Wednesday, January 27, 2010

வீட்டில் சாயும் மரம்


(picture by cc license thanks Wonderlane)

குச்சி குச்சியாக
சேகரித்தது.

கூடு கட்டியது.

முள்ளைக் கொண்டு
முள்ளை எடுக்கிற நமக்கும்
ஒரு குச்சி மட்டுமே
தேவையாக இருக்கிறது.

க்குடும்பம்
கலைந்து விடுகிறது.

Monday, January 25, 2010

சந்தோசம்

(picture by cc license, thanks SantaRosa)

தேடிக் கொண்டிருந்தேன்.

ன்ன மாமா தேடுறீங்க?
என்று வந்தான்
பக்கத்து வீட்டு கார்த்தி.

"தெரியலைடா
தெரிஞ்சாதான் கண்டு பிடிச்சிருவனே"
என்றேன் யோசனையாக.

"லூசு மாமா" என்று
போய்விட்டான் கார்த்தி.

தேடியது கிடைத்த சந்தோசத்தில்
வந்து அமர்ந்துவிட்டேன்.

Saturday, January 23, 2010

பிளாக்மெயில்


(picture by cc licence, thanks strollers)

"பிள்ளைகளுக்கு லீவுதானே
இருந்துட்டு வாரேன் ஒரு மாசம்"
இவள்பாட்டுக்கு சொல்லிப் போனாள்.

யிர் வலி வாலோடு போச்சென
வாலை விட்டுப் போனது
கதவிடுக்கு பல்லி.

றும்பிழுக்க
எப்பவும் நகரலாம்
வாலின் மீதம்.

சீக்கிரம் வாடி..

பிள்ளையார் எறும்பு
பொல்லா எறும்பு.
-----------------------

பின்குறிப்பு:
90'-களில் எழுதிய என் கவிதை ஒன்று தெய்வாவிடம் இருந்திருக்கும் போல, அனுப்பி தந்தான். சற்று டிங்கரிங் பார்த்தேன். நன்றி தெய்வா.


Wednesday, January 20, 2010

புரை ஏறும் மனிதர்கள்-ஆறு

சவுதி வாழ்வின் மற்றொரு நாட்காட்டி தாள் யார் கையும் படாமலேயே லாந்தலாக விழுந்தது இன்று.

வெகு நாளாக வைத்திருந்த நேர்ச்சையை குலசாமி வந்து கனவில் சொல்லுவது போல் எல்லாமே யதார்த்தகமாக நிகழ்ந்தது. சரவணாவின் குரல் கேட்கமுடியாத குற்ற உணர்ச்சியை வெற்றி சார் என்கிற குலசாமி குரலால், மனசாட்சியின் வெட்டுக் கத்தியில் இருந்து என் குரல்வளை தப்பிக் கொண்டது இன்று.

ஆம்!..அந்த செ புள்ளி சரவணக்குமார் என்ற என் சரவணாவை இன்று சந்தித்து விட்டேன். கூடுதலாக தேனு மக்கா தேடித்தந்த வெற்றி சாரையும்தான். அவர்களை இதில் பதியவில்லை எனில் அப்புறம் எதுக்கு மக்கா இருக்கு இந்த புரை ஏறும் மனிதர்கள்?

ஆயிரத்தில் ஓர் இருவர்..(ஹி..ஹி..சீசன் தலைப்பு..)


வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்தேன். ஒரு போன் வந்தது. ஒரு போன் சும்மா வரும். ஒன்னு எல்லாம் தாங்கி. மற்றொன்னு, எதிர் பாரா கொக்கிடம் இருந்து நகத்தில் விழுகிற கோடிச்சட்டை போலான குரலாக இருக்கும் இல்லையா? அப்படி இருந்தது அந்த குரலும்.

"ஜெத்தாவில் இருந்து வந்திருக்கேன். பெயர் வெற்றி. ரெண்டு நாள் இருப்பேன். சந்திக்க இயலுமா?" என்பது மாதிரியான ஒரு குரல். முன்னதாக தேனு மக்காவிடம் பேசிக் கொண்டு இருந்தபோது இவர் குறித்தும் அறிந்திருந்தேன். தேனு தளத்தில் இருந்த இவரின் பின்னூட்டம் மூலமாக இவர் தளம் போய் வாசித்து அடையாளம் பண்ணிக் கொள்ளாமல் வந்துவிட்டேன். "பக்கத்தில் இருக்கிற சரவணாவை போயே பார்க்க முடியலையே..எதுக்கு சக்திக்கு மீறியதான ஆசை" என்பது போல்.

