முக ஒப்பனை களிம்புகளோடு, புத்திசாலிதனத்தையும் கலந்து முகத்தில் பூசியிருந்தது போல் இருந்தாள் அந்த அம்மணி. முக ஒப்பனை களிம்புகள் குறித்து எனக்கு கவலை இல்லை. அது அவளின் சுதந்திரம். புத்திசாலித்தனம் கலந்ததுதான் எனக்கு எதிரான சதியோ என கலங்கினேன்.
"எஸ்" என அவள் எழுந்து எங்கள் மூவரின் கை பற்றி குலுக்கிய அந்த தருணத்தை அப்படியே ப்ரீஸ் (freeze) செய்து விடுங்கள். பிறகு பின்புறமாக ஒரு மாதகாலம் வரவேணும் நீங்கள். பின்புறம் என்றால் முதுகு முன்னால் வருவதுபோல் பின்புறமாக நடந்து வருவது அல்ல. ஒரு மாத காலத்தை பின்புறமாக நகர்த்துவது. பிளாஷ்பாக்!.. இங்கு நீங்கள் "இச்" கொட்டுவது அனாவசியம். இது பாம்பு-கீரி கதை இல்லை. இடையில் விலகினால் ரத்த வாந்தி பயமில்லை. விலக விரும்புகிறவர்கள் இங்கு விலகலாம். (விலக இந்த சுட்டியை அழுத்துக). ஆனால் ஒன்று, ஒரு பேரனுபவத்தை, வாழ்வில் எதிர்படும் முட்டுச்சுவற்றை எப்படி நீங்கள் கடக்க போகிறீர்களோ என உங்களை பார்த்து நான் பரிதாப பட வேண்டியிருக்கும். கூட வர சம்மதமெனில் இந்த இச் கொட்டுற பிசினசெல்லாம் விட்டுவிட்டு சமர்த்தாய் நான் சொல்லுவதை கேளுங்கள். ஆச்சா... வந்துட்டிங்களா.. இனி கேளுங்கள்.
அது சுவராசியம் கலந்த ஒரு திரு நாள். மனைவி, சிரித்த முகத்துடன், "ஏங்க உங்களை பாஸ்போர்ட்டை எடுத்து கொண்டு மதுரை வர சொல்லி போன் பண்ணினாள் அனிதா" என்று சொன்னாள். மதுரை போவது சுவராசியம் இல்லை. மனைவியின் சிரித்த முகம் சுவராசியம். பேருந்தில், "கை கொட்டி சிரிப்பார்கள்... ஊரார் சிரிப்பார்கள்..." என எம்.எஸ்.வி. கதறியது ஒரு குறியீடாகவோ, சகுன கேடாகவோ எடுக்கிற மன நிலையில் இல்லை அப்போது. மனைவியின் சிரித்த முகத்திற்கு முன்பாக சகுனகேடோ, குறியீடோ தட்டுபடுவதில்லைதானே.
(Photo by CC licence Thanks #)
"ராஜா அத்தான் சவூதி போறீங்களா? ஒரு பேலசில் வெயிட்டர் வேலை. ஷாமினி அப்பா மாலத்தீவில் இருந்து போன் பண்ணாரு. அங்க ஒரு பிரின்சஸ் வந்து தங்கி இருக்காங்களாம். இவர் செய்யிற ஸ்வீட் பிடிச்சு, இவரை அந்த பேலசுக்கு வேலைக்கு கூப்பிட்டு இருப்பாங்க போல. இவருக்கு அங்க போக விருப்பம் இல்லை. ஆனாலும் நயந்து பேசி மூணு விசாவுக்கு சொல்லி இருக்காரு. அவங்களும் சரின்னுட்டாங்கள் போல. பக்கத்தில கபிலன்னு ஒரு பையன், கேட்டரிங் முடிச்சுட்டு இருக்கான். அண்ணன்ட்ட சொல்லி வேலை எதுனா வாங்கி தாங்கக்கான்னு சொல்லிகிட்டே இருந்தான். இவர் பிரண்டோட பேமிலி பிரண்ட் ஒரு பையன், அவனும் கேட்டரிங் முடிச்சிருப்பான் போல... உங்களையும் சேர்த்தா மூணு பேரு... இங்கிலீஸ் பேசுவீங்கள்ள" என்று நிறுத்தியது அனிதா.
இது அநியாயமாகபட்டது எனக்கு. முனியாண்டி விலாஸ், கருப்பையா மெஸ் தாண்டி உணவருந்துவதில் அசவுகர்யம் கொள்பவன் நான். வசந்தபவன் மாதிரியான உணவகங்களுக்கு செல்ல நேரிடுகிற சந்தர்ப்பங்கள் என் வாழ்வில் வந்திருந்தாலும், அந்த சீருடை வெயிட்டர்கள், எனக்கு அவர்களும் அவர்களுக்கு நானும் முன் பகை இருப்பது மாதிரியான ஒரு உணர்வை அனுபவிப்பவன். மேலும் வடை விள்ள உபோயோகபடுத்தும் கொலை கருவிகளை சட்ட திட்டங்களுக்குட்பட்டு உபயோகித்தறியாதவன் நான்.
வேறு நபர் எனில் தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பி இருப்பேன். அனிதா, மனைவியின் தங்கை. கொழுந்தியாள்களின் முன் எந்த அத்தான்கள் தோல்வியை ஒப்பு கொள்ள இயலும். என்றாலும்... "அது இல்லை அனிதா, இங்கிலீஸ் பேசிரலாம். அந்த ரெண்டு பசங்களும் கேட்டரிங் படிச்சிருக்காங்கன்னு சொல்றே.. எனக்கு இது பத்தி ஒன்னும் தெரியாதே... என்னை எப்படி இதுல சேர்த்த" என்றேன் அப்பாவியாய்.
