Friday, March 8, 2013

புரை ஏறும் மனிதர்கள் - இருபது


புரை ஏறும் மனிதர்கள் - இருபது


இன்னும் ரியாத்தில்தான் இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால் வெளியில் செல்ல இயலவில்லை.

கேவிஆர் வீட்டிற்கு போக முடியாததும், திருவாலர் (ப்ரபா வந்து, 'லூசு சனியனே அது 'திருவாளர்'. திருவாலர்'ன்னா 'வால் உடைய மதிப்பிற்குரியவர்' ன்னு அர்த்தம். திருந்தவே மாட்டியா?' ன்னு சொல்லுவாள் பாருங்களேன்..) R. கோபி அவர்களை சந்திக்க முடியாததும் ஏமாற்றமாகிவிட்டது.

இப்படியெல்லாம் ஏமாற்றம் தோணாது முன்பெல்லாம். வயசாகிற காரணமா இருக்கலாம்ன்னு நினைக்கிறேன். நாளை கோபார் கிளம்ப வேணும்.

பேத்திகளுக்கு என கொஞ்சம் டேட்ஸ் ஒதுக்கி வைத்திருக்கிறேன் என முந்தைய டைரிக்குறிப்பு ஒன்றில் சொல்லியிருந்தேன் இல்லையா?.

.'சரி அதையாவது அனுப்பி வைப்போம். நம்ம பொழப்ப சொல்ல முடியாது' ன்னு சுதாரித்தேன். 'கூப்புட்றா சலாலுதீன் சேட்டாவ' ன்னு கூப்பிட்டு விஷயம் சொன்னேன்
.
'அதுக்கென்னடா செஞ்சுருவோம்' என்றார். இந்த சலாலுதீன் சேட்டா ஒரு ஆச்சரியம் . எல்லோருக்கும் உதவி செய்யவே பிறவி எடுத்தது போலவே துறு துறுன்னு (துருவா துறுவா ப்ரபா?) அலைவார். எனக்கு மட்டும் இல்லை. ரியாத் பேலஸில் எல்லோரிடமும் இப்படி ஒரு பெயர் எடுத்து வச்சிருக்கிறார்.

ராஜாவையும் சலாலுதீன் சேட்டாவையும் கனெக்ட் (கனெக்ட்டா கணெக்ட்டா ப்ரபா?) பண்ணேன். ராஜாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது,

'மாம்ஸ் ஒரு சின்ன விஷயம்..மீன் குழம்பு வச்சிருக்கேன். அதை சேட்டாட்ட கொடுத்தனுப்பலாமா?' ன்னு கேட்டார்.( இது சின்ன விஷயமா? நாக்கு செத்துப் போய் கெடக்கு)

'ஆஹா கொடுத்தனுப்புங்க'

டேட்ஸ் போய் மீன் குழம்பு வந்தது டும் டும் டும் டும்.
.
சேட்டா கொண்டு வந்து மீன் குழம்பை தந்தபோது சுப்ராவில் (டைனிங் ஹால்) இருந்தேன். முதலாளிக்கான மதியச் சாப்பாடு செட்டிங்கில் இருந்தோம் எல்லோருமா.

பிளாஸ்டிக்பை ரெண்டு மூடிய டப்பாக்களுடன் சுப்ரா நுழைந்த போது ஃபிலிப்பினோ நண்பன்கள் சூழ்ந்து கொண்டான்கள்.

ஆளுக்கு அவ்வஞ்சு ரியால் போட்டு புரட்டா கறி வாங்குகிற அளவிற்கு அவன்களை பழக்கி வைத்திருக்கிறேன். அவன்கள் சிக்கன் அடபோ எனக்கும் பிடிக்கும். பழக்கி வைத்திருக்கிறான்கள். எனவே பிளாஸ்டிக்பை, மூடிய டப்பான்னு வந்துட்டாலே சாப்பாடுன்னு ஜெனரலா தெளிவாகி விடுவோம். இப்படியான கூட்டங்களின் நடுவேதான் இந்த மீன்குழம்பும் மீன் வறுவலும் வந்திறங்கியது.

மீன் வறுவல் சாப்பாட்டிற்கு முன்பே முடிந்தது. மீன் குழம்பை எல்லோருமாக சாப்பாட்டில் தெளித்துக் கொண்டு சாப்பிட்டோம். சுர்ருன்னு இருந்தது எனக்கு காரத்தைச் சொல்லவில்லை. ருசி.

ராஜாவை அழைத்து, 'மீன் குழம்பை நெருப்புக்குத்தி வைக்கிறீங்களா மாப்ஸ்? லதா வைக்கிற மீன் குழம்பு போலவே இருந்தது'

'சும்மா மண் சட்டியில் வைத்ததுதான் மாம்ஸ்'

'இல்ல ராஜா..லதா மீன் குழம்பு ஆயிட்டு இருக்கும் போதே ஒரு கங்கை எடுத்து உள்ள போட்டுட்டு மூடி வைப்பாள். அந்த மாதிரி எதுவும் செஞ்சீங்களா?'

'இல்லை மாம்ஸ். கங்குக்கு எங்க போறது. வெறும் மண்சட்டிதான்'

'வீட்டில் கேஸ் வந்த பிறகு, கரியை கேஸ் அடுப்பில் தீ எடுக்கியில் நீட்டி முன்னையும் பின்னையும் வாட்டியபடி நின்னுக்கிட்டு இருப்பாள். கங்கானதும் வைத்து இறக்கப் போற மீன் குழம்பில் போடுவாள். எதுக்கு இவ்வளவு மெனக்கெடுறாள் மீன் குழம்புக்குப் போயி' ன்னு எத்தனையோ தடவை வந்திருக்கிறது.

சேட்டன்மார்கள் ஈரிழை வெள்ளைத்துண்டை தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டு தேங்காய்ப் பொடி வறுத்தும் ,மிக்ஸ்சியில் பொடித்தும் தும்மிக் கொண்டும் ஒரு மீன் குழம்பு வைத்து வருகிறார்கள்.

'ரைட்டு. தும்மிட்டார்கள். இன்னைக்கு மீன் குழம்பு' ன்னு ஹாலில் காய்கறியோ சாலட்டோ வெட்டிக் கொண்டிருக்கிற செம பிரில்லியண்ட் ஆன எனக்குப் புரிந்து விடும்.

பாருங்க.. மீன் குழம்பு இதுக்குள்ளயெல்லாம் சிக்காது. எப்பனா சிக்கும். அன்னைக்கு நாமளாப் பாத்து 'இதாண்டா மீன் குழம்பு' ன்னு வாரி குடிச்சிக்கிற தோணும்.

அப்படியான மீன் குழம்பை ராஜா அனுப்பித் தந்திருந்தார். வாரிக் குடிக்க முடியலை. அஞ்சு பேர்களை விட்டுட்டு எப்படி வாரிக் குடிப்பது?

மனுஷன் பிரியாணி செய்கிறார். மண் சட்டியில் மீன் குழம்பு செய்கிறார், டெர்ரர் கும்மி போட்டியில் முதலாவதாகவும் வருகிறார்..ஒரு மனுஷனுக்கு இவ்வளவு நல்லது ஆகாதுங்குறேன். என்ன நான் சொல்றது?

இவர் நம்ம செட்டுக்கு ஆகமாட்டார். மரியாதையா தள்ளி நின்னுக்கிற வேண்டியதுதான். பொண்ணக் கொடுத்திருக்கோம். நேக்குப் போக்காத்தானே நடக்கணும்.

ரியாத் வந்துட்டு ரெண்டு தடவ கோபியை அழைத்திருந்தேன். அதில் ஒரு தடவ,'ப்ளஸ்ல என்ன விசேஷம்?' ன்னு விசாரித்தேன்

'நம்ம கபீஷ் இருக்காங்கல்ல அவங்கள ஜெமோ குழுமத்தில் சேர்த்துக்கலயாம். ஒரு ப்ளஸ் விட்டுருந்தாங்க' என்றார்.

