Tuesday, April 26, 2011

காலம் வரையும் கடிதம்

'காலங்களை வரைந்த கடிதங்கள்' என்றுதான் இருக்க வேணும் இத்தலைப்பு. பொசுக்குன்னு என்னவோ போல முடிக்க விருப்பமில்லாமல் இருக்கிறது. மேலும், நான் இருக்கிறது வரையில் இந்த காலங்களும் என்னுடன் வரத்தான் போகிறது. . வேறு வேறு வயதில், வேறு வேறு தினுசில், வேறு வேறு அனுபவங்களுடன். முன்பு நான் எழுதிய கடிதங்களே இதோ இப்ப வேறொரு அனுபவமாக இருக்கிறதைப் போல.

இந்தப் பயணத்தில் என் சினேகிதி ப்ரபாவை சந்தித்த போது அவளுக்கு நான் எழுதிய கடிதங்களின் கோப்பை கொண்டு வந்து தந்தாள் என்று 'சொன்னேன்' இல்லையா? அக்கடிதங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் மக்கா.

***

ப்ரபாவுடனான என் முதல் கடிதத்தை இப்படித்தான் தொடங்கியிருக்கிறேன்...

சிவகங்கை
07.06.'93

ப்ரபா.

வணக்கம். நான் ராஜாராம். சிவகங்கைக்காரன். என்னைப் பற்றி குமார் எதுவும் சொல்லியிருக்கிறானா என்று தெரியவில்லை. உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறான்.

நலமா எல்லோரும்?

வெகு நாட்களாகவே உங்களுக்கு எழுத நினைத்துக் கொண்டிருந்தேன். முடியாமல் போய் விட்டது. முடியாமல் போய்விட்டது என்று கூட இல்லை. 'உங்களுக்கு சூழல் எப்படி உள்ளதோ?' என நினைத்து விட்டிருப்பேன் போல. குமாரிடம், ' ப்ரபாவிற்கு நான் எழுதட்டுமான்னு கேட்டுச் சொல்லுடா' எனக் கேட்டிருந்தேன். திருமண நெருக்கடிகளில் மறந்திருக்கவேணும் குமார். போக, உங்கள் அனுமதி இல்லாமல் எழுத யோசனையாக இருந்ததும்தான்.

குமார் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு தோவாளையில் குமார் வீட்டு மொட்டை மாடியில், நான், குமார், தெய்வா மூவருமாக வெற்றுடம்புகளுடன் அண்ணாந்து கிடந்தோம். குமாரை நடுவில் கிடத்தி, நானும் தெய்வாவும் அவனைக் கேலி பண்ணி சிரித்துக் கொண்டிருந்தோம். அனேகமாய் மூன்று மணிக்கு மேல் இருக்கும். ஊர் அடங்கி விட்டது. விடிகிற இருட்டு. திடுமென குமார், 'நம்மைத் தவிர இன்னுமொரு ஒரு உயிரும் தூங்காம கெடக்கும்லே' என்றான்.

தெய்வா, 'ஜோதியா?' என்றான். 'அது ஏழு மணிக்கே தூங்கியிருக்கும். ப்ரபாடே' என்றான் குமார். அவன் கேட்கும் போதே எனக்கு பதில்
தெரிந்திருந்தது. அதை குமாரே சொல்லும் போது அழகாய் இருந்தது. பிறகு வெகு நேரம் வரையில் எதுவுமே பேசாமல் கிடந்தோம்.
குமார் ஒரு தனிமையான அன்பில் முழுமை அடைந்து கொண்டிருப்பதாகப் பட்டது எனக்கு. தெய்வாவிற்கு என்ன தோன்றியதோ?

சந்தோசமோ, துக்கமோ அடர்த்தியாய் நம் மீது படரும்போது மௌனமான இறுக்கம் நமை அறியாது தோன்றி விடுகிறது. அது புனிதமான இடம். உயர்வான பொழுது. நானும் தெய்வாவும் அதை கலைக்காமல் விட்டு விட்டோம். குமரன் கிடந்தான்.

அந்தக் கிடக்கைதான், 'ஊர் போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாய் ப்ரபாவை தொடர்பு படுத்திக் கொள்ள வேணும்' என்று தோன்றியது எனக்கு. தெய்வாவிடம் முகவரி வாங்கி உங்களுக்கு எழுதுகிறேன்.

குமார் ' ஜோதி' யில் ஐக்யமாகி விட்டதாக தெய்வா எழுதி இருந்தான். தெய்வாவிற்கும், லக்ஷ்மிம்மாவிற்கும் நீங்கள் எழுதிய கடிதம் குறித்தும் தெய்வா எழுதி இருந்தான். குமார் லெட்டர் எழுதினானா? தெய்வா, லக்ஷ்மி எழுதியதுகளா? புதுசா எதுவும் வாசித்தீர்களா?

சமீபமாய் மோகமுள் வாசித்து விட்டு எழ முடியாமல் இழுத்துக் கொண்டு கிடந்தேன்.

