Monday, February 7, 2011

புரை ஏறும் மனிதர்கள்- பதிமூன்று

தடவி அறிந்த ப்ரைலி முகங்கள்- இரண்டு

முதல், "இங்கு"

***

அப்பேற்பட்ட டிரைவர் இந்த அறிவு!

செல்லமாக, "ஆக்சிடெண்ட் அறிவு' என்போம். "வட்டையை பிடிச்சான்னா மாப்ள 'தட்டாம' வரமாட்டான்" என்கிற வழக்கை சொந்தமாக வைத்திருந்தான். மாப்ள அறிவிற்கு மனிதர்களிடத்தில் எல்லாம் முரண்பாடு இல்லை. ஆடு, கோழி என்றால் கை ஆடிவிடுவான்.

"நாம்பாட்டுக்கு லெ ஃப்ட்ல ஏத்தி போய்க்கிட்ருக்கேன்..க்காலி குறுக்க வந்து விழுகுது" என சவாரி போய் திரும்பும் போதெல்லாம், வெடக் கோழியாகவோ, குரும்பாடாகவோ, டிக்கியில் இருந்து தூக்கிப் போடுவான். "கெடந்தாத்தானே நூல் பிடிச்சு வருவாய்ங்க.. தூக்கிட்டு வந்துட்டா" என்பான். எங்களுக்கும் சரக்குக்கு ஆகிப் போகும். சிலநேரம் நாங்களே கேட்பதுண்டு, " மாப்ள வேட்டைக்கு போகலையா?" என்று.

கிளம்பலாம் என காருக்கு வந்தோம். வண்டிக்குள், சுரேந்தர் படுக்க வைத்த 'S' போல படுத்தும் படுக்காமல் இருந்தான். "சுரேந்தர்!" என்றேன், சிரித்து. "யெஸ்!" என்றான் சைடாக சிரித்து. "சரித்தான்! S-க்கு, யெஸ் சரியாப் போச்சு" என்று நினைத்தபடி முத்துராமலிங்கத்தை பார்த்தேன். "வரும்போதே போட்டுட்டான் மாமா" என்றான். பேஷ்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

வண்டியில் ஏறியதும், "மாப்ள மஹா கல்யாணம் முடிஞ்ச மக்கா நாள் ரோட்ல விட்டு ஏத்திக் கொல்லு. கேக்க மாட்டேன்.மஹா கல்யாணத்துக்கு மொத நாள் போனாக் கூட பாதகமில்லை. உருட்டு போதும்" என்றேன். "அட.. ஏ மாமா நீ வேற" என சிரித்தான்.

மணிஜி என்னுடன் ஏறிக் கொண்டார் . சுந்தர், சரவணன் வாசு காரில். ஊரப்பாக்கம் என நினைவு. நெடுஞ்சாலையில் வண்டியை ஓரம் கட்டி, வாசு கார் பார் ஆனது. சென்னை ஏர்ப்போர்ட்டில் ரெட் லேபில் வாங்கியிருந்தேன். அதை நண்பர்களுக்கு கொடுத்து விட்டு எனக்கு நெப்போலியன் வேணும் என்றேன் வாசுவிடம். " வாங்கிருவோம்" என்ற வாசு, ஆட்டோ எடுத்தார். துடிப்பான பப்ளிசர் தெரியுமா வாசு!

களை கட்டத் தொடங்கியது சபா. எவ்வளவு நாள் கனவு தெரியுமா இது? பின்னூட்டங்களில், அழை பேசியில் தடவித் தடவி உணர்ந்து கொண்டிருந்த முகங்களை கண் நிறைத்து பருகிக் கொண்டிருப்பது. அதுவும் பருகிக் கொண்டிருக்கும்போதே பருகிக் கொண்டிருப்பது!

