரியப்பா. பத்துப் பதினைந்து பெரியப்பாவிற்கு பிறகு என்ன பேசுவது என தெரியவில்லை. கண்கள் நிறைந்து வழிய தொடங்கியது...

வேறு வழி இன்றி..

"சமர்த்தா போய்ட்டு வாங்க பெரியப்பா" என்று திருப்பி, திருப்பி சொல்லிக் கொண்டே இருந்தேன். "சரிடா ராஜா. தைரியமாய் இரு" என்று மங்கை அக்காவின் குரல் கேட்பது வரையில்.

பிறகு போன் வரும் போதெல்லாம் உசும்பி, உசும்பி விழித்துக் கொண்டிருந்தேன். மறு நாள் இரவு வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த வழியில் மாப்ள சிவா அழைத்தான். விஷயம் கேள்விப் பட்டதும் சித்தப்பா குரல் கேட்கணும் போல் இருந்தது. அறை வந்து மீண்டும் சிவாவைக் கூப்பிட்டேன். "சித்தப்பாவுடன் பேசனும்டா" என்றேன். "அண்ணன் புறப்பட்டார்டா. ஒவ்வொருத்தராய் டாட்டா காமிக்கிறாங்க" என்று தழுதழுத்தார்.

தூர தேசத்தில் இருக்கான்கள். வார்த்தைகளில் பயமுறுத்த வேணாம் என இரண்டு கைகளில் விளக்கை பொத்தியபடி இருக்கும் எல்.ஐ.சி.லோகோ போல பாதுகாப்பாய் பேசினார் சித்தப்பா. ஆனாலும் சுடர் ஆடத்தான் செய்தது. அப்படியான பெரியப்பா இவர்.

அணிலின் கோடுகளைப் போன்ற அண்ணன் தம்பிகள்.

பெரியப்பா, அப்பா, சித்தப்பா மாதிரியான அண்ணன் தம்பிகளை என் வாழ் நாளில் சந்தித்தது இல்லை மக்கா.

அப்படி ஒரு புரிதலோடும்,பிரியத்தோடும் இருக்கிற அண்ணன் தம்பிகள்!"

அண்ணன் தம்பியாடா நீங்கள்லாம்? மாமன் மச்சினன் மாதிரி பேசி சிரிச்சிக்கிறீங்க"என்று ராக்காயி அம்மாயி மாதிரி மனுஷிகள் பேசி பார்த்திருக்கிறோம், குழந்தையாய் இருக்கிற நாங்கள்.

நிதானத்தை சட்டைப் பைக்குள் வைத்திருப்பது போல எப்பவும் அமர்த்தலாய் இருப்பார் பெரியப்பா. அப்பா சென்சிட்டிவ் எனில், சித்தப்பா ஆக சென்சிட்டிவ். எதுக்குடா இம்புட்டு உணர்ச்சி என்பது போல் சமனாய் இருப்பார் பெரியப்பா.

ஊண்டி கவனித்தோம் எனில் அணிலின் மேல் உள்ள மூன்று கோடுகளில் நடுக்கோடு போல இருப்பார் பெரியப்பா. மற்ற இரு கோடுகளுக்கு நெறுக்கமாகவும், தீர்க்கமாகவும்.

அவரின் எட்டு குட்டிகளை தூக்குகிற அதே தராசு கைகளில்தான் அப்பா, சித்தப்பா, அத்தைமார்களின் அத்தனை குட்டிகளையும் தூக்குவார். ஐந்து அத்தைமார்களில் இருவர் உள்ளூரிலேயே வாக்கப்பட்டிருந்தனர். புஸ்பமத்தைக்கு ஏழு. அம்சமத்தைக்கு நாலு குழந்தைகள். அப்பாவிற்கு அஞ்சு, சித்தப்பாவிற்கு மூணு. ரைஸ்மில் மாதிரியான வாணியங்குடி வீட்டில் நெல் மணிகளைப் போன்று குழந்தை குழந்தைகளாக குவிந்து கிடந்தோம்.

சாப்பாடு நேரத்தில் அவரவர் வீட்டிற்க்கு போக வேணும் என்பதெல்லாம் குழந்தைகளுக்கு தெரியுமா? எல்லோரும் ஒரே வீட்டில் அமர்வோம். சுடு கஞ்சியோ, வெண்ணிப் பழையதோ அள்ளி வைக்கிற பெரியம்மாவின் கைகளுக்கு பின்புறம் மறைந்திருக்கும் பெரியப்பாவின் மனசு.

பொக்லைன் மாதிரி முரட்டு கைகள் பெரியப்பாவுடையது. ஆழத்தில் இருந்து குழந்தைச் செடிகளை அதன் பிறந்த மண்ணோடு அள்ளுவார். உச்சி முகர்வார். பதியனிடுவார். மனசில் இருந்து நீளும் போது கைதானே மனசு.
வளர்ந்து பக்குவப்பட்ட காலங்களில், பெரியம்மாவும்,பெரியப்பாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்று அறிய நேர்ந்தது. சொந்தத்திற்குள்ளேயே காதலிப்பதில் ஒரு சௌக்கர்யம் இருக்கிறது என்பதை பெரியப்பாதான் எங்களுக்கெல்லாம் சொல்லித் தந்தாரோ என்னவோ...

இவ்வளவு பெரிய குடும்பத்தை தாங்கிய, காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும், குழந்தைகள் முன்பாக பேசிக் கொள்வது கூட சூசகமாய்த்தான் இருக்கும். அடுக்களைக்கு என வீட்டின் பின்புறம் உள்ள கூரை வீட்டிலோ, கொல்லையில் நின்ற புளிய மரத்தடியிலோ தள்ளி, தள்ளி நின்றபடி பேசிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறோம்.

"ஒண்ணிஸ்பாய் ... ரெண்டிஸ்பாய்" என கத்தியபடி ஓடி வரும் எங்களை பார்த்ததும்,"வரும்போது கீரை கட்டு வாங்கிட்டு வாங்க"என்று பெரியம்மாவோ,"ஸ்ரீ ராம்ல நல்ல படம் போட்டுருக்கான்க காந்தி.பத்து ரூபா கொடு. படம் பார்த்துட்டு வர்றேன்"என்று பெரியப்பாவோ பேசி கேட்டிருக்கிறோம். தனியறை இல்லாத, தனிமை வாய்க்காத, குழந்தைகள் நிரம்பிய வீடொன்றில் எங்கு முக்குளித்து எங்களை எல்லாம் கண்டெடுத்தார்கள், இந்த பெரியப்பா, அப்பா, சித்தப்பா? என்று யோசிக்கையில் கண்ணும் மனசும் நிறைஞ்சு போகுது.

இப்படியான நிறைவோடையே இதை முடிக்கிறேன் பெரியப்பா...

பெரிய வாழ்வு வாழ்ந்திருக்கிறீர்கள்!

பத்ரமாய் போய்ட்டு வாங்க.

அப்பாவை கேட்டேன்னு சொல்லுங்க...