Friday, January 27, 2012

இலையுதிரும் சத்தம்- ஆறு

ஏழுகடைக் கதைகள்- ஐந்து

ஏழுகடை செட்லயே குண்டு கார்த்தியத்தான் சுத்த வீரன் என்பேன். எங்க யாரையும் எதிர் பார்க்க மாட்டான். தனியாப் போவான். நெத்திக்கு நெத்தி முட்டுவான். அடுத்த சீன்ல ஆஸ்பத்திரியிலோ போலீஸ் ஸ்டேசன்லயோ இருப்பான்.

ஒரே மாதிரி இருந்தது இல்லை ஏழுகடை. ஒரு நாள் சிரிப்பும் கூத்துமா போனால் ஒரு நாள் குய்யோ முறையோன்னு எழவு வீடு மாதிரி ஆயிரும். 'அவன தொட்டுப்டாய்ங்க இவன தொட்டுப்டாய்ங்க' ன்னு உசும்புவாய்ங்க பாருங்க . எனக்கு அல்லயப் பிடிக்கும்.

'டேய்.. இருங்கடா சூரி அண்ணே வரட்டும். பேச சொல்லலாம்'ன்னு கொஞ்சம் தண்ணி தெளிப்பேன்.

'என்ன பேசச் சொல்ற?.. ரத்தத்தோட வந்துருக்கான். எதா இருந்தாலும் ரத்தம் பாத்துட்டு பேசலாம். நீ ஓம் பிள்ளமகன் வேலைல்லாம் பாக்காத' ன்னு சாதில கொண்டு போய் சாத்திருவாய்ங்க. அப்புறமெல்லாம் பதட்டத்தோட வேடிக்கை பாக்குறது மாதிரிதான் இருக்கும் .

பொருளெல்லாம் அள்ளி வண்டில போட்டுட்டு கிளம்பும் போது கேப்பாய்ங்க, 'வர்றியா என்ன?'

'இருங்கடா இந்தா வர்றேன்' ன்னு என் வண்டிய ஸ்டார்ட் பண்ணுவேன். ஒரு முறுக்கு. நேர ஆஞ்சநேயர் கோயில். பார்ட்டி ஸ்டாண்ட்டட்டிஸ்ல நின்னுக்கிட்டு இருப்பாப்ல. 'யய்யா.. இவய்ங்களோட போறேன். போலீஸ் கேஸ்ன்னு வராம பாத்துக்கிறது ஓம் பொறுப்பு' ன்னு 'அட்டேஏஏஏன்சன்' பண்ணிட்டு வருவேன்.

இப்டி எல்லாப் பயலுகளும் அட்டேஏன்சன் பண்ணினாய்ங்களான்னு தெரியாது. ஆனா சாயல வச்சு சொல்ல முடியும். பய நம்மளவிட டர்ர்ர்ரா இருக்கான்னு. அப்படி, சாயல மோந்ததுல கார்த்திதான் சுத்த வீரன். எங்களோட வந்தாலும் சரி, ரத்தம் ஒழுக வாங்கிக் கட்டிக்கிட்டு வந்தாலும் சரி சும்மா கல்லு மாதிரி இருக்கும் அவன் முகம். கல்லுல போயி என்னத்தப் படிக்க?

இங்க ஒரு கட் கொடுத்து டாப் ஆங்கிள்ல இருந்து குண்டு கார்த்திய ஜூம் பண்ணலாம்.

குண்டு கார்த்தி முத்துராமலிங்கம் தம்பி. (சித்தி மகன்) ஆனா, எனக்குதான் தம்பியாப் பிறந்தது போலவே இருந்தான். (சுத்த வீரன் மேட்டரை தவிர) இவய்ங்க எல்லோரும் என்னை மாமான்னு கூப்ட்டா லதாவை அய்த்தைன்னு சரியா முறை வச்சு கூப்டுவாய்ங்க. கார்த்தி மட்டும்தான் என்னைய அண்ணன்னு கூப்டுக்கிட்டே லதாவையும் அக்கான்னு கூப்டுவான்.

பஸ்ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட்ல இருந்த கார்த்திய நாந்தான் ஏழுகடைக்கு கூட்டிட்டு வந்தேன்.

