Sunday, February 27, 2011

புரை ஏறும் மனிதர்கள் - பதினைந்து

தடவி அறிந்த ப்ரைலி முகங்கள் - நான்கு
ஒன்று, இரண்டு,மூன்று

வீட்டையடைந்த நாளில் இருந்து சரியாய் முப்பது நாள் இருந்தது மஹாவின் திருமணத்திற்கு. ஒரே ஒரு பாட்டில் பிறந்து, வளர்ந்து, மனுஷனாகி, பழி வாங்கக் கிளம்புகிற எம்.ஜி.ஆர். மாதிரி ஆகி விடுகிறார்கள் இந்தப் பெண் குழந்தைகள்.

சுகுணா டாக்டரம்மா கிளினிக்கில், " ஒம்புள்ளைடா..ராஜாப் பயலே" என்று பழம் சேலையை விலக்கி மஹாவை காட்டினார்கள் நர்ஸ் சாந்தியக்கா.. பிஞ்சு, பிஞ்சு விரல்களையெல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு கருவண்டு போல கிடந்தாள் மஹா. என்ன பேசுவது எனத் தெரியவில்லை. என்ன பேசினால் என் மகளுக்குப் புரியும்?

கருவண்டு விரல்களை பிரித்து கருவண்டு விரலை திணித்தேன். பற்றிக் கொண்டாள். மகளும் அப்பனும் பற்றிக் கொண்டு எரிந்தது நேற்றோ, சற்று முன்போதான் நடந்தது போல இருக்கிறது. கண்மாயில் விடுகிற தவளைக்கல் மாதிரி எவ்வளவு இலகுவாய் தவ்வுகிறது காலம்..

தவழ்வதில் தவ்வி, நடப்பதில் தவ்வி, பள்ளியில் தவ்வி, கல்லூரியில் தவ்வி, இதோ, 'ப்ளங்' என கல்யாணத்திற்குள் தவ்வுகிறாள் மஹா. பார்த்துக்கொண்டிருக்கும் போதே பூத்துக் கொண்டிருக்கிறாள். பூத்துக் கொண்டிருக்கும் போதே காய்த்துக் கொண்டும் இருக்கிறாள்.

ஒரு ஊருக்குள்தான் எத்தனை சாலைகள். சாலையென்றால் திருப்பங்கள் இல்லாமலா?. திருப்பங்களில் திரும்பினால் மீண்டும் சாலைகள். மீண்டும் திருப்பங்கள். நடக்கவும் கடக்கவும் மயங்கி நின்றால் வாசலை அடைவது எப்படி? வீடு நுழைவதுதான் எப்படி?

அப்படி, ஒரு கல்யாணம் எனில், மொட்டு மொட்டாய் துளிர்க்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். நானும் மஹாவும் மட்டும் என்ன இறங்கியா வந்தோம்? பிறந்துதானே வந்தோம்?பிரச்சினைகளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா. நம்ப முடியாமல் நடந்து கொண்டிருந்தான் ராஜாவும்.

மேலுதட்டில் அரும்பிய வியர்வையுடன் மூசு மூசென்று மூச்சு விட்டு நடக்கிற நிறை மாதக் கர்ப்பிணி போல நாட்கள் அசங்கி அசங்கி நடந்து கொண்டிருந்தன.

"அண்ணே, என்ன பண்ணி வச்சிருக்கீங்க? மருமகள் கல்யாணத்துக்குன்னு ஒரு இருபத்தையாயிரம் தனியா எடுத்து வச்சிருக்கண்ணே. இடத்தெல்லாம் கொடுக்காதீங்க. பின்னால வாங்க முடியாது. மலைக்க வேணாம்ண்ணே" என்று அழை பேசினார்கள் வித்யா(விதூஷ்).

"மஹா திருமணத்துக்கென கொஞ்சம் பணம் தரலாம்ண்ணா. கடனாத்தான். முடியுறபோது திருப்பித் தாங்க" என லாவண்யா அழைத்தது.

"ஒங்க மாதிரியேண்ணே அண்ணனும். எஸ்.ஐ- யா இருந்து இறந்துட்டார். அவர் மகள் கல்யாணம்ன்னு நினைச்சுக்கிறேன். அண்ணன் மகள் கல்யாணத்துல எனக்கும் பங்கிருக்குள்ளண்ணே. என்னண்ணே செய்யட்டும் நான்?" என விசாரித்தார் ரவிச்சந்திரன்.

"யோவ்..மயிறு, என்னய்யா செஞ்சு வச்சுருக்க? சும்மா கெடந்து யோசிக்காத. என்ன தேவைன்னாலும் கூப்பிடு" என அதட்டினார் மணிஜி.

"அப்பா, தங்கச்சி கல்யாணத்துக்கு எனக்கிட்டருந்து என்னப்பா எதிர் பார்க்கிறீங்க?" என்று என்னவோ நான் கொடுத்து வைத்திருந்ததை திருப்பி தருவது போல கேட்டான் வினோ.

" டேய், இவ்வளவு கைல இருக்குடா. கூடுதல் தேவைன்னா லோன் போடணும். முன்னாடியே சொல்லிரு. தயாராகணும்" என்றான் தெய்வா.

அண்ணாதுரை சித்தப்பா, காளியப்பன் அண்ணன், இளங்கோ அண்ணன், மங்கை அக்கா, கனடாவில் இருந்து தம்பிகள் பொருளாதார தேவைக்கென என்னை அவ்வப்போது தடவிக் கொண்டே இருந்தார்கள். என் உறவுகள் என் கைகளாக இருப்பது எனக்கு புதிதன்று. ம் என்றால் அங்குதான் போய் விழுவேன். தூக்கி நிறுத்தி விடுவார்கள்.

ஆனால், இவர்கள் எல்லாம் யார்? எப்படி இறங்கினார்கள் எனக்குள்? ஏழு கடல், ஏழு மலை தாண்டி இறங்க, என்ன ராஜாளிப் பறவைகளா இவர்கள்? 'இவனை நகர்த்தி தானும் நகரும் சப்பரத் தெய்வம்' என்கிற குமார்ஜியின் கவிதை போல், "எல்லாம் நடக்கும். சும்மா வீசி நடடா" என்று எல்லோரும் ஆண்டவனின் அசரீரிக் குரல்கள் போல எனக்குள் இறங்க என்ன செய்தேன் நான்?

சகோதரி என்றேன். பலநேரம் அதற்குக் கூட சோம்பல் பட்டு சகோ என்றேன். மகனே என்றேன். மக்களே என்றேன். பலநேரம் இதற்கும் கூட சோம்பல் பட்டு மக்கா என்று சொல்லிக் கொண்டே வந்தேன். சொல்லக் கூட செய்யவில்லை எழுதிக் கொண்டு வந்தேன். எழுத்தும் நாமும் ஒன்றாக இருக்கிற போது என்ன வேண்டுமானாலும் செய்யும் போல, எழுத்து!

