Saturday, September 17, 2011

சுவர் ஏறிக் குதிக்கும் மானஸ்தன்


(Picture by cc licence, Thanks Llimllib)

ருத்தனுக்குப் பிறந்திருந்தா
தொடக்கூடாது ஆமா சொல்லிட்டேன்
என்றெல்லாம் காச்மூச்சென்று கத்தியவள்
தூங்கத் தொடங்கிவிட்டாள்.

திறந்திருந்த மேற் ஜன்னல் வழியாக
தெரு விளக்கொளி கசிந்து
சேலை விலகிய வயிற்றில்
விழுந்து கொண்டிருக்கிறது.

மூச்சுக்கு தக்கவாறு
ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது
ஜன்னல் கம்பி.

கை நிழல் கொண்டு
கம்பி நிழல் பற்றி
விளையாடிக்கொண்டிருக்கிறான்
ஒருத்தனுக்குப் பிறந்தவன்.

நன்றி பண்புடன்


Wednesday, September 14, 2011

கோயில் வீடும் ரேசன் கார்டும்


(Picture by cc licence, Thanks Entrelec)

ண் மூடி கை தொழுது
நிற்பவளின் பெயர் எக்ஸ்
எனக் கொள்ளுங்கள்.

கை தொழுது கண் மூடாமல்
அவளைப் பார்ப்பவனின் பெயர்
ஒய் என எடுக்கலாம்.

டப்பாவி என ஒய்யை
இருட்டுக்குள் இருந்து வெறிப்பவனை
நான் சொல்ல வேணாம்..

நீங்களே சொல்லி விடுவீர்கள்
வீணாப்போன கடவுளென.

***

நன்றி அதீதம்


Friday, September 9, 2011

இலையுதிரும் சத்தம் - மூன்று

ஏழுகடைக் கதைகள் - இரண்டு

நானும் நம்ம பார்ட்னர் மதியும் ஏழுகடையில் ரெண்டாம் நம்பர் கடையில் 'லதா & லதா போட்டோஸ் & வீடியோஸ்' ன்னு ஒரு கடை வச்சுக்கிட்டு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தோம். நம்ம பார்ட்னர் மதி பயங்கர பிரில்லியண்ட். 'ஏ இப்படியே இருந்தா காலம் ஓடி அடியாதுய்யா. ஒரு ஜெராக்சையும் சேர்த்துப் போடுவோம். கடை வாடகைக்காவது கட்டி வரும்' ன்னு ஒரு ஐடியாவ தட்டி விட்டாப்ல

குட் ஐடியா. போட்டோ இருக்கு. வீடியோ இருக்கு. ஜெராக்சையும் சேர்த்துக்கிட்டு பேசாம பிசினஸ் மேக்னட் ஆய்ட்டா என்னன்னு ஒரு ஆசை வந்துச்சு. ஆசை அதுபாட்டுக்கு வரும் போகும். காசு வேணும்லன்னு யோசிச்சப்போ, 'காரைக்குடி பாவா (மதி தங்கச்சி மாப்ள) ஒரு மெஷின் வச்சுருக்கார்யா. கொடுக்கப் போறாரு. பெறட்டி உருட்டி ஒரு பார்ட் அமவுண்ட்ட கொடுப்போம். பார்ட் அமவுண்ட்ட பின்னாடி செட்டில் பண்ணுவோம்' என்றார்.

'அட இஞ்ச பார்யா'ன்னு மதிய ரொம்பப் பிடிச்சுப் போச்சு. போய் மெஷினைப் பார்த்தோம். தேங்காய் எண்ணெய் வாசனையுடன் சிவனேன்னு இருந்தது. தூக்குடான்னு ஒரு வேன் வச்சு தூக்கிட்டு வந்துட்டோம். எதுத்தாப்ல எல்.ஐ.சி. ஆஃபீசு. சைட்ல ஆர்.டி.ஓ ஆஃபீசு. பிசினசு பிரிச்சுப்புடும் பிரிச்சுன்னு ஒரு ஃபீல் வந்து அன்னைக்கு ராத்திரி தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணுச்சு. மதி அன்னைக்கு ராத்திரி தூங்குனாரா என்னன்னு கேக்காம விட்டுட்டமேன்னு இப்பதான் ஞாபகம் வருது.

'ஜெராக்ஸ்'ன்னு கொட்டை எழுத்துல போர்டு எழுதி கடை வாசல்ல நடு சென்ட்டரா பார்த்து நட்டு வச்சுருந்தோம். இந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சரி அந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சரி 'ஜெராக்ஸ்' சும்மா கூவும்ல.

ஆச்சா... பத்துப் பதினஞ்சு நாள் எடுக்கக் கொடுக்க இருந்தோம். தேங்காய் எண்ணெய் தீந்துருச்சு போல. ஒரு நாள் டக்குன்னு மெஷின் ஸ்ட்ரக் ஆயிருச்சு. ஜப்பான் பெண்கள் கையில் வச்சுருக்கிற விசிறி மாதிரி பேப்பரை அழகழகா மடிச்சு தள்ளிக் கொண்டிருந்தது.

'என்னய்யா இப்புடி விசிறி விசிறியா வருது?'ன்னு ஷாக் ஆயிட்டாப்ள பார்ட்னர் மதி. 'என்னய்யா எனக்ட்டப் போயி கேக்குற?' ன்னு நானும் கொஞ்சம் பேக்கு ஆயிட்டேன். ஷாக்கும் பேக்குமா சேர்ந்து கோர்ட்டு வாசல்ல இருக்குற பிஸ்மி ஜெராக்ஸ் காரர்ட்ட போனோம். அவர்தான் கதிரேசன் இஞ்சினியரை பாக்கச் சொன்னார்.