ஏதோ வெகு நாள் சிநேகிதம் போல் என்னைப் பற்றி எதுவும் சொல்லாமலே இந்தக் கடிதம் முடிவிற்கு வந்து விடுகிறது. என்னைப் பற்றிச் சொல்லவென என்ன இருக்கிறது என்றும் படுகிறது. என்றாலும் உள்ளதைச் சொல்லி தொடங்கலாம்.

நான்- ராஜாராம்

படிப்பு- b.sc.,phy

வேலை- எல்.ஐ.சி ஏஜன்ட்

லதா- wife

மஹா (மகாலக்ஷ்மி)- ஆறு வயது மகள்

சசி (சசிதரன்)- ஒண்ணரை வயது மகன்

பாலகிருஷ்ணன்- அப்பா

அசோக் குமாரி - அம்மா

அக்கா- இரண்டு பேர்

தங்கை- இரண்டு பேர்

எல்லோருக்கும் திருமணமாகி சிதறிக் கிடக்கிறார்கள்.

மற்றவை வெள்ளித் திரையில் காண்க.

நிறைய அன்புடன்
பா.ராஜாராம்.

***

பின்குறிப்பு (அ) இன்று
---------------------------------

இந்த ஜூன் ஏழு வந்தால் பதினெட்டு வருடம் முடிகிறது இக் கடிதம் எழுதி. மஹாவிற்கு ஆறு வயது அப்போ. 'ஆறு மாதமாக' இருக்கிறாள் மஹா இப்போ. என்னக் கொடும சார் இது?

***

மெட்ராஸ் - சிவகங்கை
02.10.'96
இரவு 8.10

ப்ரியங்கள் நிறைந்த என் ப்ரபா,

நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய மனப் பக்குவத்துடன் வாய்த்திருக்கிற பொழுதாகிறது இன்று.

ஓடித் தேய்ந்த தடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது ரயில் வண்டி. இப்படி ரயில் வண்டி என்பது கூட பிடித்து வருகிறது. நிறைய காற்று மக்கா. மூச்சு நின்று விடும் போல் இருக்கிறது. நிற்கட்டும். கதவடைக்க முடியுமா அதுக்காக?

சிந்து மடியில் கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருக்கிறாள். குளிர்கிற காற்றாக தெரியக் காணோம். சற்றுக் கழித்து என் லுங்கியை எடுத்து போர்த்தி விடணும் சிந்துக்கு. ஆக்ரோஷமும் வேகமும் நிறைந்த இந்தக் காற்று தேவையாகிறது போல தூங்கிக் கொண்டிருக்கிறாள் கண்ணம்மா.

நேற்றைக்கு முந்தைய நாள் சென்னை புறப்பட்டு வந்தது. சிந்துவிற்கு சர்ஜரி முடிந்து, மூன்று மாதம் கழிந்த follow-up-க்காக. ஆப்பரேசன் நல்லபடியா முடிஞ்சாச்சு மக்கா. சர்ஜரி மாதிரி இல்ல. coil-embolization என என்னவோ சொல்கிறார்கள். சர்ஜரிக்கான தழும்பு எதுவும் இருக்காதாம். (பெண் குழந்தை இல்லையா?). அடுத்த செக்-அப் ஆறு மாதம் கழித்து. வரணும்.

சரி..நீ எப்படி இருக்க? அனேகமாக உன் கடிதம் வீட்டில் காத்துக் கொண்டிருக்கலாம். நாகு வந்துச்சா?

சேது எக்ஸ்பிரஸ் 5.55-க்கு சென்னையை விட்டுக் கிளம்பியது. ராமேஸ்வரம் ஸ்கூலில் இருந்து ஸ்கௌட் boys & girls 30-40 பேர்கள் இருக்கிறார்கள் பெட்டிக்குள். ஒரே ஆட்டமும் பாட்டமுமாக கம்பார்ட்மென்டே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுனில் & சுசிலா என்று இரண்டு take-carrer கள். இவ்வளவு நேரத்திற்குள் அறிமுகமாகி இட்லி புளியோதரை சாப்பிட்டாச்சு.

இருவரும் குழந்தைகளை தூங்கச் செய்துவிட்டு அருகமர்ந்து cards போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'வர்றீங்களா சார்? பயப்படாதீங்க. காசுவச்சு இல்ல' என்று சுசிலா அழைத்தார்கள். 'வேணாம் மேடம். நீங்க ஆடுங்க. எனக்கு கொஞ்சம் எழுதணும்' என்றுதான் இதை எழுத உட்கார்ந்தேன்.. திண்டிவனத்தைத் தாண்டி விட்டது வண்டி.

என்ன செய்து கொண்டிருப்பாய் நீ? சாந்திக்கா, நளினி, நீ, அம்மா, சக்திக் கண்ணம்மா எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன். இப்படி நினைச்சுக்கப் பிடிச்சிருக்கு.