மக்களே, நம்புங்கள்..என்ன வேண்டுமானாலும்!

என்றாலும் மஹாவின் திருமணத்திற்கான பொருளாதார தேடலில் தன்னிறைவுடனே இருந்தேன். இந்த இரண்டு வருட சேமிப்பாக இரண்டரை லட்சம் கையில் இருந்தது. ஐந்து லட்சத்திற்கு இடத்தை விலைபேசினேன். போதாதா ஒரு ஏழைக் குடியானவனின் மகள் திருமணத்திற்கு?

"பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கட்டுமா?" என செந்தில்(நம்ம மருமகன்) வீட்டில் கேட்டேன்.. " நல்லா ஓய்...போதாதற்கு மஹா வேறு வர்றாள்ள..யே..யப்பா போதாதா?" என்று நிறைந்து போனார்கள். போதாதா ஒரு கோடீஸ்வரனின் மகள் திருமணத்திற்கு?

இவ்வளவுக்கும் மேலாக, அன்பொழுக விசாரித்தவர்களிடமெல்லாம் உதவி பெற்று திருமணம் நடத்துவது எனில் எனக்கு இன்னொரு பெண் குழந்தைதான் பிறக்கவேணும். சரி..போதும்தான்!

மஹா குழந்தையுடன் சேர்ந்து கொண்டு என் குழந்தையும் என்னை தாத்தாவென அழைத்தால் நல்லாவா இருக்கும்?

மஹா திருமணதிற்கு முன்பாகவே சரவணனுக்கு(செ. சரவணக்குமார்) சவுதி திரும்ப வேண்டிய டிக்கட் இருந்தது. "அதற்குள்ளாகவே வந்து மஹாவை பார்த்துரண்ணே" என்று சிவகங்கை வந்தார். ஒரு நாள் முழுக்க என்னுடன் இருந்தார். "அண்ணன் மகள் திருமணம் பார்க்காது பிழைப்பைப் பார்க்க போகணுமே" என்பது போல பின்னிப் பின்னிக் கொண்டு நின்றார்.

சினிமாவில் கூட காதலி பின்னும் லவ் யூ எண்ணும் கைக் குட்டை எழுத்துதானே, பிறகு லவ்வாக மலர்கிறது. சினிமாவிற்கே அவ்வளவு திமிர் இருந்தால், நிஜத்திற்கு எவ்வளவு திமிர் இருக்கும்! அதுவும் பின்னிப் பின்னிக் கொண்டு நிற்கிற ஒரு சகோதரனின் அன்பான திமிருக்கு!

அப்படி அவரின் விசா சற்று நெகிழ்த்தித் தந்தது. "போடு டிக்கட்டை..மஹா கல்யாணம் முடிச்சு" என ஆணியை நாக்கில் தொட்டு போட்டார் ஒரு ஆக்கரை. தலை கால் தெரியாமல் சும்மா ரெங்கிப் போனது பம்பரம்...சிவகங்கையில் இருந்தே சவுதி திரும்பும் டிக்கட்டை தள்ளிப் போட்டார்.

"சரிண்ணே..கவலையை விடுங்க. நண்பர்களை டேக் கேர் பண்ற வேலைய நான் பார்த்துக்கிறேன். மத்த சோலிய பாருங்க நீங்க" என ஆறுதல் ஆனார். "அட ராஸ்கல்.. நீயும் பாதி கல்யாணத்தை நடத்திப் பிட்டியேடா" என என்னை நானே கட்டிக் கொண்டேன். சற்றுக் குளிராக இருந்தான் ராஜா.

"பெங்களூரில் வேலை கிடைப்பது போல இருக்குண்ணா. அப்படி வேலை கிடைச்சுட்டா மஹா திருமணம் முன்பாக ஜாயின் பண்ணுவது போல வரலாம். ஜாயின் பண்ணிட்டா மஹா திருமணம் வர முடியாமல் போகலாம். முன்னாடியே வந்து மஹாவை பார்த்துட்டு போயிர்றேண்ணா" என்று திருமணத்திற்கு முன்பாகவே சிவகங்கை வந்தார்கள் லாவண்யா.

இந்த லாவண்யாவால் சும்மாவே இருக்க முடியாது தெரியுமா? "உங்க கவிதைகளை தொகுக்க விருப்பமா பா.ரா?" என்று முன்பு தொடங்கினார்கள். தொகுப்பு வந்தது!.. பா.ரா.வாக இருந்த போதே அவ்வளவு உரிமை கொண்டாடிய லாவண்யா, சகோதரி ஆன பிறகு சும்மா இருப்பார்களா?

"மகாவிற்கு ஒரு வரன் வருதுண்ணா. பார்க்கலாமா?" என்றார்கள். ஆஹா..ராசியான வாயல்லோ. விட்டுவிடுவானா பெண் குழந்தையின் தகப்பன்? 'பாரேன்' என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த பையனுக்கு வேறு இடத்தில் முடிந்து விட்டது.

"தப்பிச்சோம்டா" என்று லாவண்யா பார்த்த பையன் யோசித்து முடிப்பதற்குள் " ஆப்ட்டோம்டா" என செந்தில் சிக்கிக் கொன்டார். தொகுப்பிற்கும் சரி. மகாவிற்கும் சரி. முகூர்த்தக் கால் ஊண்டியது என்னவோ இந்த லாவண்யாதான்.

பேக்கும் கையுமாக மதுரை பஸ்ஸில் இருந்து லாவண்யா இறங்கியபோது " அட..நம்ம இந்திரா!"( என் கடைசி தங்கை) என்று தோணியது எனக்கு. நடை, உடை, பேச்சு, சிரிப்பு எல்லாம் அப்படியே. ஒரு சகோதரி நின்னு நிரப்ப முடியாத ஒரு இடத்தை, மற்றொரு சகோதரி வந்து, நின்னு நிரப்புகிறாள்.

கையாலாகாத சகோதரனுக்கெனவே பிறக்கிறார்கள் போல பிறக்காத சகோதரிகள். அல்லது பிறந்த சகோதரிகள்தான் பிறக்க வைக்கிறார்களோ என்னவோ பிறக்காத சகோதரிகளையும்.

