அப்பாவை தத்தெடுத்த மகன்கள் கமலேஷ் மற்றும் ஸ்ரீதர்தான் அந்த மகன்கள். அந்த அப்பா அடியேன்தான்.
இதுதான் நிகழும் என அருதியிடாத தருணங்கள்தான் எவ்வளவு அற்புதமானவை! அப்படி, எவ்வளவு அற்புதங்கள் வலை உலகம் வந்த பிறகு.
d.r. அசோக் என நினைவு, முதன் முதலாக சித்தப்பு என்று அழைத்தது. அப்புறம் பூராம் வரிசையாக அண்ணா, அண்ணே, மாம்ஸ், சித்தப்பூஸ்தான். ஏன், சாரும் கூட உண்டு. விளக்கமாருக்கு பட்டுக் குஞ்சம் போல.
வீட்டில் மின்சாரம் போய்விடும். விளக்கு பொருத்தவென தீக்குச்சி உரசுகிற மனுஷி / மகளின் முகத்தை புதிதாக பார்ப்பது உண்டு. "அட, நம்ம பக்கிகள்தானா இது?" என்று மிதக்க எது காரணமாகிறது? இருளா? குறைந்த ஒளியா? இரண்டுமேவா?
ஊரில், காலத்தை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு திரிந்தவனை, சவுதியில் கொண்டு வந்து அடைத்தது வயிறுகள் சார்ந்த வாழ்வு. மின்சாரம் போனது போலான இருள். "அட, நம்ம பக்கிகள்தானா இது?" என அவ்வப்போது தீக்குச்சி உரசி முகம் காட்டுகிறார்கள் கருவேல நிழல் பெற்ற மக்கள்..
அண்ணா, அண்ணே, சித்தப்பு, மாம்ஸ், தோழர், சார், எல்லாம் கூட சரிதான். அப்பா என்பவன் எங்கிருந்து குதிக்கிறான் இதற்குள்? இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாய் என்னையும் பெற்ற என் கருவேல நிழலே?
சரி. கமலேஷ் ஸ்ரீதரை பார்ப்போம்.
ஓரிரு மெயில் செய்து, அழை எண் பெற்று, முதல் விளிப்பிலேயே அப்பா என்றான் கமலேஷ். குலுங்கினேன். 29 வயதுக்காரனான ஒருவன் 45 வயதுக் காரனான ஒருவனை அப்பா என்கிறான். வயசெல்லாம் zoom out ஆகி பச்சை வாசனையுடன் மகனே என மனசில் ஏந்துகிறான் அப்பன் காரனும்.
போக, மனசும் அடி வயிறும் சுண்டியது. பிரசவ காலங்களில் சுண்டுமாமே பெண்களுக்கு. அப்படி. இன்பத்தில் சுரந்தால்தான் என்ன? கண்களில் சுரந்துவிட்டால் அதன் பெயர் கண்ணீர்தானே எப்பவும்.
சந்திப்பதாக பேசிக் கொண்டோம். பேசிக்கொண்டே கிளம்பிக் கொண்டிருந்திருப்போம் போல. எல்லாம் வேகு வேகுன்னு கூடி வந்தது. எனக்கும் கமலேஷிற்குமான தூரம் சற்றேறக்குறைய 200 கிலோ மீட்டர்கள். றெக்கையடிப்பிற்குள் மடங்குமா கிலோ மீட்டர்கள்? கண் மூடி திறப்பதற்குள் எதிரில் நின்றார்கள் கமலேஷும் ஸ்ரீதரும். இங்கு யார் ஸ்ரீதர் என வருகிறது இல்லையா? எனக்கும் அதேதான்.