கும்மிருட்டு மக்கா வெளிய. கூடவே நெளிந்து ஓடி வந்து கொண்டிருக்கிறது ஜன்னல்லைட். ரயில்வே லைனை ஒட்டிய வயல்க்காரர்கள் எல்லோரும் சந்தோசமானவர்களாகத்தான் இருக்க முடியும். அதுவும் சற்று முன்பு ஒரு ஒற்றைக் குடிசையைக் கண்டேன். வயலின் நடுவே. உச்சியில் ஒரு குண்டு பல்ப். சுவாரஸ்யமான காட்சியாக இருந்தது குடிசை வீடும் எலெக்ட்ரிக் பல்பும்.

பின்னால ஒரு வயல் வாங்கணும் ப்ரபா. புள்ள குட்டியெல்லாம் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு அந்த வயலுக்கு வந்து குடிசை போட்டுக்கிட்டு செட்டில் ஆயிரணும். மறக்காம ஒரு பல்பு போடணும் உச்சியில். மஹா, சசியோட குழந்தைகள் ஏன் உன்னோட குழந்தைகள் எல்லோருமாக, 'ராஜா தாத்தாவோட வயல் வீட்டுக்கு' லீவுக்கு வந்துரணும்

'அடுத்த வண்டி எப்போ தாத்தா? அடுத்த வண்டி எப்போ தாத்தா?' என்கிற கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கணும். 'அடக் கிடுவுட்டிகளா...செத்த நேரத்துல வரும் பக்கிகளா' எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் போது வண்டி வந்து விடாதா என்ன?

சரி மக்கா..எல்லாம் எங்கே போய் விடப் போகிறது?

நிறைய அன்புடன்
பா.ராஜாராம்.

***

பி.கு (அ) இன்று
================

சிந்து, சுதா மகள். சுதா லதாவின் தங்கை. (அப்ப லதா யாரு? என்று கேட்டால் உதை) இந்த சிந்துவை ஒரு மெடிக்கல் செக்- அப்-பிற்காக சென்னை அழைத்துப் போய் திரும்பும் போது இந்தக் கடிதம் புகை வண்டியில் எழுதி இருக்கிறேன். அப்ப ரயில் வண்டியாகத்தான் இருந்திருக்கிறது- இந்தப் புகை வண்டி. சிந்து தற்சமயம் திருமணத்திற்கு நிற்கிறாள்.

இன்னும் நான் வயல் வாங்க வில்லை. இப்போதைக்கு ஒரு பல்பு வாங்கிவிட முடியும். ஒவ்வொன்றாகத்தானே செய்ய முடியும் எதையும்?

***


சிவகங்கை
25.12.'96
இரவு 12.20

மக்கா,

என் லெட்டர் இன்று உனக்கு கிடைத்திருக்கலாம். இன்று ரொம்ப relaxed-ஆன நாள் போல இருக்கிறது. ஆனா எதுவும் எழுத ஓடலை. எப்பவும் போலான கிறிஸ்துமஸ்-சாய் இல்லாமல் போய் விட்டது- இந்த கிறிஸ்துமஸ். போன வருடம் மாதிரி, பீட்டர் வீடு, ஜோசப் அண்ணன் வீடு, விண்ணரசி வீடு, ஆல்ஃபிரட் சார் வீடு என எல்லோர் வீட்டின் விழாக்கால முகம் காண முடியாமல் போய் விட்டது.

போகாவிட்டாலும் வந்து கூட்டிச் செல்கிற ஜோசப் அண்ணனக் கூட ஏனோக் காணோம். யாரும் கூப்பிட முடியாத தூரத்திற்கு வந்து விட்டேனோ என்னவோ? வீட்டில் ஆள் இல்லாத தனிமை வேறு... m.c.விஸ்கி கால் போத்தல் வாங்கி வைத்துக் கொண்டு (சிறுகச் சிறுக எனத் தொடங்கி) உன் கடிதங்களை எல்லாம் முதலில் இருந்து தொடங்கி என வாசித்துக் கொண்டு இருந்தேன்.

அப்பா..

எவ்வளவு எழுதி இருக்கிறாய் மக்கா? எழுத்து என்பது வெறும் எழுத்து மட்டுமா ப்ரபா? நம் குழந்தைகள் காலம் வரையில் வச்சு இதையெல்லாம் காப்பாத்த முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்? 'தாத்தா அவர் ஃபிரெண்டுக்கு எழுதியது' என்று குழந்தைகளுக்கு, குழந்தைகள் காட்டும்படி நேர்ந்து விடாதா?

சரி..இதெல்லாம் எப்போ முடியும்? சரி..இதெல்லாம் எதுக்கு? சரி..இதில்தான் என்ன?சரி..இதில்தான் எவ்வளவு!

verygood! எல்லாமே very good தான் !

கெறக்கம் தொடங்கியாச்சு. (ஐயே..வா?) புரட்டா கட்டி எடுத்துட்டு வந்துருக்கேன். சாப்பிட வர்றியா மக்கா?
'துன்னுட்டு' முடிஞ்சா தொடர்வேன். உருண்டுட்டா நாளை.