'ஆக்கா..நான் இல்லாமப் போய்ட்டனே..செம ஓட்டம் ஓடியிருக்குமே கமண்ட்டெல்லாம்'

'ஆமா. செம ஜாலியா இருந்தது' ன்னு சொன்ன கையோடு,'என்ன சேர்த்துக்கிட்டாங்க. போன மாசம்தான் சேர்ந்தேன்'

ரெண்டையும் ஒரே டயத்துல சொல்ல கோபியால்தான் முடிகிறது. (கபீஷ்க்கு இந்த விஷயம் தெரிய வேணாம் நண்பர்களே ப்ளீஸ்)

'கோபி வேல சரியா இருக்கு. ஒரு சாப்பாடு கேன்சல் ஆனாலும் புறப்பட்டு ஓடி வந்துர்றேன்'

'வேலைய பாருங்க பாரா. எங்க போயிறப் போறோம். இந்தத் தடவ இல்லைன்னா அடுத்த தடவ' என புத்தர் போல பேசினார். இவரும் நம்ம செட்டுக்கு ஆக மாட்டாரோ என வருத்தமாக வந்தது. (புத்தர் குரல் போல ட்ரையாக இல்லாமல் குழந்தையின் குரல் போல ரொம்ப உற்சாகமாக இருந்தது கோபியின் குரல்)

எரிச்சலுக்கு மேல் எரிச்சலாக வந்து கொண்டிருந்தது.

சனி மாலை 6.45 இருக்கும். சுப்ராவில் இருந்து இதை எழுதிக் கொண்டிருந்தேன். 7.30 க்கு எங்க வேலை ஸ்டார்ட் ஆவும். ஒரு ஃபோன் வந்தது பேலஸ் ஃபோன். சாப்பாடு கேன்சல் என்கிற தகவல்.
'நல்ல கருத்து நன்றி' ன்னு ராஜாவை அழைத்து விபரம் சொன்னேன்.

'ம்ம்ம்..வெளியில் இருக்கேனே மாம்ஸ்
'
'சரி பாருங்க மாப்ஸ். அடுத்த தடவ ட்ரை பண்ணலாம்'

'இல்ல கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எட்டு மணிப்போல கூப்பிடறேன் . சரியாகி வந்தால் வந்துர்றேன்' என்றார்.

'எல்லாம் சரியாகி வந்துடும்' ன்னு நினைத்துக் கொண்டு யூனி ஃபார்ம் அவுத்து எறிஞ்சுட்டு குளித்து சிவிலுக்கு மாறினேன்.

திருவிழாவிற்கு கிளம்பி இருக்கிற குடும்பஸ்திரி மாதிரி மேக்கப்லாம் ஏத்தி மேலேறி வந்து ராஜாவின் ஃபோனுக்காக காத்துக் கொண்டிருந்தேன். (ரியாத் பேலஸில் எங்க ரூம் அண்டர் கிரவுண்டில் உள்ளது. மேலேறி வந்தால்தான் சிக்னல் கிடைக்கும்)

7.35 க்கு ராஜா அழைத்தார்
.
'மாம்ஸ் சாரி.. டயத்துக்கு வரமுடியாது போல இருக்கு. தப்பா நினைச்சுக்காதிக..வேறொண்ணுமில்ல' ன்னுட்டு ஒரு சந்தோஷமான விஷயம் சொன்னார். (லயாவிற்கு தம்பி வரப் போறான் என நீங்க யோசிப்பீங்கன்னு தெரியும். இல்லை. இது வேற சந்தோசம். பகிர எனக்கு ரைட்ஸ் இல்லை. அவரா பகிர்ந்து கொண்டால் எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. கேட்டீங்களா?)

'அடப் பாருங்க மாப்சு எங்க போயிறப் போறோம் ' ன்னுட்டு ஆப்பரேசன் - 2 வை தேர்ந்தேன். (ஏத்துன மேக்கப்ப வேஸ்ட்டாக்க யாருக்குதேன் மனசு வரும்?)

கோபியை அழைத்தேன். சலாலுதீன் சேட்டாவை அழைத்தேன். சரியா வந்தது. கிளம்பிட்டேன்.

ஒரு விதமான பதட்டம் தொற்றிக்கொண்டது. கருவேலநிழல் ப்ளாக் திறந்த பிறகு இந்த புரை ஏறும் மனிதர்களுக்கென நான் தேடிக் கொண்டிருக்கிற மனிதர்களைப் பார்க்கப் போகிற பதட்டம்.

முதன்முதலாக நவாசுதீனை ஜெத்தாவில் வைத்து பார்க்கப் போன பதட்டம் போலவே இருந்தது. 'நான் அப்படியேதான் இருக்கிறேன். நாளுதான் மாறுது போல ன்னு என்னை எனக்கே பிடித்து வந்தது.வெளி தேசம் வந்த பிறகு நம்மை நமக்கே பிடிப்பது சும்மா இல்ல.. வெலகுங்க.. பிடிச்ச மாதிரி இருந்துட்டுப் போறேன்.

கோபாருக்கு வெல்கம் ஜூஸ் செண்டர்னா ரியாத்துக்கு அஜீசியா பண்டா என பழகி வருகிறது. (நிலாவை அங்குதான் பார்த்தேன். ராஜாவை முன்னாடியே பார்த்துட்டேன்)

கோபியை அஜீசியா பண்டா மெக்டொனாட்ல்ஸ் வாசலில் வைத்துப் பார்த்தேன்.

ஆறாப்பு படிக்கும்போது எனக்கு R.V. சரவணன் என்ற நண்பன் 'குட்டையா'ன்னு பெயர் வைத்தான். இப்ப கப்பலில் கேப்டனாக இருக்கிறான். ஆறாப்பு தொடங்கி டிகிரி முடிக்கிறது வரையில் இந்தப் பயபுள்ள கூடயே வந்துட்டு இருந்துச்சா.
நண்பர்கள் வீட்டிலும் (அம்மாப்பா முதற்கொண்டு) 'டே குட்டையன் வந்திருக்காண்டா' ன்னு உருப்படிக்கு அழைப்பார்கள். அப்ப அவ்வளவு கஷ்டம் தெரிந்ததில்லை.அப்ப எந்தக் கஷ்டம் தான் தெரிந்திருக்கு? சந்தோஷமாகக்கூட இருந்திருக்கு. உரிமையாய் அழைக்க ஒரு வேவ் லென்த் வேணும். அது நண்பர்களிடமிருந்தானே தொடங்கும்.

'ஏங்க கப்பல்சரவணன் உங்கள தேடிட்டு வந்துச்சே. பாத்துட்டீங்களா?'ன்னு எங்களுக்கு குழந்தைகள் வந்த பிறகு லதா கேட்டாள்.

'இல்லையே புள்ள என்ன சொன்னான்?'

'குட்டையன் இருக்கானாத்தான்னு கேட்டு வந்துச்சு '

'என்ன சொன்ன?'

'அங்கிட்டுதானே வந்தாப்ல.என்னைக்கு வீடு தங்கியிருக்காரு ஒங்க குட்டயருன்னு சொன்னேன்'

சில நேரங்களில்,'குட்டையா என்னப்பெத்தாரு ரேஷன்கடை வரைக்கும் போயிட்டு வந்துறேன்' ன்னு லதாவை சர்வ சாதாரணமா செல்லம் கொஞ்சுற அளவுக்கு இந்தப் பெயரை பழக்கி வைத்திருந்தான்கள். நானும் கூட குட்டயன்னா அது நான் மட்டும்தான்னு நம்பியே வந்திருக்கிறேன்.

அந்த நம்பிக்கையெல்லாம் ஈசியா தகர்த்தார் கோபி.

'ஏ.. இங்க பாருடா நம்ம விட குட்டயரு' ன்னு ஓடிப் போய் கட்டிக் கொண்டேன் அவர் அளந்தாரான்னு தெரியலை. நான் அளந்த வகையில் மில்லி மீட்டர் நான் உயரமாக இருந்தேன்.

நானும் 'குட்டையா' ன்னு அழைக்க ஒரு நாள் ஆள் வரும் என கனவிலும்கூட நினைச்சது இல்லை. அதா வாச்சது பாசு .