"போற வழில ஒரு கடைல நிறுத்துங்கண்ணா. தேங்கா பழம் வாங்கணும்." என்ற லாவண்யாவை, வீடு வந்ததும் கை காலெல்லாம் கழுவி, விளக்கேற்றி மகாவிற்கு திருநூறு பூசித் தந்த லாவண்யாவை, "வீட்டை சுத்தமா வச்சிருக்கீங்கண்ணி" என்று தன் பின்னலை தூக்கி முன்னால் போட்டுக் கொண்டு, பின்னிக் கொண்டே லதாவை ஐஸ் வைத்த லாவண்யாவை, கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு" சாரிண்ணா..எனக்கு ரசத்தை தூக்கி குடிச்சாதான் பிடிக்கும்" என்று தட்டோடு தூக்கி குடித்த லாவண்யாம்மாவை, என் இந்தும்மாவுடன் பொருத்திப் பார்க்காவிட்டால் என்ன சகோதரன் நான்? அல்லது எனக்கெதற்கு இக் கண்கள்?

ஆச்சா? லாவண்யா வந்துட்டு போயாச்சா? சரவணன் பயணத்தை தள்ளிப் போட்டாச்சா? மற்ற நண்பர்கள் எல்லோரும் திருமணத்திற்கு முதல் நாள் வருவதாக சொல்லியாச்சா? சரி..அது வரையில் என்ன செய்றது மக்கா? இன்னும் இருபது நாள் இருக்கே...

ஒண்ணு செய்யலாம்.. இந்த பயணத்தில் ஒரு நெப்போலியன் வளர்க்க முயன்றேன். அதைப் பார்த்துட்டு, நேர மேரேஜ் போயிறலாம்.. சரியா?

ஓஹ். . நெப்போலியனா? சொல்றேன்...

--தொடரும்

***

புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14

Thursday, February 24, 2011

தீர்ப்பு


(Picture by cc licence, Thanks Ajay Tallam)

வர்கள்
சந்தித்துக் கொள்வதாக
ஏற்பாடாயிற்று.

வள் சார்பாக சிலர்
இவன் சார்பாக சிலர்.

பேசித் தீர்க்கவியலா
பிரச்சினை எதுவுமில்லையென
நம்பினார்கள் பேசினார்கள்.

பேச்சு தோல்வியுற்றபோது
குழந்தை யாரிடமிருப்பதென்பது
பேச்சாக மாறியது.

குழந்தையிடமே கேட்பதாக
முடிவாயிற்று.

தீர்ப்பை வழங்கும் முன்,
அழுது கொண்டிருந்த ஆயாவை
கண்ணுற்ற குழந்தை...

ழத் தொடங்கியது.


--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!






Saturday, February 19, 2011

தீராக் கோபம்


(Picture by cc licence, Thanks XeroDesign)

நாளும் இரவும் கூடுதலாகிப்
போன நாளொன்றில்
புகைப் படத்திலிருந்து இறங்கி
அருகமர்ந்து கொள்கிறாய்.

ஒன்றுமில்லையாதலால்
தட்டுத் தடுமாறி எழுந்து
சாமி படத்து பூவெடுத்து நீட்டுகிறேன்.

வேண்டாமென தலையாட்டி
மீண்டும் புகைப் படம் எய்துகிறாய்.

செய்திருக்க கூடாதுதான்...

சாமி கைவிட்டதில்தான்
சாமியாகி இருந்தாய்.

----கல்கி (இந்த வாரம்)
நன்றி கதிர்பாரதி, கல்கி


Monday, February 14, 2011

இரண்டு கவிதைகள்

கை நழுவிய பாட்டு


(Picture by cc licence, Thanks Abhisek Sarda)

மினுமினுக்கும் வெண்டி வாசம்
கொண்டது அம்மாவின் உள்ளங்கை.

பூரித்து பூத்திருக்கும்
இவளுடையது.

டுருவிய வரியோடும்
உள்ளங்கை லக்ஷ்மியுடையது.

புரியாத பாஷையில்
பேசிக் கொண்டிருப்பதை ஒத்தது
சிற்சிறு கோடுகள் ஓடும் கவிதாவின் கை

காய்ப்பு கூடிய முத்துராமலிங்கம்
கையொரு கை

பார்க்க கிடைக்காமலும் பார்க்க தோணாமலும்
போய் விட்டதுதான் போல
மதி மற்றும் நாகேஷின் கைகள்.

ள்ளங்கைகளுக்கு அப்பால்தானே
எல்லாம் என பேசிய அவளுக்காக
பரிவோடு பார்த்துக் கொள்கிறேன்
அவ்வப்போது என் கைகளை.

வளும் பார்க்கத் தந்திருந்தால்
ஒருவேளை விளங்கியிருக்கலாம்
என்ன சொல்ல விரும்பினாள்
என்பதாவது.

***

காதலை மீறிய காற்று


(Picture by cc licence, Thanks xJasonRogersx)

தாமதமாகிப் போனதில்
முறுக்கிக் கொண்டு
புறப்பட்டு விட்டாள்.

னிமை வெட்கையில்
நிற்க கூச்சம்.
கிளம்பியும் விடுகிறேன்.

புறப்பட்ட பேருந்தில்
மேலேறி வந்த காற்றை
வேறு வழியின்றி
டார்லிங் என்றேன்.

தற்கென்னவோ
சம்மதம் போல..

ப்பிக் கொண்டது.

***

Wednesday, February 9, 2011

புரை ஏறும் மனிதர்கள் - பதினான்கு

தடவி அறிந்த ப்ரைலி முகங்கள்- மூன்று

ஒன்று, இரண்டு.


தூங்கிக் கொண்டிருந்த கட்டிலை யாரோ உலுக்கிக் கொண்டிருந்தார்கள். திடுக்கிட்டு விழித்தேன். கட்டிலைச் சுற்றி எட்டுப் பத்து ஆட்டுக் குட்டிகள்!.. உதறி எழுந்து வட்ட சம்மணம் கூட்டி அமர்ந்தேன். "அறிவண்ணனுக்கு பலிக்கொடை தர வந்திருக்கோம்" என்றதுகள் குட்டிகள் கோரசாய்.

"அவர் வீட்ல இல்லை. வேட்டைக்குப் போயிட்டாரு" என்றேன். "வந்தா இந்த கார்டை கொடுங்க. வரச் சொல்லுங்க" என்று விசிட்டிங் கார்டு மாதிரி ஒரு கார்டை கொடுத்தது ஒரு குட்டி.. 'தல'க்குட்டி போல! "கோழிகளெல்லாம் வந்தாலும் வருங்க. வந்தா எங்கட்ட பாலிசி எடுத்துட்டாரு அண்ணன்னு சொல்லிருங்க" என்றதுகள். 'ஆகட்டும்' என்றேன் அவசரமாய். விடை பெற்றதுகள் குட்டிகள். ஒரு குட்டி மட்டும் போகாமல் பாவமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. "உனக்கென்ன?" என்றேன்.

உற்சாகம் பெற்ற குட்டி, கட்டிலுக்கு தாவி, அருகில் அமர்ந்து கொண்டது. சற்றுப் பயமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல், "கட்டிலுக்கெல்லாம் வரக் கூடாது" என்றேன். முகம் சோம்பி, அழும் தருவாயில், " எண்ட அப்புப்பாவுக்கு ஒரு ஆடு உண்டாயிருண்ணு" என்ற குட்டியின் குரல் நம்பியார் சேட்டாவின் குரலை ஒத்திருந்தது.