இஞ்சினியர்னா சொட்ட கிட்ட விழுந்து டோப்பா இருப்பார்ன்னு பார்த்தா, சூட்கேசும் கையுமா டையெல்லாம் கட்டி மெடிக்கல் ரெப் மாதிரி சும்மா டாப்பா இருந்தாப்ல கதிரேசன் சார். 'அய்யய்யே இவரப் போயி எப்புடி இஞ்சினியர்ன்னு நம்புறது?ன்னு லைட்டா டவுட் வந்துச்சு

'ஒரு காலுக்கு ஐநூறுபாய் ஆகும்'ன்னு ஸ்டார்ட்டிங்லயே பிட்ட போட்டாரா...'நீ தாண்டா இன்ஜினியர்'ன்னு லபக்குன்னு தூக்கிட்டுப் போயி கடைல அடைச்சிட்டோம். அன்னம் தண்ணி புழங்காம கிட்டத்தட்ட மெஷினே கதியா ஒரு முக்கா நாள் மெஷினை கழட்டி மாட்டிக்கிட்டு இருந்தாப்ல

மெடிக்கல் ரெப் மாதிரி வந்தவரு, ராஜாஸ் ஸ்கூல் வாசல்ல நெல்லிக்கா விக்கிற சிங்கு தாத்தா மாதிரியும், ரைஸ் மில்லுல வேலை பாக்குற வெங்கிடு மாதிரியும் டர்ட்டி & டர்ட்டியா மணிக்கு மணி மாறிக்கிட்டு இருந்தாரு. 'ஷேம் ஷேம் பப்பி ஷேம்' ன்னு சொல்ல தோணுச்சு. நாக்க நாலஞ்சா மடிச்சு பீடா போல வச்சுக்கிட்டேன்.

ஒரு மாதிரி தட்டி ஒட்டி பிரிண்ட் எடுத்து காமிச்சாரு. சூப்பரா இருந்தாப்ல, நியுஸ் பேப்பரில் இருந்த நரசிம்மராவ். 'தி மோஸ்ட் ஹான்சம் ப்ரைம் மினிஸ்ட்டர்' ன்னு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுற அளவுக்கு அவ்வளவு ஆசையாக இருந்தது. அவருக்கு ஒதடும் நமக்கு ஆங்கிலமும் சரியா இருக்காது என்பதால் ஆசையெல்லாம் அப்பப்ப ஷட் டவுன் பண்ணி லெதர் பேக்குக்குள்ள போட்ருவேன்...

கதிரேசன் சார் இருக்கிற வரையில் மிசின் பம்பரமா ரெங்கும். ஐநூறு ரூபாயை வாங்கிட்டு இந்தா இங்கிட்டுதான் போயிருப்பாரு திருப்பி விசிறி செய்ய ஆரம்பிச்சிரும். நாங்களும் அசராமல் வண்டியப் போட்டுக்கிட்டு கதிரேசன் சாரைப் பாக்கப் போயிருவோம்.

'நேத்துதானே சார் பாத்துக் கொடுத்தீங்க. திருப்பியும் பிரச்சினை பண்ணினா நீங்கதானே பாத்துக் கொடுக்கணும்.தெனம் ஐநூறு ரூபா கொடுக்க முடியுமா?'ன்னு ஒரு ரீசனபில் ஆர்க்கியுமெண்ட்டை வைப்போம். அவரும் நியாயமாத்தானே பேசுறாய்ங்க'ன்னு கவுந்து சட்டையை மாட்டி டை கட்டிட்டு வந்துருவாரு. திருப்பி மொதல்ல இருந்து கழட்ட ஆரம்பிப்பாரு.

இதுக்குள்ள கஸ்டமர்கள் 'என்னண்ணே மெஷின் ரிப்பேரா?'ன்னு ஒரு பேப்பரை கைல வச்சுக்கிட்டு கடை வாசல்ல நிப்பாய்ங்க. 'இவய்ங்க தொல்ல தாங்க முடியலைடா'ன்னு நெனைச்சுக்கிட்டே 'ஆமாண்ணே கொஞ்சம் லேட்டாகும்'ன்னு சிரிச்சுக்கிட்டே பதில் சொல்லுவோம். என்னைய விட பார்ட்னர் மதி அருமையா சிரிப்பாப்ல. சில நேரங்கள்ல குண்டு பல்ப்ப கழட்டி மாட்டுற சைசில் சைகைலையே 'இல்லை'ன்னு சொல்லி கஸ்டமர்களை கடை வரையில் நடக்க விடாமல் சகாயமும் செய்வார்.

எரிச்சல் என்னன்னா ஏழுகடைக்காரன்களை மாதிரி இம்சை அரசன்களை ஒலகத்துலயே பாக்க முடியாது. மூக்கு வேர்த்து' என்னாச்சு மாமா?' ன்னு அசால்ட்டா வர்ற மாதிரி வந்து மேட்டரை கலக்ட் பண்ணிட்டு அன்னைக்கு பூராம் பேசி சிரிப்பாய்ங்க.

'இன்னொரு சின்ன போர்டுதான் செலவு. இந்த ஜெராக்ஸ் போர்டு பக்கத்துலயே எடுக்கப்படமாட்டாது ன்னு எழுதி வச்சுரு மாமா'ன்னு ஒருத்தனும், 'எடுக்க நேரே செல்கன்னு போட்டு ஒரு அம்புக்குறி..என்ன சொல்ற?'ன்னு ஒருத்தனும், 'அவ்வளவு எதுக்கு? இந்த ஜெராக்ஸ் போர்டுலயே செவப்பு இங்க்ல ரெண்டு கிராஸ்ஸை போட்டு வையி..ஹாஜிமூசாக்காரய்ங்க ஜவுளிக் கடைங்கிறதை க்ராஸ் பண்ணி கடல்ன்னு போட்டு வச்சுருப்பாய்ங்கள்ல'ன்னு ஒருத்தனும் ரவுண்டு கட்டி அடிச்சுக்கிட்டு இருந்தாய்ங்க.

இந்த டயத்துலதான் பவானி சீனுக்கு வர்றாங்க. ஏழுகடைல முதல் பொம்பளை வரத்துனா அது பவானிதான். 'எதுனா வேலை இருக்குமாண்ணே?, ஜெராக்ஸ்ல்லாம் எடுக்கத் தெரியும். வசந்தம் ஜெராக்ஸ்ல வேலை பாத்துருக்கேன்'ன்னு வந்தாங்க. நம்மளையும் நம்பி ஒரு ஆளு வேலை கேட்டு வருதுன்னா அவுங்களுக்கு வேலை தராம என்ன பெரிய வேலை எங்களுக்கு இருந்துறப்போது?

வந்த ஒரு வாரத்துலல்லாம் கடைய தலை கீழா மாத்திட்டாங்க பவானி. கடை வாசல்ல தண்ணி தெளிச்சு கோலம்லாம் போட்டு வச்சுருப்பாங்க. வாசல் குண்டும் குழியுமாத்தான் இருக்கும். அதுக்குள்ளையே அட்ஜஸ்ட் பண்ணி கோலம் போட எப்படியோ கத்துருந்தாங்க. முருகன், சரஸ்வதி, விநாயகர் மற்றும் பலரை போட்டோ மாட்டி ஊதுபத்தி சொறுகி கடை சும்மா கமாலிக்க தொடங்குச்சு.

