1.
(Photo by CC License, thanks groks)
ஆற்றங்கரையில்
எடுத்த கல்.
மினு மினுப்பற்ற
வழு வழுப்பு.
வீடு வரையில்
சேர்க்க இயலாத
ஞாபக குறைவு.
அங்கேயே கூட
கிடந்திருக்கலாம்.
ஆளோட பேரோட
இருந்திருக்கும்.
--------------------------------------------------
2.
ஜாகீர் உசேன்
மளிகை கடையில் பார்த்ததாக
நண்பன் வந்து
சொன்னான்.
உயிர் துடித்தது
மயிர்க்கால் அளவு.
நண்பனிடம் சொல்லவில்லை
நான்.
---------------------------------------------------
3.
என்ன செய்வது
என மலைக்கிற
தருணங்களில்
எனையறியாது
ஏதாவது
செய்து விடுகிறேன்.
"சும்மா இருந்து பாரேன்"
யாராவது சொல்லத்தான்
செய்கிறீர்கள்.
சும்மா இருந்தால்
நல்ல கவிதை
கிடைக்குமோ
ஒருவேளை என
குழம்பவும்
செய்கிறேன்.
---------------------------------------------------


