Thursday, December 30, 2010

பால்ய ஸ்னேகிதியும் சில மழை நாட்களும் ( புரை ஏறும் மனிதர்கள்-தொடர்ச்சி )

முந்தைய பாகம் 'இங்கு'

எந்தப் பயணமும் போல் இல்லாமல் இந்தப் பயணத்தில் எதிர்பார்ப்புகள் கூடி இருந்தன. மஹாவின் திருமணம் மட்டும் அன்று. பதிவுலகம் வந்த பிறகான முதல் பயணம்! எழுத்து மூலமாக தேடியடைந்த நண்பர்கள் சிலரின் முகம் பார்க்கப் போகிற ஆர்வம். எல்லோரையும் மஹாவின் திருமணத்தில் ஒரு சேர பார்த்துவிடவேணும் எனும் துடிப்பு. போக, லதா சொல்லிய பொய்யில் ( ப்ரபா லெட்டர கிழிச்சுப் போட்டுட்டேன் ) தேங்கியிருந்த உண்மை எனும் அடி மண்டி.

வீடு சேர்ந்து ஐந்து நாள் வரையில் ப்ரபா கடிதம் குறித்து எந்தப் பேச்சும் எடுக்கவில்லை லதா. அவ்வப்போது கேட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.. " அதான் கிழிச்சுப் போட்டேன்னு சொல்றேன்ல" என்பாள். பாவி, கடங்காரி என்று மனசுக்குள் சொன்னாலும் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. அப்படியெல்லாம் கிழித்து போடுபவள் இல்லை. மயில் தன் இறகை உருவிப் போடும் வரையில் எத்தனை பீடி குடிப்பது நான்? லதாவிடம் மிக உயர்ந்த குணம் (??) ஒன்று உண்டு. வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் முன்பாக அவளை பெருமையாக பேசிவிட்டால் போதும், ஒற்றை ஆளாக ஒரு கிரிக்கெட் மேட்ச் ஆடிவிடுவாள். பௌலிங்க் போட்ட கையோடு விக்கெட் கீப்பராகவும் பாய்வாள். "HOW IS THAT?" என்று கதறுகிற ஃபீல்டராகவும் மாறுவாள். "இல்லை" என்று தலையாட்டுகிற அம்ப்பயராகவும் நிற்பாள்! சரி..தற்சமயம் வீடு உள்ள சூழ்நிலையில் விருந்தினர்களுக்கு எங்கு போக?

வந்தான் மகராசன் செ. சரவணக் குமார். (ஊரில் இருந்த சரவணன் என்னை காண வந்திருந்தார்) லதாவின் கணித சாஸ்த்திரம் அறிந்திருந்த நான் கட்டையை உருட்ட தயாரானேன். (லதாவிற்கு கிரிக்கெட் எனில், நமக்கு, வை ராஜா வை! - லங்கர் கட்டை!) "சவுதியில் இருக்கும் போதே லதா சொல்லிட்டா சரவனா. லதா மட்டும் இல்லைன்னா ப்ரபாவை கண்டு பிடிக்க முடியுமா? லதா மட்டும் இல்லைன்னா இது சாத்தியமா?" இப்படி, லதா மட்டும், லதா மட்டும் என்று உருட்டிய உருட்டலில்...'கேப்டன்' கிளீன் போல்ட்!

கடிதம் கைக்கு வந்து விட்டது. வாங்கிப் பார்த்த போதுதான் தெரிந்தது, அது ஆனந்த விகடனில் இருந்து ரீ-டைரெக்ட் செய்யப்பட்ட கடிதம் என்று. (ஆனந்த விகடனுக்கு எப்படி போனாள் இவள்?) சரவணனுக்கு முன்பாக கடிதம் படிக்கிற திராணி கூட இல்லாமல் இருந்தது. சரவணனுக்கு கடிதத்தை படிக்க தந்துவிட்டு, சரவணன் போன பிறகு கடிதத்தை எடுத்துக் கொண்டு தனியனானேன்.

"நான் ப்ரபா. கோயம்பத்தூர். பதிமூன்று வருடங்கள் பின்பாக நகர்ந்தால் என்னை உங்களுக்கு நினைவு வரலாம்" என்பது மாதிரி என்னென்னவோ எழுதி இருந்தாள் லூசு. ஆம், பெண்கள் எல்லோருமே லூசுதான். அல்லது ஆண்கள் எல்லோரையும் லூசு என்று நினைக்கிற (லூசா இருந்தா தேவலை) என்று நினைக்கிற குழந்தைகள்! அல்லது லூசுக் குழந்தைகள்!

கடிதத்தில் அழை எண் இருந்தது. உடன் தொடர்பு கொண்டேன். "ஹல்லோ" என்ற ஒற்றைக் குரலில் என் டைம் மிஷின் பின்னோக்கி பாயத் தொடங்கியது. பதிமூன்று வருடங்களுக்கு முன்பாக...பதினான்கு வருடங்களுக்கு முன்பாக...பதினைந்து வருடங்களுக்கு முன்பாக...என தட்டி, தட்டி இறங்கியும் ஏறியுமாக இருந்து கொண்டிருந்தது. (பயல்கள் மூவரையும் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்து விட்டது. ப்ரபாவை மட்டும் நேரில் பார்த்தது இல்லை. ஓரிருமுறை போனில் குரல் கேட்டதோடு சரி. பின்பெல்லாம் கடிதம் மட்டுமே.)

இன்னாரென்று சொன்னேன். ஒரு மூணு அல்லது நாலு செக்கேன்ட் பேரமைதி அந்தப் பக்கம். அவ்வளவுதான்!

இடையில் கிடந்த பதினேழு வருடங்களையும் மடியில் கட்டிக் கொண்டு ஒரே தாண்டாக தாண்டி இந்தப் பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள் ப்ரபா. ஒரு களைப்பில்லை, ஒரு சலிப்பில்லை. அலுவலகத்தில் இருந்து திரும்பும் அப்பாவிடம் அன்றைய பொழுதை பேசுமே குழந்தை! அவ்வழகை தாண்டி ஒரு ஒரு பிசிறில்லை!

"நானும் தேடி தேடி பார்த்தேண்டா. என்னவோ பிரச்சினைன்னு மட்டும் தெரிஞ்சுது. என்னன்னு தெரியல. அட்ரஸ்தான் இருக்கே. ஊருக்கு கிளம்பி வந்து விசாரிப்போமான்னு கூட வந்தது. அவனே தேடல. அப்புறம் நான் என்னத்துக்கு தேடணும்ன்னு நினைச்சுக்குவேன். ஆனாலும் ஒன்னோட தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக ஒரு போதும் தோணியதே இல்ல மக்கா. இன்னுமொரு இருபது வருடங்கள் கழிச்சு நீ கூப்பிட்டிருந்தாலும் இப்படித்தான் இருந்திருக்கும் என் மன நிலை!.. கல்யாணமா? என்னைக்குடா நான் அதை பத்தியெல்லாம் யோசிச்சிருக்கேன்? எப்பவோ எழுதி இருக்கேனே இதைப் பத்தியெல்லாம். உனக்கெங்கே இதெல்லாம் ஞாபகம் இருக்கப் போகுது. இந்தாதான் நீ கிடைச்சுட்டியே. உன்னை வச்சு குமாரும் கிடைச்சுருவான். இனி உங்க குழந்தைகள்தாண்டா என் குழந்தைகளும். ஐயோ..மஹா குட்டிக்கா கல்யாணம்?" என்று கெக்களி போட்டு சிரிக்கிறாள்..

"திடீர்ன்னு பார்த்தா, நாகு வந்து சொல்றா மக்கா, (நாகு- ப்ரபாவின் தோழி!) உன் கவிதை விகடன்ல வந்திருக்குன்னு. ஆஃபீஸில் இருந்து நேரா நாகு வீட்டுக்குத்தான் போனேன். விகடனை வாங்கி உன் கவிதை பார்த்தேன். இனி எப்படியும் உன்னை புடிச்சிரலாம்ன்னு நம்பிக்கை வந்திருச்சு. விகடனுக்கு போன் பண்ணி கேட்டேன். அவுங்க, அட்ரசெல்லாம் தரமுடியாது. ஒண்ணு செய்ங்க, பா.ராஜாராமிற்கு ஒரு கடிதம் எழுதி அதை ஒட்டி விகடனுக்கு ஒரு கவரிங் லெட்டர் வச்சு அனுப்பி வைங்க. அதை நாங்க அவர் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம்ன்னாங்கடா. உடனே அனுப்பிட்டேன்.அனுப்பி ரெண்டு மூணு மாசம்தான் ஆகும் மக்கா. இது இவ்வளவு வொர்க்கவுட் ஆகுமாடா?...ஐயோ நம்பவே முடியல மக்கா!"

"ஒரு ஜிம்மி வளக்குறேன் மக்கா. ஃபீமேல் டாக். இதைத்தானே யாருமே வளக்க மாட்டாங்க. ஆஃபீஸில் இருந்து வந்துக்கிட்டு இருந்தேனா. நல்ல மழை. சாக்கடையெல்லாம் ரொம்பி ஓடுது. சாக்கடைக்குள்ள இருந்து ஒரு குட்டி நாய் சத்தம். பார்த்தா இந்த ஜிம்மிடா.. குட்டியூண்டு! சாக்கடைக்கு மேல மொகத்தை வச்சுக்கிட்டு மெதந்துக்கிட்டு போய்க்கிட்டு இருக்கு மக்கா. வண்டியை நிறுத்தி, அதை தூக்கிட்டு வீட்டுக்கு வந்தனா. அம்மா கெடந்து கத்துது. குளிப்பாட்டி, கிளிப்பாட்டிப் பார்த்தா.. ஐயோ அவ்வளவு அழகுடா. நீ பார்க்கணுமே.. இப்ப நல்லா வளர்ந்துட்டாங்க" என்று சிரித்துக் கொண்டே இருந்தாள்.

இவள் சிரிக்க சிரிக்க எனக்கு கண்கள் இருண்டு கொண்டு வந்தது. பார்வை கரைந்து நீராக இறங்கும் போது இருளத்தானே செய்யும்!..

அனாதரவான நெடுஞ்சாலையில் ஒரு மைல் கல் இருப்பது போலும், அக்கல்லில் மாடு மேய்க்கும் சிறுமி ஒருத்தி அமர்ந்திருப்பது போலும், போகிற வருகிற வாகனங்களுக்கெல்லாம் டாட்டா காட்டவே பிறவி எடுத்தது போலும், பிறகு அச்சிறுமியே மைல் கல்லாக சமைந்தது போலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் காட்சிகள் விரியத் தொடங்கியது- விழித்திருக்கும் போதே இழுத்துப் போகுமே கனவு.. அது போல!

காலங்காலமாய், அனாதரவான எல்லா மைல் கல்லிலும் ஏதாவது ஒரு சிறுமி அமர்ந்து கொண்டுதான் இருக்கிறாளோ?

தொடரும்...

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A

Monday, December 27, 2010

புரை ஏறும் மனிதர்கள் - பதினொன்று

மஹா திருமணத்திற்காக நாடு திரும்ப ஒரு மாத காலம் இருந்த சமயம் அது. "ஏங்க..ப்ரபாவிடமிருந்து லெட்டர் வந்திருக்கு" என்றழைத்தாள் லதா ஒரு நாள். "என்ன புள்ள சொல்ற?" என்ற நான் ஆன்மா உதற எழுந்தமர்ந்தேன். ஒரு பெயரை கேட்டதும் ஆன்மா உதறுகிறது எனில், அது வெறும் பெயர் சம்பத்தப் பட்டது மட்டும்தானா? ஒரு பெயருக்கு பின்னால் எவ்வளவு, எவ்வளவு இருக்கிறது! எத்தனை வருடங்கள்! எவ்வளவு கடிதங்கள்! எத்தனையெத்தனை பரிமாற்றங்கள்!

கருவேலநிழல் என்னை கையில் எடுத்த புதிதில் 'ஜ்யோவ்ராம் சுந்தர்' என்ற பெயரில் எப்படி உதறி அடங்கினேன்! "மக்கா" என்ற ஒரு பின்னூட்டத்தில் தொலைந்த அத்தனை வருடங்களையும், அது சார்ந்த உணர்வுகளையும், குமார்ஜி-தெய்வாவையும், மீட்டெடுத்து விடவில்லையா? அப்படி எதுனா ஒரு சர்க்கஸ் நிகழ்ந்து விடாதா? இந்தப் புள்ளையை மட்டும்தானே இன்னும் காணோம்? என மறுகிக் கொண்டிருந்த பெயர் இல்லையா இந்த ப்ரபா!