ஆறேழு மாசமா கதிரேசன் சாரின் வரத்தும் குறைஞ்சு போயிருந்தது. 'எதுக்குண்ணே இதுக்குலாம் போயி இஞ்சினியரை கூப்பிடனும்? நானே பாத்துருவேன்னு அசால்ட்டா சிலிண்டரை கழட்டி மாட்டுவாங்க. டோனர், பேப்பர் வாங்கிக் கொடுக்குறது மாதிரி சில்லரை வேலைகள்தான் எங்களுக்கு இருந்தது.

திடீர்ன்னு ஒருநாள் சொன்னாங்க,' சூரி அண்ணன்ட்ட சொல்லி ஏம் மகளை தூக்கி தர்றீங்களாண்ணே? வீட்டுக்காரர் வேற மேரேஜ் பண்ணிக்கிட்டாரு. அவுங்களுக்கும் ரெண்டு குழந்தை ஆயிருச்சு. மகளைப் பாக்கக் கூட விட மாட்டேங்குறாங்கண்ணே. ஸ்கூல்ல போயி தெரியாமப் பாத்துக்கிட்டு இருக்கேன்'ன்னு சொல்லும் போதே அழுக வேற செஞ்சாங்க.

சட்டப்படி பிரிஞ்சிட்டீங்களா?'ன்னு கேட்டப்போ,' இல்லைண்ணே. கிராமத்துப் பஞ்சாயத்துல பேசி எழுதி வாங்கிட்டாங்க. எனட்ட ஒரு காப்பி இருக்கு. அவர்ட்ட ஒரு காப்பி வச்சுருக்காரு'ன்னு ஜெராக்ஸ் மேட்டரப் போலவே வாழ்க்கையைப் பேசுனாங்க. 'அப்படில்லாம் செய்ய முடியாது பவானி. நீங்க கேசே போடலாம். எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணினாரு?'ன்னு பேசிப் பார்த்தோம். 'இல்லைண்ணே இனி அவரோட வாழ முடியாது. மகளை மட்டும் தூக்கிக் கொடுத்தாப் போதும்'ன்னு கட்டன் ரைட்டா சொல்லிட்டாங்க.

சூரி அண்ணன்ட்ட விஷயத்தை கொண்டு போனோம்.' மகளுக்கு என்ன வயசு? நீ போய் கூப்ட்டா வந்துருமா மகள்'ன்னு ஸ்ட்ரைட்டா கேட்டாரு. 'எட்டு வயசுண்ணே. கண்டிப்பா வந்துரும்'ன்னு சொன்னாங்க. பவானி மகளை தூக்குறதுக்கான நாளை ஒரு திங்கக்கிழமையாப் பார்த்து குறிச்சோம்..

சொல்லி வச்சாப்ல அந்த திங்கக்கிழமையும் வந்தது...

பவானி அந்த ஊரப் பத்தி கொஞ்சம் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துருந்தாங்க. பரமக்குடி தாண்டி பதினஞ்சு கிலோமீட்டர்ல ஊரு. (மஞ்சூருன்னு நினைவு) இந்த மஞ்சூர்லதான் பவானி மகள் அனிதா படிக்கிற ஸ்கூல். வீடு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம். அனிதா படிக்கிற ஸ்கூல தாண்டித்தான் அனிதா அப்பா வீடு இருக்கு.

அனிதா நாலஞ்சு புள்ளைங்களோட நடந்து ஸ்கூலுக்கு வரும். ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் நடுவுல ஒரு குளம் இருக்கும். எட்டு டூ எட்டரைக்குள்ள அனிதா அந்த குளத்தை கடக்கும். நம்ம அந்தக் குளக் கரையில வண்டியப் போட்டுட்டு வெயிட் பண்ண வேண்டியது. அனிதா வந்தோன்ன லாவிக்கிட்டு வந்துற வேண்டியதுன்னு ப்ரோக்ராம்.

'நம்ம லொடுக்கு பாண்டிட்ட வண்டிக்கு சொல்லிருக்கேன் ராஜா. காலைல அஞ்சு மணிக்கெல்லாம் ஏழுகடைக்கு வந்துருவான். நா, நீங்க பவானி, மூணு பேரும் போதும்'ன்னு சூரி அண்ணே சொன்னாரு. 'என்னண்ணே பசங்க வேணாமா?'ன்னு சூரி அண்ணன்ட்ட கேட்டேன்.
எதுக்குங்க ஊரக் கூட்டுறீங்க? நலுக்குப்படாம போப்போறோம். தூக்கப் போறோம். வரப் போறோம். இதுக்கு எதுக்கு பசங்களும் பங்காளிகளும்' ன்னு சூரி அண்ணே சொல்லிட்டாரு.

எனக்கு பசங்க இல்லைன்னா சைக்காலிஜிக்கலா கொஞ்சம் டர்ர் ஆவேன். ஆனாலும் நம்ம சைக்காலஜியா இங்க ப்ராப்ளம். கெளம்பிட்டோம். பளபளன்னு விடியிறப்போல்லாம் பரமக்குடிய தாண்டிட்டோம். 'இதுதாண்ணே அனிதா படிக்கிற ஸ்கூலு' ன்னு பவானி ஒரு ஸ்கூலக் காட்டினாங்க. இத்தினிக்கூண்டு ஊரு. அதுல இம்மினிக்கூண்டு ஸ்கூலா இருந்துச்சு. அந்த ஸ்கூலத் தாண்டி பவானி சொன்ன குளமும் வந்துச்சு. குளக்கரைல வண்டியப் போட்டுட்டு காத்திருக்க ஆரம்பிச்சோம்.

பவானிய, 'வண்டிய விட்டு இறங்கவேணாம். மகளைப் பார்த்தோன்ன இறங்கினாப் போதும். குளத்துல துண்ட நனைச்சு வண்டில நம்பர மறைச்சு காயப் போடுடா' ன்னு லொடக்குகிட்ட சொன்னாரு சூரி அண்ணே. அப்படியே செஞ்சிட்டு முடியக் கோதிக்கிட்டே நின்னான் லொடக்கும். பேக் சீட்ல தலைய மட்டும் சீட்டுக்கு மேல நீட்டிக்கிட்டு போற வர்ற ஆளுகளுக்கு தகுந்த மாதிரி சீட்டுக்குள்ளயே படுத்துக்கிட்டும் இருந்தாங்க பவானி.

