Friday, November 25, 2011

புரை ஏறும் மனிதர்கள் - பத்தொன்பது

தேவதைகள் வாழும் வீட்டிற்குப் போயிருந்தேன்...

லயா பிறந்த நேரத்தில் சென்னையில் மணிஜி ஆஃபிசில் வைத்து ராஜாவை (கே.வி.ஆர்) முதல் முறையாக பார்த்தது. 'என்ன ராஜா நீங்க எப்போ வந்தீங்க?' ன்னு கேட்ட போது, 'ரெண்டாவது பெண் குழந்தை பிறந்திருக்கு சார். வைஃப்ப டிஸ்சார்ஜ் பண்ணி இப்பதான் வீட்ல விட்டுட்டு வர்றேன்' ன்னு சொன்ன நினைவு. சொடுக்கலில் பதினோரு மாதம் ஓடி விடுகிறது.

ரொம்ப நாளாகவே நிலா, லயா பார்த்து வரணும் என்று நினைத்துக் கொண்டிருந்தது, இந்த ரியாத் பயணத்தில் வாய்த்து விட்டது. இந்தப் பத்து வருஷத்தில் ரியாத் பேலசை விட்டு முதல் முறையாக வெளியில் வருகிறேன். ரியாத் பேலஸில் இருக்கும் சலாலுதின் சேட்டா, பண்டா என்கிற அங்காடி வளாகத்தின் முன்பாக ராஜாவிடம் என்னை ஒப்படைத்தார்.

நிலாவும் வந்திருந்தாங்க தாத்தாவைக் கூட்டிப் போக..புதுசாக ஒரு ஆளைப் பார்த்தால், எல்லாக் குழந்தைகளும் வைத்திருக்கிற முகத்தையே வைத்திருந்தாங்க நிலா. 'என்னடா பாக்குற?..மாமாடா என்று சற்று தடுமாறி , பிறகு ' தாத்தாடா' என்று நிதானித்தேன். (பழைய நினைப்பு போக இன்னும் கொஞ்சம் நாளாகும் போல). 'தாத்தான்னு சொல்லிட்டீங்களா? நான் அங்கிள்ன்னு சொல்லி கூட்டி வந்தேன்' என்று ராஜா சிரித்தார் .

தட்ஸ் ஆல் யுவர் ஹானர்..

பிறகு நிலா பேச்சுல புடிச்சாங்க பாருங்க ஒரு பிடி..

ரியாத் தெருவில் உள்ள கட்டிடங்களையெல்லாம் இது இந்த கட்டிடமாம். அது அந்த பில்டிங்காம். இதுல அந்த அங்கிள் வேலை பார்க்கிறாராம். அதுல அந்த அங்கிள் வேலை பார்க்கிறாராம். இவுங்க ப்ரீ கேஜி படிக்கிறாங்களாம். ராஜாப்பாதான் ஸ்கூல்ல கொண்டு போய் விடுவாங்களாம். அப்பாவை பெயர் சொல்லி ஒட்டினாற்போல ஒரு 'ப்பா' சேர்த்து குழந்தை அழைப்பது எவ்வளவு அழகாய் இருக்கு தெரியுமா?

வீடு போய் சேரும் வரையில் வாய் ஓயவில்லை.

வீடிறங்கி மாடிப்படி ஏறிக் கொண்டிருக்கும் போதே பிரியாணி வாசனை தூக்கியது. 'ராசாராமா அடிச்சடா லக்கிப் ப்ரைஸ்' ன்னு வயிறை தடவிக் கொடுத்துக் கொண்டேன். 'பொறு பங்காளி வரும்ல..எதுக்கு பொங்குற?' ன்னு அவ்வபோது என் வயிறை தடவித் தரவேணும். பாடி லாங்க்வேஜ் புரிஞ்சிக்கிட்டு அதுவும் படுத்துக்கிரும். எல்லாம் நம்ம பழகித் தர்றதுலதானே இருக்கு.

ரொம்ப நாள் பழகியவர்கள் போலான வாஞ்சையுடன் சிரித்து வரவேற்றார்கள் நிலா அம்மா. நிலா அம்மாவைப் பார்க்கையில் எனக்கு மஹாவைப் பார்ப்பது போலதான் இருந்தது. என்ன.. நிலா அப்பாவை நிலா ராஜாப்பா என்கிறாள். மஹா அப்பாவை மஹா வெறும் அப்பா என்றுதான் அழைக்கிறாள். மகள்கள் எப்படி அழைத்தால்தான் என்ன? அல்லது சிரித்து வரவேற்றால்தான் என்ன..

இரண்டாவது நிலா அம்மாவை சந்திக்கிறேன். முதல் நிலா அம்மா மணிஜி வீட்டில். அவுங்க பெரிய நிலா. அதுனால பெரிய நிலாம்மா. இவுங்க சின்ன நிலா. அதுனால சின்ன நிலாம்மா.

பதிவ நண்பர்களுக்கு நிறைய நிலாக் குழந்தைகள் இருந்து, 'மீடியம் நிலாம்மா, நடுசென்டர் நிலாம்மா, ஒண்ணு விட்ட நிலாம்மா' என்று நிறைய நிலா அம்மாக்கள் இருந்தாலும் இன்னும் நல்லாத்தான் இருக்கும்.