***

பி.கு. (அ) இன்று
----------------------

உருண்டுட்டேன் போல. பிறகு தொடரக் காணோம். 'நிறைய அன்புடன்-பா.ராஜாராம்' என்பது கூட இல்லாமல் ஒரு கடிதம்.

பீட்டர் ஆக்சிடெண்டில் இறந்து போனான். சொல்லப் போனால் மறந்தும் போய் விட்டேன் பீட்டரை. எப்படி பீட்டர்? ஜோசப் அண்ணன் ஏன் அந்த வருடம் கூப்பிடக் காணோம்? கிறிஸ்துமஸ்க்கு இருதயராஜ் வீட்டிற்கும்தானே போயிருக்கிறேன். ஏன் எழுதல? விண்ணரசி எப்படி இருப்பாள் இப்போ? ஆல்ஃபிரட் சார் இப்போ எங்கே? காலச் சுழற்சியில் வரலாறுகள் மாறி விடுவது உண்டு. அப்படித்தான் மாறினேனா... m.c. விஸ்கியில் இருந்து நெப்போலியன் பிராந்திக்கு?

தெரியல.

- தொடரும்

***

Tuesday, April 19, 2011

சேது உங்களுக்காக

ஒன்று


(Picture by cc licence, Thanks Raphael Quin)

குழந்தை ஊதிய
காற்றைக் குடித்த சோப்புக் குமிழ்
சாஸ்வதத்தை தேடிச் சென்றது.

வாஸ்தவத்தில் அது
குமிழ் பிறப்பித்த
வாயில் அல்லவா இருக்கிறது?

இரண்டு


(Picture by cc licence, Thanks Karthick Makka )

ன்னை மட்டும் தனியாக
பார்க்கத் தெரிந்த அவளுக்கு

வளுக்கு மட்டும் தனியாக
சொல்ல முடிந்த என்னால்

ல்லோரும் கேட்கும்படி
சொல்ல நேர்கிற வார்த்தைகள்-இந்த
'என் தோழி!'

மூன்று


(Picture by cc licence, Thanks Karthick Makka)

லிக்கா வலிக்கா
எனக் கேட்டு கன்னத்தில்
அடித்துக் கொண்டிருந்தாள்
பப்லுக் குட்டி.

ச்சோ..தாத்தாக்கு வலிக்கி என
அவளாகவே முத்துகிறாள்
அடித்த இடத்தில்.

ரண்டுமே ஒரே
மாதிரிதான் வலிக்கிறது.

நான்கு


(Picture by cc licence, Thanks Sn.Ho)

மீனிற்குத்தான் பொரி தூவல்
கோவில் குளத்தில்.
மீனை விட அதிகம் கவ்வுகிறது
இந்த நிலா.


ஐந்து


(Picture by cc licence, Thanks Sn. Ho)

டவுள் தோன்றி
கடவுளான கதையைப் பற்றி
கூறிக் கொண்டிருந்தார்.

'ய்..உய்..உய்'

ழக்க தோஷத்தில்
விசில் பிரித்துக் கொண்டிருந்தேன்.

ந்த திரைக்குள் நுழைந்த கடவுள்
கடவுளர்களிடம் கேட்டார்

'னுஷனா இவன்?'

***

டிஸ்கி:

அடுத்த கவிதை 'எங்களுக்கு அப்புறம்தான் கல்கி, விகடனுக்கெல்லாம்' என்று நண்பர் சேது உரிமையுடன் கேட்டிருந்தார். எனவே, இந்த 'சேது உங்களுக்காக' நம் சேதுவிற்காக.

(பிரசுரத்திற்கு மறுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டு, 'என்னமா வூடு கட்டுறான்' எனக் கேட்பார்கள் நண்பர்கள் சுகுணாவும், கதிர்பாரதியும்...)

கேட்கட்டும்... நல்லதும், கெட்டதும் நண்பர்கள் கேட்டால்தானே அழகு!

***

Monday, April 4, 2011

புரை ஏறும் மனிதர்கள் - பதினேழு

தடவி அறிந்த ப்ரைலி முகங்கள் (அ) பயணக் கட்டுரை- ஆறு

ஒன்று, இரண்டு,மூன்று, நான்கு
,ஐந்து

வீராவிற்கு பிறகு நாய்க் குட்டிகள் மேலான என் ஸ்நேகத்தை வெகுவாக குறைத்துக் கொண்டேன். அவைகள்தான் அவ்வப்போது கண்ணடித்து 'ஐ லவ் யூ' எனும். சற்று நோங்கினாலும், 'அப்படியா?' என்கிற ஒற்றைச் சொல்லோடு விலகி விடுவேன். அக்கம் பக்கமாக, உற்றார் உறவினர் இல்லையெனில், நின்று கூடுதலாக ரெண்டு வார்த்தைகள் பேசுவது உண்டு.