கோபிக்கு காரோட்டிக் கண்ணனாக வந்த அஸ்லாம் பாயிடம்,' வணக்கம் சார். நான் ராஜாராம்' என அறிமுகமாகிக் கொண்டேன். எனக்கு காரோட்டி வந்த சலாலுதீன் சேட்டாவை,' சேட்டா ரொம்ப நன்றி' என கை பற்றினார் கோபி.

சில விஷயங்கள் பாத்துத்தான் படிக்க வேண்டியதாகிறது. பிறகு நானும் சாரை தூக்கிப் போட்டுட்டு அஸ்லாம் பாயை அஸ்லாம் பாய் என்றே அழைத்தேன்.

கார்ல உக்காந்ததுமே 'கோபி சாப்ட்டுப் போயிருவோமா?' ன்னு கேட்டேன். பெரிய அன்னவெறி ஹசாரேவேவா இருப்பான் போலயேன்னு அவர் யோசித்திருக்கலாம். யோசிச்சா யோசிச்சுக்கிறட்டும். இதுக்குலாம் பயந்தா முடியுமா?

'வீட்டுக்கு போயிட்டு ஆர்டர் பண்ணலாம் பாரா. வீட்டுக்கு வந்துரும். வீட்டை குப்பையா போட்டு வச்சுருக்கேன்' ன்னு லைட்டா சீனப் போட்டாரு. 'அப்படி இல்லாட்டி அதெப்படி பேச்சிலர் வீடு' ன்னு நானும் ஒரு ஹெவி சீனைப் போட்டுக் காட்டினேன்.

கலகலன்னு பேசிக் கொண்டு கோபி வீடு சேர்ந்தோம். உள்ள போறதுக்கு முன்னால வாசலில் ஒரு கேபின். அதில் இருந்த ஆளிடம் என் இக்காமாவை கொடுக்கச் சொன்னார் கோபி.

இக்காமான்றது நம்ம ஓட்டர் ஐ.டி மாதிரின்னு வைங்களேன். ஓட்டர் ஐ.டியை நம்ம நாட்ல ஓட்டுப் போடப் போற நாள் அன்னைக்கு மாத்திரம் எடுத்து பர்சில் வைப்போம்.

இல்லாட்டியும் பிரச்சினை இல்லை. யாராவது நம் ஓட்டைப் போட்ருவாங்க. என்ன.. 'அண்ணே ஒங்க ஓட்டப் போட்டுட்டேன். வெட்டியா அலையாதீங்க' ன்னு ஒரு அழுத்து சைக்கிளில் வந்து சொல்லிட்டால் நமக்கும் திருப்தியா இருக்கும். (இப்படியான சிறு சிறு குறைகள் வளர் ஜனநாயக நாட்டில் யதார்த்தமே )

வக்காளி இங்கு வேற மாதிரி வச்சுருக்காய்ங்க. இக்காமா இல்லாமல் கக்கூஸ்கூட போக முடியாது.

இப்படியான இக்காமாவை கொடுக்கச் சொல்றாரே என சற்று யோசனையாக வந்தது. கொடுத்த ஆளிடம் மச்சம், மரு வகைகளை அடையாளப் படுத்தி வைத்துக் கொண்டு கோபி வீட்டிற்குள் நுழைந்தேன்.

ரொம்பப் பிடிச்சிருந்தது கோபி வீடு. கிளிக் கூண்டு மாதிரி லெச்சணமா இருந்தது. கிச்சனில் இருந்த டைனிங் டேபிளில் துவைத்த துணிகள் கிடந்தன. (ஒரு மனுஷனுக்கு எதுக்கு இம்புட்டுத் துணிகள்?)

டைனிங் டேபிளில் துணிகள் கிடந்தால், வாஷிங் மிஷினுக்குள் அமர்ந்து சாப்பிடுவாரா இருக்கும் கோபி என நினைத்துக் கொண்டேன். நினைக்க நல்லாருந்தது. அதிலும் வாஷிங் மிஷினை ஆன் பண்ணி சுத்திக் கொண்டே சாப்பிடுவாரா இருக்கும் என நினைப்பை நீட்டிப் பார்த்தேன். ரொம்ப நல்லாருந்தது.

பேசிக்கொண்டிருக்கும் போது 'இணையத்தில் எழுதுபவர்களை பத்துப் பேர்களைத்தான் நல்லா எழுதுறாங்கன்னு சொல்ல முடியும்..ஹேண்ட்ஸ் ஃபுல் ஆஃப்ன்னு சொல்வாங்க இல்லையா.?' என ஒரு சுவீப் ஸ்டேட்மென்ட் விட்டார்.

'ஆமாவா'ன்னு அவரயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு ஆறு பேர்கள் வரைக்கும் விரல் மடக்கினார். அதில் என் பெயர் இல்லை என்பதில் எனக்கு வருத்தம் சூழத் தொடங்கியது.
மிச்சம் நாலு பெயர்களை அதுசமயம் அவருக்கு ஞாபகம் வரலை

. 'மிச்ச நாலு பேர்கள் யாரு கோபின்னு?' ன்னு மனசு விட்டு கேட்டுறலாமான்னு தோணியது. பயமாகவும் இருந்தது.

இதில் இரண்டு விதமான ஆபத்துகளை சந்திக்க நேரலாம். ஒண்ணு மிச்ச நாலு பேர்களிலும் என் பெயர் இல்லாமலேயே போய்விடலாம். ரெண்டு கோபி பெயர் இருந்தாலும் இருந்துவிடலாம். முன்னதை விட பின்னது மிகுந்த ஆபத்தானது என சைலண்ட் ஆயிட்டேன்.

நான் எதிர்பார்த்த அளவெல்லாம் கோபி இலக்கியம் பேசவில்லை. என்னைக் குஷிப்படுத்த விரும்பி மொக்கையாக அடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார் என ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டேன். பார்த்ததும் சலாலுதீன் சேட்டாவை சேட்டா என அழைக்கிற ஒரு மனுஷனுக்கு என்னைக் குளிப்பாட்ட இம்மி நேரம் ஆகுமா? நான் சும்மாவே சிரிப்பேன். கோபி பேசப் பேச சிரித்துக் கொண்டே இருந்தேன்.

கோபி துணுக்கு தோரணங்களாக கட்டி ஆடுகிறார் மனுஷன். ரெண்டு தோரணங்களை மட்டும் இங்கு தொங்க விடலாம்.

கோபி வீட்டிற்குள் போனதுமே ஃப்ரிட்ஜில் இருந்த லபானை ஒரு டம்ளரில் ஊத்திக் குடித்தார். 'பாரா லபான் குடிக்கிறீங்களா?' என வேறு கேட்டார். இன்னும் பால்குடியே மறக்காத பாலகனைப் பார்த்து தயிர் குடிக்கிறீங்களா என கேட்கிறார். இவரை பதிலுக்கு அசிங்கப்படுத்தாமல் விடக்கூடாது எனக் கறுவி வைத்துக் கொண்டேன். சந்தர்ப்பமும் வாய்த்தது.

டம்ப்ளரில் ஊத்தி கடைசி சொட்டு வரையில் விழணும் என தலையை அண்ணாந்தார். இப்பத்தான் அண்ணாக்க இருக்கார்
இதுதான்டா சமயம்ன்னு

'கோபி நீங்க CA ல்ல?. CA கஷ்டமான கோர்ஸ்ன்னு சொல்வாங்களே. எப்படி பாஸ் பண்ணீங்க.. அதுவும் நீங்க போயி?' என்றேன்.

'டூ தவுசனில் Y2K ன்னு ஒரு ப்ராப்ளம் வந்தது பாரா'

'ஆமாமா நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் கம்ப்யூட்டருக்கெல்லாம் எதோ பிரச்சினை வரப்போதுன்னு'

'அதேதான். கம்ப்யூட்டர் கோளாறா எனக்கு மார்க் அள்ளிப் போட்டிருக்கும் போல பாஸ் பண்ணிட்டேன்'

#

நமக்காக மொக்கையாக அடித்து தள்ளிக் கொண்டிருக்காரே அவருக்காக நாம் ஏன் அவருக்குப் பிடித்த இலக்கியம் பேசக் கூடாதுன்னு மனசு இறங்கி வந்தது.