'இவன் யார்றா இவன். இவம் பாட்டுக்கு ஏறி உள்ள வர்றான்' என்பது போல லயாக்குட்டி பாத்தாங்க. 'ஆத்தாடி.. இவுங்க யாரு?' ன்னு நானும் சிரித்து வைத்தேன். ரெண்டு குழந்தைகளும் ரொம்ப ஃபிரெண்ட்லி. கூப்பிட்டதும் ' பச்சக்' ன்னு ஒட்டிக்கிறாங்க. வாக்கரை நகர்த்தி தானும் நகர்ந்து கொண்டிருந்தாங்க லயா குட்டி. (இவனை நகர்த்தி தானும் நகரும் சப்பரத் தெய்வம்- நன்றி குமார்ஜி)

வீடு பூராம் நிலா கிறுக்கிய ஓவியங்கள்தாம். அது என்ன இது என்ன என கொஞ்ச நேரம் ஓவியங்களை எல்லாம் காட்டித் தந்து கொண்டிருந்தாங்க நிலா. தாத்தாவுக்கும் பேத்திக்குமான உலகை விரித்து விரித்துக் காட்டிக் கொண்டிருந்தாங்க. 'அப்படி இழுத்து, இப்படி வளைத்து இப்படி கோடு போட்டால் ரெண்டு' என எண் இரண்டை வரைந்தது குறித்து விளக்கிக் காட்டின்னாங்க. 'ஆமாவா?'எனத் தெளிந்து கொண்டேன்.

பஃக்ருதீன் சார், இரண்டு வருடங்கள் முன்பாகவே கருவேலநிழல் கவிதைகள் வாசித்தது குறித்து மெயில் செய்திருந்தார். அவருக்கு ஒரு பதில் மெயில் கூட செய்யவில்லை நான். அவரை ராஜா வீட்டில் சந்தித்த போது சொல்லொண்ணா குற்றவுணர்ச்சி துருத்தியது. 'அட..விடுங்க சார்' என்பது போல சாதாரணமா கட்டி, சாதாரணமா அணைத்து, சாதாரணமா சிரித்து, சாதாரணமாக பேசினார். அசாதாரணமான தருணங்களை தர சாதாரண மனிதர்களால்தான் முடியும் போல. - நன்றி பஃக்ருதீன் சார்!

ராஜா வீட்டில் மற்றொரு சுவராசியமான மனிதரையும் சந்தித்தேன். லக்கி ஷாஜஹான் சார்! 'உங்களுக்கும் சேர்த்து சமைச்சுட்டேன் ஷாஜஹான். நீங்க வராட்டி பார்சல் கட்டி பஃக்ருதீன்ட்டயாவது கொடுத்தனுப்புவேன். அதுனால நீங்களே வந்துருங்க. இது ரெக்வஸ்ட் இல்ல. ஆர்டர்' என்று ராஜா அவரை கூப்பிட்ட போது கூடிய சுவராசியம், வந்து, அவ்வபோது அண்ணாந்து சிரித்து, சோபாவில் கால் மடக்கி அமர்ந்து, ரெண்டு மூணு தடவையாக பிரியாணி கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டு, 'இப்டி சாப்புடுற ஆளுகதான் சமைக்கிறவனை சந்தோசப் படுத்துறாங்க' என ராஜா வாயாலயே சொல்ல வைத்து..இதை ஒருவேளை ஷாஜஹான் சார் வாசித்தால் எப்படி அண்ணாந்து சிரிப்பார் என்பது வரையில் மனசில் சம்மணம் கூட்டி அமர்ந்திருக்கிறார். - ஷாஜஹான் சார், உங்களுக்கு என் அன்பு!

உண்மையில் மிக அருமையாக பிரியாணி, மட்டன் குழம்பு செய்திருந்தார் ராஜா. ஸ்பாட்லயே டைட்டா கட்டிக்கிட்டு, ஸ்லாங்கமா பார்சலும் கட்டிக்கிட்டேன். கிளம்பிய தருணம் நிலா முகம் வாடிட்டாங்க..'ஏண்டா.. தாத்தா நாளைக்கு வர்றண்டா' ன்னு சொன்னேன். மஹா, மாடியில் இருந்து கீழிறங்கி, காம்பவுண்டு கதவு திறந்து, முகத்தையும் வெளியில் நீட்டி, போறது வரையில் பாத்துக்கிட்டு நின்னாங்க. மஹான்னா சொன்னேன் நிலா அம்மாவை?.. இனி மஹாவைப் போயி நிலா அம்மான்னு சொல்றனோ என்னவோ?

எனக்கு ஒரு தம் அடிச்சா தேவலாம் போல இருந்தது. கூட வர்ற நிலா கண்ணைக் கட்டி, ஒரு மர மறைவில் நின்று, தம் கட்டி ஆசுவாசமானேன்...

நிலா, ராஜா, பஃக்ருதீன் சார், ஷாஜஹான் சார் எல்லோருமா வந்து பேலஸ் வாசலில் இறக்கி விட்டுப் போனார்கள். என் இளவரசரின் அரண்மனைக்குள் ஒரு ராஜாவைப் போல நுழைந்தேன்.

பாவம் என் முதலாளி. வெறும் இளவரசர்தான்.


***

புரை ஏறும் மனிதர்கள்:

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14,15,16,17,18