"நீ சவுதியில் வேலை பார்த்தியா?" என்றேன். பதில் சொல்லாமல், " அண்ணே, அண்ணே" என பிராண்டத் தொடங்கி விட்டது குட்டி. மீண்டும் விழித்த போது, " அண்ணே, அண்ணே" என விடாமல் பிராண்டிக் கொண்டிருந்தான் சுரேந்தர். என்ன எழவுக் கனவுடா இது! "நல்லவேளை.. எழுப்பின சுரேந்தர்" என்றேன்.

" அண்ணே.. நீங்க திடீர்ன்னு கவிஞராயிட்டீங்கலாம்ல?" என்றான் கொட்டிக் கவுத்தியது போல்.

" யார்டா சொன்னா?"

" முத்தண்ணந்தான் சொன்னுச்சு"

" திடீர்ன்னு சொன்னானா?"

"இல்லைண்ணே. ஆற அமரத்தான் சொன்னுச்சு. அப்ப நீங்க தூங்கிட்டுருந்தீங்க"

" திடீர்ன்னு கவிஞர் ஆயிட்டதா சொன்னானாடான்னா?"

"அதை விடுங்கண்ணே. ஒரு கவிதை சொல்லுங்கண்ணே" என்றான் நடுச்சாமத்தில், சற்றும் இரக்கம் இல்லாமல். முத்துராமலிங்கத்தைப் பார்த்தேன். முன் இருக்கையில் இருந்தவன், 'இருக்கிறேன்' என்பதாக குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். "அண்ணே கவிதைண்ணே" என்ற சுரேந்தரை 'திடீர்'ன்னு ஏனோ பிடித்து வந்தது. ஏமாற்ற மனமில்லை.

"முன் இருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
குறட்டை பிரிந்து கொண்டிருந்தது
தூங்க முடியவில்லை" என்று சுரேந்தரைப் பார்த்தேன்.

"இது கல்யாண்ஜி கவிதைண்ணே. கடைசியில் கூட தாங்க முடியலைன்னு முடியும்" என்றான்.

சுத்தமாய் தூக்கம் விலகி விட்டது எனக்கு. 'ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டோமோ?' வென கவலை பிடித்துக் கொண்டது. நாளைக்கு, எனக்குப் போக கூடுதலாக ஒரு குவாட்டர் வாங்க வேணுமே என யோசனையும் தோன்றியது.

"அண்ணே, உங்க கவிதையை சொல்லுங்கண்ணே" என்ற சுரேந்தரை முதல் முறையாக ஊன்றிக் கவனித்தேன். இருட்டாகத்தான் இருந்தான். 'இவனை பாம்புன்னு தாண்ட முடியல. பழுதுன்னு மிதிக்க முடியலையே' வென நினைத்த படியே, "தலை வலிக்குதுடா. அடுத்த ஊரில் நிறுத்தச் சொல்லி, டீ சொல்லு" என்றேன்.

" நல்லாருக்குண்ணே. ஆனா, ஓவர் யதார்த்தமா இருக்குண்ணே. இதையே,

" ஒரு டீ சொல்லு
நிறுத்திய ஊரில்
அடுத்த தலைவலிக்கு" ன்னுசொல்லிப் பாருங்களேன். புதுசா இருக்கும்" என்றான்.

"டேய் முத்து, எந்திரிடா" என்று உலுக்கி எழுப்பினேன், முத்துராமலிங்கத்தை. " நாலஞ்சு கிலோ தேறும் மாப்ள. யாரும் பாக்குறதுக்கு முன்னால டிக்கியில் தூக்கிப் போடு" என்று எழுந்த பிறகும் சுற்றும் முற்றும் பார்த்தபடி புலம்பினான். ' சரித்தான்! அறிவு படத்தைத்தான் இவனும் ஓட்டிக் கொண்டிருந்தான் போல' என்று நினைத்துக் கொண்டேன்.

" மாமா, சிங்கப்பூர் வழியா போயிருவோமா? ஏழு கிலோமீட்டர் குறையும்" என்றான் அறிவு இடையில்.

" சிங்கப்பூர் வழியாவா?"

" சிங்கம்புனரி வழியா மாமா!"

" என்னவோ செய்ங்கடா. முதல்ல டீ சாப்பிடனும். ஒரு இடத்தில் நிறுத்து" என்றேன். " இதையேண்ணே.." என மீண்டும் தொடங்கினான் சுரேந்தர், விடாமல். " சுரேந்தர்! உன்னையும்தான். நிறுத்து!" என்றேன். டீயெல்லாம் வாங்கிக் கொடுத்து, ' சிவகங்கை நகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்கிற போர்டை கண்ணில் காட்டி விட்டான்கள் பயல்கள்.

கார்க் கண்ணாடியை திறந்து விட்டேன். என் மண்ணுக்கே உரிய கருவேலம் பூ வாசனை!

மார்கழி மாத அதிகாலை பூஜைக்கு அப்பாவுடன் போகிறது போல் இருந்தது. ஒரு வாசனை இழுத்துச் சென்று சேர்க்கிற இடம் ஒரு மனிதமாக இருக்கிற போது... அம்மனிதம், இல்லாத நம் அப்பாவாக இருக்கிற போது, கண்ணில் நீர் துளிர்த்து விடுகிறது.

" அப்பா" என்றேன் சிவகங்கையை!

"ஏழு கடையில் நிறுத்து மாப்ள. ஒரு தம் போட்டுட்டு போகலாம்" என்றேன் அறிவிடம். இந்த எழுகடை, என் வாழ்வின் மிகப் பிரதானம் வகிக்கும் ஒரு இடம். வீட்டில் இருப்பதற்கு இணையாக இந்த ஏழு கடையிலும் இருப்பது உண்டு நான். மனசு ஒன்றிப் போகிற எந்த இடமும் வீடுதானே!

இறங்கி, ஒரு தம் பற்ற வைத்துக் கொண்டு, " வந்துட்டேன் மக்கா" என்றேன் ஏழு கடையைப் பார்த்து. பொம் என்கிற அதிகாலை மூச்சை விட்டபடி படுத்துக் கிடந்தது ஏழுகடை. " பொறவு வர்றேன்..கேட்டியா?" என்றபடி அங்கிருந்தும் கிளம்பினேன்.

தெருத் திரும்பினோம். வீட்டில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. காம்பவுண்ட் சுவரை பிடித்தபடி தெருவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் மஹாவும் சசியும். கார்க் கதவைத் திறந்து இறங்கியபோது வாயெல்லாம் பல்லாக குழந்தைகள் வந்து கட்டிக் கொண்டார்கள். " புதுப் பெண்ணே" என்றேன் மஹாவைப் பார்த்து. " போங்கப்பா" என்று புதுச் சிரிப்பு சிரித்தாள்!