'ஓந் தொம்பி பஸ் ஸ்டாண்ட்ல சலம்பிக்கிட்டு இருக்கானாம். ரம்யா போன் பண்ணுச்சு (ரம்யா- குண்டு கார்த்தி தங்கச்சி) போய் கூட்டிட்டு வா' ன்னு முத்துராமலிங்கம் ஒரு நாள் சொன்னான்.

நம்மட்டதான் எப்பவும் ஒரு டி.வி.எஸ்-50 இருக்குமே. போனா, 'வோத்தா வாங்கடா..' ன்னு சட்டை பட்டன்லாம் கழண்டு தொங்க சலம்பிக்கிட்டு இருந்தான். வண்டிய அவன ஒட்டி நிறுத்தி,'வண்டில ஏறுடா'ன்னு ஏழுகடைக்கு கூட்டிட்டு வந்தது நேத்து நடந்தது போலவே இருக்கு.

வந்த சோர்ல..'எங்க யாருக்காவது கேஸ் இருக்காடா? போறமா நலுக்குப் படாம வந்துர்றம்ல' ன்னு சொன்னேன். அவனும் சொன்னான்,' போனா கொத்தணும்ண்ணே. குசு போடவா போறது?'

அப்புறப்புறம் கள்ளு இறக்க ஏறுகிறவனின் கவட்டையில் தொங்குற சுரக் குடுக்கை மாதிரி ஆகிப் போய்ட்டான் எனக்கு...

'வீட்ல வந்து இறங்கிட்டு ஆட்டோவுக்கு காசு கொடுக்கிறேன்..வேணாம்க்கான்னு ஆட்டோக்காரன் போய்ட்டான்' ன்னு லதா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

'பய ஆட்டோ ஸ்டாண்டுல இருக்கான் போல' ன்னு நினைச்சுக்குவேன்.

'அப்பா கார்த்திண்ணே மஜீத் ரோட் முக்குல சிகரெட் குடிச்சிட்டு இருந்தாங்களா... என்னப் பார்த்தோன்ன, சிகரட்ட கீழ போட்டுட்டு என்னத்தா..எங்க போறன்னு கேட்டாங்க. என்னப்பா எனக்குப் போயி பயப்படுறாங்க?' ன்னு மஹா பேசி கேட்டிருக்கிறேன்.

'அதுக்குப் பேரு பயம் இல்லடா' ன்னு நினைச்சுக்குவேன்.

பேண்ட் போட்டுட்டு வந்தான்னா கார்த்தி, வாய்தாக்கு போறான்னு அர்த்தம். 'மாச முச்சூடும் பேண்ட் போட வாச்சிருக்கில்லடா கார்த்தி?' ன்னு ஊடால ஊடால கேப்பேன். தச்சிர மாட்டாதான்னு கேக்குருதுதான். லைட்டா சிரிப்பான். கார்த்தி அப்டியே ரைட் ஆப்போசிட் செட்டிக்கு. அதிர்ந்து பேச மாட்டான். சிரிக்க மாட்டான்.

'இங்க சிரிக்கணும்டா கார்த்தி...எல்லாப் பயலுகளும் சிரிக்கிறாய்ங்கல்ல..அப்ப ஏதோ சிரிப்பு இருக்கத்தான் வேணும்' ன்னு எழுப்பணும் . 'சரி சிகரட்டக் கொடு' ன்னு குடிச்சுக்கிட்டு இருக்கிற சிகரெட்ட கேப்பான்.

எப்ப சிகரெட் பத்த வச்சாலும் பாதிய தாண்டிட்டா,'அதுல என்ன இருக்குன்னு இப்டி சுண்ற .தா' ன்னு கை நீட்டுவான். 'மூர்த்தி இவனுக்கு ஒரு சிகரெட் கொடுடா. முழு சிகரெட்ட குடிக்க விட மாட்டேங்குறான்' ன்னு மூர்த்திட்ட ஒரு தடவ சொல்லிட்டேன். 'டேய் கார்த்தி டேய் கார்த்தி'ன்னு கூப்டக் கூப்ட எந்திரிச்சுப் போய்ட்டான்.