இந்த குரலை கேட்ட பிறகு ஏற்கனவே இருந்த நேர்த்தி கடனையும் சேர்த்து முடித்துவிட்டால் என்ன? என தோன்றியது. சரவணாவை கூப்பிட்டேன். ஆகட்டும் என்றார். பரபரவென சம்பவங்கள் நிகழ தொடங்கியது. மறு நாள் மாலை சந்திப்பதாக பேசிக் கொண்டோம். குறிப்பிட்ட நேரத்தில் என் சாளர மனிதர்களை சந்திக்க கிளம்பினேன்.

சிக்னலுக்கு நிற்கிற டாக்ஸ்சியை உந்தித் தள்ளனும் போல் உற்சாகம் தொற்றிக் கொண்டது. "அட..போப்பா.சும்மா சும்மா நின்னுக்கிட்டு" என்று டிரைவரிடம் சொல்ல விரும்பினேன். இப்படி விரும்ப மட்டுமே செய்கிற எவ்வளவோ விஷயம் என்னிடம் இருப்பதால் எப்பவும் போல் இதையும் சொல்லவில்லை. மேலும் பாக்கிஸ்தானி டிரைவர். ஏற்கனவே இரு நாட்டிற்கும் உள்ள பிரச்சினைகள் போதும்.

சரவணன் கோல்டன் ஜூஸ் கார்னரில் நிற்கிறார். வெற்றிசார் மதினா ஹோட்டல் வாசலில். இருவருக்கும் நாப்பது,ஐம்பது அடிகள் தூரம்தான் இருக்கும். இணைக்கத்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன் என உணரும் போது மனசு பறந்து கொண்டிருந்தது.

இறங்கி சரவணாவை கூப்பிட்ட போது அவரும் மதினா வாசலில் நிற்கிறார். முன்ன பின்ன பார்க்காத மனிதர்களை ஆனால் பார்க்க விரும்புகிற மனிதர்களை, பார்க்க நெருங்கி விட்ட தருணத்தை அனுபவித்து இருக்கிறீர்களா மக்கா? ஆம்,எனில் தயவு செய்து அந்த இடத்தில் வந்து நில்லுங்களேன். ஏனெனில் என்னால் அந்த மனநிலையை விவரிக்க இயலவில்லை.

சரவணன் ஓடி வந்து கட்டிக் கொண்டதை, அப்படி ஒரு சிரிப்பு சிரித்ததை,கண்களில் இருந்த புகை போல கிளம்பி வந்த பிரியத்தை எதிர் கொள்ள இயலாத பலஹீனனாக இருந்தேன். இருவரும் சேர்ந்து வெற்றிசாரை தேடிப்போனோம்.

மொபைலை எடுத்து அவரை கூப்பிடலாம் என தோன்றியபோது அந்த முகத்தை பார்த்தேன். ஏற்கனவே அவர் தளத்தில் புகைப்படத்தில் பார்த்த முகம்தான். இன்னும் கொஞ்சம் மலர்த்தி வைத்திருந்தார். இப்ப மலர்ந்தது போல.

காரை திறந்து இறங்கிய வேகத்திலும், கைகளை பற்றிக் கொண்ட வாஞ்சையிலும் மின்சாரம் இருந்தது மக்கா. வெற்றி சார் இல்லையா? மின்சாரம் இருக்கத்தானே செய்யும்! வெற்றிக்கே உரித்தான மின்சாரம் அது. தோல்வி இடத்தில் இருந்து இதைக் கொஞ்சம் உள் வாங்க முயற்சி செய்யுங்களேன். இப்ப நீங்கள் இதன் தாக்கத்தை உணர்ந்து விட்டீர்கள் இல்லையா? நானும் இப்படியே உணர்ந்தேன்.

பிறகு நாங்கள் அந்த வீதியையும் சுற்றி இருந்த மனிதர்களையும் மறக்க தொடங்கினோம். எட்டு வருடமாக நான் இந்த இடங்களில் புழங்கி வருகிறேன். வாய் நிறைய தமிழ் பேசியது இன்றுதான். அதுவும் மண்ணில் இருந்து ஈரம் குழைத்த தமிழ். பிசைந்து பிசைந்து ஊட்டிக் கொண்டோம். இன்னதென்று இல்லாமல் குடும்ப தொடங்கி, இலக்கியம், சினிமா, அரசியல்,இணைய எழுத்தாளர்கள் (வாழ்க,அகநாழிகை வாசு..), சவுதி வாழ்வின் அன்றாட பிரச்சினைகள் என்று எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். பின்னங்கால்களை உதைத்து,பிடி கொடுக்காமல் ஓடுகிற கண்டுக் குட்டியை ஒத்திருந்தது பேச்சு. விரட்டி பிடிக்க இயலாமல், சிரிப்பும் சந்தோசமுமாக பின்னாலையே ஓடிக் கொண்டிருந்தோம்.