'என்ன ஒரு கண்றாவிப் பொழப்பு இது? பத்து மாசம் தூக்கி சுமந்துட்டு இப்படி பாம்பு மாதிரி தலைய மட்டும் கார் சீட்டுக்கு மேல தூக்கி வச்சுக்கிட்டு, மகளுக்காக ஒரு அம்மா காத்திருக்கிறதுன்னு?' தோணுச்சு. சூரி அண்ணன்கிட்டயும் பவானியக் காட்டி சொன்னேன். 'நீங்க வந்த காரியத்தை மட்டும் பாருங்க''ன்னு தம் அடிச்சுக்கிட்டே சூரி அண்ணே சொன்னாரு. நானும் தம் அடிச்சுக்கிட்டே வந்த காரியத்துக்காக வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.

திடீர்ன்னு ஒரு பெரியவரைப் பார்த்து சீட்டுக்குள்ள பம்முனாங்க பவானி. பெரியவரும் பக்கத்துல வந்து 'என்னப்பூ இப்படி நிக்கிறீங்க?'ன்னு லொடக்குகிட்ட விசாரிச்சார். 'சும்மா குளிக்கிறதுக்காக இறங்கினோம்ப்பூ'ன்னு லொடக்கும் சொன்னான். பெரியவர் அங்கிட்டுப் போனதுக்கு அப்புறம் 'இவர்தேன் என் மாமனார்ண்ணே'ன்னு பவானி சொன்னாங்க. எனக்கு பதக்குன்னு ஆச்சு.

நண்டுஞ் ஜிண்டுமா ஸ்கூல் போற புள்ளைகள்லாம் பைக்கட்ட தூக்கிக்கிட்டு வரத்தொடங்கி இருந்தாங்க. 'அந்தா வர்றா பாருங்க அனிதா'ன்னு பவானி சொல்லிக்கிட்டே வண்டிய விட்டு இறங்கப் பார்த்தாங்க. 'உள்ளதானா இரு. பக்கத்துல வந்தோன்ன இறங்கினாப் போதும்'ன்னு சூரி அண்ணே சொன்னாரு.

ஒரு நாலஞ்சு புள்ளைங்களோட புள்ளையா ஊதா ஸ்கெர்ட் வெள்ளைச்சட்டையில் அனிதா வந்து கொண்டிருந்தது. முதல்ல வேறொரு புள்ளைதான்,'ஏ ஒங்க அம்மா புள்ள' ன்னு அனிதாட்ட சொன்னது. பவானியப் பார்த்தோன்ன அனிதா ஜெர்க் ஆகி நின்னது. 'என்னடி நிக்கிற வா'ன்னு பவானி அனிதாவ நோக்கி நகர்ந்தாங்க. அனிதா தயங்கி பிறகு வந்த வழியிலேயே திரும்பி நடக்கத் தொடங்கியது. பிறகு ஓடிப் போய்தான் அனிதாவப் புடிச்சாங்க பவானி. அது கீழ உக்காந்துக்கிட்டு அழத் தொடங்கிச்சு. 'வா..அம்மா கடைக்கு கூட்டிட்டுப் போய்ட்டு வந்து ஸ்கூல்ல விட்டுர்றேன்'ன்னு அனிதா தலைய தடவிக் கொடுத்துட்டு நின்னாங்க பவானி.' அனிதா'வேண்டாம்'ன்னு தலைய ஆட்டிக்கிட்டே உக்காந்து இருந்துச்சு.

'தூக்கி உள்ள போடு. என்னமோ கதை வசனம் பேசிக்கிட்டு இருக்க' ன்னு சூரி அண்ணே குரல் விட்டாரு. குண்டுக்கட்டா அனிதாவ தூக்கிட்டு காருக்குள்ள உக்காந்தாங்க பவானி. வண்டி அனிதா ஸ்கூலத் தாண்டும்போது டீக்கடைல நின்னுக்கிட்டு இருந்த நாலஞ்சு பேரப் பாத்து 'தாத்தா..'ன்னு கூவ வேற செஞ்சது அனிதா.' என்னப்பூ இப்படி நிக்கிறீங்க பார்ட்டி' அந்த நாலஞ்சு பேர்ல ஒரு ஆளா நின்னுக்கிட்டு இருந்துருக்கலாம். இல்லாட்டி சும்மா கூவுமா குயிலு?

ஒரு மாதிரி மல்லுக்கட்டான மனநிலையா இருந்தது. கெரகத்ததானே இழுத்துக்கிட்டு வர்றீங்க எப்பப் பாத்தாலும் நீங்க'ன்னு என்னைய வேற சவுண்டு விட்டாரு சூரி அண்ணே. 'வெறட்டி ஓட்டுறா லொடக்கு. வந்த வழில போக வேணாம். காளையார்கோயில் வழியாப் போ. ஒரு போலீஸ் ஸ்டேசன்தான் க்ராஸ் ஆகுது. தாண்டிட்டா நம்மள ஒன்னும் செய்ய முடியாது' ன்னு லொடக்குகிட்ட டிக்டேட் பண்ணுனாரு.

'இதென்னடா இது.. நல்லாத்தானே வந்தோம் போம்போது மட்டும் ஏன் புழுதி பறக்குது?' ன்னு தோணுச்சு. கர்ச்சீப்ப ஒதறி முகத்துல போட்டுக்கிட்டு தூங்குறது மாதிரி சாஞ்சு உக்காந்தேன். தோணுறத வெளிய சொல்ல முடியாத காலகட்டத்துல வேறென்ன செய்ய முடியும்? லொடக்கு வண்டிய வெரட்டிக்கிட்டு இருந்தான்..

காளையார்கோயில தாண்டின பின்னாடிதான் சொந்த மூச்சையே பிடிச்ச மூச்சாக விட முடிஞ்சது. 'மொதல்ல பிள்ளைய சரி பண்ணு. இல்லாட்டி எல்லாரும் உள்ள போக வேண்டியதுதான்'ன்னு பவானிட்ட சூரி அண்ணே சொன்னாரு. அம்மாவையும் மகளையும் வீட்ல சேர்த்துட்டு கெளம்பும் போது 'பாத்துக்கிட்டு வந்தாப் போதும் பவானி. கடைய நாங்க பாத்துக்கிறோம். நீங்க அனிதாவ சரி பண்ணுங்க' ன்னு ஒரு கடை ஓனர் கணக்கா சொல்லிட்டு திரும்பினேன். குடுகுடுன்னு ஓடி வந்த பவானி 'அண்ணே இதுல ஆயிரம் ரூபா இருக்கு. காருக்கு கொடுத்துருங்க'ன்னு சொன்னாங்க.