'தி.ஜா கும்பகோணம் தானே கோபி?'

'பின்னே. தி.ஜா, எம்.வி வெங்கட்ராம், குடந்தை R.கோபி ராமமூர்த்தி எல்லோரும் கு,கும்பகோணம் தான்'

முதல் ரெண்டு ஆளுகளை வாசித்திருக்கிறேன். மூணாவது ஆள் மட்டும் பிடிபடாமல் கோபியைப் பார்த்தேன்.

'என்ன பாக்குறீங்க? நான்தான்' என்றார்.

ஏழாவது விரலையும் மடக்கிட்டாரே என எனக்கு வயித்தெரிச்சலாக வந்தது.

#

இப்படி கூட இருந்த நேரம் முச்சூடும் தான் சிரிக்காமல் எதிராளியை சிரிக்க வைக்கிற டேலண்ட் கோபிக்கு இருக்குங்குறேன்.

'பாலராஜன் கீதா சார் நீங்க வந்தா தகவல் சொல்லச் சொன்னார் பாரா' ன்னு இடையில் சொன்னார்.

'ஐயோ..கேவிஆர் வீட்டுக் போயிருந்தப்பவே இவரை சந்திக்க விட்டுப்போச்சு கோபி. கேவிஆர் வீட்டுக்கு பக்கத்துலதான் என் வீடும். தெரிஞ்சிருந்தா கண்டிப்பா வந்திருப்பேன்னு எனக்கு மெயில் கூட செய்திருந்தார்'

'நீங்களே பேசுங்க' என அவர் மொபைலில் இருந்து கால் பண்ணி எனக்கு கொடுத்தார்.

'வணக்கம் கோபி' எனத் தொடங்கினார் பாலராஜன் கீதா சார்.

'சார் வணக்கம். நான் ராஜாராம் பேசுறேன்'

'பாரா..நல்லாருக்கீங்களா? தொப்ளான் நல்லாருக்காரா? மஹா சசி நல்லாருக்காங்களா?' என ஒரு சொடுக்கலில் வீட்டில் உள்ள எல்லோர்களையும் விசாரித்தார். லதாவை விசாரிக்கவில்லை. (இது லதா தகவலுக்காக)
தொப்ளானை ஒரு லேண்ட்மார்க் ஆக்கி வைத்திருக்கிறேன். இனி அவனைப் பிடிச்சுதான் நம்ம இடத்துக்கு வரணும் என்பது போல. ரொம்ப சந்தோஷமாக இருந்தது /இருக்கிறது.

கோபி போனை வாங்கி,'கிளம்பி வாங்க. சாப்பிடுறதுக்கு இங்க வந்துருங்க' ன்னு கம்ப்பெல் பண்ணினார்.

அவரும் ஒரு டாக்ஸியைப் போட்டுக் கொண்டு கிளம்பி வந்துட்டார்.

பாலராஜன் கீதா சார் வந்தப்போ தம்மடிக்கிறதுக்காக கோபி வீட்டு காம்பவுண்டு வெளியில் வந்து பேசிட்டு நின்னுட்டிருதோம். கோபி சிகரெட் குடிப்பதில்லை. லபான் மட்டும்தான் குடிக்கிறார். (என்னைக்கு திருந்தி என்னைக்கு நல்லா வரப்போராறோ )

செம சிரிச்ச முகம் பாலராஜன் கீதா சாருக்கு. இவர ரெண்டு தடவ கட்டி இறுக்கிக் கொள்ளலாம் போலயேன்னு வந்தது. ஒரு தடவதான் வாய்த்தது. அடக்க மாட்டாமல், 'ஸ்மைலிங் ஃபேஸ் சார் உங்களுக்கு' ன்னு சொன்னேன். அவரும் நன்றி சொன்னார்.

பிறகுதான் ஞாபகம் வந்தது.கோபியை பார்த்தப்போ இந்த மாதிரி கமண்ட் எதுவும் வைக்கலையேன்னு.

சரி.. ஒரு பொய்யை வீணாக்க வேணாம் நாளப்பின்ன உதவும்ன்னு என்னை சமாதானம் செய்து கொண்டேன் .

பாலராஜன் கீதா சார், கோபி, நான் மூவருமாக கோபி வீட்டிற்குள் நுழைந்தோம். வந்து சற்று நேரத்திற்கெல்லாம் பாலராஜன் சார் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் படங்களை கோபிக்கும் எனக்கும் பரிசளித்தார்.

பச்சை பார்டர் வைத்த வெள்ளைப் பட்டில் அம்மன் மின்னினார்கள். (எனக்கு ஏன் இன்னும் இந்தப் பழக்கம் வரமாட்டேங்குது? யாரையாவது பார்க்கப் போனால் நம் ஞாபகமாய் எதாவது கொடுத்து வரவேணும் என்பது. சரி..டைனோஜி மாதிரி டீனேஜ்தானே எனக்கும். போகப் போக எல்லாம் தானா வந்துரும்)

'சரஸ்வதிக்கு எங்கும் தனி ஆலயம் இல்ல பாரா. அந்த ஏரியாவில் ரொம்பவும் பிரசித்தி பெற்ற ஆலயம் இது. வருஷம் தவறமால் போய்ட்டு இருக்கேன்' -பாலராஜன் சார்.

'சரஸ்வதில்லாம் கும்புடுறீங்க சரியா எழுத்து வரமாட்டேங்குதே?- கோபி

அவர் கொஞ்சம் ஷாக்காகி என் முகத்தைப் பார்த்தார்.

'என்ன சார் என்னைய பாக்குறீங்க. சொன்னது அவரு. வந்ததிலிருந்து வெளு வாங்கிக்கிட்டுருந்தேன் . நீங்க இப்பத்தானே வந்தீங்க. வாங்குங்க' ன்னு இரக்கமில்லாமல் நினைத்துக் கொண்டேன்.

அடி தாங்க முடியாமல் போகும்போதெல்லாம்,' அய்யோ அம்மா' ன்னு ஊரக் கூட்டி நம்ம ஆளுகளை வரவைத்து, அடியைப் பகிர்ந்து வாங்க வைப்பது ஏழுகடை ராஜதந்திரம் நம்பர் - 1

ரொம்ப வாடிட்டாரே பாலராஜன் சார்,' என்ன கோபி இப்படி சொல்லிட்டீங்க. நானும்தேன் ஆஞ்சநேயர் பக்தன். அதுக்காக என்னை தைரியசாலின்னு சொல்லிற முடியுமா?' என மடக்கலாமா என ஒரு ஐடியா வரத்தான் வந்தது.

'நீங்க ஆஞ்சநேயர் பக்தனா பாரா. அதான் அதே சாயலா இருக்கீங்க' என பூமராங் திரும்பினாலும் திரும்பலாம்.

ஒருத்தரைப் பத்தி புரிஞ்சுக்கிட்டா அப்புறம் வால் நீட்டக் கூடாது என்பது ஏழுகடை ராஜதந்திரம் நம்பர் -2.

பாலராஜன் சார் ஒரு கேமரா கொண்டு வந்திருந்தார். சின்னதா, அழகா, செப்பு போல. எனக்கு கேமராவைப் பிடிக்கும்.

கேமராவிற்கு பின்னால் நிற்க. (ஒரு காலத்தில் கேமரா மேனாக்கும்) முன்னால் நிற்பது என்றால் ஜெயிண்ட் வீலில் சுற்றுவது போல வயிறெல்லாம் கூசி வரும். இப்ப இப்ப பழகி வருகிறேன். (உதுத்துட்டேன்)

கட கடவென ஃபோட்டோ சூட் நடத்தினார் பாலராஜன் சார். நானும் கோபியும் மாத்தி மாத்தி போஸ் கொடுத்தோம். கேமராவில் உள்ளதுதான் வரும் என்று தெரியும். இருந்தாலும் நம்பிக்கைதானே வாழ்க்கை. வலிமையும் . என்ன கோபி?

