'காலங்களை வரைந்த கடிதங்கள்' என்றுதான் இருக்க வேணும் இத்தலைப்பு. பொசுக்குன்னு என்னவோ போல முடிக்க விருப்பமில்லாமல் இருக்கிறது. மேலும், நான் இருக்கிறது வரையில் இந்த காலங்களும் என்னுடன் வரத்தான் போகிறது. . வேறு வேறு வயதில், வேறு வேறு தினுசில், வேறு வேறு அனுபவங்களுடன். முன்பு நான் எழுதிய கடிதங்களே இதோ இப்ப வேறொரு அனுபவமாக இருக்கிறதைப் போல.
இந்தப் பயணத்தில் என் சினேகிதி ப்ரபாவை சந்தித்த போது அவளுக்கு நான் எழுதிய கடிதங்களின் கோப்பை கொண்டு வந்து தந்தாள் என்று 'சொன்னேன்' இல்லையா? அக்கடிதங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் மக்கா.
***
ப்ரபாவுடனான என் முதல் கடிதத்தை இப்படித்தான் தொடங்கியிருக்கிறேன்...
சிவகங்கை
07.06.'93
ப்ரபா.
வணக்கம். நான் ராஜாராம். சிவகங்கைக்காரன். என்னைப் பற்றி குமார் எதுவும் சொல்லியிருக்கிறானா என்று தெரியவில்லை. உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறான்.
நலமா எல்லோரும்?
வெகு நாட்களாகவே உங்களுக்கு எழுத நினைத்துக் கொண்டிருந்தேன். முடியாமல் போய் விட்டது. முடியாமல் போய்விட்டது என்று கூட இல்லை. 'உங்களுக்கு சூழல் எப்படி உள்ளதோ?' என நினைத்து விட்டிருப்பேன் போல. குமாரிடம், ' ப்ரபாவிற்கு நான் எழுதட்டுமான்னு கேட்டுச் சொல்லுடா' எனக் கேட்டிருந்தேன். திருமண நெருக்கடிகளில் மறந்திருக்கவேணும் குமார். போக, உங்கள் அனுமதி இல்லாமல் எழுத யோசனையாக இருந்ததும்தான்.
குமார் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு தோவாளையில் குமார் வீட்டு மொட்டை மாடியில், நான், குமார், தெய்வா மூவருமாக வெற்றுடம்புகளுடன் அண்ணாந்து கிடந்தோம். குமாரை நடுவில் கிடத்தி, நானும் தெய்வாவும் அவனைக் கேலி பண்ணி சிரித்துக் கொண்டிருந்தோம். அனேகமாய் மூன்று மணிக்கு மேல் இருக்கும். ஊர் அடங்கி விட்டது. விடிகிற இருட்டு. திடுமென குமார், 'நம்மைத் தவிர இன்னுமொரு ஒரு உயிரும் தூங்காம கெடக்கும்லே' என்றான்.
தெய்வா, 'ஜோதியா?' என்றான். 'அது ஏழு மணிக்கே தூங்கியிருக்கும். ப்ரபாடே' என்றான் குமார். அவன் கேட்கும் போதே எனக்கு பதில்
தெரிந்திருந்தது. அதை குமாரே சொல்லும் போது அழகாய் இருந்தது. பிறகு வெகு நேரம் வரையில் எதுவுமே பேசாமல் கிடந்தோம்.
குமார் ஒரு தனிமையான அன்பில் முழுமை அடைந்து கொண்டிருப்பதாகப் பட்டது எனக்கு. தெய்வாவிற்கு என்ன தோன்றியதோ?
சந்தோசமோ, துக்கமோ அடர்த்தியாய் நம் மீது படரும்போது மௌனமான இறுக்கம் நமை அறியாது தோன்றி விடுகிறது. அது புனிதமான இடம். உயர்வான பொழுது. நானும் தெய்வாவும் அதை கலைக்காமல் விட்டு விட்டோம். குமரன் கிடந்தான்.
