மனசு மட்டும் நிறைந்து போய் விட்டால் எவ்வளவு தூங்கிப் போகிறோம்!
"மாமா எந்திரிங்க, சாப்பிடுங்க" என்ற மாப்ள ஆனா ரூனா குரல் கேட்டுதான் எழுந்தேன். எழுந்து, குளித்து, சாப்பிட்டு புறப்பட தயாரானோம்.
இடையில் இரண்டு முறை அக்பர், ஸ்டார்ஜினடமிருந்து "புறப்பட்டீங்களா?" என்கிற அழை பேசி குரல்கள் வேறு.
"இனி பாட்டெல்லாம் வேணாம்டா. பார்!. பார்த்துக் கொண்டே இரு.. " என்றது உள்மனம். தயாரானேன். 'உள்'ளை நேசிக்கிற எல்லோருக்கும் கிடைக்கிற எல்லாம் எனக்கும் கிடைக்க தொடங்கியது...
இறங்கி, அக்பர் அறை அடைந்த போது, மனுஷன் இப்படியா சிரிப்பார் மக்கா? இரு கன்னத்திலும் குழி விழ, சிரித்து, பதறி, அணைத்துக் கொண்டார். கன்னக் குழிகளில் இருந்து "அண்ணே' என்கிற பூ மலர்ந்து கொண்டிருந்தது. (இந்த சிரிப்பை மறக்க ரொம்ப நாளாகும் அக்பர்)
ஸ்டார்ஜனோ வேறு தளத்தில் இருந்தார். நிதானம் என்கிற உன்னத தளத்தில். "பாராண்ணே..பாராண்ணே" என்று இடமும் வலமுமாக மூன்று முறை கட்டிக் கொண்டார். பாரா எனலாம். அண்ணே எனலாம். இதென்ன பாராண்ணே? என உடைந்து கொண்டிருந்தேன். (இந்த பாராண்ணேவில் எவ்வளவு என்னை இழக்கட்டும் ஸ்டார்ஜன்?)
அக்பரின் சகோதரர், மச்சினர், அறையில் இருந்தார்கள். கட்டிக் கொண்டார்கள். குறு குறு வென முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். போக, 'பேசட்டும்' என்று எங்களை அனுமதித்து விலகி நின்றார்கள். தனியாக, உயரமாக.
அவ்வப்போது, 'பாராண்ணே' என நெருங்கி அமர ஸ்டார்ஜனால் முடிகிறது. வேறு வழி இல்லாமல் சும்மா கை பற்ற முடிகிறது நம்மாலும்.
திட்டமிடாத அன்பை வைத்திருப்பார் போல அக்பர் எப்பவும். நம்மிடம் பேசிக் கொண்டிருந்தாலும், வீட்டிலும் இருந்தார்.(மகள் மற்றும் சகோதரர் மகள்கள் போடும் ஆட்டங்களை வீடியோவிலும் காட்டினார்) திட்டமிடாததில் உள்ள பூரிப்பை வாங்க முடியாத தவிப்பு எனக்கு.
வீட்டிற்கு விருந்தாளி வந்தாச்சு. என்ன செய்யும் வீடு? வந்த மனிதர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்கள் வீட்டு மனிதர்கள். பின்புலமாக சில நகர்வுகளும் இருக்கும்.அதிலும் இருப்பார்கள் வீட்டு மனிதர்கள். இல்லையா? அப்படி, அங்கும் இங்குமாக இருந்து கொண்டிருந்தார்கள் அக்பரும் ஸ்டார்ஜனும்.
பார்வையின் மூக்கு திறந்திருந்திருக்கும் போது,வாசனை நிரம்பிய, விழியின் ஆன்மாவை உணர முடியும். அப்படி, அங்கும் இங்கும் நகர்ந்து முகர்ந்ததில், அக்பர் குடும்பம் அங்கில்லை. இங்குதான் இருக்கிறார்கள். அவர் அறையில். ஸ்டார்ஜனில், தம்பியில், மச்சினரில், தன்னிலும் கூட!
அக்பரின் மச்சினர், "மச்சான் நீங்க இருங்க" என தன்னை அக்பர் இடத்திற்கு நகர்த்தும் போது அக்பர் யாரென நம்மிடம் சொல்கிறார். பேச்சுக்கு பேச்சு "ஷேக்" என்பதில் ஸ்டார்ஜன் யார் என்பதை அக்பரும் சொல்கிறார். எல்லோரும் யார் என்பதை, இவர்கள் எல்லோரையும் இங்கு கொண்டு வந்த அக்பரின் தம்பியும் சொல்கிறார். சொன்னால்தானா சொல் என்பது?
கிளம்பும் போதே, "பாட்டு வேணாம்டா" என்று கௌலி தட்டியது. இல்லையா? தட்டியது போலவே பாட்டெல்லாம் மறந்து போய் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"டேய்,குடிகாரா இது குடும்பம்டா" என்கிற படம். எனக்கும் லதா நினைவு வந்து, "சரி புள்ள. இனி குடிக்கல" என எனையறியாது, எனக்குள் பேசிக் கொண்டேன், வழக்கம் போல.
புறப்பட்ட நேரம் பிரியாணி ஓரை உச்சத்தில் இருந்திருக்கும் போல. ஆனா ரூனா அறையில் சிக்கன் பிரியாணி எனில், இங்கு மட்டன் பிரியாணி. (பேசி வைத்துக் கொண்டீர்களா பாசு?)
சமையல் குறிப்பெல்லாம் எழுதுகிறாரே ஸ்டார்ஜன், அவர் செய்ததாகத்தான் இருக்கும் என " சூப்பர் ஸ்டார்ஜன்!" என்ற போதுதான் தெரிந்தது, பிரியாணி அக்பரின் தம்பி செய்தது என.
அப்புறம் என்ன செய்றது? அசடு வழிந்த அதே சூப்பரை அக்பரின் தம்பிக்கு அனுப்பினேன். அவரும் ஒன்னும் சொல்லல. ஒரே சிரிப்பில், சூப்பரா வாங்கி வச்சுக்கிட்டார்.
சாப்பிட்டு முடிந்து, கொஞ்ச நேரம் சாரு, ஜெயமோகன், என கட்டப் பஞ்சாயத்து ஓடியது. சரவணனை நாட்டாமை ஆக்கி," தீர்ப்பை மாத்தி சொல்லு நாட்டாமை" என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
வெள்ளிக் கிழமையில் வந்திருக்கிறோம். வார அசதியை, ஒரே நாளில் அடிச்சுப் போட்டது போல தூங்குவார்கள். எழுந்து துணி துவைப்பார்கள். மீண்டும் தூங்குவார்கள். "போதும் மக்கா, புறப்படலாம்" என்று எவ்வளவோ மன்றாடியும் அழைத்துப் போனார்கள் ஜபல் காராவிற்கு.
கல்லூரி காலத்தில் சுற்றுலா போனது போல இருந்த அனுபவம் அது. அதை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார், ஸ்டார்ஜன். அது '
இது'
டாட்டால்லாம் காட்டி, அறை வந்ததும், கணிணியை திறந்தேன். "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்ற கணேஷ் கொட்டகை பாடலோடு, முத்திய இடம்...
கருவேல நிழலாக இருந்தது.
****