முத முதல்ல நான் கார்த்திக்கு ஒரு செருப்புதான் வாங்கிக் கொடுத்தேன். வாங்குதோங்கா பேண்ட்லாம் போட்டுக்கிட்டு செருப்புப் போடாம வர்ற ஆள யாரையாவது பார்த்திருக்கீங்களா? அப்படிப் பார்த்தா நீங்க குண்டுக் கார்த்தின்னு எடுங்க. எடுக்காட்டி, 'டேய் ராஜா டேய் ராஜான்னு' நீங்களும் கூப்ட கூப்ட நானும் எந்திரிச்சுப் போயிருவேன்.

நம்ம என்ன செய்யப் போறோம்ன்னு அவன்ட்ட காட்டக் கூடாது. காட்டினா வண்டில ஏற மாட்டான். திடு திப்புன்னு 'கார்த்தி வாடான்னு கூப்பிடணும் எல்லாப் பயலுகளும் 'எங்க மாமா?'ன்னு கேப்பாய்ங்க. இவன் ஒண்ணுமே கேக்க மாட்டான். எம்பாமலை மாதிரி எந்திரிச்சு காலை வீசி பின்னாடி உக்காருவான். 'ஏண்டா எங்க போறோம்ன்னு கேக்கவே மாட்டியாடா ?' ன்னு ஒரு தடவ கேட்டேன்.

'நீம் போயி எங்கண்ணே கூட்டிட்டுப் போப் போற? ஒண்ணு பாரா (Bar) இருக்கும். இல்லாட்டி ஆஞ்சநேயர் கோயில்' ன்னு சொன்னான். கேக்காமையே இருந்திருக்கலாம்ன்னு சில கேள்விகளை கேட்ட பிறகுதானே தெரிஞ்சு தொலைக்குது.

'இவன் சைசுக்கு செருப்பெடுங்க அத்தா' ன்னு ரஃபீக் அத்தாட்ட சொன்னப்போ, ' ஏண்ணே?' ன்னு கேட்டான். 'இருக்கட்டும்டா' ன்னு சொன்ன ஞாபகம். வெறும் ஸ்லிப்பர்தான்.சொளகு மாதிரியான காலின் சூட வெறும் ஸ்லிப்பர் தாங்குனாப் போதாதா?

ரெண்டு மூணு நாளைக்குதான் போட்டுட்டு இருந்தான் அந்த ஸ்லிப்பர. திருப்பி வெறுங்காலும், வாங்கு தோங்கு நடையும். காலப் பாத்ததுமே அவனே சொல்லிட்டான். 'தொலைச்சிட்டண்ணே'

'செரி விட்றா செருப்புதானே' ன்னு சொன்னாலும் வலிச்சது. அடுத்த நாள் (உடனே கூப்ட்டா சுதாரிச்சிருவான்) வழக்கம் போல தாக்காட்டி ரஃபீக் அத்தா கடைய்ல வண்டிய நிறுத்தியதும், 'என்னைய அசிங்கப் படுத்துறியா?' ன்னு வண்டிலருந்து இறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். பஸ் ஸ்டாண்ட் பக்குதுலதான் ரஃபீக் அத்தா கடை. அத்தாவும் கொஞ்சம் கெட்டிக்காரரு.

'கார்திக்குதானே அத்தா. தொலைச்சுப்ட்டானா?'ன்னு கேட்டாரு.

'ஆமத்தா இவனோட அழக் கொடுக்க முடியல'

'கார்த்தி என்ன வேணும்த்தா'

'தம்பி அத்தா'

'அவுங்க மற வீடுல்லத்தா'

'ஆம அத்தா நீங்க செருப்பெடுங்க..சைஸ் தெரியும்ல?'

'இது சரியா வரும்..இப்பதானேத்தா வாங்கிட்டுப் போனீங்க. நமக்கு ஆளப் பாத்தோன்னயே சைச சொல்ல வரும்த்தா'

ஆட்டோ ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்தவன,'ஏறுடா' னு வண்டில கூட்டிட்டு வந்து வண்டிப் பெட்டிய திறந்து, செருப்ப எடுத்து கீழ போட்டு,'நீ எத்தனை தடவ தொலைச்சாலும் திருப்பித் திருப்பி வாங்கிட்டுத்தாண்டா இருப்பேன். செலவுதானடா அண்ணனுக்கு?' ன்னு சொல்லிட்டு அவன் முகத்தப் பார்த்தேன்.