வெற்றி சாரும் சரவணனும் நிறைய வாசிக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன். தி.ஜா.தொடங்கி சாரு வரையில் புட்டு புட்டு கடை விரிக்கிறார்கள். பதினைந்து வருடங்களாக வாசிப்பற்ற பள்ளத்தில் கிடந்த நான் சறுக்கி சறுக்கி ஏறிக்கொண்டிருந்தேன். குனிஞ்சு தூக்கியும், ஏந்தி தள்ளிக் கொண்டும் இருந்தார்கள்.

இவர்களோடு பேசிக் கொண்டிருந்த போதே தேனு,staarjan,அக்பர் இவர்களின் குரல் கேட்டுக் கொண்டதும் அவ்வளவு பாந்தமாக இருந்தது.

"என்னடா பண்ணிக்கிட்டு இருக்கன்னு மகனுக்கு போன் பண்ணேன். படிச்சிக்கிட்டு இருக்கேன்ப்பான்னு சொன்னான். மனுசனாடா நீ? வேர்ல்டு கப் புட்பால் நடந்துக்கிட்டு இருக்கு நீ படிச்சிக் கிட்டு இருகேன்ற? மூடி வச்சுட்டு போய் மேச் பாருடா..காலைல ரிசல்ட் சொல்லணும்" என்று சிரிக்கிற ரசனையான தகப்பன் முகம் கொண்ட வெற்றி சாரையும்....

"அப்படியே ரைட் ஆப்போசீட்ண்ணே தம்பி அருமையாய் படிப்பான். எந்த பழக்கமும் இல்லை. உதாரணம் சொல்றதுக்கு வெளீல இருந்து ஆள் தேட மாட்டாங்க வீட்ல. இந்தா அவனை பாரு..ஒடனொத்த புள்ளைன்னு எதுகெடுத்தாலும் தம்பியை இழுத்துருவாங்க.." என்று பளீரென சிரிக்கிற சகோதர முகம் கொண்ட சரவணனையும்..

இப்படி எழுத்தில் படிக்க கூடாது மக்கா. நேரில்தான் பார்க்கணும்!

மிஸ் பண்ணிட்டீங்களே மக்கா..

உற்சாகமான மனிதர்களிடம் இருந்து ஒரு போதும் விடை பெற்றுக் கொள்ள இயல்வதில்லை. அவர்களையும் நினைவிலாவது கூட்டிக் கொண்டுதானே நாம் நம் வாழ்விற்குள் நுழைகிறோம். அப்படித்தான் நுழைந்திருக்கிறேன் நானும்...

புரை ஏறும் மனிதர்கள் - 1, 2, 3 , 4, 5


Sunday, January 17, 2010

பா.ராஜாராம் கவிதைகள்-6


(picture by cc license thanks Jody)

1.
யாருமில்லை என்பதால்
பேசிக்கொண்டு இருந்தேன்.
வருத்தப்படுவேனே என்பதால்
கேட்டுக்கொண்டும் இருந்தேன்.

2.
லைகீழாக தொங்கியபடி
எப்படிநடக்கிறான்?
என்கிற கேள்வி
வவ்வாலுக்கு இருக்குமோ
என்கிற கேள்வி எனக்கு.

3.
ல்லோருக்கும் பொதுவான
நீதி ஒன்று இருந்தது.
பிரச்சினை என்னவெனில்
அது எல்லோரிடமும்
தனித் தனியாக இருந்தது.

4.
குழந்தைகளை கூட்டிக்கொண்டு
அம்மா வீட்டிற்கு போகிற மகள்கள்
மறக்காமல் எடுத்து வைக்கிறார்கள்
ஒரு முகத்தை.

5.
மீன் தொட்டியில் இட்டு வளர்க்கும்
குழந்தை என நெளிவாள்
சம்பள நாளில்
இவள் எப்போதும்.

------------------------------------------
பா.ராஜாராம் கவிதைகள் - 1, 2, 3, 4, 5
------------------------------------------

Friday, January 15, 2010

வெயிலின் நிழல்


(picture by cc licence thanks mckaysavage)

வளை கண்டு பிடிக்க
எந்த முயற்சியும்
செய்தேன் இல்லை.

வளும் வழி அறிவிக்கிற
ரொட்டித் துண்டுகளை
பிய்த்து எறிந்தவள் இல்லை.

யினும்,
இந்த தெருக்கள்
எங்களை
காட்டித் தராமல் இல்லை.

Wednesday, January 13, 2010

புத்தகச்சந்தையும் ஒரு மனுஷியும்


(picture by cc licence thanks unforth)

புத்தகம் புத்தகமாய்
வாங்கி குமிச்சிருக்காங்க
எங்க பப்புக்கு, பப்பு ஆச்சி.

ந்த கடையில
நெறைய புத்தகம்
இருக்கும் போல.
போனா வாங்கலாம் போல.