'எங்கட்டையும் கேமரா இருக்கு. நாங்களும் எடுப்போம்ல' என கோபி ரூமிலிருந்து ஒரு கேமராவைத் தூக்கிக் கொண்டு வந்தார். மொரட்டுத்தனமான கேமரா அது. கூலிக்கு ஆள் வைத்துத்தான் தூக்கிட்டு போகணும் வரணும் போலான கேமராவாக இருந்தது. ஜிம்முக்கெல்லாம் போவாராக இருக்கும் கோபி. அசால்ட்டா சொந்த சத்துலயே தூக்கிக் கொண்டு வந்தார். வந்தவரால் கேமரா மூடியைத்தான் கழட்ட முடியவில்லை.

கொஞ்சம் முக்கினார். கொஞ்சம் முண்டினார். பிறகு நிறையவும் முக்கினார். நிறையவும் முண்டிப் பார்த்தார். ம்ஹூம். கேமரா வாய்ப்பு தரவில்லை. (அவர் குற்றமன்று)

'இப்படி கழட்டணும் கோபி' என பாலராஜன் சார் கவரின் இரு பக்க காதுகளை ப்ரெஸ் பண்ணியபடி கழட்டிக் காட்டினார். 'இவரை கூப்பிட்டுருக்கவே வேணாமோ' என கோபி யோசித்திருந்திருக்கலாம். யோசிக்க எல்லோருக்கும் உரிமை இருக்குதானே..

கோபி ஆர்டர் செய்த சாப்பாடு வந்தது. ரொட்டி, ரைஸ், தால், கடாய் வெஜிடேரியன், இன்னும் என்னென்னவோ.. சாப்பாடு விஷயங்களில் சரியாக ஞாபகம் வைத்திருப்பேன். இப்ப வரமட்டேங்குது. இப்படித்தான் புத்தியை பலநேரங்களில் கடன் கொடுத்து விடுகிறோம்... இல்லீங்களா வித்யா சந்திரசேகரன்? (இந்த விஷயத்தில் புத்தியை கடன் கொடுக்கவே மாட்டார்கள் வித்யா சந்திரசேகரன்- குசும்பன்)

ரூம் ரம்மியமான வாசனைகளால் நிறையத் தொடங்கியது(வாய் ஊறியது என்பதை எவ்வளவு டீசண்டாக சொல்ல வேண்டியதிருக்கிறது)

பாலராஜன் சார் சாப்பிட்டு வந்துட்டதாக மல்லுக் கட்டினார்..

'அட..உக்காருங்க சார். சும்மா கை நனைங்க'

உக்காந்து விட்டார்.

மூவரும் ஃ - னா போல தரையில் சம்மணம் கூட்டி அமர்ந்து கொண்டோம்.

தட்டு எடுக்க உள்ள போன கோபி, ;' ஆஹா ஒரு தட்டுதானே இருக்கு..இப்ப என்ன செய்றது?' என வந்தார்.

'ஆமாங்க இது ஒரு பிரச்சினை. இதுக்கு ரெண்டு அனாசின் சாப்பிட்டா சரியாகிடும்' ன்னு சொல்லத் தோணியது. சொல்ற நேரத்திற்கு சாப்பாட்டைப் பிரித்து விடலாம் என்பதால் செவ்வக சோத்து டப்பாவைத் திறந்தேன். சோத்து டப்பா மூடி கிட்டத்தட்ட ஒரு தட்டு போல மலர்ந்தது. ' கோபி இந்த மாதிரி தேவைகளை கால்குலேட் பண்ணித்தான் இப்படி ஒரு பாக்ஸ் போடுறாங்க போல. பாருங்க இப்ப இது தட்டாயிருச்சு' என்றேன்.

அரையரைக்கா புன்னகையை டெலிவெரி செய்த கோபி, 'என்னத்தையாவது சொல்லுங்க' என்றார்.

எப்பனாத்தான் சயிண்டிஃபிக்கா ஜிந்திப்பேன். அது பெரும்பாலும் இப்படித்தான் தோல்வியில் முடிகிறது. முருங்கை மரம் பிதுக்கும் பிசினிலிருந்து சாம்பிராணி ஃபேக்டரி தொடங்க முடியும் என்பது என் பழைய ப்ராஜக்ட். பதினோரு வயதில் ஜிந்திச்சது. இப்ப வரையில் கை கூட இயலவில்லை.. அப்ப செல்வராஜ். இப்ப இந்த கோபி. நண்பர்கள்தானே எதிரி.

பாதி ரொட்டி சாப்பிட்டு தள்ளி உக்காந்துகொண்டார் பாலராஜன் சார். (கை நனைச்சுட்டாராமாம்)

என் வண்டி போய்க் கொண்டிருந்தது. ஊறுகாய் இருந்தால் இன்னும் ரெண்டு கவளம் சாத்தலாம் போல வந்தது.

'ஊறுகாய் வாங்கி வச்சுக்குங்க கோபி. நம்ம ஊர் ஊறுகாயெல்லாம் இங்க கிடைக்குது'

'ஊறுகாய் வேணுமா பாரா? ஃபிரிட்ஜ்ல இருக்கு' என எழப் போனார் கோபி.

'நீங்க சாப்பிடுங்க. நான் எடுத்துட்டு வர்றேன்' ன்னு பாலராஜன் சார் எழுந்து போனார். ஃப்ரிட்ஜ் திறக்கிற சத்தம் கேட்டது. மீண்டும் ஃபிரிட்ஜ் மூடும் சத்தம் கேட்கவே காணோம். அந்த சத்தமும் வந்தால்தானே ஊறுகாய் வரும். இதுதானே லாஜிக்.

ஒரு கட்டத்தில் 'ரொம்பத் தடவுறாரே ஊறுகாய்க்குப் போயி பாலராஜன் சார்' ன்னு நான் எழுந்து போனேன்.

பல்லில் விரல் வைத்தபடி மலர்ந்து சிரிக்கிற எம்.ஜி.ஆர். ஃபோட்டோவை எல்லா அதிமுக காரர்கள் வீட்டிலும் பார்க்கலாம். அந்த ஃபோட்டோ இல்லையெனில் அது அதிமுகக்காரர்கள் வீடில்லை என அடித்துச் சொல்லலாம். அவ்வளவு பிரசித்தம் எம்.ஜி.ஆரின் அந்தப் புகைப்படம்.
( அந்த புகைப்படத்து எம்ஜியார் போலவே, பல்லில் கை வைத்தபடியும், திறந்த ஃபிரிட்ஜின் கதவு தானாக மூடிவிடாதபடிக்கு ஒரு கையில் தாங்கிக் கொண்டும் தேடிக் கொண்டிருந்தார் பாலராஜன் சார். ஊறுகாயை. (நெற்றியில் கோடுகள் கூட ஓடியது)

'அய்யயே இம்புட்டு சிந்திக்கிறாரே.. தள்ளுங்க சார்' ன்னுட்டு நான் ஊறுகாயைத் தேடத் தொடங்கினேன்.

ஃபிரிட்ஜின் மேல் தட்டில் வெள்ளரிக்கா கட்டு ஒண்ணு பிளாஸ்டிக் பிரிக்கப்படாமல் இருந்தது. இரண்டாவது தட்டில் ஒரு சதுர டப்பாக்குள் நாலஞ்சு சப்போட்டாப் பழங்கள் கிடந்தன.பக்கத்தில் கோபி குடிச்சுட்டு வச்ச லபான் கேன்
.
மூன்றாவது தட்டில் சில ஐட்டங்கள் இருந்தன. அவை யாவும் ஊறுகாய்க்கு பொருந்தாத சாயலில் இருந்ததால் என் நெற்றியிலும் கோடுகள் ஓடத் தொடங்கின.

எங்கள் குடும்பம் பாரம்பரியமான திமுக குடும்பம் என்பதால் பல்லில் கை வைக்கவும் யோசனையாக இருந்தது. யோசிக்க எல்லோருக்கும் உரிமை இருக்குதானே. தோல்வியை ஒப்புக் கொள்ள மனமின்றி, (பாரம்பரிய திமுக குடும்பத்திலிருந்து வந்ததால்) 'இதுல எங்க சார் ஊறுகாய் இருக்கு?' என்றேன் பாலராஜன் சாரைப் பார்த்து.