(இங்கு, இந்த "ஐவரானோம்" என்கிற என் பழைய பதிவு ஒன்றை வாசித்து வருவீர்கள் எனில் இந்தப் பதிவு இன்னும் சுகப்படலாம். அட..சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லு மக்கா என்பவர்களுக்காக, இந்த 'புரை ஏறும் மனிதர்கள்' தொடரை என் அந்திம கால அசை போடலுக்கெனவே சேகரிக்கிறேன். என் சேர்மானத்தை உங்களிடம் பகிரும்போது என் பேச்சை கேட்டால்தான் என்ன மக்கா?)

ஆச்சா? லதா அழைத்தாளா?..

"லெட்டர்ல அட்ரஸ் இருக்கா? போன் நம்பர் இருக்கா?" என்றெல்லாம் லதாவிடம் படபடக்க தொடங்கினேன். "அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா சொன்னேன். கெடந்து பறக்காம ஒழுங்கா ஊர் வரப் பாருங்க" என்றும், என் அனத்தல் தாங்க மாட்டாது, "லெட்டர கிழிச்சுப் போட்டுட்டேன்" என்றெல்லாம் லதா சொல்லியதை நம்ப மறுத்தது மனம். (பொய் சொல்வதில் என்னளவு கெட்டிக்காரியில்லை லதா, கேட்டீர்களா?)

புரண்டு ஓடும் மழை நீரில், தலையாட்டி, தலையாட்டி மிதந்து போகும் தீப்பெட்டி போல "ப்ரபா" மிதக்க தொடங்கினாள். பதினேழு வருடங்களுக்கு முன்பு புரண்ட மழை, அப்ப மிதந்த தீப்பெட்டி... இன்னும் நனையக் காணோம், இன்னும் ஊறக் காணோம், இன்னும் அமிழக் காணோம்!

பால்ய ஸ்னேகிதியும், சில மழை நாட்களும்

ப்ரபா எனக்கு அறிமுகமான போது எனக்கு 29 வயது. ப்ரபாவிற்கு 23! (பால்ய ஸ்னேகம் என்கிற பதத்தில் குழம்பலாம் நீங்கள். எனக்கு 300 வருடம் வாழப் ப்ரியம். அப்படியானால் என் 29 எனக்கு பால்யம்தானே?) மகாவிற்கு 6-ம், சசிக்கு 1 1/2 வயதுகளும். (இங்கு, இந்த மஹா என்பவளின் திருமணத்திற்குத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன் என்பதை தயவு கூர்ந்து என்னைப் போலவே நீங்களும் மறந்துவிடுங்கள்)

பேனா நண்பனாக முதலில் குமார்ஜிதான் அறிமுகமானான். பிறகு தெய்வாவும், சுந்தராவும். பிறகுதான் இந்த ப்ரபா. ப்ரபாவிற்கு கோவை சொந்த ஊர். குமார்ஜி, தெய்வா, சுந்தராவிடம் பகிரும் சகல விஷயங்களையும் என்னால் ப்ரபாவிடமும் பகிர முடிந்திருக்கிறது. பரஸ்பரம் அவளும்! நட்பில் ஏது பாலின வேறுபாடுகள்?

பெரும்பாலும் வாசித்த புஸ்தகங்கள், கவிதைகள், கதைகள் என இருந்தவை, பிறகு குடும்ப விஷயங்களுக்கும் என பரிணாமம் பெற்றது. இலக்கிய பரிமாற்றங்களை விட குடும்ப விஷயங்களை பரிமாறிக் கொண்டதில் இன்னும் பாந்தமாக, ஒட்டுதலாக இருந்தன. குடும்பத்திற்கு அப்புறம்தானே இலக்கியமும் கருமாதியும். குடும்ப நட்பானாள் மற்ற மூவரையும் போன்றே ப்ரபாவும்.

கடிதங்களில் இச் என்றால் தும்மிக் கொள்வதும் இம் என்றால் இருமிக் கொள்வதுமாக இருந்து வந்தோம். ஒவ்வொருவரிடமிருந்தும் வாரம் இரண்டு அல்லது மூன்று கடிதங்கள் வந்துவிடும். அப்பெல்லாம் ஞாயிற்று கிழமைகள் எரிச்சல் தரக் கூடிய நாட்களாகவே இருந்ததுண்டு. பயல்கள் மூவரிடமிருந்தும் வரும் கடிதங்களை லதா பிரிக்காமலே வைத்திருப்பாள். ப்ரபாவின் கடிதம் மட்டும் பெரும்பாலும் பிரிந்தே வீட்டிலிருக்கும். மனைவி என்பவள் மனுஷி என்பதை விட மனைவி என்பதுதானே முதல்!

ஒளிக்க எங்களிடம் எதுவும் இல்லாமல் இருந்ததால் ப்ரபாவின் எந்த ஒரு கடிதமும் என்னிடமிருந்து ஒளிந்து கொண்டதே இல்லை. என்றாலும், "என்ன பழக்கம் இது. பொம்பளை புள்ளைக்கெல்லாம் லெட்டர் எழுதிக்கிட்டு?" என்பாள் லதா, எப்பவாவது.

இப்படியாக, சற்றேறக்குறைய ஐந்து வருடங்கள்!

நாட்கள், மாதங்கள், வருடங்கள்,நண்பர்கள், நான், நீங்கள் என்பதையெல்லாம் விட விதி வலியதன்றோ!(இங்கு, வி..த்..தி வ..ல்..லி..ய..த..ன்..றோ.. என வாசிப்பீர்கள் எனில் என் உணர்வை சரியாக புரிகிறீர்கள் என ஏற்கிறேன்)

கடுமை கூடிய நாளொன்றின் பின் மதியத்தில், மகன் சசி திறந்திருக்கும் கழிவு நீர் தொட்டியில் வீழ்கிறான். நாட்கள் தட்டாமாலை சுற்றுகிறது. மனசு முழுக்க நிரம்பி இருந்த நண்பர்கள் 'அந்தளை சிந்தளை' ஆகிறார்கள். எப்படி என அறிய விரும்புகிறீர்களா? வேறு வழி இல்லை உங்களுக்கு. 'ஐவரானோம்' நுழைந்து வந்தால்தான் முடியும்.

குளுமை கூடிய நாளொன்றின் அதே பின் மதியத்தில்தான் ப்ரபாவும் கிடைக்கிறாள்! பதினேழு வருடம் முன்பு அறிமுகமாகி, ஐந்து வருடங்களில் என் குடும்பத்தில் ஒருவளாகி, கடுமை கூடிய நாளொன்றின் பின் மதியத்தில் தொலைந்து போனாளே, அந்த ப்ரபா!

எப்படி?

தொடர்ச்சியில் பார்ப்போம்...

புரை ஏறும் மனிதர்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10

Friday, December 24, 2010

சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று

நல்லாருக்கீங்களா மக்கா எல்லோரும்?

நீர்க் காகம் போல, இங்கு முக்குளிச்சு அங்கு எழுந்து, மஹா திருமணம் முடித்து, அங்கு முக்குளிச்சு இங்கும் எழுந்தாச்சு. சும்மா 'ஞொய்ன்னு' காதடைக்கிற தனிமையும் தொடங்கியாச்சு.

இன்னதென்று அனுபவிக்க இயலாத அனுபவமாக அமைந்து விட்டது இந்தப் பயணம். புதிது புதிதாக எவ்வளவு அனுபவங்கள், மனிதர்கள் குரல்கள்! மனசு முழுக்க அமுக்கி அமுக்கி எடுத்து வந்திருக்கிறேன். நேரம் கிடைக்கிற போதெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருந்தாலே போதும். எதிர்படும் இந்த இரண்டு வருட சுமை தெரியாது போகலாம்.

சரி,..மஹா திருமணதிற்கு வருவோம்..

மொழு மொழுவென எண்ணெய் தடவிய உடலுடன், தொடையை தட்டியபடி நிற்கிற சாண்டோ சின்னப்பா தேவரின் முன்பு, தொள தொள டவுசருடன், கூட்டத்தினரால் தள்ளிவிடப்பட்ட நாகேஷ் நிற்கிற அனுபவமாக இருந்தது மஹாவின் திருமணம்.

பயில்வானான மஹாவின் திருமணத்திடமிருந்து, நாகேஷான நான், ஓடி, ஓடி, வளைந்து, நெளிந்து, தாவிக்குதித்து, தப்பியும் வந்துவிட்டேன். தற்காப்பு கலையில் மிக முக்கியமானது, கால் கிளப்பி ஓடி தப்பிப்பதுதானே!

மகளின் திருமணமென்பது எவ்வளவு சந்தோசம்,நெகிழ்வு, மிரட்சி, தேக்க நிலை, பிரச்சினை, தட்டுப்பாடு, கண்ணீர், அனுபவமின்மை, என்பதெல்லாம் அறிய நேர்ந்தன. இவ்வளவையும் எதிர்கொள்ள, கடக்க, என்னிடம் ஒரே ஒரு அஸ்த்திரமே இருந்தது. என் நண்பர்கள் என்கிற அஸ்திரம்!

ஆம்! நண்பர்கள் கூடி இழுத்த தேர்தான் மஹாவின் திருமணம்!

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன். உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்" என்று தழு தழுக்கிற அண்ணாத்துரை சித்தப்பாவின் பாடல்கள் கேட்காத எங்கள் இல்லத்திருமணம் இருந்ததில்லை மக்கா.

"முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒண்ணாக" என்று கரைகிற/ கரைக்கிற காளியப்பன் அண்ணனின் பாடல் மிக பிரசித்தம் எங்கள் திருமணங்களில்.

ஆண்களும், பெண்களும் அணி அணியாக பிரிந்து கொண்டு 'பாட்டுக்கு பாட்டு' பாடி சிரித்த திருமணங்கள்தான் எத்தனை எத்தனை!

இவை அத்தனையும் மஹா திருமணத்தில் இல்லாமல் போயிற்று. எனக்கு விபரம் தெரிந்து, உறவுகள் சூழாத ஒரே திருமணம் நம் மஹாவின் திருமணமாகவே இருக்கும்.

ஏன்?

ஏன் என்றால் என்ன சொல்லட்டும் மக்கா? ஒன்றை இழந்து ஒன்றை பெறலாம். எல்லாவற்றையும் இழந்து ஒன்றை பெற்றால், அந்த ஒன்று என்ன என்பதுதானே முக்கியம்!

அந்த ஒன்றாக இருந்தது மஹாவின் திருமணம்!

"டேவுலேய், ராஜா பயலே..நாங்களா முக்கியம்? எங்க போய்ட்டோம் நாங்க? .. ந்தா இருக்கு மஹா வீடு. மக்கா நாளு போய் பார்த்துர மாட்டமா மஹாவை? போட்டு உழண்டுக்கிட்டு இருக்காம ஆக வேண்டியதை பாருடா" என்று 'வெளியில் இருந்து' ஆதரித்தது மொத்த குடும்பமும்.

இப்படி ஒரு பக்கமாக குடம் சாய்ந்திருந்த சூழலை ஓடி வந்து தூக்கி நேர் செய்து தந்தார்கள் நண்பர்கள். நண்பர்கள் உறவினர்களாக நின்றார்கள்! உறவினர்கள் நண்பர்களாக நின்றார்கள்!.. "ரெண்டும் ஒன்னுதாலே..க்காளி ஒழுங்கா வேலையை மட்டும் பாருலே" என்றார்கள் இருவரும்.

பிறகென்ன...

பயில்வானிடமிருந்து ஓடி தப்பித்து, தப்பித்து ஓடி வெற்றியையும், தோல்வியையும் ஒரு சேர பெற்றான் இந்த நாகேஷ் அப்பா! (இதெல்லாம் சரி.. இந்த வெற்றி தோல்வி என்றால் என்ன?)

இப்படி,..கூடவே நின்றும், இன்னும் முகம் கூட பார்க்காத உங்களில் பலர், குரல் வழியாக ஆறுதல் சொல்லியும், மின்னஞ்சல் வாயிலாகவும் மஹா திருமணத்தில் கை நனைத்த நீங்களெல்லாம் யார்? மனசையும் மனசையும் இணைக்கிற இந்த திருகானிக்கு பெயர் என்ன மக்கா?நட்பென்றால் நட்பு! உறவென்றால் உறவு! இல்லையா?

என்ன செய்யப் போகிறேன் உங்களுக்கெல்லாம்?

சரி.. இப்படி அழுதா முடிக்கிறது ஒரு பத்தியை? அதுவும் நம் மஹா திருமணம் குறித்த பத்தியை...காலத்திடம்தான் எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறதாமே? அது எல்லாவற்றையும் சரி பண்ணி விடுமாமே?

**

இந்த மஹா குட்டி என்ன பண்ணா தெரியுமா மக்கா?