'அட..ஏங்கழுத நான் கொடுக்க மாட்டனா?' ன்னு சொல்லிக்கிட்டே வாங்கிக்கிட்டேன். லோடக்குக்கிட்ட வாடைகைய செட்டில் பண்ணும் போது,'அண்ணே எதுவும் பிரச்சினை வராதுல்ல? ஓனர் திட்டுவார்ண்ணே' ன்னு கேட்டான். 'இவன் யார்றா இவன்...யாருக்குடா தெரியும்?' ன்னு நினைச்சுக்கிட்டே 'அதுலாம் ஒண்ணும் வராது பாண்டியா. நீ கெளம்பு' ன்னு சொல்லிட்டு நானும் கிளம்பினேன்.

மதியம் ரெண்டு மணிவாக்குல லொடக்கு வந்து,'ஸ்டாண்டுல எந்த வண்டிடா பரமக்குடி போச்சுன்னு போலீஸ் வந்து விசாரிச்சுருக்காங்கண்ணே'ன்னு என்கிட்டே சொன்னான். 'நீ என்ன சொன்ன?' ன்னு கேட்டுக்கிட்டே நான் அப்படியே சூரி அண்ணன் கடைக்கு தவ்வுனேன். ஒண்ணாம் நம்பர் கடைதானே சூரி அண்ணன் கடை. ரெண்டா நம்பருக்கும் ஒண்ணாம் நம்பருக்கும் தவ்வ எம்புட்டு நேரம் ஆயிறப்போது?

'நான் மேலூருக்கு சவாரி போயிருந்தேன். வந்தோன்ன பயலுகள் சொன்னாய்ங்க. அதேன் ஓடியாந்தேன்' ன்னு சொல்லிட்டு இருந்தான். 'குட் ஃபெல்லோ' ன்னு நெனைச்சுக்கிட்டே சூரி அண்ணன் முகத்தப் பாத்தேன். ரிஜிட்டா இருந்துச்சு. இதுக்குள்ள பவானி ஓட்டமும் நடையுமா கடைக்கு வந்தாங்க. 'போலீஸ் வந்துருக்குண்ணே. வந்து ஸ்டேசனுக்கு கூப்புடுறாங்க. வரும் போதுதான் பாத்தேன். தெரு முக்குல அனிதா அப்பா நின்னுக்கிட்டு இருந்தாரு'ன்னு சொன்னாங்க.

'சரி மக எப்படி இருக்கு?ன்னு சூரி அண்ணே பவானிட்ட கேட்டாரு. 'அவ நல்லா சந்தோசமாத்தான் இருக்கா. ராதா (பவானி தங்கச்சி) அவ்வா (பவானி அம்மா)ல்லாம் பாத்தோன்ன சந்தோஷமா ஆயிட்டா' ன்னு சொன்னாங்க. 'நீ வீட்டுக்குப் போ நாங்க வண்டில வர்றோம். வண்டிய எடுங்க ராஜா' ன்னு எனட்ட சொன்னாரு. m-80 வச்சுருந்தாரு சூரி அண்ணே. m-80 ல்லாம் நான் சூப்பரா ஓட்டுவேன்.(தகவலுக்காக சபைல வைக்கிறேன்)

பவானி வீட்டுக்கு போற வழிலயே கட்டுக் குட்டுன்னு ஒரு ஆள் கைல மஞ்சப் பைய வச்சுக்கிட்டு பூட்ஸ் போடாம செருப்பு போட்டுருந்த போலீஸ்ட்ட பேசிக்கிட்டு இருந்தாரு.மஞ்சப்பை பார்ட்டிதான் அனிதா அப்பாவா இருக்கும்'ன்னு உள் மனசு கெத்கெத்ன்னு கவுளி தட்டியது. பவானி வீட்டுக்குப் போனா டவுன் ஸ்டேசன் காசி ஏட்டையா அனிதா அவ்வா கொடுத்த தண்ணி செம்ப கைல வச்சுக்கிட்டே திண்டுல உக்காந்து இருந்தாரு.

'என்ன ஏட்டையா? ன்னு சூரி அண்ணே இறங்குனாரு. 'சூரியா.. பரமக்குடி ஸ்டேசன்ல இருந்து ஆளு வந்துருக்கு சூரி. புள்ளைய தூக்கிட்டு வந்துட்டாங்க போல. எஸ்.ஐ ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வரச் சொன்னாரு'ன்னு சொன்னாரு. 'சரி போங்க ஏட்டையா. எந்தப் புள்ள என்னன்னு தெரியல. இனிமேதான் விசாரிக்கணும் உங்களப் பாத்தோன்ன இவுங்க திடுத்திடுன்னு கடைக்கு ஓடியாந்துட்டாங்க. நம்ம கடைல வேலை பாக்குறவுங்க.'ன்னு சொன்னாரு.

'இல்ல சூரி கையோட கூட்டிட்டு வரச் சொன்னாரு எஸ்.ஐ' ன்னு காசி ஏட்டையா சொன்னாரு. 'அதேன் ஏட்டையா. போங்க வர்றோம். சூரில்ல சொல்றேன்' ன்னு சூரி அண்ணே சொன்னாரு. சொன்னது மாதிரியே ஸ்டேசன் போனோம். எஸ்.ஐ இல்ல. சாயந்திரமாத்தான் வருவார்ன்னு சொன்னாங்க. வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அனிதா அப்பாவும் அவரோட அப்பாவும்( என்னப்பூ இப்படி நிக்கிறீங்க பார்ட்டி) ஸ்டேசனுக்கு ரைட்ல உள்ள டீக் கடைல டீ குடிச்சுக்கிட்டு இருந்தாங்க.

'ராஜா போறது மாதிரி போயி ஒரசிப் பாருங்க' ன்னு சூரி அண்ணே சொன்னாரு. ஒரு டீ'ய ஆர்டர போட்டுட்டு மஞ்சப்பைகளோட மஞ்சப் பையா ஒதுங்கி நின்னேன். அவுங்களாவே வாயக் கொடுத்தாங்க.

'யாருப்பு அவரு?'

'யாரு?'

'ஒங்களோட வண்டில வந்தவரு'

'சூரிங்க. ம.தி.மு.க. நகரச் செயலாளர். வக்கீலா இருக்காரு. என்ன விஷயம்?'

'பேத்திய தூக்கிட்டு வந்துட்டாய்ங்கப்பூ. மூணு பேரு வந்துருந்தாய்ங்க.. என்ன இப்படி நிக்கிறீங்கன்னு கேட்டதுக்கு குளிக்க நிக்கிறோம்ன்னு சொன்னாய்ங்க.அவய்ங்க மொகரையைப் பாத்தா கண்டு பிடிச்சிருவேன்'ன்னு பெரியவர் பீடிய பத்த வச்சுக்கிட்டே சொன்னாரு.