"அப்பா, கிளம்பிட்டோம்" என்று கமலேஷ் அழைத்த போதுதான், கூட ஒருவர் வருகிறார் போல என தட்டியது. "சரி..வாங்கடா" என்ற என்னால் வழி சொல்லத் தெரியல. இந்த ஒன்பது வருடமாக எனக்கு என் முதலாளி அரண்மனை தெரியும். சம்பளம் அன்று அல்ராஜி பேங்க் தெரியும். மதினா ஹோட்டல் தெரியும். தோசை தெரியும். மீண்டும் அரண்மனை வரத் தெரியும். குதிரை வண்டியில் பொருந்திய, குதிரையின் கண்களில் பொருத்திய, தகரத்தின் பெயர் குடும்பம் எனலாம், இங்கு. கழுதையாக கூட பிறந்து தொலைத்திருக்கலாம்தான். பொதி சுமந்தாலும் பார்வையை மறைக்காத கழுதையாக. சரி, பிறப்பென்ன நம் கையிலா இருக்கிறது? அறை நண்பர் குமார் சேட்டா உதவினார் அவர்களுக்கு.
ஆச்சா? எதிரில் நின்றார்களா?
டோசரி டவர் வாசலில் சிரித்துக் கொண்டே எனை நோக்கி வந்து கொண்டிருந்தனர் இருவர். இந்த இருவரில் யார் கமலேஷ்? தடக், தடக் தடக்,தடக்... தடக்,தடக்...தடக்,தடக்,. பறவையாக இருந்து, குதிரைக்கு மாறி, கழுதையாகி விரும்பி, புகை வண்டியாகவும் மாறிக் கொண்டிருந்தேன்.
தோராயமாக "கமலேஷ்" என கை பற்றினேன் ஸ்ரீதரை.
"நான் ஸ்ரீதர்ப்பா. இது கமலேஷ்" என்றான் ஸ்ரீதர். இருவரிடமும் அப்படி ஒரு ரகசிய சிரிப்பு. அதுசரி! ஸ்ரீதருக்கும் அப்பாவா? மீண்டுமொருமுறை சுண்டி அடங்கியது அடிவயிறு. என்னங்கடா நினைச்சுக் கிட்டு இருக்கீங்க பயல்களா?
எனக்கும் கமலேஷிற்கும் என்னவோ இருக்கு. ஸ்ரீதர்க்கும் எனக்கும் என்ன? ஏன் இந்த ராஸ்க்களும் அப்பா என்கிறான்? அறை நண்பனான கமேலேஷை நண்பனுக்கும் மேலாக வைத்திருப்பான் போல ஸ்ரீதர். அவன் இவனாகவும், இவன் அவனாகவும் மாறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பங்கிற்கும்.
பேசிக் கொண்டே ஸ்ரீதர் காரில் ஏறி ஆலமரம் வந்தோம். "கோடிப் பழங்களில் எதை வேணுமானாலும் கொத்திக் கோயேன் பறவை" என்கிற ஆலமரம். அல்லது கோல்டன் ஜூஸ் கார்னர்.
என்னென்னவோ பேசி தீர்த்துக் கொண்டிருந்தோம் மக்கா.
ரொம்ப நேரமாக தூக்கி வைத்திருந்த இந்த அப்பா பாரத்தை இளக்க விரும்பி, பேச்சின் ஊடாகவே, சிகரெட் பாக்கெட்டை இருவரிடமும் நீட்டினேன். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மீண்டும் ரகசியமாக சிரித்துக் கொண்டார்கள்.
" நீ அப்பாட்ட பேசிட்டே இரு. தம் அடிக்கனும்ன்னு தோணுறப்போ, ந்தா வர்றேன்ப்பான்னு போவேன். நா வந்த பிறகு நீ போய்ட்டு வான்னு சொல்லி வச்சிருந்தான்ப்பா கமலேஷ். நீங்க சிகரெட் பாக்கெட்டை நீட்டுறீங்க" என்று வெடித்து சிரித்தான் ஸ்ரீதர். "இருக்குப்பா" என்றான். பற்ற வைத்துக் கொண்டோம். விரும்பியது போலவே அப்பா பாரமும் இளக தொடங்கியது.