திருமணம் முடிந்து மூன்று நாள் இருக்கும்."என்னடா.. என்ன பண்ற?" என அழை பேசியில் அழைத்தேன்.

"அப்பா, இன்னைக்கு எங்க வீட்ல நாந்தான் சப்பாத்தி குருமா பண்ணேன்" என்றாள்.

"ஐயையோ" என்று சிரித்த எனக்கு ஒரு கவிதை நினைவு வந்தது. பிரமிளின் இந்த கவிதை முன்பு ஒரு அனுபவமாக இருந்தது. ஒரே கவிதை இரு வேறு அனுபவத்தை தருமா என்ன?

தந்ததே!

அந்தக் கவிதை..

"சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது."

செல்லட்டும்...செல்லத்தானே வேணும்!

Saturday, September 4, 2010

அம்மாக்களும் கவிதைகளும்

ஒன்று


(Picture by cc licence, Thanks Romana Klee)

முகத்தில் நிறைய
கரும் புள்ளி வந்துருக்கேடா
கரும்புள்ளி என்றால்
கஷ்ட காலமேடா
என்றாள் அம்மா.

முகத்தில் தானேம்மா புள்ளி
புள்ளியில் இல்லையே முகம்?
என்றதற்கு,

புள்ளியையும் சேர்த்து
முகத்தை வழித்து
சொடுக்கிக் கொண்டாள்.

ஷ்ட காலம்
இந்த அம்மா.

***

இரண்டு


(Picture by cc licence, Thanks Hector Garcia)

ப்படிப்பா உங்களுக்கு சித்தி
வந்துட்டு போனவுங்க?
என விசாரித்தான் மகன்.

ப்பா இருக்கேன்லடா
அப்பாவோட அப்பா இருக்கார்ல
அவரோட தம்பி இருக்கார்ல
அவரோட...
என்று தொடங்கியிருந்தேன்.

ங்கப்பா எனக்கு என்ன முறைன்னு
முன்னாலேயே தெரிஞ்சிருந்தா
நாமளாவது நல்லாருந்திருப்போம்டா
என முடித்து வைத்தாள்...

கனின் அக்காவோட
அம்மாக்காரி.

***

டிஸ்கி:- எனவே நண்பர்காள், வீட்டிற்கு வரும் போது, "இவர் எனக்கு வெறும் சித்தப்புதான்" என்று சொல்லி வைத்தால் போதும்.

***

நன்றி தமிழ்மணம் மற்றும் நண்பர்காள்!


Friday, September 3, 2010

வீடுகளும் கவிதைகளும்

ஒன்று

(Picture by cc licence, Thanks Travelmeasia)

திர் வீட்டில்
தேக்கு மரம்.

ம் வீட்டில் வெறும்
டேபிள் ரோஜா.

திர் வீடு
விசாலமானது.

ம் வீடு வெறும்
பத்துக்கு பத்து.

ப்பப் பார்த்தாலும்
நம் வீட்டில் மகள் அழுவாள்.
அல்லது மனைவி.

ப்படி பார்த்தாலும்
நம் வீட்டில் மட்டுமே
சத்தம் கேட்கும்.

***

இரண்டு

(Picture by cc licence, Thanks David McKelvey)

நாய்கள் ஜாக்கிரதை
கண்ணைப் பார் சிரி
வீடு விற்பனைக்கு

மாறி மாறி கூவுகின்றன
போர்டுகள்

தே கதவில்
அவர்களைப் போன்றே
கூசித் தொங்குகிறது
post எழுதிய பெட்டி.

***

Thursday, September 2, 2010

கேட்க விட்ட கவிதைகள்

ஒன்று


(Picture by cc licence, Thanks Shadowgate)

றந்த வீட்டிற்கு
வந்தால்தான் என்ன?

ட,
வந்தவர்கள் சொல்லிக் கொண்டு
போனால்தான் என்ன?

றந்தவரோடு
சேர்ந்து கொண்டு
வந்தவர்களுமா சாகடிப்பார்கள்?

***

இரண்டு


(Picture by cc licence, Thanks Ajay Tallam)

னக்கு உண்ணிங்கிற பெயர்
ஏன் வந்துச்சுன்னு தெரியல என
வருந்தி சொல்லிக் கொண்டிருந்தான்
அரிக்கிட்டு.

ல்லவேளை,

ரிக்கிட்டுங்கிற பெயர்
எப்படி வந்தது என
கேட்க இருந்தேன்.


Wednesday, September 1, 2010

பூச்சாண்டி கவிதைகள்

தெரிஞ்ச பூச்சாண்டி


(Picture by cc licence, Thanks Phoenix2k)
ட்டானை
ஹெலிகாப்டர் பூச்சியென
முதலில் அறிந்தேன்.

ட்டானை
தட்டான் எனவும்
அறிந்தது உண்டு.

போறான் பாரு,
வாலில் நூல் கட்டிய பொறம் போக்கு
என அறிந்திருக்கலாம்
தட்டானும் என்னை.

பொறம் போக்கே ஆனாலும்
பூச்சியே ஆனாலும்
பரஸ்பரம் அறியப் படுதலில்
ஒரு மகிழ்ச்சியே பூச்சி.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

***

தெரியாத பூச்சாண்டி


(Picture by cc licence, Thanks Jinterwas )

நேற்றவள்
கனவில் வந்ததை
சொன்னேன்.

ன்ன சொன்னேன்?
என்றாள்.

யோசிச்சு சொல்றேன்
என்றவள் சொன்னதை
சரி என்றாய் என்றேன்.

சிரித்தாள்.

ண்டுபிடித்து விடுகிற
போதெல்லாம் சிரிப்போமே அப்படி.

***


Tuesday, August 31, 2010

ரெண்டுங்கெட்ட கவிதைகள்

ஒன்று


(Picture by cc licence, Thanks Christian Haugen)

வளும் இவளும் வழியில்
அவனும் இவனும் எதிரில்.

டந்த பிறகு,
அவள் சொல்வாள் இவளிடம்
மெதுவா திரும்பிப் பாரேன்
திரும்பிப் பார்ப்பான் பாரு.

வன் கேட்பான் இவனிடம்
டக்குன்னு திரும்பிப்பார் மாப்ள
பார்க்கிறாளான்னு?

க,

வளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்க்கிறார்கள்

னி,

வர்களுக்காக அவர்கள்
திரும்பித் தொலைப்பார்கள்.

***

இரண்டு



(Picture by cc licence, Thanks Abhisek Sarda)

முப்பிரி சனலை மூட்டி
ரயில் வண்டி ஓட்டிய அனுபவம்
தந்ததோ என்னவோ
ரயில் டிரைவர் ஆசையை.

பை நிறைய முருக்கு அதிரசம்
வாங்கி வருகிற D.முருகன் அப்பாவை
பார்த்த பிறகு ரோடு ரோலர் ஓட்டுனராக
பிரியம் கொண்டிருந்தேன்.

மெய்யரக்கா மகன் பழனி மாதிரி
பேசாமல் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்
என்ற நினைவிற்கு ராமலிங்க வாத்தியாரின்
புளியங்குச்சிதான் காரணமானது.

முப்பிரி சனல்
முருக்கு அதிரசம்
புளியங்குச்சி மாதிரியே
மஞ்சள் பத்திரிக்கையும்
காரணமாச்சு ஒரு நாள்,

லேடீஸ் டைலராக
விரும்பிய கனவிற்கு.

***


Monday, August 30, 2010

பா. ராஜாராம் கவிதைகள் - ஏழு

ஒன்று



(Picture by cc licence, Thanks Horia Varlan )

கேள்விக் குறியும்
ஆச்சரியக் குறியும்
கோட்டோவியமே.
சற்று
கூன் மட்டும் கூடுதல்
கேள்விக் குறியிடம்.

இரண்டு


(Picture by cc licence, Thanks Silent shot)

திருமண கொட்டகையில்
கொட்டுகிறது மழை
மேலாக.

கீழாக
கலர் கலராய்
சொட்டுகிறது.

மூன்று


(Picture by cc licence, Thanks Hunter Jumper)

லையில்
அடித்துக் கொண்டிருந்தது
மரத்தை வெயில்.
தாங்கிக் கொண்டிருந்தது
நிழல்.

நான்கு


(Picture by cc licence, Thanks Mrs. Gemstone)

புழுவை கொத்தியது கொக்கி.
தன் பங்கிற்கு
மீனையும் கொத்தியது புழு.

ஐந்து


(Picture by cc licence, Thanks Runran)

பித்தின் நிகழ் வாசலில்
வெட்டப் படுகிறது எப்போதும்
ஆட்டுக் குட்டியைப் போன்றே
காதலும்.

ஆறு


(Picture by cc licence, Thanks Mary Jane watson )

ண்ணெய் தேய்த்து
குளித்த பிறகு தூங்கும்
சனிக் கிழமையை

பொன் கிடைத்தாலும்
கிடைக்காத புதன் கிழமையை

னங்கிழங்கு கிடைக்கும்
திங்கள் சந்தையை

ண்புழு தடமூறிய
மழை நாளை

பிழைக்க வரும் போதே
தொலைத்தும் வர வேண்டியதாகிறது.

***
-----------------------------------------------
பா.ராஜாராம் கவிதைகள் - 1, 2, 3, 4, 5, 6
------------------------------------------------


Sunday, August 29, 2010

புரை ஏறும் மனிதர்கள் - பத்து

அப்பாவை தத்தெடுத்த மகன்கள்

கமலேஷ் மற்றும் ஸ்ரீதர்தான் அந்த மகன்கள். அந்த அப்பா அடியேன்தான்.

இதுதான் நிகழும் என அருதியிடாத தருணங்கள்தான் எவ்வளவு அற்புதமானவை! அப்படி, எவ்வளவு அற்புதங்கள் வலை உலகம் வந்த பிறகு. d.r. அசோக் என நினைவு, முதன் முதலாக சித்தப்பு என்று அழைத்தது. அப்புறம் பூராம் வரிசையாக அண்ணா, அண்ணே, மாம்ஸ், சித்தப்பூஸ்தான். ஏன், சாரும் கூட உண்டு. விளக்கமாருக்கு பட்டுக் குஞ்சம் போல.

வீட்டில் மின்சாரம் போய்விடும். விளக்கு பொருத்தவென தீக்குச்சி உரசுகிற மனுஷி / மகளின் முகத்தை புதிதாக பார்ப்பது உண்டு. "அட, நம்ம பக்கிகள்தானா இது?" என்று மிதக்க எது காரணமாகிறது? இருளா? குறைந்த ஒளியா? இரண்டுமேவா?

ஊரில், காலத்தை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு திரிந்தவனை, சவுதியில் கொண்டு வந்து அடைத்தது வயிறுகள் சார்ந்த வாழ்வு. மின்சாரம் போனது போலான இருள். "அட, நம்ம பக்கிகள்தானா இது?" என அவ்வப்போது தீக்குச்சி உரசி முகம் காட்டுகிறார்கள் கருவேல நிழல் பெற்ற மக்கள்..

அண்ணா, அண்ணே, சித்தப்பு, மாம்ஸ், தோழர், சார், எல்லாம் கூட சரிதான். அப்பா என்பவன் எங்கிருந்து குதிக்கிறான் இதற்குள்? இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாய் என்னையும் பெற்ற என் கருவேல நிழலே?

சரி. கமலேஷ் ஸ்ரீதரை பார்ப்போம்.

ஓரிரு மெயில் செய்து, அழை எண் பெற்று, முதல் விளிப்பிலேயே அப்பா என்றான் கமலேஷ். குலுங்கினேன். 29 வயதுக்காரனான ஒருவன் 45 வயதுக் காரனான ஒருவனை அப்பா என்கிறான். வயசெல்லாம் zoom out ஆகி பச்சை வாசனையுடன் மகனே என மனசில் ஏந்துகிறான் அப்பன் காரனும்.

போக, மனசும் அடி வயிறும் சுண்டியது. பிரசவ காலங்களில் சுண்டுமாமே பெண்களுக்கு. அப்படி. இன்பத்தில் சுரந்தால்தான் என்ன? கண்களில் சுரந்துவிட்டால் அதன் பெயர் கண்ணீர்தானே எப்பவும்.

சந்திப்பதாக பேசிக் கொண்டோம். பேசிக்கொண்டே கிளம்பிக் கொண்டிருந்திருப்போம் போல. எல்லாம் வேகு வேகுன்னு கூடி வந்தது. எனக்கும் கமலேஷிற்குமான தூரம் சற்றேறக்குறைய 200 கிலோ மீட்டர்கள். றெக்கையடிப்பிற்குள் மடங்குமா கிலோ மீட்டர்கள்? கண் மூடி திறப்பதற்குள் எதிரில் நின்றார்கள் கமலேஷும் ஸ்ரீதரும். இங்கு யார் ஸ்ரீதர் என வருகிறது இல்லையா? எனக்கும் அதேதான்.