அந்தக் கிடக்கைதான், 'ஊர் போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாய் ப்ரபாவை தொடர்பு படுத்திக் கொள்ள வேணும்' என்று தோன்றியது எனக்கு. தெய்வாவிடம் முகவரி வாங்கி உங்களுக்கு எழுதுகிறேன்.
குமார் ' ஜோதி' யில் ஐக்யமாகி விட்டதாக தெய்வா எழுதி இருந்தான். தெய்வாவிற்கும், லக்ஷ்மிம்மாவிற்கும் நீங்கள் எழுதிய கடிதம் குறித்தும் தெய்வா எழுதி இருந்தான். குமார் லெட்டர் எழுதினானா? தெய்வா, லக்ஷ்மி எழுதியதுகளா? புதுசா எதுவும் வாசித்தீர்களா?
சமீபமாய் மோகமுள் வாசித்து விட்டு எழ முடியாமல் இழுத்துக் கொண்டு கிடந்தேன்.
ஏதோ வெகு நாள் சிநேகிதம் போல் என்னைப் பற்றி எதுவும் சொல்லாமலே இந்தக் கடிதம் முடிவிற்கு வந்து விடுகிறது. என்னைப் பற்றிச் சொல்லவென என்ன இருக்கிறது என்றும் படுகிறது. என்றாலும் உள்ளதைச் சொல்லி தொடங்கலாம்.
நான்- ராஜாராம்
படிப்பு- b.sc.,phy
வேலை- எல்.ஐ.சி ஏஜன்ட்
லதா- wife
மஹா (மகாலக்ஷ்மி)- ஆறு வயது மகள்
சசி (சசிதரன்)- ஒண்ணரை வயது மகன்
பாலகிருஷ்ணன்- அப்பா
அசோக் குமாரி - அம்மா
அக்கா- இரண்டு பேர்
தங்கை- இரண்டு பேர்
எல்லோருக்கும் திருமணமாகி சிதறிக் கிடக்கிறார்கள்.
மற்றவை வெள்ளித் திரையில் காண்க.
நிறைய அன்புடன்
பா.ராஜாராம்.
***
பின்குறிப்பு (அ) இன்று
---------------------------------
இந்த ஜூன் ஏழு வந்தால் பதினெட்டு வருடம் முடிகிறது இக் கடிதம் எழுதி. மஹாவிற்கு ஆறு வயது அப்போ. 'ஆறு மாதமாக' இருக்கிறாள் மஹா இப்போ. என்னக் கொடும சார் இது?
***
மெட்ராஸ் - சிவகங்கை
02.10.'96
இரவு 8.10
ப்ரியங்கள் நிறைந்த என் ப்ரபா,
நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய மனப் பக்குவத்துடன் வாய்த்திருக்கிற பொழுதாகிறது இன்று.
ஓடித் தேய்ந்த தடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது ரயில் வண்டி. இப்படி ரயில் வண்டி என்பது கூட பிடித்து வருகிறது. நிறைய காற்று மக்கா. மூச்சு நின்று விடும் போல் இருக்கிறது. நிற்கட்டும். கதவடைக்க முடியுமா அதுக்காக?
சிந்து மடியில் கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருக்கிறாள். குளிர்கிற காற்றாக தெரியக் காணோம். சற்றுக் கழித்து என் லுங்கியை எடுத்து போர்த்தி விடணும் சிந்துக்கு. ஆக்ரோஷமும் வேகமும் நிறைந்த இந்தக் காற்று தேவையாகிறது போல தூங்கிக் கொண்டிருக்கிறாள் கண்ணம்மா.
நேற்றைக்கு முந்தைய நாள் சென்னை புறப்பட்டு வந்தது. சிந்துவிற்கு சர்ஜரி முடிந்து, மூன்று மாதம் கழிந்த follow-up-க்காக. ஆப்பரேசன் நல்லபடியா முடிஞ்சாச்சு மக்கா. சர்ஜரி மாதிரி இல்ல. coil-embolization என என்னவோ சொல்கிறார்கள். சர்ஜரிக்கான தழும்பு எதுவும் இருக்காதாம். (பெண் குழந்தை இல்லையா?). அடுத்த செக்-அப் ஆறு மாதம் கழித்து. வரணும்.