"நீ நல்லாருக்கியா? நான் நல்லாருக்கேன். நீ சாப்ட்டியா? நான் சாப்ட்டேன். நீ ரெண்டு நாளா சாப்பிடலையா? நான் ரெண்டு வருசமா சாப்பிடல. நீ சோத்துக்கு சிங்கி அடிக்கிறியா? நான் அதைவிட சிங்கு சிங்குன்னு அடிக்கிறேன்." என்ற அளவிலேயே பேச்சுகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன். இவ்விஷயங்களை நான் லதாவிற்கோ, குலசாமிக்கோ கொண்டு செல்வதில்லை.

இப்படி ஆற்றிலும் விழுந்து விடாது சேற்றிலும் கால் பாவாது நூல் பிடித்தது போலான வாழ்வில்- திருப்தியாகவே வாழ்ந்து வந்தேன். மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாதாமே? அப்படி ஒரு சுழல் காற்று அன்று விரட்டி வந்தது.

அன்று, ஏழு கிழமைக்குள் ஒரு கிழமை என நினைவு. ஏழுகடையில் அமந்திருந்தேன். இப்படி ஏழேழாக வரும் போதே நான் சுதாரித்திருந்திருக்கலாம்- அருகில்தானே அரையும் இருக்கிறான் என.

மழை பிரித்துக் கொண்டிருந்தது. நாலு மணி சுமார். டாஸ்மாக் போகிற ஜோலி இன்னும் ரெண்டு மணி நேரத்திற்கு மேலாக இருக்கிறதே என சுணக்கமாக இருந்தேன். அப்பத்தான் இந்த நெப்போலியன் வந்தான். நெப்போலியனாக வரவில்லை. வெறும் நாய்க் குட்டியாகவே வந்தான். வெறும் என்றால் வெட்ட வெறும்.

பசி படத்தில் நடித்த ஷோபா மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, அரக்கிற்கும், அழுக்கிற்கும் மையமான ஒரு அட்டுக் கலரில், 'இப்படியெல்லாம்தான் கலர் இருக்கு' என்பது போல் கலர் களஞ்சியமாய் வந்தான்.

'எம்புட்டு பெரிய பல்லி' என்றுதான் முதலில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை ' கோடுகள் தொலைத்த அணிலோ?' எனவும் யோசனை வந்தது. பிறகு, நாய்க் குட்டிகள் குறித்தான நாலெட்ஜ் சற்று ஒட்டி வந்ததால் 'அட, குட்டி நாய்க் குட்டி' எனப் புளகம்(நன்றி: நேசமித்திரன்) கொண்டேன்.

யோசியுங்கள் மக்களே...

ஏழுகிழமைகளில் ஒரு கிழமை, மனதிற்கு பிடித்த ஏழு கடை, ஏழு கலரிலும் அடங்காத ஒரு கலர், ஏழைப் பங்காளன் முகம், ஏகப்பட்ட நடுக்கம் கொண்ட ஒரு உடல் என ஒரு உயிர் வந்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு? அப்படித்தான் இருந்தது எனக்கும். சுடரும் உயிர் எப்படி இருந்தால்தான் என்ன? இல்லையா?

குனிந்து கையிலெடுத்தேன் நாய்க் குட்டியை. ' என்ன சொல்ல வர்றேன்னா..' என்பது போல குலசாமி நினைவில் குறுக்கிட்டார் . "அமுக்கிகிட்டு செத்த ஓரமா ஒக்காரும். நாந்தான் உம்மை சாமியா வச்சிருக்கேன். நீர் எனக்கு சாமியில்லை" என அதட்டுப் போட்டேன். கமல் மாதிரி புரியாமல் பேசினால் மனிதனே பயந்துவிடுகிறான். பிறகு சாமி எம்மாத்திரம்?

இப்படியான திடீர் தைரியத்திற்கு தூரத்தில் ஒரு பெண் காரணமாக இருந்தாள்.அதாவது 240 கி. மீ. தூரத்தில். (சிவகங்கை-கோவை தூரம்) ஆம். ப்ரபாவேதான்! ப்ரபாவை நம் நண்பர்கள் சிலர் அறிவர்.( ஒரு முப்பது பேர்?) அறியாதவர்கள் 'இந்த' பதிவு போய் திரும்புங்களேன்.

இந்தப் ப்ரபா, தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தையைப் பேணுவது போல பேணுவாள் ஒரு ஜிம்மியை. "நேத்துல இருந்து ஜிம்மி கக்கிக்கிட்டே இருந்துச்சு மக்கா. வெட்னரி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனனா? நல்ல ஃபீவர்டா" என எப்ப அழை பேசினாலும் கொசுறாக இந்த மாதிரி தகவல்களை அளிப்பாள். மருந்துக்குக் கூட ஒரு நாய்க் குட்டி இல்லாதவன் இவன் என்கிற நினைப்பெல்லாம் வராதோ இவளுக்கு என எரிச்சலாக வரும். கூடவே லதாவின் நினைவும்.