வாசலை அடைத்து கோலம் போட்டு, தலையில் , ' velkame' என்று எழுதி இருந்தாள் லதா. (இந்த இரண்டு வருடத்தில் ஃபிரன்ச் கற்றுக் கொண்டாளோ என்னவோ?) "கவிதா, சீத்தா, வாங்கடி. வந்துட்டாரு" என குரல் கொடுத்தாள். எதிர் வீட்டிற்கு. " நில்லுங்கண்ணே" என சிரித்தபடி ஓடி வந்தார்கள் எதிர் வீட்டுக் கவிதாவும், சீத்தாவும்.

ஆரத்தி!

இது நாலாவது ஆரத்தி. இந்த நாலு பயணங்களிலும் மூணு ஆரத்தி. (அப்பா இறந்து போன பயணம் ஒண்ணு). ஒரு ஆரத்தி ரொம்ப பழசு. முதல் ஆரத்தியும் கூட!.. மாலையும் கழுத்துமாக மணமகனாக இருந்த போது...

பழைய மணமகளை பார்த்தேன். பழைய சிரிப்பு சிரித்தாள்!

மிக கூச்சமான தருணங்களில், இந்த ஆரத்திக்கு மனுஷனாக நிற்கிற தருணமும் ஒன்று. சிரிப்பு சிரிப்பாக வரும். அடக்கிக் கொண்டு நிற்க வேண்டியது வரும். வலம், இடமாக சுற்றி வெற்றிலை நீரை வாசலுக்குக் கொண்டு போய் கொட்டப் போனார்கள் கவிதாவும், சீத்தாவும்.

"பொட்டு?" என்றேன் அவர்களை திரும்பிப் பார்த்து. " ஐயோ...சாரிண்ணா, மறந்துட்டோம்" என சிரித்து, தட்டைத் தொட்டு பொட்டு வைத்துத் தந்தது கவிதா. "இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல. ஆரத்தி காசு கொடுங்க அவள்களுக்கு" என சிரித்தபடி,..

"ஆல்-ரியல்ஸ்" பந்துகளின் முதல் பந்தை தொடங்கியிருந்தாள்- மனுஷி.

--தொடரும்

***

புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13

Monday, February 7, 2011

புரை ஏறும் மனிதர்கள்- பதிமூன்று

தடவி அறிந்த ப்ரைலி முகங்கள்- இரண்டு

முதல், "இங்கு"

***

அப்பேற்பட்ட டிரைவர் இந்த அறிவு!

செல்லமாக, "ஆக்சிடெண்ட் அறிவு' என்போம். "வட்டையை பிடிச்சான்னா மாப்ள 'தட்டாம' வரமாட்டான்" என்கிற வழக்கை சொந்தமாக வைத்திருந்தான். மாப்ள அறிவிற்கு மனிதர்களிடத்தில் எல்லாம் முரண்பாடு இல்லை. ஆடு, கோழி என்றால் கை ஆடிவிடுவான்.

"நாம்பாட்டுக்கு லெ ஃப்ட்ல ஏத்தி போய்க்கிட்ருக்கேன்..க்காலி குறுக்க வந்து விழுகுது" என சவாரி போய் திரும்பும் போதெல்லாம், வெடக் கோழியாகவோ, குரும்பாடாகவோ, டிக்கியில் இருந்து தூக்கிப் போடுவான். "கெடந்தாத்தானே நூல் பிடிச்சு வருவாய்ங்க.. தூக்கிட்டு வந்துட்டா" என்பான். எங்களுக்கும் சரக்குக்கு ஆகிப் போகும். சிலநேரம் நாங்களே கேட்பதுண்டு, " மாப்ள வேட்டைக்கு போகலையா?" என்று.

கிளம்பலாம் என காருக்கு வந்தோம். வண்டிக்குள், சுரேந்தர் படுக்க வைத்த 'S' போல படுத்தும் படுக்காமல் இருந்தான். "சுரேந்தர்!" என்றேன், சிரித்து. "யெஸ்!" என்றான் சைடாக சிரித்து. "சரித்தான்! S-க்கு, யெஸ் சரியாப் போச்சு" என்று நினைத்தபடி முத்துராமலிங்கத்தை பார்த்தேன். "வரும்போதே போட்டுட்டான் மாமா" என்றான். பேஷ்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

வண்டியில் ஏறியதும், "மாப்ள மஹா கல்யாணம் முடிஞ்ச மக்கா நாள் ரோட்ல விட்டு ஏத்திக் கொல்லு. கேக்க மாட்டேன்.மஹா கல்யாணத்துக்கு மொத நாள் போனாக் கூட பாதகமில்லை. உருட்டு போதும்" என்றேன். "அட.. ஏ மாமா நீ வேற" என சிரித்தான்.

மணிஜி என்னுடன் ஏறிக் கொண்டார் . சுந்தர், சரவணன் வாசு காரில். ஊரப்பாக்கம் என நினைவு. நெடுஞ்சாலையில் வண்டியை ஓரம் கட்டி, வாசு கார் பார் ஆனது. சென்னை ஏர்ப்போர்ட்டில் ரெட் லேபில் வாங்கியிருந்தேன். அதை நண்பர்களுக்கு கொடுத்து விட்டு எனக்கு நெப்போலியன் வேணும் என்றேன் வாசுவிடம். " வாங்கிருவோம்" என்ற வாசு, ஆட்டோ எடுத்தார். துடிப்பான பப்ளிசர் தெரியுமா வாசு!

களை கட்டத் தொடங்கியது சபா. எவ்வளவு நாள் கனவு தெரியுமா இது? பின்னூட்டங்களில், அழை பேசியில் தடவித் தடவி உணர்ந்து கொண்டிருந்த முகங்களை கண் நிறைத்து பருகிக் கொண்டிருப்பது. அதுவும் பருகிக் கொண்டிருக்கும்போதே பருகிக் கொண்டிருப்பது!

ரெண்டு ரவுண்டு போய்விட்டால் (இலக்கண சுத்தமாக 'இரண்டு' என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள். இனி, சித்தம் போக்கு, சிவன் போக்குதான்) வாயை கட்டிவிடும் எனக்கு. சும்மா சும்மா சிரித்துக் கொண்டிருப்பேன். வாயை கட்டிய பிறகு எப்படி சிரிப்பீர்கள் என நம் கார்க்கி மாதிரியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. கொடுத்துப் பாருங்கள் தெரியும். சிரிப்பாய் சிரிப்பேன். சிரிப்பாய் சிரிப்பீர்கள்!