'அதானே..பக்கத்து வீட்டு ஃபிரிட்ஜ்ல வச்சுட்டாரோ?' என்றார் சார்.

வெடித்துத் சிரித்தேன்.

நாங்களாக பேசுவதும் சிரிப்பதையும் கண்ட கோபி விடு விடுவென எழுந்து வந்தார். 'இதென்ன ஊறுகாயா ஒங்க மண்டையா?' என்பது போல சப்போட்டாப் பழ சதுர டப்பாவை தூக்கிக் கொண்டு சாப்பிடட்ட இடத்திற்குப் போய் விட்டார். முழு முழு எலுமிச்சை ஊறுகாய். ஊறி உணங்கி சப்போட்டாவாக எங்களுக்கு காட்சி அளித்திருக்கிறது. காட்சிப் பிழேய். (பிழை ஊறியதால் பிழேய்)

'இது ஊறுகாயா? நான் சப்போட்டாப் பழம்னுள்ள நெனைச்சேன்" - பாலராஜன் சார்.

wise men thinks alike.

#

ஆச்சு. பாலராஜன் சார் கிளம்பும் நேரம் வந்துட்டது.'சரி கோபி,பாரா' ன்னு சார் கிளம்பியப்போ எதையோ பறிகொடுத்தது போல இருந்தது. சரி சார்ன்னு கூடவே கிளம்பி வந்தேன்.கோபி வீட்டின் சைடு சந்தில் பாலராஜன் சார் வந்த காருக்குள் தலை அண்ணாந்து தூங்கிக் கொண்டிருந்தார் ட்ரைவர். சார் அந்தப் பக்கத்து கண்ணாடி ஜன்னலை தட்டினார். உசும்பி விழித்த பிறகு நான் இந்தப் பக்கத்து ஜன்னலை தட்டினேன். திரும்பிப் பார்த்தார். கும்பிட்டேன் ..

பாலராஜன் சார் புறப்பட்ட கொஞ்சநேரத்தில் நானும் கிளம்ப நேரிட்டது. கோபி அஸ்லாம் பாயை அழைத்தார். பேலஸ் வந்துட்டது. பேலஸ் வாசலில் இறங்கி கோபியும் நானுமாக கட்டி அணைந்து கொண்டோம். கண்ணாடி வழியாக அஸ்லாம் பாயைப் பார்த்தும் ஒரு கும்பிடு வைத்தேன்.நேராக எட்டி என் ரூமிற்கு நடை வைத்துக் கொண்டிருந்தேன்.

சலாலுதீன் சேட்டாவை அழைத்து,' சேட்டா பேலஸ் வந்துட்டேன். கோபியே கொண்டு வந்து விட்டுட்டுப் போய்ட்டார் ரூமிற்கு நடந்து போய்ட்டு இருக்கேன்' ன்னு கூப்பிட்டேன். (கெளம்புற நேரத்துல கூப்பிட்றான்னு சேட்டா சொல்லி வைத்திருந்தார்)

'நீ அங்கயே நில்லு. நா இந்தா வர்றேன்'ன்னு சலாலுதீன் சேட்டா கிளம்பி வந்தார்.

கையில் கோபி பரிசளித்த ஸ்ரீலங்கா டீ பாக்கெட்டுகள் இருந்தன.

ரெண்டு பாக்கட்டுகளை எனக்கு வைத்துக் கொண்டு ரெண்டு பாக்கெட்டுகளை சலாலுதீன் சேட்டாவிற்கு பரிசளித்தேன்.

#

'எதுக்கு வேற யாருக்காவது கொடுக்கலாம்ல" என டீ பாக்கட்டுகளை எனக்கு கொடுத்தது போல பாலராஜன் சாருக்கும் கொடுத்தப்போ பாலராஜன் சாரின் கமண்ட் இது.

'அதான் உங்களுக்கு கொடுக்கிறேன்" ராஸ்கல் கோபியின் கமெண்ட் இது.


***

புரை ஏறும் மனிதர்கள்:

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14,15,16,17,18,19


Saturday, August 18, 2012

இலையுதிரும் சத்தம் - பத்து


பழம்பதி மாமாவிற்கு (அப்பாவின் சகோதரி கணவர்) 74 வயது. ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பணத்திலிருந்து ஒரு நகை அடகுக்கடை வைத்தார். கடந்த 14 வருடங்களாக அந்தக் கடையே வாழ்வாக வாழ்ந்து வந்தார்.

நெத்தி நிறைய திருநூறு பூசி, செல்லமா ஒரு சந்தன தீற்றல். பத்தாததுக்கு நடுவாந்திரமா ஒரு குங்குமப்பொட்டு வைத்து ஜெகஜ்ஜோதியா m- 80 யில் கடைக்கு கிளம்பிப்போன மாமாவை முந்தைய பயணத்தில் பார்த்து வந்திருந்தேன்.

நான்கு குழந்தைகள் அவருக்கு. எல்லோரையும் செட்டில் செய்து பேரன் பேத்திகள் விரல்களைப் பிடித்தபடி மாமா நடந்து வரும் அழகு ஒரு அழகுதான்.நம் வாணியங்குடி வீட்டிற்கு எதிர்த்தாப்லதான் மாமா வீடு.

முந்தைய பயணத்தில் ஒரு நாளை இங்கு குறிக்க விருப்பமாக இருக்கிறது. அப்பா வாழ்ந்த வீடு என அம்மா மட்டும் வாணியங்குடி வீட்டிலேயே தங்கி விட்டார்கள். ஆகையால் அடிக்கடி அம்மாவைப் பார்க்க ஓடி விடுவேன். (மறக்காமல் ஒரு குவாட்டர் நெப்போலியனையும் தட்டிக்கொண்டு போவது உண்டு)

அப்படித்தான் அன்னைக்கும் போயிருந்தேன். அப்படி இப்படின்னு அம்மாட்டப் பேசிட்டே இருந்துட்டு பூ போட்ட கூடைச் சேரைத் தூக்கினேன். அதை தூக்கினேனா அம்மாவிற்கு நான் எங்க போவேன்னு தெரியும்ன்னு நினைக்கிறேன். 'ஏண்டா மத்தியானத்துலையே' ன்னு கேட்டாங்க. 'சும்மா அப்படி காத்தாட ஒக்காந்திருக்கேன்ம்மா' ன்னுட்டு என் ஃபேவரைட் பிளேஸ்க்கு. வந்துட்டேன்.

நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ வாணியங்குடி வீட்டில் வலதும் இடதுமாக இரண்டு வேம்புகள் தலையை உரசிக் கொண்டு சும்மா கொள்ளுன்னு இருக்கும். ரெண்டும் சேர்ந்த நிழலில்தான் நாங்க நீஞ்சுறது வைக்கிறது. நாங்கன்னா நான், பெரியப்பா சித்தப்பா பசங்க, அத்தை மாமா பசங்க. இப்படி.

இப்ப எல்லோரும் அங்கிட்டு இங்கிட்டுமா கிடக்கிறோம். இப்பவும் இடது வேம்பு மட்டும் நகலாமல் அங்கனேயேதான் நிக்குது. வலது அவுட். வலது ஞாபகமாக அப்பா இறந்த பயணத்தில் ஒரு வாதா மரம் வைத்து வந்திருக்கிறேன். அதையும் நான் வலது வேம்புன்னுதான் அழைப்பேன்னு வைங்களேன்.

இப்ப என் ஃபேவரைட் பிளேஸ் உங்களால் உணர முடிகிறதுதானே. யெஸ்! இடது வேம்பு. அது சிந்தும் பால்ய நிழல். அம்மாவை பார்த்தது மாதிரியும் ஆச்சு. பால்ய நிழலில் ஒரு குவாட்டரை சாத்தியது மாதிரியும் ஆச்சு. இல்லையா?