ரெண்டு ரவுண்டு போய்விட்டால் (இலக்கண சுத்தமாக 'இரண்டு' என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள். இனி, சித்தம் போக்கு, சிவன் போக்குதான்) வாயை கட்டிவிடும் எனக்கு. சும்மா சும்மா சிரித்துக் கொண்டிருப்பேன். வாயை கட்டிய பிறகு எப்படி சிரிப்பீர்கள் என நம் கார்க்கி மாதிரியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. கொடுத்துப் பாருங்கள் தெரியும். சிரிப்பாய் சிரிப்பேன். சிரிப்பாய் சிரிப்பீர்கள்!

சற்று நேரத்திற்கெல்லாம் மயில் ராவணனும், மாப்ள சிவாஜி சங்கரும் வந்து சேர்ந்தார்கள். முதல் பார்வையிலேயே மயில் ராவணனை யாருக்கும் பிடிக்கும்.அந்த யாருக்குள்ளும்தானே நானும் இருக்கிறேன்!.. ("யோவ்.. உனக்கு பிடிக்காத ஆள்ன்னு யாருமே இல்லையா?" கேள்விதானே?.. "ஏன்? இருக்கிறார்களே.. இதோ இந்த அறிவை இப்ப பிடிக்கலை. பத்திரமாய் கண்டு போய் வீடு சேர்த்து விட்டான் எனில் அப்ப பிடிக்கும்". அப்படித்தான்,... அப்பப்ப, அப்படியப்படி!)

எடுத்த எடுப்பிலேயே தோள் மேல் கை போட்டுக் கொண்டு பேசவும் சிரிக்கவும் மயில்ராவணனால் முடிகிறது. பதிலுக்கு நாமும் கை போட்டுக் கொள்ள அவர் தோள் இடம் தருகிறது.

"மாமா.." வென கூச்சலிட்டு கட்டிக் கொண்ட சிவாஜியின் அன்பு அலாதியானது. பேச்சுக்கு பேச்சு மாப்ள கைகளை பற்றிக் கொள்கிறான். கைகளை பற்றிக் கொள்வது கூட யாருக்கும் வந்துவிடும். விரல்களோடு விரல்களை பிணைத்துக் கொண்டு பேச யாருக்காவதுதானே வரும்!

வித்யாவும் (விதூஸ்), பத்மாவும் அழை பேசி விசாரித்தார்கள். நலம் விசாரித்த கையோடு, 'வந்ததும் தொடங்கியாச்சா?' என்பதையும்! கட்டிய வாயை பிரித்துப் பிரித்து பேசியதில் கண்டு பிடித்திருப்பார்கள் போல. ஸ்டெடியாக இருப்பது மாதிரி நடிப்பதில்தான் நம்மை ஸ்டடி பண்ணி விடுகிறார்கள்!

பத்து மீட்டர் இடைவெளி விட்டு வரவும்-என்கிற பேருந்தின் பின்புற வாசகம் போல் போதிய இடைவெளியில் 'சிவகங்கையான்கள்' கச்சேரி நடத்திக் கொண்டிருந்தான்கள். 'இங்க வாங்கடா' என்று கூப்பிட்டாலும் வரவில்லை. டீசன்சி மெயின்டைன் பண்றான்களாம். போங்கடா.. நீங்களும் உங்க டீசன்சியும். டீசன்சியை தொலைக்கத்தானே குடிப்பதே... ஆக்வர்ட் ஃபெல்லோஸ்!

சரவணா, மணிஜி, சுந்தர், வாசு, 'நீர் விட்டா வளர்த்தோம்?' என புரட்சி வெடிக்கிற தருவாயில், இலக்கியம் வளர்க்க தொடங்கியிருந்தார்கள். வாய் பார்க்க வசதியாக நான் சற்று மேடான இடமாக பார்த்து நின்று கொண்டேன். அவ்வப்போது மணிஜியோ, சரவணனோ, இன்னார் லைனில் இருக்கிறார்கள் பேசுங்கள் என அழை பேசியை என்னிடம் தந்தார்கள். வாங்கும் போதும், பேசும் போதும் நான் சிவகங்கையான்களை ஓரக் கண்ணில் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். ஊர் போய் சேர்ந்து விட்டால் பைசாவிற்கு மதிக்க மாட்டான்கள். 'கெடைச்ச வரைக்கும் தூத்திக்கடா ராசாராமா' என்பதில் தீவிரமாக இருந்தேன்.