அவனும் கொஞ்ச நேரம் முகத்தையே பார்த்துக்கிட்டு நின்னவன் திடீர்னு நெத்தியிலையே சொத்'ன்னு சத்தம் கேக்குறது மாதிரி ஒரு அடி அடிச்சுக்கிட்டு செருப்பெடுத்துப் போட்டுக்கிட்டான். ஓடாத் தேயுற வரைக்கும் போட்டுக்கிட்டு திரிஞ்சான். அப்புறம் செருப்பு இல்லாம கார்த்தியப் பாத்தது இல்ல. இந்த செருப்பு மேட்டரைப் போயி பருப்பு மேட்டர் மாதிரி பேசுறேன்னா அதுக்கு காரணம் இல்லாமையா இருக்கும்?

'உனக்கும் ட்ரீட்மெண்ட் வருதேடா'ன்னு எனக்கும் ஒருத்தன் ட்ரீட்மெண்ட் தர்றானா அதை நான் பேசித்தானே ஆவணும்.

அல்ல சில்ல, வெத்து சவுண்டு, கீர்றது வைக்கிறது, பீர் பாட்டில் உடைசல் இப்டி பெட்டிக் கேசா போயிட்டிருந்த கார்த்தி ஊணி நின்னான் ஒரு 302 -வில் (பிரபலமாக அறியப்பட்ட வக்கீல் தியாகராஜன் கொலை வழக்கு)

பாடி டெம்ப்பரு பேஸ்மெண்ட் வீக்குங்கிறதால குலுங்கிப் போச்சு ஏழுகடை...


-தொடரும்


*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3,4,5


Wednesday, January 18, 2012

இலையுதிரும் சத்தம்- ஐந்து

ஏழுகடைக் கதைகள்- நான்கு

ஏழுகடையில் செட்டி (எ) ஸ்ரீதர் எப்படி ஒதுங்கினான்?

யாருக்கும் தெரியாது. ஏழுகடையில் யார் எப்போ ஒதுங்கினார்கள் என்பதெல்லாம் யாரும் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. காத்துல பெறல்ற எல மாதிரி காத்தோட காத்தா வந்து ஒட்டுனதுதான் எல்லோருமே அங்க. இப்ப யோசிச்சு பாக்குறப்போ ஏழுகடை புள்ள புடிக்கியாத்தானே இருந்துருக்கு. புடிச்சு வச்சுக்கிட்டு, வாழ வச்சுக்கிட்டு, வாழ்ந்துக்கிட்டு, இழந்துக்கிட்டு ..

ஸ்ரீதருக்கு செட்டின்னு பேர் வந்ததுக்கு காரணம் அவனோட கால்குலேசன். ஒரு பாருக்கு போறோம்னா செட்டி கூட இருந்தா கணக்கு வழக்குப் பத்தி கவலைப் படமாட்டோம். இத்தனை தண்ணி பாக்கெட், இத்தனை ஆம்லட், இத்தனை சிகரெட், இத்தனை குடல் குந்தாணின்னு எழுதி வச்சுக்கிட்டே வருவான். தனியா சிகரெட் அட்டை போட்டு எழுத மாட்டான். மனசுக்குள்ளயே எழுதிக்கிட்டு வருவான்.

'ஹல்லோ தம்பி / அண்ணே காசு வேணும்ணா கேட்டு வாங்கு. கணக்குல எர்ரர் அடிக்காத' ன்னு செட்டி சொல்லிட்டான்னா அன்னைக்கு பஞ்சாயத்துதான். 'இத்தன தண்ணிப் பாக்கட்டா, இத்தனை இதுவா, இத்தனை அதுவா'ன்னு புட்டு புட்டு வைப்பான். காதுல பென்சில் சொறுகி வச்சுக்கிட்டு கைல சிகரெட் அட்டை வச்சுருக்கிற தம்பிக்கோ அண்ணனுக்கோ 'இவன் குடிச்சானா இல்லையா?'ன்னு டவுட் வந்துரும்.