"சசிப்பய மழைல நனைஞ்சிருக்கும் போல. நல்ல சளி. ராத்திரியெல்லாம் காய்ச்சல் வேற. பார்த்தேன், மிளகை தட்டிப் போட்டு ஒரு ரசம் வச்சுட்டேன்" என்பாள். "சரி. கெளப்பி விடு. டாக்டர்ட்ட போய்ட்டு வந்துரலாம்" என்றால், "அதான் ரசம் இருக்குல்ல" என்பாள். " சரி புள்ள. வெளியில் போறேன். எதுனா காய்கறி வாங்கணுமா மதியத்துக்கு ?" என்றாலும், "அதான் ரசம் இருக்குல்ல தான்.

சசிக்கு மருந்தும் ஆச்சு. பசிக்கு சாப்பாடும் ஆச்சு, ஒரு ரசமும், ஒரு லதாவும். ரசம் மேட்டரெல்லாம் ப்ரபாவிற்கு தெரியாது போல.

போக, சசியா ஜிம்மி?

குட்டியை எடுத்த கையோடு பெயரும் இட்டேன். " நீ நெப்போலியண்டா!" (டாஸ்மாக் நேரமும் நெருங்கி விட்டதில்லையா?) 'ஆகட்டும்' என்றான் நெப்போலியனும்.

இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்தான், நாலாம் நம்பர் கடை ஓனரான முத்துராமலிங்கம். (முத்துவையும் அதே முப்பது நண்பர்கள் அறிவீர்கள்தான். அறியாதவர்களுக்கு 'இந்த' பதிவு) நெப்போலியனை அவனிடம் காட்டி லெஃப்ட் ஒதுக்கி சிரித்தேன்.

இப்படி லெஃப்ட் ஒதுங்கி சிரிக்கும் போதெல்லாம் அவனை உதாசீனப் படுத்துகிறேன் என அவன் புரிந்து வைத்திருந்தான். அல்லது அப்படி பழக்கியிருந்தேன். பரஸ்பரம் அவனும் அப்படித்தான் பழக்கியிருந்தான் என்னை. என்ன?..அவனுக்கு ரைட் ஒதுங்கும்.

என் சிரிப்பைப் பார்த்து,

"என்ன?" என்றான் ஒற்றைப்படையில்.

"வளக்கப் போறேன்" என்றேன் ரெட்டைப் படையில்.

"நீ திருந்தவே மாட்டியா?" என்றான் முப்படையில்.

விட்டால் அறுபடை வீடு வரையில் போய்த் திரும்புவானோ எனப் பயந்து இந்த 'வீடறிகிற' விளையாட்டை நிறுத்தி விட்டேன். இதே முத்துராமலிங்கம் ' மானிட்டர்' என்ற நாய்க் குட்டியை வளர்த்தவன்தான். நல்ல போதையில் சவுதிக்கு போன் பண்ணுவான். (போதை இல்லாவிட்டால் மிஸ் கால் மட்டுமே)

"மாமா ஒரு மானிட்டர் வளக்குறேன் மாமா. சரக்கடிக்கப் பழகிட்டான். சிகரெட்டை மட்டும் பழக்கித் தர முடியல. நம்ம செட்டிக்கு பிறந்திருப்பான் போல" (செட்டி என்ற ஸ்ரீதர் என்ன தண்ணி அடித்தாலும், புகைப்பது இல்லை) என்று பேசியவன்தான். ஒரு நாள் சரக்கடித்து விட்டு மானிட்டரை தலையணையாக வைத்துத் தூங்கியிருப்பான் போல. காலையில் காணாமல் போய் விட்டதாக செட்டி அழை பேசும் போது சொன்னான். வேறு வேறு மனிதர்கள். வேறு வேறு குலசாமிகள்.

பார்வையிலேயே என்னையும் நெப்போலியனையும் மாறி மாறி சாணை பிடித்துக் கொண்டிருந்தான் முத்து. 'அட..என் சாணைக்கு பிறந்த சோணை' என நெப்போலியனுக்கு குடில் செய்யத் தொடங்கினேன். குடிலுக்கு ஏற்ற இடமாக இருந்தது பழனி கடையின் டீ பட்டறை.

மாப்ள பழனி அஞ்சாம் நம்பர் கடைக்காரன். (டீக்கடை) பழனி போர் அடித்தால் மட்டுமே கடை திறப்பான். திறந்து சற்றைக்கெல்லாம், " க்காலி..திறந்தாலும் போர் அடிக்குது" எனப் பூட்டியும் போய் விடுவான். நல்லவன்தான். தலைச்சக்கரம் சற்று ஏற்ற இறக்கம்.

நெப்போலியன் வந்த பிறகு என் வாழ்வு முறை வெகுவாக மாறி விட்டது. விடிந்தும் விடியாமல் ஏழு கடைக்கு வந்து விடுவேன். வந்ததும் முழு நெப்போலியன் காலிக் குப்பியில் பால் வாங்கக் கிளம்பி விடுவேன்.