சரி..நீ எப்படி இருக்க? அனேகமாக உன் கடிதம் வீட்டில் காத்துக் கொண்டிருக்கலாம். நாகு வந்துச்சா?
சேது எக்ஸ்பிரஸ் 5.55-க்கு சென்னையை விட்டுக் கிளம்பியது. ராமேஸ்வரம் ஸ்கூலில் இருந்து ஸ்கௌட் boys & girls 30-40 பேர்கள் இருக்கிறார்கள் பெட்டிக்குள். ஒரே ஆட்டமும் பாட்டமுமாக கம்பார்ட்மென்டே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுனில் & சுசிலா என்று இரண்டு take-carrer கள். இவ்வளவு நேரத்திற்குள் அறிமுகமாகி இட்லி புளியோதரை சாப்பிட்டாச்சு.
இருவரும் குழந்தைகளை தூங்கச் செய்துவிட்டு அருகமர்ந்து cards போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'வர்றீங்களா சார்? பயப்படாதீங்க. காசுவச்சு இல்ல' என்று சுசிலா அழைத்தார்கள். 'வேணாம் மேடம். நீங்க ஆடுங்க. எனக்கு கொஞ்சம் எழுதணும்' என்றுதான் இதை எழுத உட்கார்ந்தேன்.. திண்டிவனத்தைத் தாண்டி விட்டது வண்டி.
என்ன செய்து கொண்டிருப்பாய் நீ? சாந்திக்கா, நளினி, நீ, அம்மா, சக்திக் கண்ணம்மா எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன். இப்படி நினைச்சுக்கப் பிடிச்சிருக்கு.
கும்மிருட்டு மக்கா வெளிய. கூடவே நெளிந்து ஓடி வந்து கொண்டிருக்கிறது ஜன்னல்லைட். ரயில்வே லைனை ஒட்டிய வயல்க்காரர்கள் எல்லோரும் சந்தோசமானவர்களாகத்தான் இருக்க முடியும். அதுவும் சற்று முன்பு ஒரு ஒற்றைக் குடிசையைக் கண்டேன். வயலின் நடுவே. உச்சியில் ஒரு குண்டு பல்ப். சுவாரஸ்யமான காட்சியாக இருந்தது குடிசை வீடும் எலெக்ட்ரிக் பல்பும்.
பின்னால ஒரு வயல் வாங்கணும் ப்ரபா. புள்ள குட்டியெல்லாம் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு அந்த வயலுக்கு வந்து குடிசை போட்டுக்கிட்டு செட்டில் ஆயிரணும். மறக்காம ஒரு பல்பு போடணும் உச்சியில். மஹா, சசியோட குழந்தைகள் ஏன் உன்னோட குழந்தைகள் எல்லோருமாக, 'ராஜா தாத்தாவோட வயல் வீட்டுக்கு' லீவுக்கு வந்துரணும்
'அடுத்த வண்டி எப்போ தாத்தா? அடுத்த வண்டி எப்போ தாத்தா?' என்கிற கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கணும். 'அடக் கிடுவுட்டிகளா...செத்த நேரத்துல வரும் பக்கிகளா' எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் போது வண்டி வந்து விடாதா என்ன?
சரி மக்கா..எல்லாம் எங்கே போய் விடப் போகிறது?
நிறைய அன்புடன்
பா.ராஜாராம்.
***
பி.கு (அ) இன்று
================
சிந்து, சுதா மகள். சுதா லதாவின் தங்கை. (அப்ப லதா யாரு? என்று கேட்டால் உதை) இந்த சிந்துவை ஒரு மெடிக்கல் செக்- அப்-பிற்காக சென்னை அழைத்துப் போய் திரும்பும் போது இந்தக் கடிதம் புகை வண்டியில் எழுதி இருக்கிறேன். அப்ப ரயில் வண்டியாகத்தான் இருந்திருக்கிறது- இந்தப் புகை வண்டி. சிந்து தற்சமயம் திருமணத்திற்கு நிற்கிறாள்.