'அவன் காசு நமக்கு எதுக்கு மாமா? நம்ம காசு என்ன மரத்துலயா காய்க்குது?' ன்னு பார விட்டு வரும்போது காலர தூக்கி விட்டுட்டு குனிஞ்சு அவன் நெஞ்சுலயே ஒரு ஊது ஊதிக்கிருவான்..'செரி விட்றா மாப்ள..'ன்னு அணைச்சு கூட்டிட்டு வர்ற மாதிரி ஆயிரும்.

வெயிலுக்கு தகுந்த மாதிரி ஏழுகடையில் உக்காந்திருப்பான் செட்டி. ஏழாம் நம்பர் கடையில் செட்டி உக்காந்திருக்கான்னா ஒண்ணாம் நம்பர் கடையில் வெயில்ன்னு அர்த்தம். ஒண்ணாம் நம்பரில் ஒக்காந்திருந்தா வெயில் ஏழுல. வெயிலுக்கு தகுந்த மாதிரி நகந்துக்கிட்டே வருவான். வெயில் தொடங்கியதுல இருந்து, இருள் தொடங்குறது வரையில் ஒரு ஆளு ஒரு லெக்குலயேவா இருக்க முடியும்?

இருந்துருக்கானே செட்டி..

ஏழுகடையிலிருந்து சிரிப்பு சத்தம் அலையலையாக வந்து கொண்டிருந்தால் செட்டி ஸ்பாட்ல இருக்கான்னு அர்த்தம். யாரையும் விட்டு வைக்க மாட்டான். சூரி அண்ணன் தொடங்கி நண்டுசிண்டு வரைக்கும்.

'ராஜா மாமா என்ன ஒரு மாதிரி கெந்துற.. நைட்டு அய்த்த டாப்பு நீ டவுனாக்கும்'ம்பான் நடந்து வரும்போதே. 'என்ன எழவ சொல்லிட்டான்னு இவிங்க இந்தக் கொலவைய போடுறாய்ங்க?'ன்னு வரும். லேட்டாதான் புரியும்.

'சூரிமாமா சக்திசுகர்ல இருந்து வேன் வந்து வெய்ட்டிங்லயே இருந்துட்டு இப்பதான் போனாய்ங்க' என்பான் சூரி அண்ணன் வந்து இறங்கும் போதும்.

'என்னடா..எதுக்குடா?'

'ஏதோ டன்னுக்கு மூட கொறையுதாம். நம்ம ஃபேக்டரில கெடைக்குமான்னு கேட்டுதேன்'

'செருப்பு பிய்யப்போது பாரு' ( சூரி அண்ணனுக்கு சுகர் உண்டு)

'ஏழுகடைபக்கம் ஓட்டாம சுத்தி ஓட்டுங்க' ம்பா வண்டில ஒக்கார்றப்பல்லாம் லதா 'ஏம் புள்ள?' ன்னு கேட்டா செட்டிப்பய எதுனா கத்துவான்'ம்பாள். 'அரிசி மூட்டை நழுவுது மாமோய். அமுக்கி ஓட்டு'ன்னு குரல் விட்டான் ராஸ்கல் ஒரு தடவ. நாம மறந்துர்றோம். பொம்பள மறப்பாளா?.

'எங்கண்ணே சொந்த ஃபண்டுல இருந்து ஒரு சிகரெட் வாங்கிக் கொடுத்துருக்கே..இதக் குடிக்கிறதா வச்சு வச்சுப் பாக்குருதா ஆ டமுக்கு டப்பா ஆ டையா டப்பா' ன்னு ஓடி ஓடி ஒண்ணாம் நம்பர் கடையில் இருந்து ஏழாம் நம்பர் கடை வரையில் காட்டிக் காட்டி கெக்கு கெக்கு'ன்னு சிரித்துக் கொண்டு வந்தான் ஒருநாள்.

'கேவலப்பட்ட பய புள்ளை..கேவலப் படுத்துது பாரு மாமா' ன்னு முத்துராமலிங்கம் சொன்னப்போதான்..