சற்று நேரத்திற்கெல்லாம் மயில் ராவணனும், மாப்ள சிவாஜி சங்கரும் வந்து சேர்ந்தார்கள். முதல் பார்வையிலேயே மயில் ராவணனை யாருக்கும் பிடிக்கும்.அந்த யாருக்குள்ளும்தானே நானும் இருக்கிறேன்!.. ("யோவ்.. உனக்கு பிடிக்காத ஆள்ன்னு யாருமே இல்லையா?" கேள்விதானே?.. "ஏன்? இருக்கிறார்களே.. இதோ இந்த அறிவை இப்ப பிடிக்கலை. பத்திரமாய் கண்டு போய் வீடு சேர்த்து விட்டான் எனில் அப்ப பிடிக்கும்". அப்படித்தான்,... அப்பப்ப, அப்படியப்படி!)

எடுத்த எடுப்பிலேயே தோள் மேல் கை போட்டுக் கொண்டு பேசவும் சிரிக்கவும் மயில்ராவணனால் முடிகிறது. பதிலுக்கு நாமும் கை போட்டுக் கொள்ள அவர் தோள் இடம் தருகிறது.

"மாமா.." வென கூச்சலிட்டு கட்டிக் கொண்ட சிவாஜியின் அன்பு அலாதியானது. பேச்சுக்கு பேச்சு மாப்ள கைகளை பற்றிக் கொள்கிறான். கைகளை பற்றிக் கொள்வது கூட யாருக்கும் வந்துவிடும். விரல்களோடு விரல்களை பிணைத்துக் கொண்டு பேச யாருக்காவதுதானே வரும்!

வித்யாவும் (விதூஸ்), பத்மாவும் அழை பேசி விசாரித்தார்கள். நலம் விசாரித்த கையோடு, 'வந்ததும் தொடங்கியாச்சா?' என்பதையும்! கட்டிய வாயை பிரித்துப் பிரித்து பேசியதில் கண்டு பிடித்திருப்பார்கள் போல. ஸ்டெடியாக இருப்பது மாதிரி நடிப்பதில்தான் நம்மை ஸ்டடி பண்ணி விடுகிறார்கள்!

பத்து மீட்டர் இடைவெளி விட்டு வரவும்-என்கிற பேருந்தின் பின்புற வாசகம் போல் போதிய இடைவெளியில் 'சிவகங்கையான்கள்' கச்சேரி நடத்திக் கொண்டிருந்தான்கள். 'இங்க வாங்கடா' என்று கூப்பிட்டாலும் வரவில்லை. டீசன்சி மெயின்டைன் பண்றான்களாம். போங்கடா.. நீங்களும் உங்க டீசன்சியும். டீசன்சியை தொலைக்கத்தானே குடிப்பதே... ஆக்வர்ட் ஃபெல்லோஸ்!

சரவணா, மணிஜி, சுந்தர், வாசு, 'நீர் விட்டா வளர்த்தோம்?' என புரட்சி வெடிக்கிற தருவாயில், இலக்கியம் வளர்க்க தொடங்கியிருந்தார்கள். வாய் பார்க்க வசதியாக நான் சற்று மேடான இடமாக பார்த்து நின்று கொண்டேன். அவ்வப்போது மணிஜியோ, சரவணனோ, இன்னார் லைனில் இருக்கிறார்கள் பேசுங்கள் என அழை பேசியை என்னிடம் தந்தார்கள். வாங்கும் போதும், பேசும் போதும் நான் சிவகங்கையான்களை ஓரக் கண்ணில் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். ஊர் போய் சேர்ந்து விட்டால் பைசாவிற்கு மதிக்க மாட்டான்கள். 'கெடைச்ச வரைக்கும் தூத்திக்கடா ராசாராமா' என்பதில் தீவிரமாக இருந்தேன்.

அப்படியான 'இன்னார்' களில், கேபிள்ஜியும், ஈரோடு கதிரும் முக்கியமானவர்கள். பயணம் மற்றும் நலம் விசாரித்து அன்பு செய்தார்கள். மற்ற இன்னார்களில் பாதிப் பேர் ஏர்டெல்-லில் இன்னென்ன வசதி இருப்பது பற்றியும், இந்த பாட்டை காப்பி பண்ண, முப்பது ரூபாய்தான் மாதத்திற்கு என்பது பற்றியும் அறிவுறுத்தினார்கள்.

இடையிடையே முத்துராமலிங்கம் வந்து, "ஆத்தா வையும். சந்தைக்குப போகணும். காசு கொடு" என்பது போல், " ஐத்தை கத்துது மாமா.. கிளம்பியாச்சான்னு" என தொந்திரவு செய்து கொண்டிருந்தான். " ஐத்தை கத்தாட்டிதாண்டா மேட்டரு. கத்துனா கூட ஒரு குவாட்டரு" என பன்ச் வசனம் பேசி என் நாடியை தொட்டுப் பார்த்தேன். தாடி இல்லை. so, நான் அவரில்லை- நல்லவேளை!

ஒரு கட்டத்திற்கு மேல் முத்து வன்முறையில் இறங்கத் தொடங்கி விட்டான். தர தரவென இழுத்துக் கொண்டு போய் வண்டியில் எறிந்து, " கிளம்புடா அறிவு" என்றான். அவ்வளவு போதையிலும் அறிவு என்கிற சொல் கதக் என்றது எனக்கு. பத்திரமாய் ஊர் போய் சேர்ந்துட்டா ஆஞ்சநேயர் கோயிலுக்கு தொழுகைக்கு வருவதாகவும், மதுரைமுக்கு கன்னி மாதாவிற்கு சிதறு தேங்காய் உடைப்பதாகவும், நேரு பஜார் ஜூம்மா மசூதியில் அங்கப் பிரதட்சணம் செய்வதாகவும் கலந்து கட்டி வேண்டுதல் வைத்தேன்.

சற்றும் எதிர் பார்க்காத அளவு , மாப்ள அறிவு நேர்த்தியாக இருட்டை ஊடுருவிக் கொண்டிருந்தான். ஒருவேளை, இருட்டு கூட அவன் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். பயம் மறைந்து உற்சாகம் தொற்றிக் கொள்ள தொடங்கியது. அப்பதான் நினைவு வந்தது, நிலவுக்கு பண்ணிய ப்ராமிஸ்! (நிலவுடன் பேசிக் கொண்டே வீட்டையடையப் போகிறேன்)

"அடடா..சக்கரக் கட்டியை மறந்துட்டனா?" வென நெருங்கி அமர்ந்தேன் நிலவிடம். " தொடாதே" என்றது நிலவு!

"கொடுமையல்லவா தீண்டாமை என்பது.
கொடுமை அல்லவா அதை நீயும் சொன்னது"

"என்ன மாமா?" என்றான் முத்துராமலிங்கம்.