சம்பந்தமில்லாத குப்பியில் சம்பந்தமில்லாத திரவம் வாங்கிப் போவதை பாதசாரிகள் ஒரு மாதிரி கவனிக்க தொடங்கியிருந்தார்கள். "நெப்போலியனுக்குதான் நெப்போலியனில் பால்" எனக் கவிதை கலந்த என் சுய விளக்கம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை போல. ஜிப் சிக்கிக் கொண்ட பர்ஸ் மாதிரி திறந்து மூடி, திறந்து மூடி சிரித்துக் காட்டினார்கள்.

' நீ எத்தனை புயல்களை சந்திக்கிறாய் என்பதைப் பற்றி இந்த உலகம் கவலைப் படாது. கப்பலைக் கொண்டு போய் கரை சேர்க்கிறாயா என்று கவனிக்கும்' என்கிற தத்துவத்தின் பித்தன் நான். எனவே, ஜிப் / பர்ஸ் மனிதர்களை, 'ஜிப்ப போடு. முதல்ல ஜிப்ப போடு' எனக் கடக்கப் பழகிக் கொண்டேன்.

தீரத் தீரப் பால் குடிப்பது நெப்போலியனுக்கு ரொம்ப பிடித்து வந்தது. பால் தவிர்த்து, கடலை மிட்டாய், முருக்கு, சீடை, பட்டாணி, பொட்டுக் கடலை, விரலிமஞ்சள், கல்உப்பு, வெற்றிலைக் காம்பு, வாழைப்பழத் தோல், சீவு விளக்கமாற்றுக் குச்சி, தலை பெருத்த கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு, சிகரெட் அட்டை (கோல்டு கிங்ஸ் அட்டை எனில் கூடுதல் சந்தோசம்), ஏ.ஆர்.ஆர். சுகந்தப் பாக்கு, பொடி மட்டை, என எது கிடைத்தாலும் பசியாறிக் கொள்ளும் பக்குவம் பிறப்பிலேயே இருந்தது.

ஏழு கடை வந்த நான்கு நாட்களுக்குள் எல்லாம் நெப்போலியனின் புகழ் எட்டு கண்ணும் விட்டெரிந்தது. வருவோர் போவோரெல்லாம் "நெப்போலியா?" என்று அழைப்பதைக் கண்டு மீண்டும் புளகம் கொண்டேன். பழனி கடைக்கு பாத்திரம் விளக்க வருகிற பாட்டி கூட, "நெப்போலியனுக்கு பால் தீந்து போச்சுப்பு" என பாட்டிலை எடுத்து நீட்டத் தொடங்கியிருந்தாள்.

பாட்டி வாயிலேயே நெப்போலியன் நின்னு போன நெகிழ்விலும், நானும் நெப்போலியனில் இருந்த நிறைவிலும், நூறு நூபாயை பாட்டியிடம் நீட்டி "நெப்போலியன் வாங்கி சும்மா கும்முன்னு அடி பாட்டி" எனக் கொஞ்சி மிஞ்சினேன்.

ஒன்னும் புரியாத பாட்டியை, "செலவுக்கு வச்சுக்கிற சொல்றாரு" எனப் பூசி முழுகி ட்ரான்ஸ்லேட் பண்ணினான் முத்து. பொங்கி வரும் பாலில் குளிர் நீராகிக் குதிக்கும் கூதறை அவன். ஏழு கடை மனிதர்களில் ஒருவனாக மாறிக் கொண்டிருந்தான் நெப்போலியன்.

துக்கம் மற்றும் அதீத துக்கம், சந்தோசம் மற்றும் அதீத சந்தோசம், துக்கமின்மை மற்றும் சந்தோசமின்மை காரணங்களுக்காக மட்டுமே நான் முட்டக் குடிப்பது. மற்ற காரணங்களை அவ்வளவாக பொருட்படுத்தாது, அளவோடு குடித்து வீட்டிற்குப் போய்விடுவேன்.

அன்று முட்டக் குடித்திருந்தேன். காரணம் நெப்போலியன்தான். அன்று பால் கூடக் குடிக்காமல் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தான். நடுக்கம் என்றால் ஃபிட்ஸ் மாதிரியான நடுக்கம். மழை அல்லது குளிர் காரணமாக இருக்கலாம் என நண்பர்கள் சொன்னார்கள். மாலையில் நடுக்கம் தீவிரம் கொண்டது.

மறு நாள் வெட்னரி ஹாஸ்பிட்டல் கொண்டு போனேன். வயிற்றில் கொக்கிப்புழு இருந்தாலும் இப்படி ஃபிட்ஸ் வரலாம் என மருந்து கொடுத்தார் டாக்டர். ஒரு நாள் சற்று குணமாக இருந்தான். மீண்டும் ஃபிட்ஸ் வரத் தொடங்கியது.