கூடைச் சேர், சொம்புத் தண்ணி, டம்ளர் எல்லாம் செட்டாகி நிழலில் அமரும் போதுதான் கவனித்தேன் மாமா m-80 அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது.

'மதியச்சாப்பாட்டிற்கு வந்திருப்பாரா இருக்கும். பசிக்க மட்டும் இல்லைன்னா கடைய விட்டுட்டு வரமாட்டாரே மாமா' ன்னு நினைத்தபடியும் அம்மா வந்துராமன்னு நினைத்தபடியும் நெப்போலியனைத் தட்டித் திறந்தேன்.

கத்திரிக்காய் வதக்கியதையும், கொத்தவரங்காய் பொரியலையும் வெஞ்சனப் போணியில் வைத்துக் கொண்டு டால்ஃபின் போல நடந்து வந்தார்கள் அம்மா. ( அம்மாவிற்கு கால்வலி ) திறந்ததை மூடி மறைத்தபடி 'ஏம்மா?'என்றேன். 'சரி டக்குன்னு வாடா' ன்னுட்டு போய்ட்டாங்க.

ஒருபோதும் என் நெப்போலியனைப் பார்க்க அம்மாவை அனுமதித்ததில்லை. ஆனால் அம்மாவின் நெப்போலியனை அம்மாவிற்கு தெரியும் போல.

இந்த மனுஷன் வண்டி வேற நிக்குதே ( நம்ம வீட்டைத் தாண்டித்தான் இவர் கடைக்கு போற ரோடை பிடிக்கணும்) கெளம்பட்டும் ன்னு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்த்தேன். கதைக்காவல. வர்றது வரட்டும்ன்னு லைட்டா கொஞ்சம் போட்டுட்டு தெம்பா எந்திரிச்சு நின்னேன்.

வெள்ளையும் சள்ளையுமா மாமா வெளியில் வந்து m-80 சீட்டை ரெண்டு தட்டு தட்டிட்டு உக்காந்தார். கெளம்புடா கெளம்புடான்னு புத்தி சொல்லியது. கெளம்பி இடது வேம்பின் அடியில் நின்ற போர் பைப்பை ஸ்டார்ட் பண்ணி ஹோஸ் மூலமாக இளம் பிள்ளைகளாக நின்ற தென்னைகளுக்கும், கறிவேப்பிலை மரங்களுக்கும் (செடிதானே மரம்) நீர்பாய்ச்சத் தொடங்கினேன்.

டுபு டுபு ன்னு க்ராஸ் பண்ணிய மாமா சற்று நின்று, 'மாப்ள மத்யானத்துல தண்ணி அடிக்காதீங்க. செடிக பட்டுப் போகும்' என்றார்.
'சரிங்க மாமா' என்றாலும் மாமா யாரைச் சொல்றாருன்னு குழம்பி வந்தது.

அப்பாவுடன் சேர்ந்து தண்ணி அடித்திருக்கிறேன். அம்மாவிற்கு தெரியும். இனி யாருக்கு நான் தண்ணி அடிக்கிற விஷயத்தில் பயப்படணும் அல்லது யோசிக்கணும்?

யோசனை என்பது நெற்றியில் பூசியிருக்கும் திருநூறு அன்ட் ஸோ அன்ட் ஸோ மூலமா வருது.? நடத்தையில் வருவதுதானே. மாமா அப்படி நடந்து காட்டினார். நான் மட்டுமில்லை. ஊரே அப்படித்தான் மாமாவைக் கண்டதும் எந்திருச்சு நிக்கும்.

ஒரு அக்கு இல்லை. ஒரு பிக்கு இல்லைன்னு வாழற ஆளுக்கு ஊர் கொடுக்கிற மரியாதையாக இருக்கும்ன்னு நினைக்கிறேன். நானும் அந்த ஊரிலிருந்து கிளம்பி வந்தவன்தானே. எனக்கு மட்டும் என்ன கொம்பா இருக்கு?

இன்னைக்குப் பிறந்து இன்னைக்கே செத்துப் போகும் ஒரு ஈசலுக்குக் கூட தொந்திரவு நினைக்கக் கூடாதுன்னு வாழ்ந்து காட்டுகிற மனிதர்களின் மேல் எப்பவும் எனக்கு ஒரு பயம் பிடித்துக் கொள்ளும். பிறகு அது மரியாதையாகவும் பூத்து ஆடும். அந்த வரிசையில் பழம்பதி மாமாவை முதலாவதாக அடுக்குவேன்.

#

இந்த பழம்பதி மாமா எல்லாத்தையும் தொலைத்திருந்திருக்கிறார். இது எனக்கு சமீபகாகத்தான் தெரியவந்தது. கனடாவில் நிக்கிற தம்பி கண்ணன் போன் பண்ணி,

' டே நம்ம பழம்பதி மாமா கடைய கொள்ளயடிச்சிட்டாய்ங்ளாண்டா உனக்குத் தெரியுமா?' ன்னு கேட்டான்.

'என்னடா சொல்ற..எப்படா..ஏண்டா' ன்னு என்னென்னவோ கேட்டேன்.

'அது நடந்து ஆறேழு மாசம் ஆச்சு போல. நேத்து காளியப்பன் அண்ணன்ட்ட பேசும்போதுதான் சொன்னாரு. என்னண்ணே ஆறேழு மாசங்கிறீங்க. டெய்லிதானே போன் பண்றேன். ஒண்ணுமே சொல்லலையேண்ணேன்னு கேட்டதுக்கு என்னத்தடா சொல்லச்சொல்ற? நீங்க அங்கிட்டு கெடக்குறீங்க. எல்லாத்தையும் எதுக்கு கஷ்ட்டப் படுத்தணும்ன்னு விட்டதுதான். ஆயிரம் பவுனுக்கிட்ட இருக்குமாம். இப்ப ரொம்ப நெருக்கடியா இருக்குடா மாமாவுக்கு. என்ன வகையில் அவருக்கு ஆறுதல் சொல்றதுன்னு தெரியலன்னு சொல்றாரு. போலீஸ் ஸ்டேசனுக்கும் வீட்டுக்குமா அலைஞ்சுக்கிட்டு இருக்காராம். மிச்ச நேரம்லாம் நம்ம பிள்ளையார் கோயில்லயே கைலியக் கட்டிக்கிட்டு ஒரு துண்டையும் போத்திக்கிட்டு கெடக்குறாராம்டா. டெய்லி நூறு பேருக்கு மேல பதில் சொல்லிக்கிட்டு இருக்காராம். மாமாவுக்குலாம் இப்படி ஒரு சோதனை வரலாமாடா. பாவமா இருக்குடா மாமாவ நினைக்கும்போது. சிவாதேன் கெடந்து உருண்டுக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கான் போல. ( சிவா, மாமாவின் கடைசி மகன். சிவகங்கை ICICI வங்கியில் அப்ரேசராக இருக்கிறான். மூத்தவன் திருமுருகன். என் செட்டு. ஜெயவிலாசில் கண்டக்டராக இருக்கிறான். ரெண்டாவது மணிமேகலை. வாணியங்குடியிலேயே வாக்கப்பட்டிருக்கிறது. மூணாவது செல்வம். சென்னையில் ஏதோ ப்ரைவேட் கம்பனியில் இருக்கிறான்)

கண்ணன் பேசப் பேச ஐயோ.. ஐயோ.. ஐயோ.. என சொல்லிக்கொண்டிருந்தேன். ஐயோ'விற்கென தனியாக கண்கள் கலங்கும்போல. கண்களை மட்டும் கலக்கி விட்டுட்டு நம்ம வேலைகளை பாக்கப் போறது போலதானே இருக்கிறது நம்ம வேலைகளும்

ஆச்சா.

வேலையோடு வேலையாக சிவாவை அழைத்தேன். ( மாமாவை கூப்பிடறதுக்கு அவ்வளவு சக்தி இல்லை)
'அத்தான்' என்றான்

'இப்பதாண்டா தெரியும் சிவா. கண்ணன் சொன்னான்டா' ன்னு தொடங்கி கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வைக்கும் போது,'சிவா உனக்கு ஒரு கதை சொல்லவா. அப்பா எனக்கு சொன்னதுடா' என்றேன்.