மகன்களை பார்த்த குஷியில் மகளையும் தேட வேண்டிய தேவை வந்தது எனக்கு. அத்தேவையை ஏற்படுத்தினார்கள் இம்மகன்கள். "என்னடா வாங்கிட்டு போறது அப்பாவுக்குன்னு கேட்டுகிட்டே வந்தான்ப்பா கமலேஷ். அப்பாட்டயே கேட்டு வாங்கிக்கலாம்ன்னு கூட்டிட்டு வந்தேன்" என்றான் ஸ்ரீதர், ஒரு கட்டத்தில்.
"ஐயோ. இதுவே தாங்க முடியாமல் வருகிறது. இவ்வளவு செலவு செய்து பார்க்கணுமுன்னு வர்றீங்களே. இது போதாதா?" என்றாலும் விடவில்லை.
"என்னப்பா இது. தங்கச்சிக்கு கல்யாணம் வருதுல்ல. அண்ணன்களா நாங்க எதுனா செய்ய வேணாமா. எங்க தங்கச்சிப்பா. உங்கட்ட என்ன கேக்குறது. நீ ஏண்டா இவர்ட்ட போய் இதை சொல்ற" என்றான் கமலேஷ்.
சரி. தங்கச்சிட்டியே கேட்கலாமேன்னு மகாவை அழைத்தேன். ரிங் போய் எடுக்கும் போது கட்டாச்சு. அவள் மொபைல் அப்படி. பேட்டரிக்கு மூட் இருந்தால் மட்டுமே பேச அனுமதிக்கும். சிரித்து, இவன்களிடம் விபரம் சொல்லி, சார்ஜரில் போட்டுட்டு மிஸ்கால் பண்ணுவாள்" என்றேன்.
சற்று நேரத்தில் மகா மிஸ் கால் செய்தாள். மகன்களை அறிமுகம் செய்து போனை இவன்களிடமும் கொடுத்தேன். அடேங்கப்பா! தங்கச்சியை கொண்டாட தொடங்கி விட்டார்கள் இருவரும். பேசி, பேசி கரைத்து பார்த்திருப்பான்ங்க போல. அவளும் கரையல போல. "தங்கச்சி உங்கட்ட பேசணுமாம்ப்பா" என்று போனை என்னிடம் கொடுத்தார்கள்.
"என்னப்பா என்னை மாட்டி விட்டுட்டீங்க?" என்றாள். சிரித்து, "என்ன செய்ய சொல்ற? என்றேன் அவளிடம். அதேதான் உங்களிடமும் கேட்கிறேன், "என்ன செய்ய சொல்றீங்க மக்கா?"
என்னை அறையில் விடுவதாக கூட்டிட்டு போய், LULU மார்க்கட்டில் e-63 மொபைல் வாங்கினார்கள். 740 ரியால் என்ற நினைவு. சற்றேறக்குறைய பத்தாயிரம் ரூபாய் நம் காசிற்கு. "சிம்ப்ளா பாருங்கடா" என்றாலும் கேட்கல. தோளுக்கு வளர்ந்து விட்டால் நம் பேச்சையா கேட்கிரான்கள் மகன்கள்? கூடவே சிகரெட் வேறு குடிக்கிற மகன்கள்.
அறை வந்து மகளை அழைத்து, " சூப்பர் மொபைல்டா. என் சிம்மை கழட்டி அதில் போட்டிருக்கான்கள். உனக்கு கத்து தரனும்ல. அதுனால பழகிட்டு இருக்கேன்" என்றேன்.
"அதுலாம் நான் கத்துக்குவேன்ப்பா. நீங்க சிம்ம கழட்டி உங்க மொபைல்ல போட்டுக்குங்க. அண்ணன்கள் வாங்கி தந்ததாக்கும்" என்றாள்.
"சர்தான் தாயி" என்றேன். சிரித்தாள்.
இந்த மகன்களையும், மகள்களையும் தோளுக்கு வளர விடாமல் செய்டா கடவுள்.
***
இந்த வாரத்திற்கான நட்சத்திர பதிவர் வாய்ப்பிற்கு மிகுந்த நன்றி தமிழ்மணம்!புரை ஏறும் மனிதர்கள்
1,
2,
3,
4,
5,
6,
7,
8 ,
9