'அப்படியா.. இவர் அப்படி ஆள் இல்லையேங்க'

'இவர் இல்லைங்க. நான் வந்தவய்ங்கள சொல்றேன்'

ஒரு 'ஓஹொ' போட்டுட்டு சூரி அண்ணன்ட்ட வந்து 'பெரிசுக்கு அடையாளம் தெரியல'ன்னு சொன்னேன்.'சரி ஃபைல க்ளோஸ் பண்ணுங்க'ன்னு சொல்லிட்டே ஒரு தம்ம பத்த வச்சாரு.

எஸ்.ஐ வந்தாரு. அனிதா அப்பா, பூட்ஸ் போடாத போலீஸ்காரர், பவானி, அவ்வா, அவ்வா மடில இருந்த அனிதா எல்லோரையும் கூப்டாரு.'ஏத்தா நீ அப்பாட்டப் போறியா அம்மாட்ட இருக்கியா?' ன்னு கேட்டாரு. செவுலச்சேத்து அறைஞ்சது மாதிரி இருந்தது. சைலண்ட் இப்படியா அறையும்! கொஞ்ச நேரம் ங்கொய்ன்னு இருந்தது.

தலையைக் குனிஞ்சுக்கிட்டே இருந்த அனிதா கையை நீட்டி பவானியக் காட்டியது. சேம் செகண்ட்ல அனிதா அப்பா முகம் பார்த்தேன். என் வாழ்வின் மறக்க முடியாத முகம் அது.

அனிதா வளர்ந்தாள். மஹா க்ளாஸ்மேட் மற்றும் நெருங்கிய தோழி ஆனாள். வீட்டுக்கு வரப்போக இருக்கும் போது என்னைய மாமான்னு கூப்ட்டுக்கிட்டு அதே வாயால லதாவை அம்மான்னு கூப்ட்டுக்கிட்டும் இருந்தாள். எப்பப் பாத்தாலும் நான் அனிதாவிடம் 'ஒன்னைய ஒன் அப்பாட்டயே விட்டுட்டு வந்துருக்கணும் புள்ள' ன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். இனியும் கூட சொல்லுவேன்.

ஒரு முகம் அசைச்ச அசைவா இருக்கலாம். பொம்பளப் புள்ளைய கைல வச்சுருந்த தகப்பன் ஸ்டேஜா இருக்கலாம். அல்லது அதா இருக்கலாம் எழவு இதாக்கூட இருக்கலாம். லாம்கெல்லாம் மினிமம் கேரண்டியா இருக்கு?

மஹா கல்யாணத்தில் ஆஷ் கலர் சுடிதாரிலும் பொங்கிய சிரிப்போடும் அனிதாவைப் பார்த்தேன். 'என்ன புள்ள இவ்வளவு அழகா வந்துட்ட?'ன்னு கேட்டேன். 'போங்க மாமா. நீங்கதேன் கெழவனா ஆயிட்டீங்க' ன்னு சொன்னாள். நானும் விடலையே..

'ஒன்னைய ஒன் அப்பாட்டையே விட்டுட்டு வந்துருக்கணும் புள்ள' ன்னு சொல்லத்தான் செஞ்சேன்.

*******

இலையுதிரும் சத்தம் 1, 2


Tuesday, September 6, 2011

இலையுதிரும் சத்தம் - இரண்டு

ஏழுகடைக் கதைகள்- ஒன்று

என் வாழ்வின் பிரதானமான ஒரு இடம் என்று இந்த ஏழுகடையை ஏற்கனவே நான் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். இந்த ஏழுகடையையும் என் சிவகங்கை நினைவுகளையும் கூகுல் பஸ்ஸில் விளையாட்டுப் போக்காக 'டைரிக் குறிப்புகள்' எனத் தொடங்கி குறித்து வைத்துக் கொண்டு வருகிறேன். அவற்றைப் பத்திரப் படுத்தும் பொருட்டும், அங்கு வாசிக்காதவர்களுக்கு எனவும் இலையுதிரும் சத்தத்தில் பகிர விரும்புகிறேன். ( சும்மாவே கடையைப் போட்டு வச்சுருக்கான். இப்படி ஆட்டைத் தூக்கி குட்டியில் போட்டு குட்டியைத் தூக்கி ஆட்டிலும் போட்டு வைக்கிறானே' ன்னு நீங்கள் சைலண்ட் டைரிக் குறிப்புலாம் எழுதப்படாது... அழுதுருவேன்)

போக, இலையுதிர்ந்த சத்தம்தானே டைரிக்குறிப்பும்..

##

ஏழுகடையில் நாலாம் நம்பர் கடையில் முத்துராமலிங்கம் ' எலக்ட்ரானிக்ஸ் & இஞ்சினியரிங்ஸ்'ங்கற மாதிரி ஏதோ ஒரு பெயரில் ஏதோ ஒரு கடை வச்சுருந்தான். அதை நாங்க 'டி.வி ரிப்பேர் கடை' ன்னு எடுத்துக் கொண்டோம். ( இப்ப அதை வீடியோ கேம்ஸ் கடையா மாத்திட்டான்) திடீர்னு ஒரு நாள் வந்து 'மாமா அந்தப் புள்ள இந்த வாரத்துக்குள்ள வந்து கூட்டிட்டுப் போகலைன்னா செத்துப் போயிருவேன்னு சொல்லுது மாமா' என்றான்.

'எந்தப் புள்ளடா?'

'மீனா மாமா'

'போட்றா ஸ்கெட்ச்ச தூக்குடா வண்டிய' ன்னு மூணு டாக்சியில் கிளம்பிட்டோம். அப்ப மொபைல் போன் அவ்வளவு புழக்கத்தில் இல்லாத காலம். மூணு பணக்கார நண்பர்களிடமிருந்து கை மாத்தா வாங்கிக் கொண்டோம். ஒரு வண்டிக்கு ஒரு மொபைல்.

மீனாவ, மதுரை தாண்டி ஒரு கிராமத்தில், சொந்தக்காரர்களுக்கு மத்தியில் ஒளித்து வைத்திருந்தார்கள். காதல்தான் எல்லாத்தையும் கொடஞ்சுருமே அப்படி,' றெக்கையை' (தூதர்) பிடிச்சு ஏற்கெனவே கடிதப் போக்குவரத்துகளை நடத்திக் கொண்டிருந்தார்கள் காதலர்கள்.

