குழந்தைகளை கூட்டி வந்த சரவணன்மூன்று மாத லீவிற்கு போய், 50-நாளில் திரும்பிய சரவணனை மீண்டும் கோல்டன் ஜூஸ் கார்னரில் சந்தித்தேன். கோல்டன் ஜூஸ் கார்னர் என குறிப்பது கூட மனநிலையை குறிப்பது போல்தானே.
ஏறத்தாழ 40-நாள், குடும்ப நெருக்க நிமிஷங்களை இழந்து வந்த சரவணனின் பின்புறம் ஒரு நண்பர் இருந்தார். லீவிற்கு போன இடத்தில் அவரின் நண்பர் விபத்துக்குள்ளானார். கொண்டு போன பொருளையும், வீட்டில் இருந்த பொருளையும் தராசின் ஒரு தட்டில் வைக்க நேரிட்டது. மேலும் கீழுமாக ஆடிக்கொண்டிருந்த அந்தப் பக்க தட்டில் நண்பனின் உயிர் இருந்தது. தராசு முல்லை சமன் செய்து, நண்பரை வீடு சேர்த்து, "சரி, நண்பனை மீட்டெடுத்தாச்சு. பொருளும் நாற்பது நாளும் என்ன பெரிய மயிறு" என்று கிளம்பி வந்த சரவணன் சும்மா வரவில்லை.
லாவண்யா,விநாயகம், நர்சிம், காந்தி, மதன் குழந்தைகளையும், அப்புறம் என் மஹா-சசியையும் கூட்டி வந்த மனிதனை எதிர்கொள்ள மிக சிரமமாக இருந்தது.
ஏனெனில்,
வெளிநாட்டில் இருப்பவன் விடுமுறை செல்வது என்பது ஒரு திருவிழாவிற்கு இணையானது. பலூனும், ரப்பர் வளையலும், ரிப்பனும், ராட்டினமும், கரும்புச்சாறும், வியர்வை வாசனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் அவனுக்கு. அது அவன் வீடாகும்.
போன நாளில் இருந்து நாட்காட்டித் தாளை கிழிக்க அஞ்சுவான். ஆனாலும் கிழிபடும் தாள். அப்படி கிழிபடும் தாளில் ராக்கெட் செய்து அதன் மேலேறி பறந்து வருபவன் ஒரு முகம் வைத்திருப்பான். அம்முகத்துடன் ஒரு மௌனமும் மனைவி செய்து தந்த ஊறுகாயும் கொண்டு வருவான். மௌனத்தின் கசப்பு தாங்காது போகிற போதெல்லாம் தொட்டு, ஊறுகாயை நக்கிக் கொள்வான். இப்படித்தான் இருப்பான் பெரும்பாலும் ஊர் திருவிழா பார்த்து திரும்பியவன்.
இப்படியெல்லாம் இல்லாமல் நண்பனை பத்திரபடுத்தி,நண்பர்களின் முதல் குழந்தைகளை கூட்டி வந்த களிப்பில் இருந்தார் சரவணன். ஒருவேளை, நண்பனும், நண்பர்களின் குழந்தைகளும் கூட வரும்போது ஒரு முகம் வரும்போல.
அந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன் சற்று நேரம். எல்லாவற்றுக்குமாக சேர்த்து கட்டிக் கொள்ள தோன்றியது சரவணனை. கட்டிக் கொண்ட போது, நாட்டை, காற்றை, ஊரை, தெருவை, வீட்டை கட்டிக் கொண்டது போல் இருந்தது. 40-நாள் இழந்த விஷம் முகத்தில் இல்லை. கடைந்த நட்பும் அதன் சார்ந்த ப்ரியமும் அமிர்தமென பொங்கியது.