"அப்பா, கிளம்பிட்டோம்" என்று கமலேஷ் அழைத்த போதுதான், கூட ஒருவர் வருகிறார் போல என தட்டியது. "சரி..வாங்கடா" என்ற என்னால் வழி சொல்லத் தெரியல. இந்த ஒன்பது வருடமாக எனக்கு என் முதலாளி அரண்மனை தெரியும். சம்பளம் அன்று அல்ராஜி பேங்க் தெரியும். மதினா ஹோட்டல் தெரியும். தோசை தெரியும். மீண்டும் அரண்மனை வரத் தெரியும். குதிரை வண்டியில் பொருந்திய, குதிரையின் கண்களில் பொருத்திய, தகரத்தின் பெயர் குடும்பம் எனலாம், இங்கு. கழுதையாக கூட பிறந்து தொலைத்திருக்கலாம்தான். பொதி சுமந்தாலும் பார்வையை மறைக்காத கழுதையாக. சரி, பிறப்பென்ன நம் கையிலா இருக்கிறது? அறை நண்பர் குமார் சேட்டா உதவினார் அவர்களுக்கு.

ஆச்சா? எதிரில் நின்றார்களா?

டோசரி டவர் வாசலில் சிரித்துக் கொண்டே எனை நோக்கி வந்து கொண்டிருந்தனர் இருவர். இந்த இருவரில் யார் கமலேஷ்? தடக், தடக் தடக்,தடக்... தடக்,தடக்...தடக்,தடக்,. பறவையாக இருந்து, குதிரைக்கு மாறி, கழுதையாகி விரும்பி, புகை வண்டியாகவும் மாறிக் கொண்டிருந்தேன்.

தோராயமாக "கமலேஷ்" என கை பற்றினேன் ஸ்ரீதரை.

"நான் ஸ்ரீதர்ப்பா. இது கமலேஷ்" என்றான் ஸ்ரீதர். இருவரிடமும் அப்படி ஒரு ரகசிய சிரிப்பு. அதுசரி! ஸ்ரீதருக்கும் அப்பாவா? மீண்டுமொருமுறை சுண்டி அடங்கியது அடிவயிறு. என்னங்கடா நினைச்சுக் கிட்டு இருக்கீங்க பயல்களா?

எனக்கும் கமலேஷிற்கும் என்னவோ இருக்கு. ஸ்ரீதர்க்கும் எனக்கும் என்ன? ஏன் இந்த ராஸ்க்களும் அப்பா என்கிறான்? அறை நண்பனான கமேலேஷை நண்பனுக்கும் மேலாக வைத்திருப்பான் போல ஸ்ரீதர். அவன் இவனாகவும், இவன் அவனாகவும் மாறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பங்கிற்கும்.

பேசிக் கொண்டே ஸ்ரீதர் காரில் ஏறி ஆலமரம் வந்தோம். "கோடிப் பழங்களில் எதை வேணுமானாலும் கொத்திக் கோயேன் பறவை" என்கிற ஆலமரம். அல்லது கோல்டன் ஜூஸ் கார்னர்.

என்னென்னவோ பேசி தீர்த்துக் கொண்டிருந்தோம் மக்கா.

ரொம்ப நேரமாக தூக்கி வைத்திருந்த இந்த அப்பா பாரத்தை இளக்க விரும்பி, பேச்சின் ஊடாகவே, சிகரெட் பாக்கெட்டை இருவரிடமும் நீட்டினேன். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மீண்டும் ரகசியமாக சிரித்துக் கொண்டார்கள்.

" நீ அப்பாட்ட பேசிட்டே இரு. தம் அடிக்கனும்ன்னு தோணுறப்போ, ந்தா வர்றேன்ப்பான்னு போவேன். நா வந்த பிறகு நீ போய்ட்டு வான்னு சொல்லி வச்சிருந்தான்ப்பா கமலேஷ். நீங்க சிகரெட் பாக்கெட்டை நீட்டுறீங்க" என்று வெடித்து சிரித்தான் ஸ்ரீதர். "இருக்குப்பா" என்றான். பற்ற வைத்துக் கொண்டோம். விரும்பியது போலவே அப்பா பாரமும் இளக தொடங்கியது.

மகன்களை பார்த்த குஷியில் மகளையும் தேட வேண்டிய தேவை வந்தது எனக்கு. அத்தேவையை ஏற்படுத்தினார்கள் இம்மகன்கள். "என்னடா வாங்கிட்டு போறது அப்பாவுக்குன்னு கேட்டுகிட்டே வந்தான்ப்பா கமலேஷ். அப்பாட்டயே கேட்டு வாங்கிக்கலாம்ன்னு கூட்டிட்டு வந்தேன்" என்றான் ஸ்ரீதர், ஒரு கட்டத்தில்.

"ஐயோ. இதுவே தாங்க முடியாமல் வருகிறது. இவ்வளவு செலவு செய்து பார்க்கணுமுன்னு வர்றீங்களே. இது போதாதா?" என்றாலும் விடவில்லை.

"என்னப்பா இது. தங்கச்சிக்கு கல்யாணம் வருதுல்ல. அண்ணன்களா நாங்க எதுனா செய்ய வேணாமா. எங்க தங்கச்சிப்பா. உங்கட்ட என்ன கேக்குறது. நீ ஏண்டா இவர்ட்ட போய் இதை சொல்ற" என்றான் கமலேஷ்.

சரி. தங்கச்சிட்டியே கேட்கலாமேன்னு மகாவை அழைத்தேன். ரிங் போய் எடுக்கும் போது கட்டாச்சு. அவள் மொபைல் அப்படி. பேட்டரிக்கு மூட் இருந்தால் மட்டுமே பேச அனுமதிக்கும். சிரித்து, இவன்களிடம் விபரம் சொல்லி, சார்ஜரில் போட்டுட்டு மிஸ்கால் பண்ணுவாள்" என்றேன்.

சற்று நேரத்தில் மகா மிஸ் கால் செய்தாள். மகன்களை அறிமுகம் செய்து போனை இவன்களிடமும் கொடுத்தேன். அடேங்கப்பா! தங்கச்சியை கொண்டாட தொடங்கி விட்டார்கள் இருவரும். பேசி, பேசி கரைத்து பார்த்திருப்பான்ங்க போல. அவளும் கரையல போல. "தங்கச்சி உங்கட்ட பேசணுமாம்ப்பா" என்று போனை என்னிடம் கொடுத்தார்கள்.

"என்னப்பா என்னை மாட்டி விட்டுட்டீங்க?" என்றாள். சிரித்து, "என்ன செய்ய சொல்ற? என்றேன் அவளிடம். அதேதான் உங்களிடமும் கேட்கிறேன், "என்ன செய்ய சொல்றீங்க மக்கா?"

என்னை அறையில் விடுவதாக கூட்டிட்டு போய், LULU மார்க்கட்டில் e-63 மொபைல் வாங்கினார்கள். 740 ரியால் என்ற நினைவு. சற்றேறக்குறைய பத்தாயிரம் ரூபாய் நம் காசிற்கு. "சிம்ப்ளா பாருங்கடா" என்றாலும் கேட்கல. தோளுக்கு வளர்ந்து விட்டால் நம் பேச்சையா கேட்கிரான்கள் மகன்கள்? கூடவே சிகரெட் வேறு குடிக்கிற மகன்கள்.

அறை வந்து மகளை அழைத்து, " சூப்பர் மொபைல்டா. என் சிம்மை கழட்டி அதில் போட்டிருக்கான்கள். உனக்கு கத்து தரனும்ல. அதுனால பழகிட்டு இருக்கேன்" என்றேன்.

"அதுலாம் நான் கத்துக்குவேன்ப்பா. நீங்க சிம்ம கழட்டி உங்க மொபைல்ல போட்டுக்குங்க. அண்ணன்கள் வாங்கி தந்ததாக்கும்" என்றாள்.

"சர்தான் தாயி" என்றேன். சிரித்தாள்.

இந்த மகன்களையும், மகள்களையும் தோளுக்கு வளர விடாமல் செய்டா கடவுள்.

***

இந்த வாரத்திற்கான நட்சத்திர பதிவர் வாய்ப்பிற்கு மிகுந்த நன்றி தமிழ்மணம்!


புரை ஏறும் மனிதர்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9


Thursday, August 26, 2010

அழகு


(Picture by cc licence, Thanks Mary Jane watson )

சாண வரட்டி
தட்டிக் கொண்டிருந்தாள்
சகுந்தலா சித்தி.

வீட்ல அடையாக்கும் என
விசாரித்தபடி போய்க் கொண்டிருந்தார்
பெருமாள் சித்தப்பா.

மா, சாப்பிட வந்துருங்க கொழுந்தனாரே
என சிரித்த சகுந்தலா சித்தி
அவ்வளவு அழகு.

தைவிட அழகு,
அத்தருணத்தில் மணிக்கட்டினால்
சித்தி முடி ஒதுக்கியது.


--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

Thursday, August 12, 2010

வழுக்கி விழும் வீடு


(Picture by cc licence, Thanks Brad & Ying)

சிகரெட் பிடிக்கிற காசிற்கு
வாழைப் பழம் வாங்கி தின்னேண்டா
என்பாள் அம்மா.

சிகரெட் குடிச்ச காசை
சேர்த்து வைத்திருந்தால்
வீடு கட்டியிருக்கலாம்
என்கிறாள் மனைவி.

கொல்லையில்,
வாழை மரங்கள் வைத்த
வீடொன்றை நினைக்க
நல்லாத்தான் இருக்கிறது...

புகைக்கிற போதெல்லாம்.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

Saturday, August 7, 2010

பதிவுலகம் - இப்படிக்கு நான்

நண்பர் ஸ்டார்ஜன் அழைத்த தொடர் பதிவு இது. நன்றி ஸ்டார்ஜன்!

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பா. ராஜாராம்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

பா. ராஜாராம், பெயர்.

பா.ரா:- "ஒரு போட்டோ அனுப்புங்க, ப்ளாக்ல போட" என்று தம்பியின் நண்பர் மெயில் செய்த போது, வேண்டாம் என்றேன். பிறகு இந்த பா.ரா. லோகோ அனுப்பி, பிடிச்சிருக்கா? என்றார். பிடிச்சிருந்தது. அப்படி பாராவும் வந்தது. நண்பர்களும் அழைக்கத் தொடங்கினர்.

பிறகொருநாள், கூகுல் தேடலில், இன்னொரு பாரா என்றொரு தேடல் பார்த்தேன். க்ளிக் பண்ணி பார்த்த போது, அந்த இன்னொரு பாரா thaan நான் என அறிந்தேன். முன்பே எழுத்தாளர் பா. ராகவனை பாரா என்றழைக்கிற விபரம் அன்றுதான் தெரிய வந்தது. சற்று வருத்தமாக இருந்தது. சரி, நம்ம எழுத்தாளர் இல்லைதானே, ஒரு ஓரமாக இருந்து விட்டுப் போவோம் என என்னை சமாதானம் செய்து கொண்டேன். கொள்கிறேன். இப்பல்லாம், மகளுக்கு அழை பேசும் போது, "என்ன பாரா, போனையே காணோம் என்கிறாள்?" சந்தோசமாகத்தான் இருக்கிறது. பெயர் சொல்லத்தானே பிள்ளைகள்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

தம்பியும், நண்பரும் தொடங்கித் தந்தார்கள். எழுதுவதை ஆவணப் படுத்துவதே என் முயற்சி, ஆசை. எதிர்பாரா விதமாக உறவுகள் / நண்பர்கள் சம்பாதித்தது, அதிர்ஷ்ட்டம், சொல்லொண்ணா மகிழ்ச்சி.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலம் எப்பவும் இலக்கில்லை. வாழ்க்கையிலேயே இலக்கில்லாமல் பயணிக்க ரொம்ப பிடிக்கும். அப்படியான ஒரு பயணமாகத்தான் இதுவும். வணக்கத்திற்கு, பதில் வணக்கம் போல், பின்னூட்டங்களுக்கு( நேரம் இருக்கிற போது) பதில். பிடித்த பதிவென்றால் யோசிக்காமல் பின்னூட்டம்.