அதே றெக்கை மூலமாகவே ஸ்கெட்ச்சை அனுப்பினோம். அப்படி, அந்த ஊர் பெருமாள் கோயிலுக்கு அன்று மீனா வரவேண்டியது. நாங்க போய் கொத்திட்டு வந்துற வேண்டியதுன்னு சிம்பிள் ஸ்கெட்ச்சாதான் இருந்தது. சிவகங்கையில் இருந்து கிளம்பும் வரையில். மதுரையை தாண்டியதும் கொஞ்சம் ட்விஸ்ட் வந்தது. இப்படி..'அந்த கிராமத்திற்கு 10 கி.மீ முன்பாக ஒரு வண்டி நிக்க வேண்டியது. 5 கி.மீ முன்பாக ஒரு வண்டி. மூணாவது வண்டி மட்டும் ஊருக்குள்ள போறது. அதில் சூரி அண்ணனும், நானும் கூட ரெண்டு பேரும். அவுட்டர்ல ஒரு பாலம் இருக்கும். அங்க நானும் சூரி அண்ணனும் இறங்கி ஊருக்குள் போக வேண்டியது. காரை திருப்பி நிறுத்தி பேனட்ட தூக்கி விட்டுட்டு வெய்ட் பண்ண வேண்டியது. கோயிலுக்குப் போக ரெண்டு வழிகள் உண்டு. ஒரு வழியில் சூரி அண்ணனும் ஒரு வழியில் நானும். கோயில் வாசல்ல மீனா வெய்ட் பண்ணும். மொபைல், நபர் உபயோகத்திற்கு அல்ல. காருக்கு மட்டும்'.

'ஏண்டா கொஞ்சம் மோட்டாவான ஆளா கோயிலுக்கு அனுப்பக் கூடாதா?'

'இல்ல மாமா. நீதான் கரக்ட். அப்பாவி லுக்கு. கல்யாணம் காட்சி, புள்ள குட்டிகள்லாம் வேற பாத்துட்ட' டென்சன் ஒரு பக்கம் என்றாலும் இதையும் ஒரு பக்கம் நடத்துனாய்ங்க. பிளான் படியே நானும் சூரி அண்ணனும் இரண்டு வழிகளில் பிரிந்தோம். 'அண்ணே' ன்னு சூரி அண்ணன ஒரு தடவ கூப்புட தோணுச்சு. 'டேய் நடடான்னு' அதட்டி என்னை நடக்க வச்சுட்டேன்.

கோயிலுக்கு வந்தா வாசல்ல மீனாவக் காணோம். உள்ளகிள்ள இருக்கோன்னு கோயிலுக்குள்ளயும் அலசிட்டு வாசலுக்கு வந்தா வாசல்லையும் இல்ல. இன்னொரு வழியாக வந்த சூரி அண்ணனையும் காணோம். ஒரு பத்து நிமிஷம் போல வெய்ட் பண்ணிப் பார்த்தேன். புறப்பட்டு சூரி அண்ணன் வரவேண்டிய வழியில் நடையைக் கட்டினேன். ரோட்டடைந்தேன். ரோட்லயும் சூரி அண்ணனைக் காணோம். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்னுக்கிட்டிருந்த காரையும் காணோம்.

'ஒரு சிகரெட் வாங்கி பத்த வச்சா என்ன?'ன்னு தோணுச்சு. ஒண்ணும் வழி இல்லாம போறப்பல்லாம் டக்கு டக்குன்னு இப்படி ஒரு ஐடியா வரும் எனக்கு. வாங்கி பத்த வச்சுக்கிட்டு இருக்கும் போது அந்தக் கடைக்கு ஒரு ஆளு ஓடி வந்தாம் பாருங்க, 'அண்ணே, அம்பளம் தம்பி மகள கார்ல தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்கண்ணே'

'தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்களா..அப்ப நானு?' ன்னு நினைச்ச நொடில எனக்கு வயித்துல பந்து போல ஒண்ணு மிதக்கத் தொடங்குச்சு. 'என்னடா சொல்ற?" என்று பதறிய பெட்டிக் கடைக்காரர் கடைக்கு வெளிய வந்து,' ஏ அம்பலம் தம்பி மகள தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்களாம்பா ..ய்ட்டான்களாம்பா..பா..பா' ன்னு எக்கோ விட்டார். விட்ட கையோட சர சரன்னு ஷட்டர இழுத்தார். இருந்த நாலஞ்சு கடைக்காரர்களும் ஷட்டர இழுத்தார்கள்.

'டேய் என்னங்கடா இதுக்குலாம் போயி ஷட்டர இழுக்குறீங்க?...அட அவசரத்துக்கு பிறந்தவன்களா' ன்னு நினைக்கும் போதே வயித்துல மிதந்த பந்து கொஞ்சம் வீங்கி மூத்திரப் பையை நெருக்கியது. ரெண்டும் பக்கத்து பக்கத்துலதாம் போல. 'யேய்..அம்பலத்துக்கு ஆள் விடுங்கப்பா' ன்னு ஒரு ஆள் எக்கோ விட்டாப்ல 'ராசாராமா கைய ஊண்டி கர்ணம் பாயி. இல்லாட்டி செத்தடி' ன்னு அலர்ட் ஆனேன்.

'மதுரை போற வண்டி எங்கப்பு நிக்கும்?' ன்னு ஒரு பெரியவர்ட்ட கேட்டேன். (அவர்தான் அந்த இடத்துலேயே சாந்தமா இருந்தார்) 'இந்த இடத்துலதான் நிக்கும்ப்பு' ன்னாரு. 'இந்த இடத்துலேயே ஒண்ணுக்கும் போலாமாப்பு?' ன்னு கேக்க நினைச்சேன். ஆனா கேக்கல. அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமா ஆளுக ஓடிக்கிட்டு இருந்தாங்க.

'புத்திர் பலம் யசோ தைரியம் நிற் பயத்துவம் அரோகதம் அஜாட்யம் வாக் படுத் வம்ச அனுமத் ஸ்மரநாத் பவேத்' ங்கிற ஆஞ்சநேயர் சுலோகத்த திருப்பித் திருப்பி சொல்ல ஆரம்பிச்சேன். நாலஞ்சு நிமிஷத்துலல்லாம் 'பெரியார் நிலையம்' போர்டு போட்ட பஸ் வந்து நின்னுச்சு. ஸ்லோகத்துக்கும் பெரியாருக்கும் என்னடா சம்பந்தம்ன்னு நினைச்சுக்கிட்டே தாவி பஸ்ல ஏறினேன்.