ஏறத்தாழ இரண்டு மணி நேரம் மணிஜி, வாசு, சிவராமன், கேபிள்ஜி,நர்சிம், பலாபட்டரை ஷங்கர், ஜாக்கி சேகர், அப்துல்லா, துபாய் கார்த்திகேயன், சத்ரியன், பிரபாகர், ஜெத்தா அபுபக்கர், அக்பர், starjan, மயில்ராவணன் என்று பேசிக் கொண்டிருந்தார். எதை கொடுத்தாலும் தின்கிற பசியில் இருந்தேன். மனிதர்களை திணித்துக் கொண்டிருந்தார். விரும்பி தின்கிற மனிதர்களை...லபக் லபக் என விழுங்கிக் கொண்டிருந்தேன். அப்பத்தான் கையளித்தார் இக்குழந்தைகளையும்.
மனிதர்களிடமிருந்து குழந்தைகளிடம் தாவினேன். மஹா-சசி போல இருந்த கருவேலநிழல் தொகுப்பை கையில் தூக்கிய போது கண்கள் நிறைந்து போனது. அழுவது எவ்வளவு விருப்பமோ, அப்படியே சிரிப்பதும் என்பதால் சரவணனை சிரமப் படுத்தாது சிரித்து வைத்தேன். முதல் தொகுப்பை கையில் பெற்ற நர்சிம், 'முதல் குழந்தையை கையில் வாங்கியது போல் உணர்ந்தேன்' என உணர்வுப் பூர்வமாக பதிவு செய்திருந்தது நினைவு வந்தது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள் நர்சிம்!
"இருங்கண்ணே டீ வாங்கிட்டு வந்துர்றேன்" என சரவணன் விலகும் போதெல்லாம் நான் குழந்தைகளை தடவாமல் இல்லை. பிறந்த குழந்தைகளாகப் பார்க்க நினைத்திருந்த குழந்தைகளுக்கு எல்லாம் பல் முளைச்சாச்சு. ஒவ்வொன்னும் அம்புட்டு பேச்சு. இதை எல்லாம் பிறகான பதிவுகளில் ஒவ்வொன்றாக பாப்போம்-பிழைத்துக் கிடந்தால்.
அப்புறம்,முட்ட விலகுகிற சந்தர்பம் இருவருக்கும் வந்தது. "சரிண்ணே.. கொஞ்சம் பர்சேஸ் இருக்கு, முடிச்சிட்டு நான் கிளம்புறேன்" என விடை பெற்று கிளம்பி போன சரவணன் போன திசையை சற்று நேரம் பார்த்துக் கொண்டு நின்றேன். இப்படி எப்பவாவதுதான் வாய்க்கும், மனிதர்கள் கரைகிற திசைகளைப் பார்க்கிற சந்தர்பம். இல்லையா?
அறை வந்து விளக்கு பொருத்தியதும்,"பிளைட்ல குட்டீஸ் எல்லாம் பயப்படாம வந்தாச்சா?" என்றேன் குழந்தைகளிடம்.
சிரித்தார்கள்.
சவுதி வந்த பிறகு, முதல் பயணம் மூன்று வருடம் கழித்தே வாய்த்தது. சென்னை இறங்கி, மதுரை பிளைட் எடுத்து, ஏர்போர்ட் வந்து, லக்கேஜ் பெறுகிற இடத்தில் இருந்து பார்த்தால், கண்ணாடிக்கு வெளியே குடும்பத்தை காண இயலும். அப்படி மனைவியைப் பார்த்த கண்ணோடு மகனையும் தேடினேன்.
மகனின் முகத்தை தேடிய இடத்தில் அவன் மார்பிருந்தது.மார்பில் இருந்து அவன் முகம் நோக்கி பயணித்த நொடியை, நொடியின் நொடியை...
மூன்று வருடம் என்கிறேன். நம்புவீர்களா மக்கா?
இவ்வளவு அதிர்ச்சி தராதுதான், சரவணன் கூட்டி வந்த எல்லா குழந்தைகளும், பத்து நூறு வருடம் கழித்துப் பார்த்தாலும் முகம் பார்த்த இடத்தில் முகத்தையே பார்க்கலாம்.
இல்லையா சரவனா?
இல்லையா லாவண்யா?
இல்லையா விநாயகம்?
இல்லையா நர்சிம்?
இல்லையா காந்தி?
இல்லையா மதன்?
இல்லையா ராஜா?