னக்கும் கூட தோணுச்சு
ஏன்டா புள்ளைகளுக்கு
புத்தகமே வாங்கி தந்ததில்லைன்னு.

ங்க காலத்துல
ஒரு பப்பு ஆச்சி இருந்துச்சு.
ஒரு ஊர்லன்னு தொடங்கி
கதை கதையா சொன்னுச்சு.

து எங்க காலத்துலேயே
செத்து போச்சு.

Monday, January 11, 2010

உள்


(picture by cc license, thanks Sam Ilic)

கா
ட்டுச்
செடி

ள்ளிப் பூ

ங்கராந்திப் பொங்கல்

த்திய சோதனை

வீடு பேறு

ஸ்கோர் என்ன?

சொல்ல சொல்ல எழுதியதில்
மஞ்சள் முதலாவது.

கை வளை சத்தம்.

மீன் குழம்பு வைக்கட்டா?

ழகர் கோவிலுக்கு அழைத்து போன
சிவகாமி டீச்சர்.

வானி எப்படி இருக்கோ பாவம்.

கள் கல்யாணம்.

ஸ் ஸ்டாண்டுக்கு எப்படி போகணும் சார்?

ஸ்வஸ்திக் கோலத்தில்
ஒட்டிய நெற்றிப்பொட்டு

புள்ளைகள் தூங்குதுக சனியனே.

சிரிப்பு.
தூக்கம்.
விழிப்பு.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அப்புறமும்
வேறென்னவோவுல..

திருப்பியும்
தூங்கிட்டேன் போல.

Sunday, January 10, 2010

கேள்வியின் நாயகன்


(picture by cc licence, thanks Marco)

கோட்டை முனியாண்டி கோயில்
சுற்று சுவற்றில்
"சிறுநீர் கழிக்காதீர்கள்" என்று
எழுதி வைத்திருக்கிறார்கள்.

தில் எனக்கு
இரண்டு கேள்விகள் உண்டு.

ன்று,
சிறுநீர் கழிப்பவர்களுக்கு தெரியாதா
கோட்டை முனியாண்டி
துடியான தெய்வம் என?

ரண்டு,
சிறுநீர் கழிப்பது
தெய்வ குற்றமாவென
தெரியாதா
கோட்டை முனியாண்டிக்கு?

Friday, January 8, 2010

சர்க்கஸ்


(photo by cc license, thanks, Emmanuel Dyan
)

து வீடு.

ரு ஹால், அறை,
அடுப்படி, இப்படி.

து குடும்பம்.

ரு மகள், மகன்
இவர்கள் இருவர், அப்படி.

நால்வரும் தூங்குவது ஹாலில்.

மிதிபடலாம்
குழந்தைக் கால்கள் என
நடு ராத்திரியில் கூட
நகர இயலாது அறைக்கு.

வீடு முழுக்க
பகலிலும் இழைகிறாள்
படிப்பு முடித்த மகள்.

யினும்,
சொல்லித்தருகிறது..

ட்டையும் புல்லுக்கட்டையும்
புலியையும் ஆட்டையும்
ஒரே படகில் ஏற்ற கூடாதென்கிற
குடும்ப நீதி விடுகதை.

Wednesday, January 6, 2010

நான்


(photo by cc license, thanks Napalm filled tires
)

க்கரத்தாழ்வார்
சங்கு புஷ்பத்திற்கு என
தனி வண்ணமும் வாசனையும்.
சாமி விரும்பாவிட்டாலும்
நுகர தவறுவதில்லை.

வீராயி அம்மாச்சி கொண்டு வரும்
மாம்பழம் பெயர் கழுதை விட்டை.
ருசி அது இல்லை.

பூர்வீக குழுமையில் சேகரிக்க விருப்பம்
அண்ணாதுரை சித்தப்பா சிரிப்பை.
உபயோகத்தில் இருப்பதை
சேமிப்பானேன்?

காளியப்பன் அண்ணன்
சொன்னால் வேதவாக்கு
அப்பாவிற்கு கிட்ண தாத்தா போல.
ஆயினும் நடை பிரண்டிகளை
அறிகிறார்கள் தாத்தாவும் அண்ணனும்.

ரி,
உன்னுடையது என்னடா வெண்ணை?

சொல்லவந்ததும் அதுதான்..

வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போதும்.

Tuesday, January 5, 2010

புரை ஏறும் மனிதர்கள்-ஐந்து

குரல்வழி சிற்பங்கள்-தொடர்ச்சி..

