Saturday, October 22, 2011

இலையுதிரும் சத்தம் - நான்கு

ஏழுகடைக் கதைகள்

லதா & லதா போட்டோஸ் & வீடியோஸ்
ஏழுகடையில் ரெண்டாம் நம்பர் கடையில்,'லதா & லதா போட்டோஸ் & வீடியோஸ்' ன்னு ஒரு கடை வச்சுருந்தோம் நானும் நன்பன் மதியும் சேர்ந்து' ன்னு முன்பே சொல்லியிருக்கிறேன் இல்லையா? அவன் மனைவியின் பெயரும் லதா என்பதால் அந்தப் பெயர்.

'ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுறோம். பேசாம மடத்துக்கு மனைவிகள் பேரே வச்சுட்டா என்ன?' ன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சே அந்தப் பெயர் வச்சோம்.

நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சு. 'லெஃபட் ரைட் லெஃபட் ரைட்' ன்னு. ஆச்சா? அப்புறம் குண்டக்க மண்டக்க ஆகிப் போச்சு எல்லாம். நான் இங்க வந்துட்டேன். வந்து கொஞ்ச நாள் கழிச்சு லதாவிடம் பேசும்போது சொன்னாள், 'ஏங்க ரெத்தினம்ன்னு ஒருத்தர் உங்கள தேடித்தேடி வந்துட்டுருக்கார். என்னவோ கல்யாண நெகட்டிவ் வேணுமாம்'

'மதிய பாக்கச் சொல்லு புள்ள. நம்ம வீட்ல ஒரு நெகட்டிவும் இல்ல'

'பாத்துட்டாராம். மதிதான் இங்க போகச் சொன்னுச்சாம்'

'அப்படியா? அப்ப நெகட்டிவ் பழுத்து பாசிட்டிவ் ஆயிருச்சுன்னு சொல்லிரு'

'எல்லாம் பேசுவீக அங்க இருந்துக்கிட்டு'

##

P. சேவுகமூர்த்தி டீ- ஸ்டால்

ஏழு கடையில் அஞ்சாம் நம்பர் கடையில் மூர்த்தி டீக்கடை வச்சுருந்தான். ரெண்டு பென்ச் வெளியில் போட்ருப்பான். கொஞ்சப் பேர் அதுல உக்காந்துக்கிட்டு மிச்சப் பேர் நின்னுட்டு இருப்போம்.

'டேய்...நீங்களே உக்காந்துக்கிட்டா வர்ற கஸ்டமர் எப்படிடா உக்காருவாங்க?' என்றான் மூர்த்தி ஒரு நாள்.
'கஸ்டமர் வந்தாத்தான் எந்திருச்சுருவோம்ல' - செட்டி.
'பெஞ்சு ஃபுல்லா இருந்தா உக்காந்து டீ குடிக்கிறவன் வரமாட்டாண்டா'
'ஆமா இந்த டீயை உக்காந்து வேற குடிக்கணுமாக்கும் - மணி (எ) கிண்ணி மண்ட
'மண்டக் கர்வமா பேசாதீகடா. அழிஞ்சு போவீக'
'இப்ப என்ன உனக்கு? இதுல இருந்து எந்திரிக்கணும். அம்புட்டுத்தானே? எந்திரிச்சாச்சு. அய்யா கஸ்டமரு, ஆத்தா கஸ்டமரு, வாங்க வாங்க வாங்க உக்காருங்க. டீ குடிங்க பேப்பர் படிங்க ஒரு வடை எடுத்து கடிங்க. வாங்க வாங்க வாங்க' - முத்துராமலிங்கம்
இப்படியே பொழுது போய்க் கொண்டிருக்கும். பால் மஞ்சள் தட்டிவிடும் .
'மஞ்சப் பால்ல இருந்து ஒரு டீ போடு மூர்த்தி அண்ணே' - அமரன் கார்த்தி .
'காச வைங்க வெண்ணைகளா'
'மூர்த்தி அண்ணே, கடைய பாத்துக்குறோம் நீ போய் ஒரு டீ சாப்ட்டு வா'- குண்டு கார்த்தி
அடிக்க விரட்டி, கு. கார்த்தியும் ஓடி, கழுத்துப் பிடியா கொண்டுவந்து 'என்ன சொன்ன..என்ன சொன்ன?' என்றான் மூர்த்தி.
'கழுத்த விடுண்ணே. வலிக்குது. ஓங் கடைய விட்டா நாதி இருக்காண்ணே எங்களுக்கு' . நெருக்கிப் பிடிச்சு கேட்டா நெஞ்சுல விழுந்து நக்கிர்றீகளடா ' என்ற மூர்த்தி இப்போ மலேசியாவில் இருக்கிறான். கிண்ணி மண்ட, அமரன் கார்த்தி துபாயில். முத்துராமலிங்கம், செட்டி சிவகங்கையில். நான் இங்க வந்தாச்சு. குண்டு கார்த்தி செத்துப் போனான்.
நெஞ்சுல விழுந்து நக்க இப்ப ஆள் இருக்கா என்னன்னு தெரியல ஏழுகடைல.
##

