Thursday, July 7, 2011

கிரிக்கெட் கவிதைகள்

1. பெவிலியனுக்கு திரும்பாதவர்

இழுத்துக் கொண்டு
ஓடிப்போன தங்கமுத்து மாமா
அத்தையை சாகக்கொடுத்த பிறகு
திரும்ப வந்து விட்டார்.

இப்ப அத்தை மட்டுமே
ஓடிப் போனவளாகவே
இருக்கிறாள்.


--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


2. ஆல் - அவுட்

மேலிருந்த
கண்ணீர் அஞ்சலிக்காரனை
எட்டவில்லை போல.

கீழிருந்த
குடும்பத்தார்களை
கழுதை மென்று கொண்டிருந்தது.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


3. நாட்- அவுட்

கொண்டோடி மாடு
என அழைப்போம்
செத்துப் போகும் முன்பு வரையில்
சுந்தரை.

அப்புறமெல்லாம்
சுந்தர்தான்.




Saturday, July 2, 2011

ரகசியம்



யாரிடமும் சொல்ல முடியாத
ஒன்றை என்னிடம்
சொல்லப் போவதாக சொன்னாள்.

என்ன வென்பதையும்.

யாரிடமும் சொல்ல முடியாததாக
இதில் என்னவிருக்கிறது
எனத் தோன்றியது.

கேட்கவில்லை​.

என்னிடமும் இருந்தால்தான் என்ன
யாரிடமும் சொல்ல முடியாத ஒன்று?

##

டிஸ்கி : கூகுள் பஸ்'சில் இந்தக் கவிதைக்கான தலைப்பை வைத்தவர் நம் தினேஷ்குமார்(முகிலன்), முகிலன், நன்றி!