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நிறைய! ஏன் என்றால் பிடிச்சிருக்கு. பிடிச்சதை செய்ய என்ன பெரிய தயக்கம்? விளைவு என்னன்னா, என்னன்னு சொல்றது மக்கா? சந்தோசமா, விடுதலையாய் இருக்கு. வீட்ல கோபம்னா, சகோதரிகள் / நண்பர்கள் வீட்ல போய் சாப்பிடுவேன். வீட்ல பிரச்சினைடா என்பேன். "போடா லூசு பக்கி" என சாப்பாடும் போட்டு வீட்டிற்கும் அனுப்பி வைப்பார்கள். முழுக்க, என் சுயநலம் கருதியே பகிர்கிறேன். விடுதலை என்கிற சுயநலம்.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

விரும்பியே எழுதுகிறேன். பொழுதும் போகிறது. எழுதியெல்லாம் குடும்பத்தை காப்பாற்ற முடியாது என்ற அளவிலேயே என் எழுத்தை புரிந்து வைத்திருக்கிறேன். அதற்காக, சம்பாதிக்க இயலும் எனில், வேண்டாம் என்பவனும் இல்லை. உதாரணத்திற்கு, விகடனில் கவிதை பிரசுரமாகிற போது ஒரு விகடனும் பரிசுத் தொகையும் அனுப்புகிறார்கள். விகடன் மட்டும் போதும் என்றால், மனைவி பிடரியில் அடிப்பாள். 'என்னவோல்ல இவன்ட்டையும் இருந்திருக்கு' என்று மனைவின் பிடரியில் அடிக்க பரிசுத் தொகை உதவியாக இருக்கிறது.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

ஒன்றுதான்.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம்- ஏற்பட்டது உண்டு. பின்னூட்டத்தில் இறக்கி வைத்து விடுவதும் உண்டு. தூக்கிக் கொண்டு அலைய கோபம் என்ன குழந்தையா?

பொறாமை - "என்னய்யா இந்த போடு போடுகிறார்கள்?" என்ற நினைப்பிற்கு பெயர் பொறாமை எனில், நிறைய உண்டு. கவிதைகளில், பெயர்கள் குறிப்பிட்டால் பத்தி பெரிசாகும். சிறுகதையில், மாதவராஜ், காமராஜ், அமித்தம்மா, விதூஸ், ஆடுமாடு, மணிஜி, செ. சரவணக்குமார் என்று சொல்லலாம். நகைச்சுவை பத்தி எழுத்துகளில், அனுஜன்யா, ஜெகநாதன், ஆதி, வித்யா(scribblings), நர்சிம், நசரேயன், கார்க்கி, என்று உடன் நினைவு வருகிறார்கள். இன்னும் கூட நிறைய! பெயரை பார்த்ததும் போய் வாசிக்கிறது உண்டு. வாசிக்கிற பட்டியலுக்கு போய் மூளையை இவ்வளவு சுரண்டனுமான்னு வருது. ஏற்கனவே, கரண்டி பாத்திரத்தை சுரண்டும் சத்தம்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

பின்னூட்டத்தில், கோ.வி. கண்ணன் சார்.

அழை பேசியில், ஜ்யோவ்ராம் சுந்தர். அது, "இந்தப்" பதிவில்.

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்

விருப்பம் என்று வற்புறுத்தி கேட்பதால், அக்டோபரில் மகளின் திருமணம். மகளின் திருமணத்திற்காகவே என் திருமணத்தை தள்ளிப் போட்டு வருகிறேன்.

அழைக்க விரும்புவர்கள்:

1. நர்சிம்

2. d.r. அசோக்

3. கமலேஷ்

4. வேல்கண்ணன்

5. ரவிச்சந்திரன் & Mrs.கீதா ரவிச்சந்திரன்

(இதில் யார் யார் எழுதியது என தெரியவில்லை. எழுதாதவர்கள் எழுதுங்களேன் மக்களே)

***

Tuesday, August 3, 2010

புரை ஏறும் மனிதர்கள் - ஒன்பது

சார் என்ற அண்ணன் ராஜசுந்தரராஜன்

காளீஸ்வரன் வாத்தியாரை பார்க்கிற போதெல்லாம், பயல்கள் ஆன நாங்கள், தொப் தொப் என சைக்கிளில் இருந்து குதிப்போம். வணக்கம் வைப்போம். "விழுந்து வச்சுராதடா முண்ட" என்பார் சாரும்.

வாத்தியார் வாயில் இருந்து புறப்படுகிற இந்த முண்ட எவ்வளவு வசீகரமாக இருக்கும் தெரியுமா?

ஏனெனில், சார் வாத்தியாராக இருந்ததில்லை. சிவகங்கையாக இருந்தார். ப்ரியங்களில் நிறைந்த என் சிவகங்கையாக.

சிவகங்கை மக்களின் பிரதானமான வார்த்தை இந்த முண்ட. அம்மா அப்பா தொட்டு அனேகமாக அனைவர் வாயிலும் நிறைந்து தவழும் வார்த்தை. அன்பானாலும், கோபமானாலும், குஷியானாலும்.

"வாத்தியார்னா, வாத்தியார் மாதிரியா இருக்கணும்?" என்றிருப்பவர் காளீஸ்வரன் சார்.

நடந்து போய்க் கொண்டிருப்போம். சாரை பார்த்துருவோம். அனிச்சையாக சட்டையின் மேல் பட்டனை மூட்டும் கைகள். வணக்கம் வைக்கிற சந்தோசத்தில் மறந்தும் போயிருவோம்.

"அப்பா நல்லாருக்காராடா ராஜாராமா?" என்று நம்மிடம் பேசிக் கொண்டே நம் சட்டையின் மேல் பட்டனை பொருத்திக் கொண்டிருப்பார் காளீஸ்வரன் சார்.

திருமணமாகி, tvs-50 -யில் மகாவை முன்னிருக்கையில் அமர்த்தி, லதாவை பின்னிருக்கையில் அமர்த்தி, போய்க் கொண்டிருந்த காலத்திலும் கூட,

சாரை பார்த்ததும், "சார்" என்று சடன் பிரேக் போட்டு நின்று பேசிய நாளில், "என்னடா, வண்டிலாம் வாங்கிட்ட போல, கெட்ட பயமா இவன், பத்திரமா பார்த்துக்க" என்று லதாவிடம் பேசிக் கொண்டே, என் மேல் சட்டை பட்டனையும் மாட்டிக் கொண்டிருந்தார். மகா, திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதுக்குன்னே தெரியாமல், எல்லாமே இருப்பது போல், ஏதாவது இருந்து கொண்டிருக்கும், யாரிடமாவது. இல்லையா?

அப்படி,

முன்பே, மனசில் எவ்வளவோ இருந்த ஒருவரை, நர்சிம் தளத்தில் கண்டேன். எல்லோரும் கவிஞர் ராஜசுந்தரராஜன் என்றாலும் அண்ணே என்பதில் நிறைகிறேன். முண்ட மட்டும் தெரிஞ்சவனுக்கு அவ்வளவுதான் தெரியும்.

சுந்தரிடம் விசாரித்து, சிவராமனிடம் அழை எண் பெற்று, சுந்தர் அனுப்பி, அழைத்த போது அண்ணன் திரை அரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

" அதெல்லாம் இல்ல தம்பி உங்களை விடவா படம் பெரிசு எனக்கு?" என்ற குரல்,

நீண்டு
நீண்டு நீண்டு
நீநீநீண்டு
என் சட்டையின்
மேல் பட்டனை மாட்டியது.

பிறகு அண்ணனின் பின்னூட்டம் எங்கு பார்த்தாலும் சைக்கிளில் இருந்து தொப்பென குதிக்கிறேன். வணக்கம் வைக்கிறேன்.

மனைவி குழந்தையுடன் போய்க் கொண்டிருந்த நாள் ஒன்றில் பார்க்க கிடைத்த ப்ரிய வாத்தியார் மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்தது நேசன் தளத்தில்.

பதிவர் தமிழ்நதி, ராஜசுந்தரராஜனும், ராஜாராமும் ஒருவர்தானா? என்கிற கேள்வியை வைத்தார்கள் "பின்னூட்டத்தில்" அதற்கு அண்ணனின் பதில் என்ன தெரியுமா?

"பா.ராஜாராம், ராஜசுந்தரராஜன் ஒருவர் அல்லர். அண்ணன் தம்பிகள். பா.ரா. சிவகங்கையில் பிறந்தார். அல்லது பிழைத்தார். அல்லது இரண்டும். ராஜசுந்தரராஜன் சிவகங்கை மன்னர் கல்லூரியில் puc படித்தார். அவ்வளவு நெருக்கம்"

கேட்கவா வேணும்?...புர்ர்ர்ர் என்று பின்னூட்டத்தில் சந்தோசமாய் நெட்டி முறித்தேன்.

"முண்ட, முண்ட.. பட்டன போடு" என்றது அண்ணனின் பதில் குரல். சாரி, சாரி,..அண்ணன் சாரின் குரல். அது இது.

அன்புத் தம்பி,

யார் யாரோ விளையாட்டு வீரர்கள் பேரெல்லாம் சொல்லி அவங்க செட்டான்னு கேட்டிருக்கீங்க. நான் என்னத்தை விளையாட்டைக் கண்டேன். ஒரு பொண்ணெத் தினம்தினம் பஸ்ஸ்டாண்டு வரை கொண்டுபோயி மேலூர் பஸ்ல ஏத்தி அனுப்ச்சிட்டு வருவேன். ஒருதலை. அவ மேலூர்ல இருந்து வந்துபோய்க்கிட்டு இருந்தா. வகுப்புத் தோழிதான். அவ பிறகு டாக்டருக்குப் படிக்கப் போயிட்டான்னு கேள்வி. நான் ஃபெயிலாயிட்டேன். பாஸாகி இருந்தா நானும் டாக்டர் ஆகி இருப்பேன். லாங்வேஜ் ரெண்டுலயும் கூட A+. மற்ற பாடங்கள்ல எல்லாம் D, D+ தான். கெமிஸ்ட்ரில மாத்ரம் F.

விஸ்வநாதன்னு ஒரு கெமிஸ்ட்ரி லெக்சரர் இருந்தாரு. நல்லாத்தான் நடத்துவாரு, ஆனா அடிக்கடி ஜோக்கு அடிப்பாரு. நான் சிரிச்சுக்கிட்டே மிதந்திட்டேன்.

அண்ணன் ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ். படிச்சிக்கிட்டு இருந்தாரு. பள்ளிக்கூடத்துல அவரு கூடப் படிச்சவரு, 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி' ஆஃபீஸ்ல க்ளார்க்கா இருந்தாரு. இவரு அவர்ட்டச் சொல்லி அவரு கையில இருந்த ஒரு அப்ளிகேஷனை அனுப்பி வச்சாரு. அப்படித்தான் கெமிக்கல் டெக்னாலஜியில டிப்ளமாப் படிச்சேன். ஸ்பிக்ல வேலை கிடைச்சது. அங்கெ போனதுக்கு அப்புறமா எஞ்ஜினியர் ஆனேன். கெமிஸ்ட்ரியில ஃபெயிலாப் போனவன் கெமிக்கல் எஞ்ஜினியர் ஆன கதை இது.

சரி, நம்ம காலேஜுக்கு வருவோம். நான் PUC படிச்ச வருஷம் கண்ணப்பன் (பின்னர் சுகன்யா புகழ்) BA இரண்டாம் ஆண்டோ மூன்றாம் ஆண்டோ படிச்சிக்கிட்டிருந்தாரு. அந்த வருஷம் அவரு காலேஜ் எலெக்ஷன்ல செக்கரட்ரிக்கு நின்னு தோத்துப் போனாரு. அவரும் பிறகு என்னெ மாதிரியே தோத்த பாடத்துல ஜெயிச்சு மந்திரி வரைக்கும் ஆனார்ங்கிறதுனால அவரெ மறக்காம இருக்கேன்.