'ஆ.. நீயா?'ன்னு நீயா பட ஸ்ரீப்ரியா மாதிரி கண்கள் மினுங்க முத்துராமலிங்கத்தைப் பார்த்தோம். அவனும் எங்கள் பார்வைத் தீண்டலில் இருந்து தப்பிக்க கட்டிலுக்கு மேலாகவும் கீழாகவும் நழுவிக் கொண்டிருந்தான்- கமல் போலவே. .

நீயா படம் மட்டும் பாக்காட்டி இவ்வளவு டாக்ட்டிஸ் வந்துருக்குமா முத்துக்கு?

நாங்க போக, போற வர்ற பொம்பளைப் புள்ளைகளையும் ஒரண்டை இழுத்து தொலைவான் செட்டி. எங்க பயலுக யார்ட்டையுமே இல்லாத பழக்கம் அது. லவ்லாம் பண்ணுவாய்ங்க. புடிச்சுப் போயி பின்னாடியேவும் சுத்துவாய்ங்க. 'அப்ஜக்சன் யுவர் ஆனர்' வந்துருச்சுன்னா தெறிச்சுருவாய்ங்க. ரெண்டு நாளைக்கு மொறட்டுத்தனமா தண்ணி அடிச்சுட்டு பூப்போல தெளிஞ்சு அடுத்த பூ பறிக்க போயிருவாய்ங்க.

'எங்கிருந்துடா வந்து தொலைச்ச.. யார்ட்டயாவது இந்தப் பழக்கம் இருக்காடா. மூஞ்சியும் மொகரையும் பாருன்னு திட்டிட்டுப் போகுது அந்தப் புள்ள...உன்னைய திட்டுதா என்னைய திட்டுதான்னு பாக்குறவய்ங்களுக்கு தெரியுமாடா?'ன்னு கேட்டா..

கெக்கெக்ன்னு சிரிச்சுக்கிட்டே, 'பாத்துட்டியா?'ம்பான். 'இனிமே எங்கயும் எங்களோட வராத. இவன தொலைச்சு தல முழுகிட்டுதாண்டா கெளம்பனும் நம்ம' ன்னு பயலுகள்ட்ட சொன்னாலும், 'சரி மூடு ஓன் நயங் கோமணத்தை' ன்னு திருப்பியும் கெக்கு கெக்கு போடுவான்.

ரெண்டு வகையான பிசினஸ் பண்ணி அதில்தான் பசியாறி வந்தான் செட்டி. சீட்டுக் கச்சேரி மெயினு. கபடி சைடுல. சிவகங்கை சுத்துப்புறத்துல செட்டிய தெரியாத கபடி க்ளப் இருக்காது. வந்து தூக்கிட்டுப் போயிருவாய்ங்க. அடிச்சிட்டு வந்தான்னா அப்படி ஒரு நுரை பொங்கும் அவன் முகத்துல. இதர டிட்டெர்ஜன்ட், வில்லை, பார், எதனையும் மிஞ்சும் வெண்மை அந்த நுரை.

அப்புறமெல்லாம் சீட்டுக்கு கிளம்பிருவான். விவரம் தெரிஞ்ச ஏழுகடைப் பசங்க செட்டி ஒக்காந்திருக்கிற சபைல ஒக்கார மாட்டாய்ங்க. தெரிஞ்சுக்கிட்டாய்ங்கள்ல அப்புறம் ஒக்கார லூசா?

எனக்கென்னவோ இந்த சீட்டு மட்டும் வரவே இல்லை. அதிர்ஷட்டம் மற்றும் மூளை உபயோகிக்கிற மேட்டர்னால கூட இருக்கலாம். அதுனாலதான் பெரும்பாலும் இந்த ரெண்டும் தேவை இல்லாத அம்மாப்பா விளையாட்டோடவே நின்னுக்குவேன்.

ஆனா இவய்ங்க கச்சேரி நடத்துற இடத்துக்கு போறது உண்டு. ஆளரவம் இல்லாம ஏகாந்தமா இருக்கும். ஒரு குவாட்டற மட்டும் கைல புடுச்சிட்டு போய்ட்டோம்ன்னு வைங்க அன்னக்கி சும்மா அன்னக்கிதான்.