அந்த ஊர் வைகை ஆற்றோரமாக அமைந்த ஊர். (திருவேடகம்) நாலைஞ்சு கிலோமீட்டர் போனதும் பஸ் கண்ணாடி வழியாக பார்த்தேன், ஆற்றுக்குள் சட்டைய கழட்டி தோளில் போட்டுக் கொண்டு ஒரு ஆள் தொங்கு ஓட்டமா ஓடிக்கொண்டிருந்தார்.'எங்கயோ பாத்துருக்கமே இவர?' ன்னு யோசிச்ச செகண்ட்ல மின்னல் வெட்டியது..'அட.. நம்ம சூரி அண்ணே.. நம்ம பொழப்பு பரவால்ல போலயே பஸ்ல போயிட்டிருக்கோம்' ன்னு தோணினாலும் அடுத்த ஸ்டாப்ல இறங்கிட்டேன்.

இறங்கி, ஆற்றுக்குள் இறங்கினேன். அஸ் புஸ்ன்னு வந்து சேர்ந்தார் அண்ணே.,'என்னண்ணே ஆச்சு?'

'அட ஏன் கேக்குறீக ராஜா..சின்னப் புள்ளைக காரியம்ங்கிறது சரியாத்தானே இருக்கு. ( சூரி அண்ணன் வக்கீல். அப்ப ம.தி.மு.க. நகரச் செயலாளர். இப்ப தி.மு.க.வில் இருக்கிறார். போலீஸ் ஸ்டேசன், கோர்ட் என எங்களை எடுக்க கொடுக்க இருந்தவர். கிட்டத் தட்ட எங்க காட்ஃபாதர். இதெல்லாம் விட ஏழு கடையின் ஒண்ணாம் நம்பர் கடைக்காரர்)

'கோயிலுக்குப் போய்ட்ருக்கேன் எதுத்தாப்ல ஒரு சின்னப் பையன் கையப் பிடிச்சுக்கிட்டு மீனா வந்துட்ருக்கு. முன்னாடி போத்தான்னு சொல்லிட்டு ஒரு 50 அடி விட்டு பின்னாடி வந்துட்ருந்தேன். காருக்கு 20 அடி இருக்கும். பையன் கைய அத்து விட்டுட்டு ஓடிப் போயி கார்ல ஏறிருச்சு. இந்தப் பய ரோட்ல நின்னு அழுறான். பாலத்துல உக்காந்து இருந்த ரெண்டு பேரு எந்திருச்சு பயக்கிட்ட வந்தாய்ங்களா வண்டிய தூக்கிட்டாய்ங்க ராஜா. ஒரு முப்பது நாப்பது அடிதான் இருக்கும் காருக்கும் எனக்கும் .அப்படியே நைசா ஆத்துக்குள்ள எறங்கி ஓட ஆரம்பிச்சிட்டேன்'

'சரி ரோட்டுக்கு ஏறுவோம்ண்ணே இவய்ங்க திரும்பி வந்தாலும் தெரியாது' என்றேன். 'சரி.. சட்டையை கழட்டி தலப்பாவா சுத்துங்க' ன்னாரு. எனக்கு ஒன் பாத்ரூம் கண்டிசன்ல இருந்தது, டூ க்கு மாறிருச்சு. ரோடு ஏறி ரெண்டு மூணு நிமிசத்துலல்லாம் பயலுக வந்துட்டாய்ங்க ரெண்டு வண்டில.

'மீனா எங்கடா?' - சூரி அண்ணன்

'அதக் கொண்டு போயி ரெண்டாவது வண்டில மாத்திவிட்டுட்டு, ரெண்டாவது வண்டி போய் மொத வண்டில மாத்தி விட்டுட்டு, அதுல இருந்த பயலுகளையும், பொருள்களையும் லாவிக்கிட்டு வர்றோம் மாமா'

'நல்லா லாவுனிகடா. மீனா கூட யார்டா போறது?' -சூரி அண்ணன்

'செட்டி போறான். நீயென்ன வாசல்ல மீனா இல்லைன்னா திரும்புவியா கோயிலுக்குள்ள போய் கும்பாபிஷேகம் நடத்திக்கிட்டு இருக்க?'- ன்னு காருக்குள்ள பின்னாடி உக்காந்திருந்த என்னைப் பாத்து கேட்டான் முத்துராமலிங்கம். 'நாம் பரவால்லடி. தொங்கு ஓட்டமா வந்த பெருசு பாடுதான் அந்தரம்'ன்னு காருக்குள்ள சொல்லல. பிறகு சொன்னேன்.

அன்றிரவு மீனாவை மதுரையில் சுந்தர் ( சூரி அண்ணன் மச்சினன்) வீட்டில் தங்க வைத்தோம். சரக்கப் போட்டுட்டு காவலுக்கு இருந்தோம். 'நீ ஏண்டா இன்னைக்கு தண்ணி அடிக்கிற. போய் மீனாட்ட பேசிட்டு இருக்க வேண்டியதுதானே?' ன்னு கேட்டப்போ ரெண்டு கன்னத்தையும் பிடிச்சுக்கிட்டு சொன்னான்,' நாளைல இருந்து பேசத்தானே போறேன் மாமா. நீ பத்ரமா வரணும்ன்னு கண்டுபட்டி காளிக்கு மணி வாங்கி கட்றதா வேண்டுதல் வச்சுருக்கேன் மாமா'

'சரக்கப் போட்டா ஒங்க தொல்ல தாங்க முடியாதுடா'

ஆச்சு. மறுநாள் திருப்புவனத்தில் வைத்து மேரேஜ் ரிஜிஸ்ட்டர் பண்ணினோம். இப்ப ரெண்டு குழந்தைகள் முத்துராமலிங்கத்துக்கு. மூத்தவன் ரித்திக். சின்னவன் ராம். ஊடால, என்னைக் கூட்டிட்டுப் போய் ஒரு மணி வாங்கினான். அதுல ராஜாராம்'ன்னு பேர் எழுதினான். அப்படியே கண்டுப்பட்டி காளி கோயிலுக்கு கூட்டிட்டுப் போய் 'கட்டு மாமா' என்றான். பிறகொருநாள், லதாவும் நானும் கண்டுப்பட்டி கோயில் போனப்போ அந்த மணியவும் அதில் எழுதி இருந்த பேரையும் காட்டி இந்தக் கதையையும் சொன்னேன்.
'ஒங்க மணி தப்பிச்சா இந்த மணி வாங்கி கட்றதா வேண்டிக்கிருச்சாக்கும் முத்துராமலிங்கம்' ன்னு லதா சொன்னது வழக்கம் போல கால் மணி நேரம் கழித்தே எனக்குப் புரிந்தது.