அந்த வருஷக் கடைசியில கவிஞர் மீரா என்னெக் கூப்பிட்டு விட்டிருந்தாரு. அவர் அப்பப் ப்ரின்ஸ்பல் ஆகலை. தமிழ்த்துறைத் தலைவரா இருந்தாரு. நமக்குத்தான் அவரு வகுப்பு எடுக்குறதில்லையே என்னத்துக்குக் கூப்பிட்டு விட்டிருக்காருன்னு குழம்பிப் போயி, மாடியில இருந்த அவர் அறைக்குப் போனேன். நல்லா ஞாபகம் இருக்கு. அது வசந்தகாலம். அவர் அறைச் சன்னலுக்கு வெளியே இருந்த வேப்ப மரம் கொழுந்துவிட்டு, இந்தா தொட்டுத் தடவுன்னு சன்னலுக்குள்ள எட்டிப் பார்த்திச்சு. என்னெ உட்காரச் சொன்ன மீரா, 'தாமரை' பத்திரிக்கை நடுபக்கத்தைப் பிரிச்சு, "இது என் முதல் வசன கவிதை. எப்படி வந்திருக்கு?"ன்னு கேட்டார். 'நான் ஒரு மலைப்பாதை போகிறேன். கல் கிடக்கிறது. முள் கிடக்கிறது. இடறினாலும் தைத்தாலும் பொருட்டில்லை. நான் மலைப்பாதை போகிறேன்.' இப்படி இதுமாதிரியே அடுக்கடுக்கா இடைஞ்சலும் அதைப் பொருட்படுதாமையுமா அந்தக் கவிதை இருந்திச்சு. நானும் அதையே, "இடைஞ்சல்களைப் பொருட்படுத்தாமை ஒரு கொள்கை வீரனுக்கு அவசியம்ங்கிறது கவிதையில சிறப்பா வந்திருக்கு"ன்னேன். "நம்ம கல்லூரி மலருக்கு நீங்க ஏன் ஒரு கவிதை எழுதித் தரக் கூடாது?"ன்னார். "அய்யோ, எனக்குக் கவிதை எழுதத் தெரியாதே"ன்னேன். அவரு ஒரு பேப்பரெ என் முன்னால் எடுத்துப் போட்டார். அது கண்ணப்பனை ஜெயிச்சு செக்கரெட்டரி ஆன முத்துக்கிருஷ்ணனுக்கு நான் எழுதிகொடுத்த கவிதை: 'விருந்தினரும் வறியவரும் தாமே யுண்ண மேன்மேலும் முகம்மலரும் மேலோர் போல...'ங்கிற கலிங்கத்துப் பரணிப் பாட்டுல தொடங்கி, அதே தாழிசை இலக்கணத்துல, ‘என் முன்னோர்கள் அப்படி இருந்தாங்க; எனக்கும் அப்படி இருக்கத்தான் ஆசை. ஆனா பாரு கஞ்சிக்கு வழி இல்லாமச் செத்துக்கிட்டு இருக்கேன். நீயோ யாழ்மீட்டி வர்ற இரவலன் போல பாடிக்கிட்டு வர்றே, என்கிட்ட உனக்குக் கொடுக்க ஒருசொட்டு ரத்தம் கூட இல்லையே, என்ன செய்வேன், கொசுவே,’ன்னு முடிச்சிருப்பேன். “இது நான் எழுதுனது இல்லை, ஸார்”ன்னேன். ஒரு கட்டுரை நோட்டை எடுத்துப் போட்டு வாசிக்கச் சொன்னார். அதுல எக்கச்சக்க எழுத்துப் பிழை. போதாததுக்கு ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் போட்டுக் குழப்பி இருந்தார். அது முத்துக்கிருஷ்ணன் கட்டுரை நோட்டு. “இவரா இந்தக் கவிதையை எழுதியிருக்க முடியும்?”ன்னார் மீரா. நான் சங்கடப்பட்டேன். “நீங்கதான் எழுதிக் கொடுத்தீங்கன்னு அவரே ஒத்துக்கிட்டார். இதை அவரு பேர்லயே போடுவோம். உங்க பேர்ல ஒரு கவிதை எழுதிக் கொடுங்க”ன்னார். அப்பொ நான் ஒரு கம்யூனிஸ்ட்டு. ‘அது எந்நாளோ இது எந்நாளோ’ன்னு அந்நாள்ல ஒன்னை எழுதிக் கொடுத்தேன். மீரா அதை நல்லாவே இல்லைன்னுட்டார். ஆனாலும் என் படத்தையும் போட்டு அந்தக் கவிதையையும் மலர்ல வெளியிட்டார்.

பதினாலு வருஷத்துக்கு அப்புறம் மீராவும் அவரு மனைவியும் தூத்துக்குடி ஸ்பிக்நகர்ல நானிருந்த வீட்டுக்கு வந்திருந்தாங்க. அன்னிக்கு என் மனைவி சுட்டுக் கொடுத்த வடையோட பக்குவத்தெப் பத்தி வருஷங்களுக்கு அப்புறமும் (கதிரோட கல்யாணத்துலன்னு நினைக்கிறேன்) அந்த அம்மா மறக்காமப் பாராட்டுனாங்க.

மீராவும் போயிட்டாரு. என் மனைவியும் என்னெ விட்டுப் போயி அப்புறமும் தினம்தினம் பார்த்துக்கிறோம் பேசிக்கிறோம். கமுதிக்குப் பக்கத்துல செங்கோட்டைப்பட்டிங்கிறது நான் பொறந்த ஊரு. ஊருக்குப் போறப்போ சிவகங்கை வழியாப் போனா, ‘மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரி’யெக் கையெடுத்துக் கும்பிடாமக் கடக்கிறது இல்ல, இப்பவும்.

அன்போடு
ராஜசுந்தரராஜன்

***

மழெ இல்லே தண்ணி இல்லே
ஒரு திக்கிலே இருந்துங்
கடுதாசி வரத்து இல்லே
அடைக்கலாங்குருவிக்குக்
கூடுகட்ட
என் வீடு சரிப்படலே
நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்

-- ராஜசுந்தரராஜன்


புரை ஏறும் மனிதர்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8

Sunday, August 1, 2010

பத்திரிக்கை வைக்க வருபவர்க்கு


(Picture by cc licence, Thanks Col_ford)

செட்டியார் கடை ஸ்டாப்ன்ணு
டிரைவர்ட்ட சொல்லி வைக்கணும்
அப்பதான் நிறுத்துவாரு.

றங்கி செட்டியார்ட்ட கேட்டா
காட்டுவாரு நாவித மரத்தை.

முந்தில்லாம்
சின்னக்கண்ணு அண்ணன்
அந்த மரத்தடியில்தான்
எல்லோருக்கும்
கட்டிங், சேவிங் பண்ணுவாரு.

சின்னக்கண்ணு அண்ணன்
நாவிதர் ஆனபோது
மரமும் நாவித மரமாயிருச்சு.

நாவித மரத்திற்கு நேர் எதிரில்
ஆறுமுகம் சேர்வை சந்து.
ஆறுமுகம் மாமா வீடு இருந்ததால
இப்ப அது ஆறுமுகம் சேர்வை சந்து.

புடிச்சு வந்தீங்கன்னா
வேப்ப மரம் வச்ச வீடு.

சிவசாமி பிள்ளை
வீடான்னு கேட்டுக்கிடுங்க.
சிவசாமி தாத்தா
வீடாத்தான் இருந்தது.

ப்பதான் எல்லாம்
மாறிப் போச்சே.

***

Thursday, July 29, 2010

தடம் தடமறிய ஆவல்


(Picture by cc licence, Thanks JenTheMeister)

ஒன்று

ள்ளதிலேயே
சிறந்த புகைப் படத்தைத்தான்
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.

ந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.

தில் இல்லை.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

***

இரண்டு


(Picture by cc licence, Thanks aye jay )


ரொம்ப மாறியிருந்தது
திருமண மண்டபம்.
அங்கவளை முதலில்
கண்டது.

த்திருமணத்திற்கு
வருவேனென
அவளொன்றும் சொன்னதில்லை.

னால் தெரியும்
வருவாளென.

ப்படியே அக்கா மாதிரி
என்றாள் மகனின் தலை கலைத்து.

பார்த்து சாப்பிடுங்க
வெடிச்சிறப் போறீங்க
என்றாள் பந்தியில்.

ல்லாத்துக்கும் சிரிப்பா?
என்றாள் மொய் எழுதிய
இடத்தில்.

ண்டபம் பரவால்ல போல
மாற்றத்தில்.

***

Tuesday, July 27, 2010

டூரிங் டாக்கீஸ் பாட்டு (செகன்ட் ஸோ)

மனசு மட்டும் நிறைந்து போய் விட்டால் எவ்வளவு தூங்கிப் போகிறோம்!

"மாமா எந்திரிங்க, சாப்பிடுங்க" என்ற மாப்ள ஆனா ரூனா குரல் கேட்டுதான் எழுந்தேன். எழுந்து, குளித்து, சாப்பிட்டு புறப்பட தயாரானோம்.

இடையில் இரண்டு முறை அக்பர், ஸ்டார்ஜினடமிருந்து "புறப்பட்டீங்களா?" என்கிற அழை பேசி குரல்கள் வேறு.

"இனி பாட்டெல்லாம் வேணாம்டா. பார்!. பார்த்துக் கொண்டே இரு.. " என்றது உள்மனம். தயாரானேன். 'உள்'ளை நேசிக்கிற எல்லோருக்கும் கிடைக்கிற எல்லாம் எனக்கும் கிடைக்க தொடங்கியது...

இறங்கி, அக்பர் அறை அடைந்த போது, மனுஷன் இப்படியா சிரிப்பார் மக்கா? இரு கன்னத்திலும் குழி விழ, சிரித்து, பதறி, அணைத்துக் கொண்டார். கன்னக் குழிகளில் இருந்து "அண்ணே' என்கிற பூ மலர்ந்து கொண்டிருந்தது. (இந்த சிரிப்பை மறக்க ரொம்ப நாளாகும் அக்பர்)

ஸ்டார்ஜனோ வேறு தளத்தில் இருந்தார். நிதானம் என்கிற உன்னத தளத்தில். "பாராண்ணே..பாராண்ணே" என்று இடமும் வலமுமாக மூன்று முறை கட்டிக் கொண்டார். பாரா எனலாம். அண்ணே எனலாம். இதென்ன பாராண்ணே? என உடைந்து கொண்டிருந்தேன். (இந்த பாராண்ணேவில் எவ்வளவு என்னை இழக்கட்டும் ஸ்டார்ஜன்?)

அக்பரின் சகோதரர், மச்சினர், அறையில் இருந்தார்கள். கட்டிக் கொண்டார்கள். குறு குறு வென முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். போக, 'பேசட்டும்' என்று எங்களை அனுமதித்து விலகி நின்றார்கள். தனியாக, உயரமாக.

அவ்வப்போது, 'பாராண்ணே' என நெருங்கி அமர ஸ்டார்ஜனால் முடிகிறது. வேறு வழி இல்லாமல் சும்மா கை பற்ற முடிகிறது நம்மாலும்.

திட்டமிடாத அன்பை வைத்திருப்பார் போல அக்பர் எப்பவும். நம்மிடம் பேசிக் கொண்டிருந்தாலும், வீட்டிலும் இருந்தார்.(மகள் மற்றும் சகோதரர் மகள்கள் போடும் ஆட்டங்களை வீடியோவிலும் காட்டினார்) திட்டமிடாததில் உள்ள பூரிப்பை வாங்க முடியாத தவிப்பு எனக்கு.

வீட்டிற்கு விருந்தாளி வந்தாச்சு. என்ன செய்யும் வீடு? வந்த மனிதர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்கள் வீட்டு மனிதர்கள். பின்புலமாக சில நகர்வுகளும் இருக்கும்.அதிலும் இருப்பார்கள் வீட்டு மனிதர்கள். இல்லையா? அப்படி, அங்கும் இங்குமாக இருந்து கொண்டிருந்தார்கள் அக்பரும் ஸ்டார்ஜனும்.

பார்வையின் மூக்கு திறந்திருந்திருக்கும் போது,வாசனை நிரம்பிய, விழியின் ஆன்மாவை உணர முடியும். அப்படி, அங்கும் இங்கும் நகர்ந்து முகர்ந்ததில், அக்பர் குடும்பம் அங்கில்லை. இங்குதான் இருக்கிறார்கள். அவர் அறையில். ஸ்டார்ஜனில், தம்பியில், மச்சினரில், தன்னிலும் கூட!

அக்பரின் மச்சினர், "மச்சான் நீங்க இருங்க" என தன்னை அக்பர் இடத்திற்கு நகர்த்தும் போது அக்பர் யாரென நம்மிடம் சொல்கிறார். பேச்சுக்கு பேச்சு "ஷேக்" என்பதில் ஸ்டார்ஜன் யார் என்பதை அக்பரும் சொல்கிறார். எல்லோரும் யார் என்பதை, இவர்கள் எல்லோரையும் இங்கு கொண்டு வந்த அக்பரின் தம்பியும் சொல்கிறார். சொன்னால்தானா சொல் என்பது?

கிளம்பும் போதே, "பாட்டு வேணாம்டா" என்று கௌலி தட்டியது. இல்லையா? தட்டியது போலவே பாட்டெல்லாம் மறந்து போய் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"டேய்,குடிகாரா இது குடும்பம்டா" என்கிற படம். எனக்கும் லதா நினைவு வந்து, "சரி புள்ள. இனி குடிக்கல" என எனையறியாது, எனக்குள் பேசிக் கொண்டேன், வழக்கம் போல.

புறப்பட்ட நேரம் பிரியாணி ஓரை உச்சத்தில் இருந்திருக்கும் போல. ஆனா ரூனா அறையில் சிக்கன் பிரியாணி எனில், இங்கு மட்டன் பிரியாணி. (பேசி வைத்துக் கொண்டீர்களா பாசு?)