மணி அத்தானின் மல்ட்டி ஹோட்டல் சென்ட்டர்

ஏழாம் நம்பர் கடையில் சுப்பிரமணி அத்தான் ஹோட்டல் வச்சுருந்தார். ஹோட்டல்னா ஹோட்டலேவா? ஹோட்டல் மாதிரி இருக்கக் கூடாதா என்ன ஒரு ஹோட்டல்?. நாலு பசங்க, கலா அக்கா, அத்தான் எல்லோரும் ஹோட்டல்லயேதான் கிடப்பாங்க. கலா அக்காவ அக்கான்னு கூப்பிடும் போது சுப்பிரமணி அத்தானை அத்தான்னுதானே கூப்பிட முடியும். ஹோட்டல் எப்படி ஹோட்டல் மாதிரியோ அப்படித்தான் சுப்பிரமணி அத்தானும் அத்தான் மாதிரி. சொந்த அத்தானைத்தான் அத்தான்னு கூப்பிடனும்'ன்னு என்ன சட்டமா இருக்கு?



ஹோட்டல்பாட்டுக்கு ஹோட்டல் இருக்கும். சீசனுக்கு தகுந்த மாதிரி சீசன் பிசினசும் பண்ணுவார் சுனா பானா அய்த்தான். இளநி கிடைக்குதா இளநி. கரும்பு கிடைச்சா கரும்பு. பிசினஸ் பியூப்பில்'ட்ட அவர் டீலிங் ஏரியாவே கலங்கிப் போகும். ரெண்டு உதாரணம் மட்டும் இங்க சொல்லலாம்.
'என்ன தண்ணியே இல்ல எளனியில?' -கஸ்டமர்
'ம்ம்ம்..நீரோட்டம் பாத்து இனிமேதான் கிணறு வெட்டணும் எளனிக்குள்ள'
'தடியாவே இல்ல கரும்பு?'- கஸ்டமர்
'இதை விட தடியா வேணுமா? அப்ப மரக்கடைக்குப் போ'

##

முத்து டூ வீலர் வொர்க் ஷாப்

ஏழுகடையில் ஆறாம் நம்பர் கடையில் டூ வீலர் வொர்க் ஷாப். வச்சிருந்தான் டூல்ஸ்முத்து. வரும்போது வெறும் முத்துதான். ஏழுகடையில் எல்லோருக்கும் ஆட்டோமேட்டிக்கா ஒரு பேரு வந்துரும். அப்படித்தான் இவன் டூல்ஸ்முத்து ஆனதும். ஒரு நாள் ஏழுகடை வந்து வண்டிய நிறுத்துறேன். டூல்ஸ்முத்து மனைவி கடை வாசல்ல நிக்கிறாங்க. 'என்னத்தா இப்படி நிக்கிறீங்க?' ன்னு கேட்டேன்.