"என்ன மாப்ள?"

"பாட்டுலாம் பறியுது?"

"வாய் விட்டு பாடிட்டனாடா?"

"பரவால்ல பாடு. ஆனா முதல்லருந்து பாடு"

"நிலவைப் பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே"

"மாமா, அது வானம்"

"வானம் பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே"

"ப்ச்..முதல்ல நிலவு மாமா. ரெண்டாவது வானம்"

"முதல் நிலவைப் பார்த்து ரெண்டாவது வானம் சொன்னது
என்னை தொடாதே"

"கிழிஞ்சது போ!"

எட்டி நிலவைப் பார்த்தேன். வாய் பொத்தி சிரித்தபடி கூடவே வந்து கொண்டிருந்தது. ஆட்காட்டி விரல் சுண்டு விரலை விரித்து 'சேர்த்தி' என்றது.

" சேர்த்தி" என்றபடியே தூங்கிப் போனேன்.

--தொடரும்

***

புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12

Friday, February 4, 2011

புரை ஏறும் மனிதர்கள்-- பனிரெண்டு

தடவி அறிந்த ப்ரைலி முகங்கள் (அ) பயணக்கட்டுரை

நூறு நாள் விடுமுறை! யோசித்துப் பாருங்கள் மக்கா, நூறு நாள்!

மகள் திருமணம், மகனின் சிரிப்பு, மனைவியின் அருகாமை, உறவுகளின் சூழல், புதிதென, எழுத்து மூலமாக சம்பாதித்த என் மனித முகங்களையும் தடவி அறியப் போகிறேன். இந்த நூறு நாளும் இந்த ஒரு வேலைதான் எனக்கு. எல்லா வேலைகளையும் ஒரே வேலையாக பார்க்க எது அனுமதிக்கிறது? சந்தோஷமா? விடுதலையா? இவ்விரண்டுமா? யாருக்குத் தெரியும்!

யோசிச்சிட்டீங்களா? எவ்வளவு சந்தோஷமா இருக்கு! இல்லையா?

ஊரில் இருந்து திரும்பிய பிறகுதான் இதை எழுத தொடங்குகிறேன். ஆயினும், இங்கிருந்து கிளம்பிய அன்று பறந்த பறத்தலில் பாதியாவது இப்பவும் பறக்க வாய்க்கிறது. நினைவு கிளர்த்தும் உணர்வு என்னே அலாதியானது!

பெட்டி படுக்கையெல்லாம் லக்கேஜில் சேர்த்துவிட்டு, போர்டிங் முடித்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டேன் - ராஜா மாதிரி! இந்த ராஜாவை சொல்லவில்லை. அந்த ராஜாவை. ராஜாதி ராஜாவை!

என் நாடு, என் மண், என் மனிதர்கள், காற்று, ஊர், தெரு, வீடு, லொட்டு, லொசுக்கு, எல்லாம் என்னுடையதாகப் போகிறது. என்னுடைய எல்லாவற்றுக்குள்ளும் சொருகிக் கொள்ளப் போகிறேன். இனி, எவன் என்னைப் பிடிக்க முடியும்?

ஏர்ப்போர்ட்டில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்த மனிதர்கள், ரொம்ப தாழ நடந்து கொண்டிருந்தார்கள். என் பறத்தலின் தாழ! "பறக்கப் பாருங்கடா..இன்னும் நடந்துக்கிட்டு.." என்கிற திமிர் கூட தானாக ஒட்டிக் கொண்டது.

விரையும் தரை, வயிற் கூச்சம், காதடைப்பு, தாழ மேகம், விரிந்த வெளி' யென ராஜகுமாரனை தூக்கிக் கொண்டு,..கொண்டு போய்க் கொண்டிருந்தது அலுமினியப் பறவை. அழகழகான பணிப்பெண்களை சகோதரிகளாகப் பார்க்கிற கிறுக்குத்தனம் வந்திருந்தது. அவர்கள் கண்களிலும் வழிந்த சகோதரத்துவத்தை பெரிய மனது கொண்டு ஏற்றுக் கொள்ள முடிந்தது.

"சாயா, காப்பி, முருக்கேய்... காப்பி, சாயா, முருக்கேய்.." என பணிப்பெண்கள் தலை தலையாக விசாரித்துப் போவதாக 'ஹோம்லியாக' நினைத்துக் கொள்ள பிடித்திருந்தது. கால் மேல் கால் போட்டுக் கொண்டேன். 'யெஸ்..யுவர் ஹைனஸ்' என என்னை நானே சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.

இப்படியாக, பாலை கடந்து, கடல் கடந்து, மலை கடந்து, ஜன்னலுக்கு வெளியே சதுரம் சதுரமான பச்சையம் அடைந்து விட்டேன். இந்த பச்சயத்தை இங்கு விட்டால் எங்கு பறிக்க முடியும்? பரந்த வெளி, தாழ மேகம், காதடைப்பு, வயிற் கூச்சம், மீண்டும் விரையும் தரை. நிலை குத்தியது அலுமினியப் பறவை!

பெட்டி படுக்கைகளை சேகரித்துக் கொண்டேன். ஜ்யோவ்ராம் சுந்தர், மணிஜி, வாசு, சரவணா, சிவாஜி ஷங்கர், ஆகியோரிடம் முன்பே அழை பேசியிருந்தேன். வருவதாக சொல்லியிருந்தார்கள். ஊரில் இருந்து முத்துராமலிங்கமும் நண்பர்களும் காரில் அழைத்துப் போக வருவதாக சொல்லி இருந்தார்கள்.

நண்பர்களை சந்தித்து, அவுன்ஸ் நெப்போலியனை இறக்கி, சட்டை பட்டனையும், கார் கண்ணாடியையும் திறந்து விட்டுக் கொண்டு, நிலவோடு பேசிக் கொண்டே வீடடையப் போகிறேன். 'கிடுக்கி..கிடுக்கி..கிடுக்கி' என ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வெளியில் வந்தேன். மனசு சந்தோசமாய் இருக்கிற போது ட்ராலி கூட என்னமா கூவுது!

முதலில் சரவணனைத்தான் பார்த்தேன். சவுதியில் பார்த்த சரவணன்தான். பூ, பொட்டெல்லாம் வைத்து சும்மா கும்முன்னு வந்திருந்தது போல இருந்தது. சவுதியில் அவரை நான் பார்த்தாலும் அவர் என்னைப் பார்த்தாலும் கைம்பெண் களையில்தான் இருப்போம். இடம், மனசு சார்ந்துதானே பொழிவும்! 'வக்காளி..நீயும் தப்பிச்சு வந்துட்டியாண்ணே' என்பது போல் சுதந்திரமாக சிரித்தார்.