அப்படியான 'இன்னார்' களில், கேபிள்ஜியும், ஈரோடு கதிரும் முக்கியமானவர்கள். பயணம் மற்றும் நலம் விசாரித்து அன்பு செய்தார்கள். மற்ற இன்னார்களில் பாதிப் பேர் ஏர்டெல்-லில் இன்னென்ன வசதி இருப்பது பற்றியும், இந்த பாட்டை காப்பி பண்ண, முப்பது ரூபாய்தான் மாதத்திற்கு என்பது பற்றியும் அறிவுறுத்தினார்கள்.

இடையிடையே முத்துராமலிங்கம் வந்து, "ஆத்தா வையும். சந்தைக்குப போகணும். காசு கொடு" என்பது போல், " ஐத்தை கத்துது மாமா.. கிளம்பியாச்சான்னு" என தொந்திரவு செய்து கொண்டிருந்தான். " ஐத்தை கத்தாட்டிதாண்டா மேட்டரு. கத்துனா கூட ஒரு குவாட்டரு" என பன்ச் வசனம் பேசி என் நாடியை தொட்டுப் பார்த்தேன். தாடி இல்லை. so, நான் அவரில்லை- நல்லவேளை!

ஒரு கட்டத்திற்கு மேல் முத்து வன்முறையில் இறங்கத் தொடங்கி விட்டான். தர தரவென இழுத்துக் கொண்டு போய் வண்டியில் எறிந்து, " கிளம்புடா அறிவு" என்றான். அவ்வளவு போதையிலும் அறிவு என்கிற சொல் கதக் என்றது எனக்கு. பத்திரமாய் ஊர் போய் சேர்ந்துட்டா ஆஞ்சநேயர் கோயிலுக்கு தொழுகைக்கு வருவதாகவும், மதுரைமுக்கு கன்னி மாதாவிற்கு சிதறு தேங்காய் உடைப்பதாகவும், நேரு பஜார் ஜூம்மா மசூதியில் அங்கப் பிரதட்சணம் செய்வதாகவும் கலந்து கட்டி வேண்டுதல் வைத்தேன்.

சற்றும் எதிர் பார்க்காத அளவு , மாப்ள அறிவு நேர்த்தியாக இருட்டை ஊடுருவிக் கொண்டிருந்தான். ஒருவேளை, இருட்டு கூட அவன் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். பயம் மறைந்து உற்சாகம் தொற்றிக் கொள்ள தொடங்கியது. அப்பதான் நினைவு வந்தது, நிலவுக்கு பண்ணிய ப்ராமிஸ்! (நிலவுடன் பேசிக் கொண்டே வீட்டையடையப் போகிறேன்)

"அடடா..சக்கரக் கட்டியை மறந்துட்டனா?" வென நெருங்கி அமர்ந்தேன் நிலவிடம். " தொடாதே" என்றது நிலவு!

"கொடுமையல்லவா தீண்டாமை என்பது.
கொடுமை அல்லவா அதை நீயும் சொன்னது"

"என்ன மாமா?" என்றான் முத்துராமலிங்கம்.

"என்ன மாப்ள?"

"பாட்டுலாம் பறியுது?"

"வாய் விட்டு பாடிட்டனாடா?"

"பரவால்ல பாடு. ஆனா முதல்லருந்து பாடு"

"நிலவைப் பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே"

"மாமா, அது வானம்"

"வானம் பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே"

"ப்ச்..முதல்ல நிலவு மாமா. ரெண்டாவது வானம்"

"முதல் நிலவைப் பார்த்து ரெண்டாவது வானம் சொன்னது
என்னை தொடாதே"

"கிழிஞ்சது போ!"