சமையல் குறிப்பெல்லாம் எழுதுகிறாரே ஸ்டார்ஜன், அவர் செய்ததாகத்தான் இருக்கும் என " சூப்பர் ஸ்டார்ஜன்!" என்ற போதுதான் தெரிந்தது, பிரியாணி அக்பரின் தம்பி செய்தது என.

அப்புறம் என்ன செய்றது? அசடு வழிந்த அதே சூப்பரை அக்பரின் தம்பிக்கு அனுப்பினேன். அவரும் ஒன்னும் சொல்லல. ஒரே சிரிப்பில், சூப்பரா வாங்கி வச்சுக்கிட்டார்.

சாப்பிட்டு முடிந்து, கொஞ்ச நேரம் சாரு, ஜெயமோகன், என கட்டப் பஞ்சாயத்து ஓடியது. சரவணனை நாட்டாமை ஆக்கி," தீர்ப்பை மாத்தி சொல்லு நாட்டாமை" என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

வெள்ளிக் கிழமையில் வந்திருக்கிறோம். வார அசதியை, ஒரே நாளில் அடிச்சுப் போட்டது போல தூங்குவார்கள். எழுந்து துணி துவைப்பார்கள். மீண்டும் தூங்குவார்கள். "போதும் மக்கா, புறப்படலாம்" என்று எவ்வளவோ மன்றாடியும் அழைத்துப் போனார்கள் ஜபல் காராவிற்கு.

கல்லூரி காலத்தில் சுற்றுலா போனது போல இருந்த அனுபவம் அது. அதை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார், ஸ்டார்ஜன். அது 'இது'

டாட்டால்லாம் காட்டி, அறை வந்ததும், கணிணியை திறந்தேன். "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்ற கணேஷ் கொட்டகை பாடலோடு, முத்திய இடம்...

கருவேல நிழலாக இருந்தது.

****

Sunday, July 25, 2010

டூரிங் டாக்கீஸ் பாட்டு

எவ்வளவுதான் பாட்டுகள் கேட்டாலும், கணேஷ் கொட்டகையில் இருந்து கசியும் பாட்டிற்கு ஒரு தனி மணம் உண்டு. பாட்டிற்கு மணம்? ஆம். மணம்தான். மனசை கிளர்த்தும் மணம்!

திசைகளில் நனைந்து காதடைகிற சன்னமா? தூரமா? மனசை இளக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு வருகிற வாசனையா? என அறுதியிட இயல்வதில்லை. மணம் என்றால் மணம், மனசென்றால் மனசு. இல்லையா?

மொட்டை மாடியில் நின்றபடி, "மாலைப் பொழுதின் மயக்கத்திலே, கனவு கண்டேன் தோழி" பாடல் கேட்கிற தருணம் போலாக வாய்த்தது, இவ்வளவு அடர்த்தியான சவுதி வெக்கையிலும் ஒரு நாள்!

"ஒரு நாளாவது எல்லோருமா பட்டறையை போட்டுரணும் அண்ணே" என்று சரவணன் வெகு நாட்களாக கேட்டுக் கொண்டே இருந்தார். அக்பர், ஸ்டார்ஜனை பார்க்க முடியாத நேர்த்திக் கடன் ஒன்று பாக்கியாகவே இருந்து கொண்டிருந்தது. இவை எல்லாம் மாப்ள ஆறுமுகம் முருகேசன் மூலமாக நிறைவேறின.

"பேசிக் கொண்டே இருந்தால் காரியம் ஆகாது. உதறி கிளம்புமையா..வியாழன் மாலை வர்றேன். தயாரா இரும். எல்லோரையும் பார்க்கலாம்" என்றார், ஆனா ரூனா மாப்ள.

சொன்னது போலவே வந்தார். முரட்டு காரில்! பார்க்கத்தான் ஆள் பூஞ்சை. முரட்டுத்தனமான அன்பு! காரைப் போலவே.

ஆறுமுகம் ரூமில் தங்குவது, வேலை முடித்து சரவணன் அங்கு சேர்ந்து கொள்வது, ஜுபைலில் இருந்து முடிவிலி சங்கர் தமாமில் இணைந்து கொள்வது, மறுநாள் அக்பர், ஸ்டார்ஜனை சந்திப்பது, என கொள்ளக் கூட்ட பாஸ் மாதிரி திட்டங்கள் வகுத்து தந்தார் சரவணன். ரைட் ஹேன்ட் ஆனார் ஆனா ரூனா.

திட்டங்கள் செயல் படத் தொடங்கியது. கணேஷ் கொட்டகையில் இருந்து, "விநாயகனே வினை தீர்ப்பவனே" பாடல் தொடங்கியது போல இருந்தது எனக்கு. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ" என்று தமாமில் இணைந்து கொன்டார் முடிவிலி சங்கர்.

மேலும் இரண்டு பாட்டு முடிவதற்குள் ஆனா ரூனா அறையில் இருந்தோம். 'சகல' ஏற்பாடுகளையும் ஆனா ரூனா கம்பனி செய்து வைத்திருந்தது. குப்பிகளை கண்டதும் "தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" என்ற பாடலானேன் நான்.

கொள்ளக் கூட்ட பாஸ் வேறு, நான் வர சற்று தாமதமாகும்ண்ணே . நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க" என்று அழை பேசியில் நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்தார். "சரக்கா? சரவணனா?" என்ற பட்டி மன்றத்தில் நான் சரக்கு சைடில் சாய்ந்தேன்.

கருணா அண்ணன்( ஆனா ரூனா நண்பர்கள்) சேட்டா, (பெயர் மறந்து போச்சு சேட்டா..குற்றவாளி நான் இல்லை. திரவம்!) முதல் ரவுண்டை தொடங்கி இருந்தோம். மாப்ள ஆனா ரூனா சரவணனை கூட்டி வரவேணும் எனும் எரியும் பொறுப்பில் எரிந்து கொண்டிருந்தார்.

முதல் ரவுண்டு முடிவதற்கும், "ரோஜா மலரே ராஜகுமாரி, காதல் கிளியே அழகிய ராணி" என ரோஸ் நிற சரவணன் வருவதற்கும் சரியாக இருந்தது. (சட்டைதான் பாஸ் இனி நினைவிற்கு வரும்)

சரவணன் வந்த சமயம் நான் இரண்டு ராஜாராமாக இருந்தேன். என்னிடமிருந்து பிரிந்து என்னிடமே பேசி சிரித்துக் கொண்டிருந்தேன். வந்த சரவணன் என்னையும் ராஜாராமையும் கட்டிக் கொன்டார். சங்கர்களையும் கருணா அண்ணன்களையும் கூட!

பிறகு, களம் சூடு பறக்க தொடங்கியது. மாப்ள ஆனா ரூனாவும் சபையில் அமர்ந்து பொறி பறக்க சாணை தீட்டிக் கொன்டார்." என் சாணைக்கு பிறந்த சோனை" என அவ்வபோது ஆனா ரூனாவை பதம் பார்த்துக் கொண்டிருந்தார் சங்கர்.

சும்மா சும்மா பேசிக் கொண்டிருந்தோம். சும்மா சும்மா சிரித்துக் கொண்டிருந்தோம். சிரிப்பு பேச்சாக மலர்ந்தது. பேச்சு சிரிப்பாக பூத்தது.

பேச்சு பேச்சாக இருந்தாலும், சாப்பிடும் பக்குவம் அறிந்து அண்டா நிறைய பிரியாணியை கொண்டு வந்தார் ஆனா ரூனா. (யோவ்.. இவ்வளவாயா செய்வீங்க?) அரக்கத் தனமாக தின்று கொழுத்தேன்.

சாப்பிட்ட தெம்பில், சரவணன் எனக்கு இடுகையை போஸ்ட் செய்வது குறித்தான பாடத்தை தொடங்கினார். நானோ, "வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்" என்ற கணேஷ் கொட்டகையின் கடைசிப் பாடலில் இருந்தேன்.

ஓடம், ஆடி ஆடி கரை தட்டிய போது விடிந்திருந்தது. மாப்ள ஆனா ரூனா, " சட்டி சுட்டதடா கை விட்டதடா" என்று படுக்க வைத்த ஆச்சர்யக் குறி போல எப்பவோ மல்லாந்திருந்தார்.

இன்று, கனவு நாயகர்கள் அக்பர் ஸ்டார்ஜனை சந்திக்க போகிறோம் என்ற கனவோடு தூங்கிப் போயிருந்தேன்...

--பயணப் பாடல் தொடரும்.

Thursday, July 15, 2010

பெயரில் என்ன இருக்கிறது?


(Picture by cc licence, Thanks Adam Jones, Ph.D.)

க் பக் பக் என அழைத்தால்
தானியம் தரவென அறிகிறது
பெயரில்லா கோழி.

தடு குவித்து ப்ரூச் என்றால்
புரியும் ரோசிப் பூனைக்கு.

கெத் கெத் கெத் என
மேல் அன்னத்தில் தட்டினால்
வாலாட்டி ஓடி வரும் ஜிம்மி.

"ந்தா" என்றதும் தட்டெடுப்பார்
முன்பு,
திரவியம் என்றழைக்கப்பட்ட
தாத்தா.

***

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

Thursday, July 8, 2010

எப்படி கண்டு பிடிக்கிறீர்கள் குருஜி?


Picture by cc licence, Thanks Avlxyz)

ஒன்று

நான்கு கட்டளைகள் இட்டார்
வீட்டிற்கு வந்த குருஜி.

"போகாதே"

"ராதே"

"பேசாதே"

"சும்மா இரு"

புத்தி வருவது போல்
பேசு பேசுன்னு பேசி...

ட்ட பிறகுதான்
போனார்.

இரண்டு

ர் வந்ததும் எழுப்பச் சொல்லி
உறங்கிப் போகிறீர்கள்.

டம் விட்டதும்
எப்படியும் எழுப்புவான் என
தூங்கிப் போகிறீர்கள்

சொல்லுங்களேன்...

ப்படி கண்டு பிடிக்கிறீர்கள்
எப்பவும் நமதிருக்கை
அருகருகே இருப்பதை?

***

Monday, July 5, 2010

இரண்டாம் பாகம்


(Picture by cc licence, Thanks krishnamohan01)

ஒன்று

தவை திறக்க வெளியே தள்ளு
என்று எழுதி இருக்கும்
ஸ்ரீராம் டாக்கீஸ் கதவில்

ப்புறம் இது
ரவிபாலா a/c தியேட்டர் ஆச்சு.

ப்போ அது
EXIT ஆச்சு.

***

இரண்டு

ழி அனுப்ப வந்த
ரயில் நிலைய முகங்களில்
எனக்கானது இல்லை.

யினும்,

டா..டா..வென அனிச்சையில்
அசையுமென் கையை
கட்டுப் படுத்தவில்லை.

***

மூன்று

"ரு சேர்ந்து பார்க்க"

எனும் ஒரு ஓவியம்
தொடங்கியிருந்தோம்.

ரிரு புள்ளிகள் பாக்கி.

நிலுவையை கருத்தில் கொண்டு
தலைப்பை மாற்றினோம்.

"ரு சேர்ந்து பார்க்கலாகாது"

***

Saturday, July 3, 2010

சேரல், kartin, இளங்கோ கிருஷ்ணன், சுந்தர்ஜி, கமலேஷ், ஆறுமுகம் முருகேசன், சு.சிவக்குமார்

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் - ஏழாம் நாள் - இங்கே சொடுக்கவும்

சேரல், kartin, இளங்கோ கிருஷ்ணன், சுந்தர்ஜி, கமலேஷ், ஆறுமுகம் முருகேசன், சு.சிவக்குமார்

நன்றி
பா.ராஜாராம்

Friday, July 2, 2010

செல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அமிர்தவர்ஷிணி அம்மா, தீபா

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் ஆறாம் நாள் - இங்கே சொடுக்கவும்

செல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அமிர்தவர்ஷிணி அம்மா, தீபா

நன்றி
பா.ராஜாராம்

Thursday, July 1, 2010

நேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நந்தா

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள் - இங்கே சொடுக்கவும்

நேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நந்தா

நன்றி
பா.ராஜாராம்

Wednesday, June 30, 2010

மதனும் ஆட்காட்டி விரலும் (வலைச்சரத்தில்)

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் நான்காம் நாள் - இங்கே சொடுக்கவும்

மதனும் ஆட்காட்டி விரலும்

நன்றி
பா.ராஜாராம்

Tuesday, June 29, 2010

வினாயகமுருகனும் அழகர்சாமி தாத்தாவும் (வலைச்சரம்)

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் மூன்றாம் நாள் - இங்கே சொடுக்கவும்

வினாயகமுருகனும் அழகர்சாமி தாத்தாவும்

நன்றி
பா.ராஜாராம்

Monday, June 28, 2010

நீர்க்கோல வாழ்வை நச்சி - ஒரு அனுபவம் (வலைச்சரத்தில்)

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - இங்கே சொடுக்கவும்

நீர்க்கோல வாழ்வை நச்சி-ஒரு அனுபவம்

நன்றி
பா.ராஜாராம்

Sunday, June 27, 2010

வலைச்சரத்தில் - ஒரு வாரம்!