" ந்தா உங்க ஜ்யோவ் வர்றாப்ல" என சரவணா சுட்டிய திசையில் சுந்தர் வந்து கொண்டிருந்தான். ச்சின்ன ச்சின்னதாக குதிச்சு நடக்குற சுந்தர்! அதே நடை, அதே முகம், அதே இல்லாத தலை, அதுவே அதுவான சிரிப்பு! இவனைப் பார்க்காத இந்த பதினைந்து வருடங்களில் காலம் என்ன பெரிதாக கிழித்து விட்டது? குமுதத்தின் ஆறு வித்தியாசங்கள் போல சிற்சில மாற்றங்களுடன் அப்படியேதான் இருந்தான்.

"என்னங்க, அப்படியே இருக்கீங்க?" என என்னை வேறு கட்டிக் கொண்டான். ஊன்றி கவனித்து, ஆறு வித்தியாசங்களை கண்டு பிடித்து விடுவானோ என அவசர அவசரமாகக் கட்டிக் கொண்டேன். கண்களிலும், சிரிப்பிலும் எங்கள் காலத்தின் வாசனை கசிந்து கொண்டிருந்தது.

மணிஜி, வாசுவை தேடினேன். 4000 கி.மீ அந்தப் பக்கம் இருந்தே இவர்களை நண்பர்களாகக் கண்டு பிடித்து விட்டேன். அங்கனைக்கு அங்கனையா கண்டு பிடிப்பது கஷ்டம்?

ட்ரிம் பண்ணிய ஃபிரன்ச் தாடி, T-சர்ட், கையில் சுழட்டிய சாவிக் கொத்துடன் அங்கனையேதான் நின்று கொண்டிருந்தார் மணிஜி! பெண்டு நிமிர்த்துகிற p.t. வாத்தியார் மாதிரியும், பாரில் இருந்து திரும்புகிற பள்ளிச் சிறுவனைப் போலவும் கடுமையும், ஏகாந்தமும் கலந்த சிரிப்புடன் கட்டிக் கொன்டார். (ராஸ்கல், எப்படிய்யா ரெண்டையும் சிரிப்பில் கலக்குற? காக்டைல் தடியா!) எழுத்தில் காட்டும் ரௌடித்தனத்தை மணிஜி முகத்தில் தேடினேன். 'நீ என்ன தேடினாலும் கிடைக்காதுடி' என்பதுபோல் வாசுவிற்கு அழை பேசிக் கொண்டிருந்தார்.

வழி தப்பிய ஆட்டுக் குட்டியானார் வாசு! "ரௌண்டானா தாண்டி லெஃப்ட்ல வா வாசு. அரைவலுக்கு எதிர்ல நிக்கிறோம். வந்துட்டார்" என வழி அறிவித்துக் கொண்டிருந்தார் வாசுக்கு மணிஜி. வந்திறங்கினார் வாசு! வழியிலேயே காரை நிறுத்தி, கார் கதவு திறந்து, கையைப் பற்றி, நெருக்கமாக இழுத்து, அணைத்துக் கொன்டார். 'ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை' போல அவ்வளவு குறும்பும், சாந்தமும் கலந்த சிரிப்பு! பேசிக் கொண்டே சிரிப்பவர்களையும், சிரித்துக் கொண்டே பேசுபவர்களையும் பிடிக்குமா உங்களுக்கு? அப்ப, வாசுவை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!

எல்லோருமாக சேர்ந்து முத்துராமலிங்கத்தை தேடினோம். அவன் அங்கதான் நிற்பதாக சொல்லிக் கொண்டே இருந்தான். அந்த அங்கதான் எங்க என குழப்பமாக இருந்தது. கண்டுபிடித்த பிறகு ஓடி வந்து கட்டித் தூக்கி நிலத்தில் ஒரு குத்து குத்தினான் முத்துராமலிங்கம். இது ஊர்க் குத்து! இப்படி குத்தினால்தான் எங்களுக்கு குத்தினது மாதிரி. ரப்பர் ஸ்டாம்புக்கு பிறந்த பய புள்ளைகள்!

முத்துராமலிங்கம் ஒரு முரட்டுக் காரை கொண்டு வந்திருந்தான். "என்னடா, டாட்டா சியரால்லாம்?" என்றேன். "அட, வா மாமா?" என்றான். "யார்டா டிரைவர்?" என்றேன். "நம்ம அறிவுதான்" என்றான். எனக்கு திகீர் என்றது..

--தொடரும்


புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C



Wednesday, February 2, 2011

இதழ் இதழாக சேரும் பூ


(Picture by cc licence, Thanks Daniel Paquet)

வணக்கம் நான் க.பாலாசி,
எப்டி இருக்கீங்க, நான் நலம். ஒண்ணுமில்ல என்னோட மேனேசர் வேலுஜி கணையாழி வச்சிருந்தார்.. அதுல உங்க கவிதை ஒண்ணு தட்டுபட்டது. அதான்.. கிட்டத்தட்ட 16 வருஷம் ஆகுது.. நெனக்கறப்பவே சந்தோசமா இருக்கும்ல .. சோ.. உங்களுக்காக.

***

தூங்குகிற மகனை
அருகே கிடத்தி படுப்பது வழக்கம்.

நான் - மகன் - இவள்
என்று துவங்கும் தூக்கம்.

சிறுநீர் கழிக்க எழும்போது
நான்-இவள்-மகன் என்றிருக்கும்.

பிறகு இவளுக்காக போக
எழுகையில்..
நானும் இவளும் போக
மகன் கிடப்பான்
கதவோர இடுக்கில்.

ப்ப, எப்படி நகர்வானோ?

ல்லை,
அவன் அப்படியே கிடக்க
நானும் இவளும் தான்
நகர்கிறோமோ என்னவோ?

பிரக்ஞையின்றி நகர்வது
நன்றாகத்தான் இருக்கிறது.

நானானாலும் இவளானாலும்
மகனானாலும்.

- பா.ராஜாராம்
(கணையாழி - ஜுன் 1995)

***

இப்படியாக ஒரு இதழும் வந்து சேர்ந்தது. இக்கவிதைக்கு '95- ல் என்ன தலைப்பு வைத்தேன் என நினைவில் இல்லை. 2011-ல் இந்த தலைப்பு வைக்க தோன்றியது. இதழ் இதழாக சேர்ந்தால்தானே பூ! கவிதைக்கு தலைப்பை விட இச்சூழலுக்கு தலைப்பு என எடுத்துக் கொள்கிறேன்..
தேடித் தர நண்பர்கள் இருக்கிறார்கள் என இனி எதையும் தைரியமாக தொலைக்கலாம்தான்- என்னை உட்பட! சற்றேறக்குறைய ஜீபூம்பாவிலும் இதையேதான் பேசியிருக்கிறேனோ?

பாலாசி, வேலுஜி, நன்றி!

***