எட்டி நிலவைப் பார்த்தேன். வாய் பொத்தி சிரித்தபடி கூடவே வந்து கொண்டிருந்தது. ஆட்காட்டி விரல் சுண்டு விரலை விரித்து 'சேர்த்தி' என்றது.

" சேர்த்தி" என்றபடியே தூங்கிப் போனேன்.

--தொடரும்

***

புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12

24 comments:

Chitra said...

எட்டி நிலவைப் பார்த்தேன். வாய் பொத்தி சிரித்தபடி கூடவே வந்து கொண்டிருந்தது. ஆட்காட்டி விரல் சுண்டு விரலை விரித்து 'சேர்த்தி' என்றது.

" சேர்த்தி" என்றபடியே தூங்கிப் போனேன்.


...How sweet! நேர்த்தியான பதிவு! :-)

CS. Mohan Kumar said...

செம சிரிப்பா எழுதிருக்கீங்க. கலக்கல்.

//முதல் பார்வையிலேயே மயில் ராவணனை யாருக்கும் பிடிக்கும்.//

அட ஆமாம் என்னையும் இப்படி தான் பாத்தோன ஏமாத்திட்டாரு !

Ashok D said...

அத்துனுண்டு உடம்புக்குள்ள இவ்வளோ ஞாபகசக்தியா :)

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

Pranavam Ravikumar said...

அருமையா எழுதிருக்கீங்க!

My wishes... :-))

கவி அழகன் said...

அருமை வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

//("யோவ்.. உனக்கு பிடிக்காத ஆள்ன்னு யாருமே இல்லையா?" கேள்விதானே?.. "ஏன்? இருக்கிறார்களே.. இதோ இந்த அறிவை இப்ப பிடிக்கலை. பத்திரமாய் கண்டு போய் வீடு சேர்த்து விட்டான் எனில் அப்ப பிடிக்கும்". அப்படித்தான்,... அப்பப்ப, அப்படியப்படி!)//

அதுதான் பா.ரா அண்ணா :)

//ஸ்டெடியாக இருப்பது மாதிரி நடிப்பதில்தான் நம்மை ஸ்டடி பண்ணி விடுகிறார்கள்!//

அதுக்கு சரவணனிடம் ட்ரைனிங் எடுக்கணும் அண்ணே :)

//டீசன்சி மெயின்டைன் பண்றான்களாம். போங்கடா.. நீங்களும் உங்க டீசன்சியும். டீசன்சியை தொலைக்கத்தானே குடிப்பதே... ஆக்வர்ட் ஃபெல்லோஸ்!//

அப்படி போடுங்க அருவாள.

//மற்ற இன்னார்களில் பாதிப் பேர் ஏர்டெல்-லில் இன்னென்ன வசதி இருப்பது பற்றியும், இந்த பாட்டை காப்பி பண்ண, முப்பது ரூபாய்தான் மாதத்திற்கு என்பது பற்றியும் அறிவுறுத்தினார்கள்.//

நம்ம ஊர்ல இந்த கொடுமைக்குத்தான் அளவே இல்லாம போச்சு. ஏதோ கால்வருதுன்னு எடுத்தாலே இவங்க அலறல்வாய்சில் கொடுக்கும் விளம்பரத்தில் கையில இருக்குற பொருள் சிந்திடுது.

ஊருக்குச் செல்லும் அனைவரின் மனநிலையையும் பிரதிபலிப்பதாக உள்ளது உங்கள் பகிர்வு. நன்றி அண்ணே.

Unknown said...