'சொல்லுங்க அத்தான்'

'ஒரு மன்னர் அல்லது சக்ரவர்த்தின்னு நெனைக்கிறேண்டா. நளனோ என்னவோ. அப்பா பேரோட சொல்லியிருந்தாரு இப்ப ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. அவருக்கு கெட்டகாலம் தொடங்கியிருச்சாம். அதுனால ஒம்போது லெக்ஷ்மிக்களும் விடை பெற வந்திருக்காங்க. பார்ட்டி, சரிங்க போய்ட்டுவாங்க போய்ட்டுவாங்கன்னு ஒவ்வொரு லெக்ஷ்மிகளையும் உக்காந்து கொண்டே வழி அனுப்பி வைத்திருக்கிறார். கடைசியா தைரிய லக்ஷ்மி வந்தபோது எழுந்து நின்று கைகளை பிடித்துக் கொண்டு என்ன தாயீ நீங்களும் கெளம்புறீங்க. நீங்க ஒரு ஆளு மட்டும் நில்லுங்க. மத்த எட்டுப் பேர்களையும் திரும்பக் கொண்டு வர்றது என்னோட பொறுப்புன்னு சொன்னாராம். தைரியத்தை மட்டும் விட்டுறாத சிவா. சரியா. ' என்றேன்.

'சரிங்கத்தான்' என சிரித்தான். குரல் தழு தழுப்பாகவோ கரகரப்பாகவோ இருந்தது.

#
கம்ப்யூட்டர் பக்கம் வரமுடியாத வேலைகளில் இருந்தேன். வந்த போது தம்பி கண்ணனிடமிருந்து இப்படி ஒரு மெயில் வந்து கிடந்தது.
Dear annath, hope you are doing fine. I got a call from Siva (our palampathy mama son), and he was enquired that shall we publish a letter in our friends circle and ask for help such as advice or highligt this prob. until now nothing is progressing and police are grabing money when ever they visit police station

Mama is almost mad since the people who gave the gold troubling him to retrun their part of their gold. Can you please write up small note about mama,incident and the current situation and send back to me? I will show it to siva mapla, and may be we can share with our friends in the blog. even though, if we didnt receive any help, the news may spread and may get a help from some where.

Can you please do this favour and reply back at your leisure

thanks annath

#
சிவாவை அழைத்தேன். 'என்ன மாதிரி உதவிகள் வேணும்டா சிவா' என்று கேட்டதுக்கு,'போலீஸ் ஸ்டேசனில் ரொம்ப புவர் ரெஸ்பான்ஸ்த்தான். ஏழு மாசம் முடியப்போது. 1500 கஸ்டமர்கள்த்தான் அப்பாவோட முதலீடு உழைப்பு எல்லாத்தையும் விடுங்க. பப்ளிக் ப்ராபர்ட்டிய ஒழுங்கா நம்ம செட்டில் பண்ணனும்ல. கிடைச்சதைல்லாம் வச்சு உள்ளுக்குள்ளயே உருட்டிக் கொண்டிருந்திருப்பார் போல அப்பா. லாபத்தை பிரிச்சு இடங்கிடம் வாங்கிப் போட்டிருந்தாலும் சொத்துகளை வித்தடிச்சு கொஞ்சம் சந்திக்க முடியும். இது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது அத்தான். அப்பாவை இதிலிருந்து வெளியில் கொண்டுட்டு வரணும்ங்கிறது மட்டுமே தோணுது. கடைசி காலம் அத்தான். அவரை நிம்மதியா வச்சாப் போதும். அரசியல் லெவல்ல போலீஸ் உயரதிகாரிகள் லெவல்ல இந்த கேஸ் விஷயமாக பெர்சனல் இன்ட்ரெஸ்ட் எடுத்தால் நடக்கும்ன்னு தோணுதுத்தான்.

'சரி ஒண்ணு செய்யலாம் சிவா. விபரங்களை மெயில் செய். நான் கூகுள் ப்ளஸ்ன்னு ஒண்ணில் இருக்கிறேன். பெரிய உலகம் இது. அதில் அரசியல், பத்திரிக்கை, தொலைக்காட்சின்னு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை ஹைலைட் பண்ணப் பார்க்கலாம். ஆலோசனைகளை கேட்கலாம்' என சொன்னேன்.

#

இது என் மாமா கதை. இவருக்கு 1500 வாடிக்கையாளர்கள் எனில் அது 1500 குடும்பங்கள்தானே. என்ன தேவைகளுக்காக அவசர அவசரமாக இவரை அனுகியிருப்பார்கள். இந்த ஏழு மாதங்களில் எத்தனை குடும்பங்களின் சுப காரியங்கள் தள்ளிப் போயிற்றோ? மீட்க வரும்போது எப்பேர்ப்பட்ட மாமாவா இருந்தாலும் கைலியும் துண்டுமா பிள்ளையார் கோயிலில் கிடந்தால் பத்துமா?

இது மாப்ள சிவா கொடுத்த விபரங்கள்..

'எனது தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர். தற்போது அவர் 74 வயதை கடந்துவிட்டார் . ஸ்ரீ காமாட்சி கார்பரேசன் என்ற நகை அடகு கடையை சிவகங்கையில் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வந்தார். கடந்த ஜனவரி 24 ந் தேதி கடையின் பூட்டு மற்றும் பாதுகாப்பு இயந்திரப் பெட்டகம் உடைக்கப் பெற்று வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டன. நகைகளின் மொத்த எடை 6891.100 கிராம். அதாவது சுமார் 7 கிலோ ஆகும். இதன் மதிப்பு சுமார் 2. 00 கோடி. காவல்துறையில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சுமார் 1500 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என் தகப்பனாரின் மேல் இருந்த நம்பிக்கையாலும் அவரது நேர்மையான செயலாலும் பொறுமை காத்து வந்த வாடிக்கையாளர்கள் மாதங்கள் பல கடந்துவிட்ட நிலையில் தற்போது தினமும் எனது தந்தையாரை சந்தித்து நகைகளை உடனடியாக மீட்டுத்தருமாறு நூற்றுக் கணக்கானோர் வற்புறுத்துகின்றனர். இதனால் எனது தகப்பனார் மிகவும் மனம் உடைந்த நிலையிலும் வயது முதிர்ந்த காரணத்தினாலும் இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீள்வது எப்படி என்பது புரியாமல் கடவுளையும் காவல் துறையையும் மட்டுமே முழுமையாக நம்பி நல்ல செய்தியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.'

#
மக்களே,
எனக்கும் ஒண்ணும் புரியலை. எனக்கு என் மாமா மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார். எதையாவது நகட்டி மாமாவையும் கண்ணுக்கு தெரியாத 1500 குடும்பங்களையும் இதிலிருந்து விடுபட வைக்க முடிஞ்சுட்டா நான் எம்ஜியார்தான். வேறு வழியில்லாமல் உங்கட்ட கொண்டுட்டு வர்றேன். லேட்டஸ்ட்டா, போலீஸ் மெத்தனத்தை கண்டித்து வாடிக்கையாளர்கள் மற்றும் நம் ஊர்க்காரர்கள் பஸ் மறியலில் இறங்கியதாக கேள்விப்பட்டேன்.

அரசியலில், பத்திரிக்கையில், தொலைக்காட்சியில் இருக்கிற நண்பர்கள் இந்த விஷயத்தை ஃபிளாஷ் பண்ணினால், அழுத்தம் கூடி எங்கயோ இருக்கிற புரையோடிப் போயிருக்கிற சிவகங்கை போலீஸ் ஸ்டேசனின் பல் சக்கரங்கள் இயங்கலாம்.இயங்கி 1501 குடும்பங்கள் மூச்சு விட்டுக் கொள்ளலாம். அப்புறம் கடவுள் விட்ட வழி.

#

இது என் மொபைல் நம்பர் 00966502089705
மெயில் I.D rajaram.b.krishnan@gmail.com
சிவா மொபைல் நம்பர் 9865702140