மாதவராஜ், காமராஜ்

உருவி விட்டதுபோல் ஒரே மாதிரி இருப்பார்கள் மோகன் மாமாவும், ராஜ்குமார் மாமாவும். ஆறடி உயரம்,நடை, உடை, குரல் அமைப்பு எல்லாம். மாமாக்கள் இருவரும், அப்பாவும், நானும் நால்வருமாக கூத்தாண்டன் ரயில்வே பாலத்திற்கு குளிக்க போயிருந்தோம். எனக்கு அப்போ எட்டு வயதிற்குள் இருக்கலாம். அப்பா போர்த்திய, அப்பா வாசனை அடிக்கிற துண்டை தோளில் போர்த்தியபடி இவர்கள் நடைக்கு பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தேன். கூத்தாண்டன் கண்மாய் என்பது ரயில்வே பாலத்தை மேவி, நிறை சூழியாய் மூச்சு விடுகிற காலம் அது. துண்டு, உருப்படிகளை மடியில் இடுக்கியபடி பாலத்தில் அமர்ந்திருந்த நான் இவர்கள் மூவரும் குளிப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். "துணியை அங்கிட்டு வச்சுட்டு தவ்வுடா" என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள் மாமாக்கள்.

அப்பா முகம் நீரின் மேலாக மிதந்தாலும் கூப்பிடவில்லை அப்பா. கூப்பிட்டாலும் போயிருந்திருக்க மாட்டேன். மாமாக்கள் குளத்தில் இருக்க கரை ஏறி வந்தார் அப்பா,"துண்டு கொடுடா" என்றார். துணிகளை தரையில் வைத்த தருணம் நான் தண்ணியில் இருந்தேன். கால் தரை தட்டியது வரையிலான செங்கழனி நீரை இதோ இப்பவும் பார்க்க வாய்க்கிறது. கரை தூக்கிக் கொண்டு வந்த மாமாக்கள் இருவரும்,"வக்காளி என்னடா மாப்ள நீ?" என்றபடி சிரித்ததை இப்பவும் கேட்க்க வாய்க்கிறது.

ராகவனிடம் அழை எண் பெற்று மாதவன், காமராஜை அழைத்த போது இருவருமே வங்கியில் இருந்தார்கள். பாலம் பாலமாய் வெட்டுகிற சிரிப்பு, செய்து வைத்த பேச்சுத் தொணி, அடுத்தடுத்த வீடு, அடுத்தடுத்த அழை எண், என உரிச்சு தந்தார்கள் என் அந்த மாமாக்களை. தூக்கி எறிய அப்பா இல்லையே என்று தான் நானாக குதித்தேன் இவர்கள் எழுத்து குளத்தில். "வக்காளி என்னடா மாப்ள நீ?" என அசால்ட்டாக கரை தூக்கிக் கொண்டு வந்தது இவர்கள் இருவரின் செஞ்சு வச்ச குரல். எழுத்திற்கும் குரலுக்கும் ஒன்றும் மாமாங்க தூரம் இல்லை!

பாலா

அதிகம் பேசமாட்டார் ஜெயராம் மாமா. முதலில் தாய் மாமன், பிறகு லதாவின் அப்பா, அப்புறம் மாமனார் என்று படிப்படியாக தன்னை அலங்கரித்து கொண்டார். (கடைசி அலங்காரத்தை அலங்கோலம் எனலாம்). ரத்தினம் போல் எப்பவாவது என ஒரு சொல் உதிரும். குடுகுடுவென ஓடி பொறுக்கிக்கொள்ள தோணும். "சாம்பார் நல்லா வச்சுருக்கக்கான்னு எந்தம்பியே சொல்லிட்டான்" என்று வெகுநாள் வரையில் பேசிச்சிரித்த அம்மாவை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

"யப்பா.. மாமாவுக்கு தண்ணி, கிண்ணி வாங்கி கொடுத்துராதீக. அல்சர் தொந்திரவு. அப்புறம் நாந்தான் சிரமப்படணும்" என்று சரசத்தை என்னை ரகசியமாய் எச்சரிப்பார்கள். இடுப்பில் சொருகி கொண்டு போகிற குவாட்டர் பாட்டிலை மல்லிகை புதரில் வைத்துவிட்டு "அத்தைக்கு தெரியாமல் குடிங்க.. கொண்ணே புடுவார்கள் என்னை" என்று மாமா காதிற்குள் சொல்வது உண்டு நான். அத்தைக்கும் மகனாகி, மாமாவிற்கும் மருமகனாகி,
லதாவிற்க்கும் "நடைபிரண்டி" ஆகிற சந்தோசத்தை மிஸ் பண்ண விரும்புவதில்லை நான். அது ஒரு குஜால்தான் மக்கா...

"எலும்பள்ளி வைங்கத்தா மாப்ளைக்கு" என்று, தண்ணிக்கு பிறகு பரிமாறுகிற வீட்டு மனுஷிகளை விரட்டுவதை பார்க்கணுமே நீங்கள். அவ்வளவு அழகாய் இருக்கும்! மாமா உதிர்க்கிற ரத்தினம் போல் பாலாவும் ஒரு பின்னூட்டம் உதிர்த்தார். தகப்பனாக இருப்பது என்கிற என் கவிதைக்கு. "இந்த கவிதைக்கு பின்னூட்டம் போடுவது என்றால், ஒரு ஓரமாய் உட்க்கார்ந்து அழுதுட்டுத்தான் போடணும்" என்று. ஒரு வார்த்தைதானே உறைய வைக்கிறது அல்லது குளிர வைக்கிறது!