செம செம செம :-)))))))))))

இனி “நிலவைப் பார்த்து வானம் சொன்னது” பாட்டைக் கேட்டாலே உங்க நினைவு தான் வரும் :-)))) சினிமாக்காரங்க யாராவது இந்தப் பதிவைப் படிச்சாங்கன்னா இந்தப் பகுதியை உருவிடுவாங்க

நான் பார்த்தப்போ இவ்ளோ அலப்பறையைக் காணோமே!!! ஒரு வேளை அப்போ குறைவோ ;-)

Ganesh Gopalasubramanian said...

சிரிச்சு முடியல பாரா சார்!!
மக்களை நீங்க கொண்டாடற விதம் சூப்பரு... அடுத்து நிலவு சீரிஸ் ஆரம்பிங்க... ஆவலா இருக்கு...

நிகழ்காலத்தில்... said...

தொடர்ந்து படிக்க முடியாத அளவுக்கு சிரிப்பு வந்து கொண்டே இருந்தது.:)))))))))))))))))))))))

vasu balaji said...

எழுத்தின் போதை எங்களுக்கு:)

sakthi said...

பா ரா தி கிரேட் ::)))

'பரிவை' சே.குமார் said...

சித்தப்பா.... சேர்த்தி ரொம்ப நேர்த்தியா இருக்கு...
பல இடங்களில் சிரிக்க வைத்துவிட்டீர்கள்... தண்ணி போன சந்தோஷமோ?

ஹேமா said...

அண்ணா பாட்டெல்லாம் சரியா பாடமாக்கணும்.இப்பிடிச் சபைல பிழை பிழையா !

சுசி said...

அருமை பாரா..

நான் குடிச்ச வைன்தானே நீங்களும் குடிச்சிங்கன்னு யாரும் கேக்கலை இல்லை :))))

காமராஜ் said...

இது சந்தோசமான சவாரி இழுத்துக்கொண்டே போகுது.
அருமை பாரா.

vinthaimanithan said...

கல்யாண ஊட்டு பாயாசம் மாதிரி நல்லா முந்திரியெல்லாம் போட்டு செம டேஸ்ட்!

Mahi_Granny said...

பா. ரா. எழுத்தென்றாலே சுவாரஸ்யம் தான் . நன்றாக புரை ஏறட்டும்

ராஜவம்சம் said...

எப்பா சித்தப்பா ரொம்ப லொள்ளுப்பா
பாவம் புள்ளைங்க திருட்டு தண்ணி அடிச்சவங்களையெல்லாம் சேர்த்து கோத்துவிட்டுடிங்க போங்க.

போதையில் உலருவதும் சில நேரம் காவியம் ஆகும் பல நேரம் ரத்த கலரியகும் இந்தப்பதிவைப்படித்து யார் யார் வீட்ல மொத்து வாங்குனாங்களோ யாரரிவார்.

Unknown said...

பாசக்கார புள்ளைங்க நீங்க எல்லாம். அருமையா எழுதிருக்கீங்க.

மகிழ்ச்சியோட பின்தொடருவோம்.
Sethu(S)

மணிஜி said...

யோவ்....சூப்பர்யா...

அகநாழிகை said...

ராஜாராம், இணைய இணைப்பு 3 நாட்களாக இல்லை. இன்றுதான் வாசித்தேன். என்ன சொல்வது.. வாசிப்பும் நேசிப்பும்தானே வாழ்க்கை நமக்கு..

பேரன்புடன்,
பொன்.வாசுதேவன்

ஈரோடு கதிர் said...

உங்களுடம் பேசிய நிமிடங்கள் அர்த்தமுள்ளவை!!!! வாசிக்கும் போது எனக்கும் புரை ஏறுகிறது

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

வேலைப் பளுவில் தனித்தனியாக கை பற்ற இயலவில்லை. நிறைய வாசிக்கவும் விட்டுப் போயிருக்கு. ஓரிரு தினங்களில் வந்து சேர்ந்து கொள்கிறேன் மக்கா. நடந்து கொண்டிருங்கள்..

எல்லோருக்கும் நிறைய அன்பும் நன்றியும்!