'இவுங்கள பாக்க வந்தேன். காணோம்ண்ணே' என்றார்கள். 'ஸ்க்ரூட்ரைவரு (டூல்ஸ்முத்து ஹெல்பருக்கு வந்த பெயர்) எங்கடா இவன்?' 'எங்கன்னு சொல்லலண்ணே. இங்கிட்டு வண்டில போனாக' ன்னு திசையைக் காட்டினான். பிறகு முத்துராமலிங்கத்திடம் வந்து விசாரித்தேன்.
'எங்கடா போயிருக்கான் இவன். பாவம் அது வந்து நின்னுட்டு இருக்கு?'
'மாமா திட்டாத. ரெண்டு பேரும்தான் சரக்க ஸ்டார்ட் பண்ணோம். இவன் மட்டையாய்ட்டான். ஏங்கடைல படுக்க வச்சுருக்கேன்'

'வேலை டயத்துல அடிக்காதீகடான்னா கேக்குறீகளாடா?' ன்னு ஒரு அட்வைச பிச்சு எறிஞ்சுட்டு ( நான் அட்வைஸ் பண்றதுக்கும் உலகத்துல இருக்கிற ஒரே இடம் ஏழுகடைதான் என்பதாலோ என்னவோ ரொம்ப பிடிக்கும் இந்த இடத்த) 'எதுவும் அவசரமாத்தா.. இவன் வர லேட்டாகும் போலயே' ன்னு கேட்டேன் டூல்ஸ்முத்து மனைவியிடம்.

'அரிசி பருப்பு ஒண்ணு இல்லைண்ணே வீட்ல. இந்தா வர்றேன்னு வந்தாக அதான் தேடி வந்தேன்' . தூக்கி எறிந்தது அந்த முகம். பிறகு முத்துராமலிங்கம் என்னிடம் இருந்த காசை கொஞ்சம் பொறுக்கி 'இதக் கொண்டு போத்தா. வந்தோன்ன வரச் சொல்றேன்' என்றேன். 'இல்லண்ணே திட்டுவாக அவுக' ன்னு வாங்காமையே போயிருச்சு.

இந்தப் பயணத்தில் நானும் லதாவும் ஏழை காத்த அம்மன் கோயிலுக்கு நம்ம குடும்ப வண்டி டி.வி.எஸ்-50 ல் போனோம்.போற வழியில் இடைய மேலூரில் நிக்க வேண்டியது வந்தது. நின்ன இடம், 'ஸ்ரீ விநாயகா ஆட்டோ ஒர்க்ஸ்'

'அண்ணே' எனக் கூவினான் டூல்ஸ்.

'வா, டீ சாப்டு' ன்னு கூட்டிட்டுப் போனான். பேச்சு அப்டி இப்டி போய்ட்டு அதில் வந்து நின்றது. 'ரெண்டு வருஷம் ஆயிருச்சுண்ணே தண்ணிலாம் விட்டு. ஒத்திக்கு வீடு பிடிச்சு இங்க வந்துட்டேன்' என்றான். நெற்றியில் பட்டையெல்லாம் அடிச்சு சும்மா கும்'ன்னு இருந்தான் டூல்ஸ். .

'ஏழுகடைய விட்டுப் போனாத்தான் எல்லாத்துக்கும் விமோச்சனம்' என்றாள் லதா டீ சாப்பிட்டுக் கொண்டே.

'சும்மாருக்கா. அதுலாம் ஒரு லைஃப். என்னண்ணே?' என்றான் டூல்சும் டீ சாப்பிட்டுக் கொண்டே.

*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3

Sunday, October 16, 2011

என மற்றும் என்


(Picture by cc licence, Thanks Madaboutasia )

வரை எனக்குத் தெரியும்
உங்களுக்கும் தெரியும்
யாருக்குமே தெரியும் அவரை
அவருக்குத்தான் தெரியாது
நமக்கெல்லாம் அவரைத் தெரிகிறதென
அவர் யார்?

ன என என
விடுகதை விடுகிறாள் மகள்.

னக்கு விடை தெரிகிறது என்பது
ஒரு சந்தோசம்.

தை விட சந்தோசம்

ன் என் என் மகளை
எனக்குத் தெரிகிறது என்பது.


நன்றி பண்புடன்