சரியாய் 20-வது வயது தொடக்கத்தில் அப்பா எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். கல்லூரி முடித்த கையோடு கல்யாணத்திற்குள் நுழைய நேரிட்டது. கல்லூரியில், மூன்று வருடமும் 400 மீட்டர், 110 மீட்டர், தடை தாண்டும் ஓட்டத்தில்(hurdles), மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி சாம்பியன். இதைக் கொண்டு, அழகப்பா பிசிகல் எஜுகேசன் கல்லூரியில் சீட் வாங்கலாம் என அப்பாவும், கோச் வேலாயுதம் சாரும் வற்புறுத்தினார்கள். "நாலு பொம்பள புள்ளைகளை வளர்த்தவண்டா. ஒரு புள்ளையை பார்க்க மாட்டனா? லதாபாட்டுக்கு வீட்ல இருக்கட்டும். நீம்பாட்டுக்கு படி" என்றார் அப்பா.

"நல்ல விளையாட்டாவுல இருக்கு" என்று கிருஷ்ணா மெடிக்கல்சில் 500 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இதுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அப்பாவின் நண்பர் கணேசன் மாமாவிடம் கடனுக்காக போய் நின்ற போது, "ஒங்கப்பன் சம்பளம் வாங்கி வட்டியை கொடுத்துர்ராண்டா. திருப்பி வட்டிக்கு வாங்கி சம்பளம் மாதிரி கொண்டு வர்றான்" என்றார். போக, மனைவிக்கு வாங்கும் பூ என் காசாக இருக்க வேணும் என்பதும்தான்.

விளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின. "டே.. டே.. ஒன் விளையாட்டுல நாங்களும் இருக்கோம்டா...கொஞ்சம் பார்த்து விளையாடு" என அவ்வப்போது லதா, குழந்தைகள் நிஜத்திற்குள் இழுத்து வருவார்கள். பிறகு நிஜம் விளையாட்டாக தொடங்கும். அதாவது நிஜ விளையாட்டு.! ரொம்ப குழப்புறனோ?... சும்மாதான், விளையாட்டுக்குத்தான்...

சரி, வந்த விளையாட்டை பார்ப்போம்..

"வாங்கப்பு... வந்து பொறுப்பெடுங்க" என சீனா சார் ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தை நம்மிடம் தருகிறார். (வலைச்சரத்தில் எழுதப் போறான்கிறத என்னா பில்டப் கொடுக்குறான்யா என்று மாது-காமு மாதிரியான அம்ப்பயர்கள் தேர்ட் அம்ப்பயரிடம் கட்டம் கட்டுவார்கள், பாவிகள்! :-)

எடுத்துட்டாப் போச்சு சீனா சார். அப்புறம், ரொம்ப நன்றியும் சார்!

ஆக, இந்த வாரம் நம்ம டாப் வலைச்சரத்தில் மக்கள்ஸ்! so, அங்க வந்துருங்க. ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசுவோம்.

அட, வாங்க மக்கா..."இந்தா" இருக்குற தூரத்திற்கு வண்டி எடுத்துக்கிட்டு. காலாற பேசிக்கிட்டே நடக்கலாம்...

***

Monday, June 21, 2010

மகள் மகன் கதைகள்


(Picture by cc licence, Thanks cliff1066)

வெயிலடித்துக் கொண்டே
மழை பெய்தால்
நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் என்றாள்
மகள் ஒரு நாள்.

கேட்க நன்றாக இருந்ததால்
ஆகா எனக் கேட்டுக் கொண்டேன்.

ற வச்ச அரிசி தின்றால்
உங்க கல்யாணத்தன்னைக்கு
மழை பெய்யும் என்றாள்
மற்றொரு நாள்.

கேட்க நன்றாகத்தான் இருந்தது.
என்றாலும்
சுற்றும் முற்றும்
பார்த்துக் கொண்டேன்.

**

மொட்டை மாடியில்
படுத்திருந்த நாளொன்றில்
மகனுக்கு நிலாக் கதையை
தொடங்கியிருந்தேன்.

ட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருப்பதால்
நிலாக் கதையொன்றும்
வேண்டாம் என்றான்.

சுட்டி சுட்டி எண்ணிய விரலில்
சறுக்கி இறங்கிய
நட்சத்திரங்கள்...

கனுக்கு சொல்ல நினைத்திருந்த
நிலாக் கதையை
எனக்கு சொல்லத் தொடங்கின.

Thursday, June 17, 2010

தெரியுமா?


(Picture by cc licence, Thanks Markles55 )

ஒன்று

றுக மூடிய கைகளை நீட்டி
"கைக்குள்ள என்ன சொல்லு பார்போம்?"
என்றாள்.

கைகளை தொட்டுத் தடவி
இன்னதென்றேன்.

ன்னது, இன்னது என்றேன்.

ருவேளை இன்னதோ என்று கூட
சொல்லிப் பார்த்தேன்.

"ண்ணுமே இல்லையே.." வென
கைகளை விரித்து
சிரித்துப் போனாள்.

ன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


***

இரண்டு

ன்னைப் போல் உலகில்
ஏழு பேர் உண்டு தெரியுமா
என்றாள்.

தூக்கி வாரிப் போட்டது.

ன்னைப் போல் இன்னும்
ஆறு பேருக்கு
எங்கு போவேன்?


**

Friday, June 11, 2010

ஆச்சு மக்கா

ஆயிற்று.

இன்றுடன் நம் கருவேலநிழலின் முதல் ஆண்டு நிறைவுறுகிறது. எவ்வளவு நிறைவான, நெகிழ்வான முதல் வருடம்!

வேலை விட்டால் அறை. கொஞ்சம் டி.வி. நிறைய வீட்டு நினைவு. கொஞ்சம் அலை பேசும் சந்தோசம். கொண்டு, நிறைவுறும் குரல்வழி குடித்தனம்...இப்படியான பொழுதாக போய்க் கொண்டிருந்த போதுதான், இந்த கருவேல நிழலை தொடங்கி தந்தார்கள் தம்பியும், நண்பரும்.

தேற்றும் முகமாக, இங்குள்ள நண்பர்கள் சொல்வார்கள், "நாலு வெள்ளி முடிஞ்சால், சம்பளம். இருப்பத்தி நாலு சம்பளம் எடுத்துட்டா ஒரப்பாயிட்டு வீடுதான்" என்று.

இந்த பனிரெண்டு மாதமாக இது நிகழலை மக்கா.வெள்ளி வந்ததும் தெரியல. சம்பளம் வந்ததும் தெரியல. மாதாந்திர காலண்டரில், அனிச்சையாக நாட்களின் மேலாக குறிக்கிற இன்டு குறியீடு கூட இல்லை. (அனேகமாக இங்கு வந்தேறிகள் எல்லோரிடமும் இது உண்டு..இப்படி ரெண்டு காலண்டரை கிழித்தால் வீடு என்பதாக ஐதீகம். :-))

"என்னண்ணே என்ன பண்றீங்க?

"மக்கா நலமா?"

"மாமா நல்லாருக்கியளா?"

"சித்தப்ஸ்?"

"குரல் கேட்கணும் போல் இருந்தது, ராஜா சார்"

"யோவ்..என்ன மயிறு கவிதை எழுதுற?"

"நலமா பாரா?"

"வணக்கம் தோழர்"

"மகளுக்கு நிச்சயமாயிட்டுன்னு கேள்விண்ணே. என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? எதையும் யோசிக்க வேணாம்ண்ணே. கூடப் பிறந்த தங்கையா எடுத்துக்கோங்க. என்ன தேவைன்னாலும் கூப்பிடனும். கடன் வாங்கக் கூடாது. சரியா?"

என்றெல்லாம் திகைக்க வைக்கிற, நண்பர்கள் மற்றும் சகோதரிகள் குரல்கள்.

ஆம்,

நம் மகாவிற்கு ஒரு வரன் வந்தது.அவர்களுக்கு பெண் பிடித்து போயிற்று. நமக்கும், குடும்பம் பிடித்துப் போனது. மாப்பிள்ளையோ சிங்கப்பூர். குறிப்பிட்ட தேதிக்குள் நம் சம்மதம் தெரிவிக்க வேண்டிய சூழல்.( மாதம், நாள்,கிழமை இப்படியாக) கையும் காலும் ஓடாத சூழல். மாப்பிள்ளையை நாமும் பார்க்க வேணும். இல்லையா? சிங்கையில் உறவினர்கள் இருந்தார்கள்.

அவர்களை கூப்பிட்டு, நிலை விளக்கி பொருந்துவதற்குள் பொருந்தினார்கள் நம் பதிவ நண்பர்கள்.

முறை வச்சு, மாமாவென அழைக்கும் கண்ணன் என்ற மனவிழி சத்ரியன் மற்றும் சி. கருணாகரசு!

"மாமா, இது எங்க டூட்டி மாமா. எதுக்கு வருந்துரீறு?" என்று மறுநாளே போய் மாப்பிள்ளையை பார்த்து வந்தார்கள். சம்மதம் சொன்னார்கள்.சம்மதம் சொன்னோம். நிச்சயதார்த்தம் முடிந்தது.

விலை மதிப்பற்ற எவ்வளவோ நண்பர்களையும் உறவுகளையும் இந்த ஒரு வருடத்திற்குள் தேடி தந்திருக்கிறது, கருவேல நிழல்!

கவிதை எல்லாம் சும்மா மக்கா.

எவ்வளவோ உன்னதமான கவிஞர்களை இதே பதிவுலகில் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். போடா மயிறு என்று முகத்தில் அறைகிறார்கள், கவிதையில்.

பொறவு,

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கிடைச்சது?

அன்புதானே மக்கா?

எதிர்பார்ப்புகள் அற்ற, பிரதி பலன் கருதாத நண்பர்களை/ உறவுகளை தேடி தந்திருக்கிறது கருவேல நிழல் என்ற பதிவுலகம்!

வெறும் கோபமும், துவேஷமும் மட்டும் நிரம்பியதில்லை இப்பதிவுலகம் என இச்சூழலில் பதிய விரும்புகிறேன்.
***

முழங்காலுக்கு கீழாக
பார்த்திருக்கிறேன்
செடியில் இம்மரத்தை என
நினைவு வந்த போது
அதன் முழங்கால் நிழலில் இருந்தேன்.

***

இப்படியாக இரண்டாவது வருடத்தை தொடங்குகிறேன். அதாவது, தொடங்குகிறோம்!..

நன்றியும் அன்பும் மக்களே!

***

Thursday, June 3, 2010

தோழி


(Picture by cc licence, Thanks Akash_Kurdekar)

ஹென்றி வாத்தியார்தான்
துப்பாக்கி சுட சொல்லித்தந்தார்.

முதல் என்பதால்
பெட்டை கொக்கு சுடுவது
வேட்டைக்காரன் சாஸ்த்திரம் என்றார்.

காடு, வயல்
வயல்க் காடென
பெட்டை கொக்கு தேடி
சுற்றி அழைத்தார்.

கொக்கை கண்டதும்
பெட்டைதான் சுடு என்றார்.

சுட்டதும் பறந்த
கொக்கை பார்த்ததும்
மல்லிகா நினைவு வந்தாள்.

தீபாவளி துப்பாக்கிக்கே
செத்து செத்து விழும் மல்லிகா.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

Wednesday, May 26, 2010

தட்டித் திறந்த கதவுகள்


(Picture by cc licence, Thanks prakhar )

ஒன்று

ஜோஸ்யர் வீட்டில் இருந்து
மூணாவது வீடு
கணேசன் வீடு என்றார்கள்.

கண்டு பிடித்த பிறகு
கணேசன் வீட்டில் இருந்து
மூணாவது வீடாக இருந்தது
ஜோஸ்யர் வீடு.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


(Picture by cc licence, Thanks Romana)

இரண்டு

பார்க்காத வைத்தியமில்லை என
பேசிக் கொண்டிருந்தது டி.வி.

அழுவது போல் வேறு
பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாலில் இவளும்.

அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ் என
குப்பியை கீழும் மேலும் தட்டி திறந்தேன்
அடுப்பறையில்.


(Picture by cc licence, Thanks Robert Nyman)

மூன்று

மரங்கள் எல்லாம் வீடாச்சு.
மறக்காமல்,
குருவி சத்தம்
பெல் ஆச்சு.

நான்கு

ஒரு போதும்
முள் குத்தியதில்லை
கள்ளிப் பழம்.
கோன் ஐஸ் அப்படி இல்லை.