"மாம்சு" என்று பாலா ஒவ்வொரு முறை மீட்டுகிற போதும் நான் என் வீணையிடம் சேர்கிறேன். "எலும்பள்ளி வைங்கத்தா" என்கிற என் பழைய வீணையிடம்.

D.R.அசோக்

"புதூர் கம்மா மாமரம்" என்கிற ஒரு மாமரம் ஒன்று உண்டு. அது என் வாழ்வோடு நேரடி தொடர்பு கொண்டது. வீட்டிலிருந்து குறுக்கு வழியாக பிடித்தால் ஒரு கிலோ மீட்டர் தூரமே. t.v.s.50- யை கண்மாய் பாதத்தில் நிறுத்திவிட்டு கரை ஏற விடாது மக்கா. அப்படியே வாரிச்சுருட்டிக்கொள்ளும். சற்றேறக்குறைய அரை ஏக்கர் பரப்பிற்கு சும்மா தண்ணென்று நிழல் பரப்பி நிற்கிற மாமரத்திடம் என் ஆன்மா பேசியது அதிகம். பரஸ்பரம் அதுவும்!

"என்னபுள்ளே.. இன்னைக்கு ரொம்பத்தான் கொணட்டிக்கிற" என்று நானும், "போடா குடிகார கிழவா" என அதுவும் சீண்டாத நாள் இருக்காது. மனைவி குழந்தைகளிடம் எந்த மனக்கிலேசம் ஏற்பட்டாலும் அடுத்த நொடி, "டொர்ர்" என்கிற என் டி.வி.எஸ்.50 அங்குதான் அழைத்து செல்லும். வர்ற வரத்து பார்த்து,"ஆத்தி..எம்புள்ளைக்கு என்னாச்சு?" என்று ஏந்தி கொள்ளும். "ந்தா..வந்த முகத்தோட போகாத" என்று அதட்டி, சேலை விலக்கி உள் பாவாடை சீட்டி துணியில் கண்ணு மூக்கெல்லாம் சிந்தி, அழுந்த துடைத்து அனுப்பி வைக்கும்.

"சித்தப்சு" என்று உற்சாக நுரை கொப்பளிக்கிற என் அசோக்கின் குரலை நான் அவளின்றி வேறு எவ்விடம் சேர்ப்பேன்? அசோக் பேசி முடித்து வெகு நேரம் வரையில் அறை வாசனையாக குளிர்ந்து கொண்டிருக்கும், எறும்பூறி உதிர்ந்த மாம்பூ வாசனை போல.

**

சபிக்ஸ், தமிழன் கறுப்பி, ஜெஸ்வந்தி, லாவண்யா-மனோ, ஜோதி, செய்யது, ஜமாலன் சார், மோகன் குமார், ஸ்டார்ஜன், அக்பர், நர்சிம், தேனம்மை, யாத்ரா,முரளி என்று இன்னும் கூட வித விதமான குரல்வழி அடைந்த சிற்ப்பங்கள் உண்டு. அவர்கள் சம்மதம் தெரிவித்தால் தனி தனியாக பேச விருப்பம் இருக்கிறது. "போதும்டா. போர் அடிக்குது" என்றாலும் போதும்தான்.

இவர்களை எல்லாம் நேரில் பார்க்கிறது வரையில், இப்படியாக ஏதாவது ஒரு "என் மனிதர்களுடன்" மோதவிட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிறேன். யானையை கொண்டு குதிரையை வெட்டியும், குதிரையை கொண்டு சிப்பாயை தட்டியுமாக...

இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வெந்து தணியும் சவுதியின் இந்த தனிமைப் பாலையில் இந்த விளையாட்டும் கூட இல்லையெனில், வேறு என்ன செய்யட்டும் மக்கா?


புரை ஏறும் மனிதர்கள் - 1, 2, 3 , 4


Sunday, January 3, 2010

குத்திட்டேன் எசமான் குத்திட்டேன்

"கண்ணா தமிலிசில் ஓட்டு போட சொல்லி கொடுடா"

கண்ணனை உங்களுக்கு தெரியும். தெரியாதவர்களுக்கு, பெரியப்பா மகன்,கனடாவில் இருக்கிறான். என்னை தெரியும் உங்களுக்கு. தெரியாதவர்களுக்கு,நான் சவுதியில் இருக்கிறேன். நல்ல மூட்ல இருந்திருப்பான் போல கண்ணன்.