இப்படியே போயிட்டிருந்த செட்டி எங்க எல்லாத்தையும் ஒரு திருப்புமுனைக்கு தள்ளினான்...

கடைக்கு வந்தேன். கொஞ்சம் இனிஷியல் ஒர்க்லாம் பாத்துட்டு முத்து கடைக்கு வந்து, 'எங்கடா இவன்?' ன்னு கடைல இருந்த செந்தியிடம் கேட்டேன். 'செட்டி அண்ணே ஒரு அக்காவ கூட்டிட்டு வந்துருச்சுண்ணே. ரெண்டு பேரையும் ஒளிச்சு வைக்க அண்ணே எங்கயோ போயிருச்சு' ன்னு சொன்னான்.

'இழுத்துட்டாய்ங்களா?' ன்னு நெனைச்சுக்கிட்டே ஒரு தம்ம பத்த வச்சேன். சாயந்திரமா வந்தான் முத்து..

'என்னடா?'

'இவந்தேன். ஒரு புள்ளைய கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணி வய்யின்னு நிக்கிறான் மாமா. இந்தப் புள்ள தொண்டி போல. போன்லயே புடிச்சிருக்கான். கொஞ்ச நாளா போன்லயே பேசிக்கிட்டு திரின்ஜ்சான்ல. அவய்ங்க மீன் பறவாஸ் மாமா. வெட்டி கடலுக்குள்ள போட்ருவாய்ங்க. நீயும் இல்ல சூரி மாமாவும் இல்ல. டக்குன்னு வெக்கேட் பண்ணி கல்லல்ல நம்ம சொந்தக்காரய்ங்க தோப்புல விட்டுட்டு வந்துருக்கேன்'

'என்னடா சொல்ற? இவன நம்பி எப்டிடா கல்யாணம் பண்ணி வைக்கிறது?'

'என்ன பண்ணச் சொல்ற? இந்த மொகற இல்லைன்னா அந்த மொகற செத்துப் போவேங்குது. அந்த மொகற இல்லைன்னா இந்த மொகற செத்துப் போவேங்குது'

'இவனுக்கே நம்மல்லடா சோறு போட்டுக்கிட்டு இருக்கோம்'

'நீ எங்க போட்ட? நால்ல போட்டுட்டு இருக்கேன். இதுல இந்தப் புள்ளையவும் கொண்டுபோய் அடைச்சா என்னைய வெறட்டி விட்ருவாய்ங்க மாமா'

'சரிடா..அவன தனியாவா விட்டுட்டு வந்த? அவம்பாட்டுக்கு பொலிச்சல போட்டுறப்போறான்டா'

'அதுலாம் ஆளுப்பேரு இருக்காய்ங்க சுத்தி. இப்ப மேட்டர் என்னன்னா சூரி மாமாட்ட நீதான் பேசுற'

'டேய்..இவர்ட்ட ஓத்தாமட்டை வாங்க முடியாதடா?'

'போ..அப்ப நம்மளே கொண்ணுருவோமா செட்டியவும் அந்தப் புள்ளையவும்?'

'இவன் யார்றா இவன்..அதுக்கா சொல்றேன்?'

'இதுலாம் புதுசா மாமா..நீ தான் சரியா மண்டய கழுவி பேசுவ'

'இப்டியே ஏம்மண்டய கழுவுங்கடா'

செட்டிக்கு திருமணம் முடிந்தது.

மத்த வேலையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு இதே வேலையா இருந்து ரெண்டு அழகழகான பெண் குழைந்தைகளை பெற்றெடுத்தான். துயரம் என்னன்னா..

இவ்வளவுக்கு அப்புறமும் செட்டி அப்படியேதான் இருக்கிறான். இந்த டைரிக் குறிப்பிற்காகவே இன்னைக்கு முத்துக்கு போன் பண்ணி 'செட்டி எப்டிடா இருக்கான்?'ன்னு கேட்டேன்.

'காளையர்கோயில்ல திரியிறான்னு கேள்வி மாமா'ன்னு சொன்னான்.

*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3,4