இன்னும் நான் வயல் வாங்க வில்லை. இப்போதைக்கு ஒரு பல்பு வாங்கிவிட முடியும். ஒவ்வொன்றாகத்தானே செய்ய முடியும் எதையும்?
***
சிவகங்கை
25.12.'96
இரவு 12.20
மக்கா,
என் லெட்டர் இன்று உனக்கு கிடைத்திருக்கலாம். இன்று ரொம்ப relaxed-ஆன நாள் போல இருக்கிறது. ஆனா எதுவும் எழுத ஓடலை. எப்பவும் போலான கிறிஸ்துமஸ்-சாய் இல்லாமல் போய் விட்டது- இந்த கிறிஸ்துமஸ். போன வருடம் மாதிரி, பீட்டர் வீடு, ஜோசப் அண்ணன் வீடு, விண்ணரசி வீடு, ஆல்ஃபிரட் சார் வீடு என எல்லோர் வீட்டின் விழாக்கால முகம் காண முடியாமல் போய் விட்டது.
போகாவிட்டாலும் வந்து கூட்டிச் செல்கிற ஜோசப் அண்ணனக் கூட ஏனோக் காணோம். யாரும் கூப்பிட முடியாத தூரத்திற்கு வந்து விட்டேனோ என்னவோ? வீட்டில் ஆள் இல்லாத தனிமை வேறு... m.c.விஸ்கி கால் போத்தல் வாங்கி வைத்துக் கொண்டு (சிறுகச் சிறுக எனத் தொடங்கி) உன் கடிதங்களை எல்லாம் முதலில் இருந்து தொடங்கி என வாசித்துக் கொண்டு இருந்தேன்.
அப்பா..
எவ்வளவு எழுதி இருக்கிறாய் மக்கா? எழுத்து என்பது வெறும் எழுத்து மட்டுமா ப்ரபா? நம் குழந்தைகள் காலம் வரையில் வச்சு இதையெல்லாம் காப்பாத்த முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்? 'தாத்தா அவர் ஃபிரெண்டுக்கு எழுதியது' என்று குழந்தைகளுக்கு, குழந்தைகள் காட்டும்படி நேர்ந்து விடாதா?
சரி..இதெல்லாம் எப்போ முடியும்? சரி..இதெல்லாம் எதுக்கு? சரி..இதில்தான் என்ன?சரி..இதில்தான் எவ்வளவு!
verygood! எல்லாமே very good தான் !
கெறக்கம் தொடங்கியாச்சு. (ஐயே..வா?) புரட்டா கட்டி எடுத்துட்டு வந்துருக்கேன். சாப்பிட வர்றியா மக்கா?
'துன்னுட்டு' முடிஞ்சா தொடர்வேன். உருண்டுட்டா நாளை.
***
பி.கு. (அ) இன்று
----------------------
உருண்டுட்டேன் போல. பிறகு தொடரக் காணோம். 'நிறைய அன்புடன்-பா.ராஜாராம்' என்பது கூட இல்லாமல் ஒரு கடிதம்.
பீட்டர் ஆக்சிடெண்டில் இறந்து போனான். சொல்லப் போனால் மறந்தும் போய் விட்டேன் பீட்டரை. எப்படி பீட்டர்? ஜோசப் அண்ணன் ஏன் அந்த வருடம் கூப்பிடக் காணோம்? கிறிஸ்துமஸ்க்கு இருதயராஜ் வீட்டிற்கும்தானே போயிருக்கிறேன். ஏன் எழுதல? விண்ணரசி எப்படி இருப்பாள் இப்போ? ஆல்ஃபிரட் சார் இப்போ எங்கே? காலச் சுழற்சியில் வரலாறுகள் மாறி விடுவது உண்டு. அப்படித்தான் மாறினேனா... m.c. விஸ்கியில் இருந்து நெப்போலியன் பிராந்திக்கு?
தெரியல.
- தொடரும்
***
Tuesday, April 26, 2011
Tuesday, April 19, 2011
சேது உங்களுக்காக
ஒன்று