"சரி,ஆன்லைனுக்கு வா"

"லைன்லதாண்டா இருக்கேன்"

"ஆன் லைனுக்கு வாடான்னா."

"ஆன் லைனுலதாண்டா இருக்கேன்.இன்விசிப்ல இருக்கேன்." (இவன்லாம் இஞ்சினியர்??)

இங்கு கண்ணனை சொல்லியாகனும். என்னை விட நாலு வயது சிறியவன். மனநிலைக்கு தகுந்தாற் போல அண்ணன் எனவும் வாடா போடா எனவும் அழைப்பான். குடும்பத்தின் கடைக்குட்டி. வாய் துடுக்கு. காப்பியும் கெட்ட வார்த்தையும் ரொம்ப பிடிக்கும். கெட்டவார்த்தை என்பது குடும்ப கெட்டவார்த்தைதான். தாவில் தொடங்கும். 'லி' யில் முடியும். நேரம் வா(ய்)க்கிறபோது ஆ(ய்)சுவாசமாக யோசியுங்கள். ரொம்ப குழப்பிட்டேனோ?. இந்த பதிவிற்கு முக்கியமான வார்த்தை. அதை அப்படியே பிரயோகிக்க விருப்பம். பொண்டு பொருசு அலையிற வீடுன்னு சூசகமாய் சொன்னேன்.

கணினி மூலமாக தொடர்பு முயன்று,வீண்...அழை பேசினான்.

"நம்ம தளம் வேணாம். ஏற்கனவே ஓட்டு போட்டாச்சு. சித்தப்பா தளம் வாங்கண்ணே."

"வந்துட்டேன்."

"கவிதைக்கு கீழ ஓட்டு இருக்கு பாருங்க அதுல குத்துங்க."

"குத்துங்களா?.. குத்துங்க எசமான் குத்துங்களா?"

"டேய்...(கெட்ட வார்த்தை)கேபிள் சங்கர் தளம் போயிட்டியா?"

"இல்லைடா, சும்மா. உனக்கு மூடை கிரியேட் பண்றேன்."

"(கெட்ட வார்த்தை) ஐ.எஸ்.டி.பேசிக்கிட்டு இருக்கேன்"

"சரி சரி சொல்லு"

"குத்திட்டியா?"

"குத்திட்டேன்"

"பக்கத்துல ஒரு விண்டோ ஓப்பன் ஆகுதா"

"ஆமா ஆகுது"

"லாக் இன்ல யூசர்நேம் பாஸ் வேர்ட் அடி"

"அப்படி எதுவும் இல்லையேடா"

"இருக்கும். கீழ இருக்கும் பாரு. தேடு"

"கமென்ட் இருக்கு.ஹூ வோட்டடெட் இருக்கு, ரிலேட்டட் இருக்கு."

"கீழ இருக்கும் பாருடா"

ஒரு சிகரெட் பற்ற வைத்து கொள்கிறேன்..

"ம்ம்..இருக்குடா.லாகின்டூ கமெண்டுன்னு இருக்கு"

"லாகின்-ஐ மட்டும் குத்து. கமெண்ட்டை குத்தாத"

ரெண்டு சேர்ந்தே இருக்கு என சொல்ல விரும்பினேன். ஆனால் சொல்லவில்லை. குத்தினேன்.

"ம்ம்..இப்ப வந்திருச்சுடா"

"யூசர்நேம் பாஸ்வேர்ட் அடி."

"அடிச்சிட்டேன்"

"என்டர் கோடு"

"கொடுத்துட்டேன்"

"இப்ப பக்கத்துல ஓப்பன் ஆகுற விண்டோல ஓட்டு கூடியிருக்கா?"

"இல்லையேடா. அதே ஓட்டுதான் வந்திருக்கு. திருப்பியும் கீழ கமென்ட்,ஹூ ஓட்டட்,ரிலேட்டட் வந்திருக்கு."

"(கெட்ட வார்த்தை)என்னடா செஞ்சு தொலைச்ச?"

"நீ சொன்னதுதாண்டா செஞ்சேன்"

மற்றொரு சிகரெட் பற்ற வைக்கிறேன்..

"அப்புறம் ஏண்டா வரலை?"

"............"

"யூசர்நேம் பாஸ்வேர்ட் சரியா அடிச்சியா?"

"அடிச்சேண்டா"

"சொல்லு"

சொன்னேன்.

"சரி மேல என்ன இருக்கு"

"தலைப்புலையா?"

"ம்ம்"

"தமிலிசுன்னு இருக்கு"

"ஆப்போசீட்ல என்னடா இருக்கு?"

"கருவேலநிழல்ன்னு இருக்கு"

"(கெட்டவார்த்தை)ஒன்தளம் போயிட்டியா?