அன்று தீபாவளி. காலையில் நெப்போலியனுக்கு பால் வைத்துவிட்டு அம்மா, சகோதரிகள், நண்பர்கள் வீட்டிற்குப் போய்விட்டு ஏழு கடை வந்தால் நெப்போலியனைக் காணோம். எங்கு தேடியும் காணோம். முன்பு ஒரு நாள் இப்படி தொலைந்து, பிறகு பக்கத்தில் இருந்த ஒரு புதருக்குள் வலிப்பு வந்தபடி கிடந்தான்.

ரொம்பக் கொடுமையான தருணம் அது. "நெப்போலியா?" என்கிற குரலுக்கு அவன் வாலாடுகிறது. அது அவன் ப்ரியம். உடம்பும் ஆடுகிறது. அது அவன் நோய். இரண்டையும் பிரிக்க முடியாது கையில் அவனை ஏந்திய போது, போதும் என்றாகிப் போனது.

"என்னடா நான் யாரை வளர்த்தாலும் அவுங்களுக்கு ஃபிட்ஸ் வருது?" என சிரித்தேன் முத்துவிடம். (நம் சசிக்கும் சிறு வயதில் இதே தொந்திரவுதான்) அது சிரிப்பில்லை என்பதை முத்து அறிந்திருக்க வேணும். " போப் போ மூதேவி. எந்திருச்சு வீட்டுக்குப் போ" என விரட்டினான்.

அப்படி ஒரு நம்பிக்கையில் கடவே அலசிவிட்டோம். சுத்தமாகக் காணோம். வரும் போதும் போகும் போதும் "நெப்போலியா?" என கூப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். இருந்தோம். எப்படி இப்படி ஒரு உயிர் துடைத்துப் போட்டாற் போல காணாமல் போக முடியும்?

ப்ரபா கூட, " தீபாவளியில்லையா? பட்டாசு சத்தத்துக்கு எங்கனா பயந்து போய் கெடக்கும்டா. வந்துரும் பாரேன்" என்றாள். தடுமாறித் திரியும்போது வார்த்தைகள் தரும் பிடிமானம் எவ்வளவு ஆறுதல்! சவுதி திரும்பும் நாள் வரையில் நெப்போலியன் திரும்பவே இல்லை.

இரயில்வே ஸ்டேசனில் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டிருந்தேன். நண்பர்கள் ஒவ்வொருவராக கட்டி அணைத்து விடை தந்து கொண்டிருந்தார்கள். லதா, குழந்தைகள் கைகளைப் பற்றி, " அழாம அனுப்பித்தாங்க பக்கிகளா" என சிரித்து பெட்டிக்குள்ளும் ஏறிவிட்டேன்.

எப்பவும் பெட்டிக்குள் ஏறிய பிறகுதான் கடைசியாக கட்டிக் கொள்வான் முத்து. பெட்டியெல்லாம் ஒழுங்கு செய்து அடுக்கிய பிறகு, "போய்ட்டு வா" எனக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டு திரும்பிப் பார்க்காமல் இறங்கிப் போய்விட்டான். எனக்கு முத்துவிடம் ஒரு கேள்வி பாக்கி இருந்தது. அதை அப்போ கேட்க இயலவில்லை.

சவுதி வந்து அறை அடைந்து வீட்டிற்கெல்லாம் அழை பேசிய பிறகு முத்துவை அழைத்தேன். தொண்டையிலேயே அருவிக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"நெப்போலியனை எங்கடா கொண்டு போய் விட்ட?"

சத்தம் போட்டு சிரித்த முத்து, "லூசு மாமா நீ" என்றான்.

ப்ரபா சொன்னதும் ஏனோ நினைவிற்கு வந்தது. " தீபாவளியில்லையா? பட்டாசு சத்தத்துக்கு எங்கனா பயந்து போய் கெடக்கும்டா. வந்துரும் பாரேன்"

ஆறுதலாக இருந்தது.

-தொடரும்

***

புரை ஏறும் மனிதர்கள்:

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14,15,16

Saturday, April 2, 2011

மாற்றுப் பாதைக்கான கை காட்டி



னிமை படுத்தப்பட்ட
மிக புராதன குரலோசையில்
விழித்துக் கொள்கின்றன புலன்கள்

கிளி கொஞ்சிய குரலுடனும்
பதை பதைப்புடனும்
இழுத்துச் செல்கின்றன தெருக்கள்.

சும் மரங்களிடை
ஆழ் சுழியிடை
பழகிய வழியிடை

ட்டம் காட்டி சற்று
கை பிடித்து சற்று
பின் தங்கி சற்று

டு நடுங்கி, ஒடுங்கி
சாகப் பிடித்தும்
பிழைத்துக் கொள்ளும்படியே
வாய்த்து விடுகிறது.

தையெதையும் அறியாது,

பார்க்காமல் போகச் சொல்லி
இந்த முறையும் இறைஞ்சுகிறது
அக்குரலுக்கான பார்வை.

----கல்கி (இந்த வாரம்)
நன்றி கதிர்பாரதி, கல்கி