(Picture by cc licence, Thanks Raphael Quin)
குழந்தை ஊதிய
காற்றைக் குடித்த சோப்புக் குமிழ்
சாஸ்வதத்தை தேடிச் சென்றது.
வாஸ்தவத்தில் அது
குமிழ் பிறப்பித்த
வாயில் அல்லவா இருக்கிறது?
இரண்டு

(Picture by cc licence, Thanks Karthick Makka )
என்னை மட்டும் தனியாக
பார்க்கத் தெரிந்த அவளுக்கு
அவளுக்கு மட்டும் தனியாக
சொல்ல முடிந்த என்னால்
எல்லோரும் கேட்கும்படி
சொல்ல நேர்கிற வார்த்தைகள்-இந்த
'என் தோழி!'
மூன்று

(Picture by cc licence, Thanks Karthick Makka)
வலிக்கா வலிக்கா
எனக் கேட்டு கன்னத்தில்
அடித்துக் கொண்டிருந்தாள்
பப்லுக் குட்டி.
அச்சோ..தாத்தாக்கு வலிக்கி என
அவளாகவே முத்துகிறாள்
அடித்த இடத்தில்.
இரண்டுமே ஒரே
மாதிரிதான் வலிக்கிறது.
நான்கு

(Picture by cc licence, Thanks Sn.Ho)
மீனிற்குத்தான் பொரி தூவல்
கோவில் குளத்தில்.
மீனை விட அதிகம் கவ்வுகிறது
இந்த நிலா.
ஐந்து

(Picture by cc licence, Thanks Sn. Ho)
கடவுள் தோன்றி
கடவுளான கதையைப் பற்றி
கூறிக் கொண்டிருந்தார்.
'உய்..உய்..உய்'
பழக்க தோஷத்தில்
விசில் பிரித்துக் கொண்டிருந்தேன்.
வந்த திரைக்குள் நுழைந்த கடவுள்
கடவுளர்களிடம் கேட்டார்
'மனுஷனா இவன்?'
***
டிஸ்கி:
அடுத்த கவிதை 'எங்களுக்கு அப்புறம்தான் கல்கி, விகடனுக்கெல்லாம்' என்று நண்பர் சேது உரிமையுடன் கேட்டிருந்தார். எனவே, இந்த 'சேது உங்களுக்காக' நம் சேதுவிற்காக.
(பிரசுரத்திற்கு மறுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டு, 'என்னமா வூடு கட்டுறான்' எனக் கேட்பார்கள் நண்பர்கள் சுகுணாவும், கதிர்பாரதியும்...)
கேட்கட்டும்... நல்லதும், கெட்டதும் நண்பர்கள் கேட்டால்தானே அழகு!
***

(Picture by cc licence, Thanks Raphael Quin)
குழந்தை ஊதிய
காற்றைக் குடித்த சோப்புக் குமிழ்
சாஸ்வதத்தை தேடிச் சென்றது.
வாஸ்தவத்தில் அது
குமிழ் பிறப்பித்த
வாயில் அல்லவா இருக்கிறது?
இரண்டு

(Picture by cc licence, Thanks Karthick Makka )
என்னை மட்டும் தனியாக
பார்க்கத் தெரிந்த அவளுக்கு
அவளுக்கு மட்டும் தனியாக
சொல்ல முடிந்த என்னால்
எல்லோரும் கேட்கும்படி
சொல்ல நேர்கிற வார்த்தைகள்-இந்த
'என் தோழி!'
மூன்று

(Picture by cc licence, Thanks Karthick Makka)
வலிக்கா வலிக்கா
எனக் கேட்டு கன்னத்தில்
அடித்துக் கொண்டிருந்தாள்
பப்லுக் குட்டி.
அச்சோ..தாத்தாக்கு வலிக்கி என
அவளாகவே முத்துகிறாள்
அடித்த இடத்தில்.
இரண்டுமே ஒரே
மாதிரிதான் வலிக்கிறது.
நான்கு

(Picture by cc licence, Thanks Sn.Ho)
மீனிற்குத்தான் பொரி தூவல்
கோவில் குளத்தில்.
மீனை விட அதிகம் கவ்வுகிறது
இந்த நிலா.
ஐந்து

(Picture by cc licence, Thanks Sn. Ho)
கடவுள் தோன்றி
கடவுளான கதையைப் பற்றி
கூறிக் கொண்டிருந்தார்.
'உய்..உய்..உய்'
பழக்க தோஷத்தில்
விசில் பிரித்துக் கொண்டிருந்தேன்.
வந்த திரைக்குள் நுழைந்த கடவுள்
கடவுளர்களிடம் கேட்டார்
'மனுஷனா இவன்?'
***
டிஸ்கி:
அடுத்த கவிதை 'எங்களுக்கு அப்புறம்தான் கல்கி, விகடனுக்கெல்லாம்' என்று நண்பர் சேது உரிமையுடன் கேட்டிருந்தார். எனவே, இந்த 'சேது உங்களுக்காக' நம் சேதுவிற்காக.
(பிரசுரத்திற்கு மறுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டு, 'என்னமா வூடு கட்டுறான்' எனக் கேட்பார்கள் நண்பர்கள் சுகுணாவும், கதிர்பாரதியும்...)
கேட்கட்டும்... நல்லதும், கெட்டதும் நண்பர்கள் கேட்டால்தானே அழகு!
***
Subscribe to:
Posts (Atom)