"கருவேலநிழல் பார் ஹோம் பார் ப்ரோபைல்ன்னு இருக்குடா"

"சரிதான். அப்பா ஏண்டா போலிங் ஆக மாட்டேங்குது?"

"இரு நான் செக் பண்றேன்"

(அவனுக்கும் யூசர் நேம் பாஸ்வேர்ட் தெரியும்)

கொஞ்ச நேரம் அமைதி.

"(கெட்டவார்த்தை) இந்தாத்தான் அழகு போல ஆகுதடா. இப்ப கட்டத்துல பாரு. கூடியிருக்கா?"

"ஆமாடா.கூடியிருக்கு?"

"அப்புறம் ஏண்டா உனக்கு மட்டும் ஆகல"

"........................."

"ஓட்டுலதான குத்துன?"

"ஓட்டுலதாண்டா குத்துனேன்"

"(கெட்டவார்த்தை)கம்ப்யூட்டரை எதுவும் பண்ணி தொலைச்சிட்டியா?"

மூன்றாவது சிகரட்டை பற்ற வைக்கிறேன்...

"சரி இனி சித்தப்பா தளத்துல ஓட்டு போட முடியாது. வேற எதாவது ஒரு தளம் சொல்லு அதுக்கு போகலாம்"

"நவாஸ் தளம் வா.அவர்தான் மைனஸ் ஓட்டு போட்டாலும் மைனஸ் ஓட்டு மிக அருமைன்னு பின்னூட்டம் போடுவாரு"

இங்கு அவன் சிரித்திருந்தால் ஆசுவாசமாக இருந்திருக்கும். இல்லை.

நவாஸ் தளத்தில் meendum தொடங்கியது...

"வந்துட்டியா?"

"குத்திட்டியா?"

"ஓப்பனா?"

"லாக்கின்னா?"

"யூசர்நேம் பாஸ்வேர்ட் சரியா?"

"ஓப்பனா?"

"கூடியிருக்கா?"

"இல்-லை-யே-டா"

மீண்டும்..

"மயிறு என்னடா பண்ணி தொலைச்ச கம்ப்யூட்டரை?"

"கம்ப்யூட்டரை என்ன பண்றாக வெண்ணை? உனக்கு ஒழுங்கா சொல்லித்தர தெரியலை"

எத்தனை கெட்ட வார்த்தையத்தான் நானும் பொறுக்குறது..குடும்ப கெட்ட வார்த்தையாகவே இருந்தாலும்..

"சரி போனை வை.முக்கா மணிநேரம் ஆகிப்போச்சு. இன்னொரு தடவை பார்க்கலாம்.கூமுட்டை கூமுட்டை."

வைத்து விட்டான்.

புதிதாக ஒரு சிகரட்டை பற்றவைத்துக்கொண்டேன். மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டேன்.ஓட்டு பட்டையவே கூர்ந்து பார்த்து கொண்டிருந்தேன். நான் குத்திய ஓட்டுக்கு பக்கத்திலேயே எழுத்தால் ஆன vote இருந்தது.

"பயபுள்ளை ஒருவேளை இதை குத்த சொல்லி இருப்பானோ?"

குத்தினேன்.

ஓப்பன் ஆச்சு. ஓட்டும் கூடியது.

கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வர தொடங்கியது

"சிங்கம்டா மக்கா..நீ!"

இந்த முறை நான் போன் பண்ணினேன்.

"டேய் ஆகுதுடா.கம்ப்யூட்டர் சரியாயிருச்சு போல"

"சரி.சந்தோசம்.வய்யி."

"கண்ணா..மைனஸ் ஓட்டு எப்படிடா போடுறது?"

"வைடா தாய்லி."

Friday, January 1, 2010

குட்டீஸ்


(Picture by CC licence, Thanks Life in pictures)

ள் காட்டி விரலையும்
நடு விரலையும் இணைத்து
வில்லு போல வளைத்து
டூ என்று விடுவான்.

ள்காட்டி விரலையும்
சுண்டு விரலையும்
கொம்பு போல காட்டி
பழம் என்றுகூட விடுவான்.

ரே ஒரு விரல் மாற்றி
இரு உலகம் காட்டுவான்.

***

சில்லுண்டிகள்
விரிக்கிறார்கள் பட்டத்தை.
ஒருச்சாய்த்தேனும்
நுழைகிறது வானம்.

***

வானம் தாண்டி என
கைவிரிக்கிறான்.
தொட்டுவிட முடிகிறது
தூரம்.

***

குழந்தைகளின் விரல்களில்
ஒட்டவில்லையெனில்
அது என்ன வண்ணம்?
அது என்ன வண்ணத்து பூச்சி?

***

போதும்பெண் என்ற
பெயர் கொண்டவளுக்கு
கூப்பிட தெரியலை.
போதும் அப்பா.
போதும் அம்மா.