"ஆமா, இப்படியே பேசிக்கிட்டு இருங்கத்தான். பொம்பளை புள்ளையை வச்சிருக்கோம்.. ஊரை சுத்தி கடன் இருக்கேன்னு நினைங்க.. எல்லாம் தானா வரும். புகழ் அத்தான் ஹோட்டல்ல இருந்து ஒரு லெட்டர் பேட் தாள் கிழிச்சு அனுப்ப சொல்லியிருக்கேன். எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகட்டை அதில் டைப் செஞ்சுக்கலாம். மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன். தயவு செஞ்சு நீங்கள் இன்டர்வியு மட்டும் நல்லா பண்ணுங்க" என்ற அனிதாவின் முகம் சற்றேறக்குறைய மனைவியை காட்டியது. நாக்கு துருத்தல் மட்டும் இல்லை.
" இன்டெர்வியுவா?"என்றேன். வீதியில் கிடக்கிற ஐந்து வயது சிறுவனின் மலத்தை மிதித்தது போல.
(Photo by CC licence Thanks #)
"போன்லதான்த்தான். ரெண்டு நாளுக்குள்ள அப்துல் ரஹ்மானுன்னு ஒருத்தர் கூப்பிடுவாரு. வேலை பாக்குறது பைவ் ஸ்டார் ஹோட்டல்லதான். மூணு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு சொல்லுங்க. பேசாம இங்க தங்குரீங்களா, அவரை இங்கு பேச சொல்லலாம்" என்று கேட்டது அனிதா.
"வேண்டாம், வேண்டாம். கொடுத்தபடியே இருக்கட்டும். நான் பார்த்துக்கிறேன்" என்று மறுத்தேன் அவசரமாய். மனைவியின் சிரித்த முக ரகசியம் அம்பலமான வலியோடு ஊர் திரும்பினேன்.
இரண்டு நாள் முன்பான தீபாவளி சிறுவனை போல போனுக்கு குதுகலமாக காத்திருக்க தொடங்கினேன். இந்த குதூகலத்திற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று, மனைவிக்கு முன்பாக ஆங்கிலம் பேசுவது. மற்றொன்று, மனைவிக்கு அறவே ஆங்கிலம் தெரியாது என்பது. மனைவியும் , அனிதாவும் பின்னிய மாய வலையை அறுத்தெறியும் சூட்சுமம் என் கையில் இருக்கிற சுதந்திரத்தை நான் வெகுவாக ரசித்தேன்.
போனும் வந்தது. அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரு வார்த்தையில் பதில் சொல்லி இருக்கலாம் நான். சந்தர்ப்பத்தை நழுவ விட நான் தயாரில்லை. "is, was, and, the, right turn, left turn, attention, right about turn, moove to the right in threes " போன்ற முழு, முழு வார்த்தைகளோடு, "a,e,i,o,u," என்கிற வவ்வல்ஸ் தூவி, ஒரு மாதிரியான வாக்கிய தோரணம் அமைத்து, கடலுக்கு அப்புறமாக இருக்கிற அப்துல் ரஹ்மானுக்கு மாலையாக அணிவித்தேன். அப்துல் ரஹ்மானின் முகம் பார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தது. மாறாக.. வலது புருவத்தை உயர்த்தி சற்று அசால்ட்டாக மனைவியை பார்த்தேன். குலசாமியை கண்ட களையில் இருந்தாள் அவள். வழக்கம் போல குடித்துவிட்டு வந்த அன்றிரவுகூட ஒரு வார்த்தை பேசவில்லை அவள். மாறாக, எனக்கு பிடித்த கோழி கறி, சப்பாத்தி செய்து வைத்திருந்தாள். அன்னிய மொழி வலிதுதான் போல....
"ஒரு அப்பா-அம்மாவிற்கு பிறந்திருந்தால், அந்த அப்துல் ரஹ்மான் இனி ஆங்கிலம் பேச மாட்டாண்டா" என நான் நண்பர்களுடன் பேசி சிரித்ததெல்லாம் வீணாக போயிற்று. ஆம்!.. மீண்டும் ஒரு போன் வந்தது "கேஸ் சிலிண்டெர் ரெடியா இருக்கு வந்து தூக்கிட்டு போங்க... பலசரக்கு பா க்கி எப்ப வரும்" என்பது மாதிரியான போன் மட்டும் பெரும்பாலும் வருவதால், போன் எடுப்பதில் எனக்கும் மனைவிக்கும் மறைமுக போட்டி இரு க்கும். போன் மணியை கேட்க்காதது போல இருப்பதில் மறைமுக போட்டி!.. இந்த மாதிரி போட்டியில் பெரும்பாலும் நானே வெற்றி பெறுவது உண்டு. வலிந்து போர்த்திக்கொண்ட எருமை தோல்...
"அப்படியா...அப்படியா" என மனைவி உற்சாகமாய் கேட்டுகொண்டிருந்தது வழமைக்கு மாறாக இருந்தது... பெப்சி உமா இவளை பாட சொல்கிறார்களோ என்கிற பதட்டம் வேறு இருந்துகொண்டிருந்தது. போனை வைத் ததும், "ஏங்க, எந்திரிங்க.. அனிதா தான் பேசினாள். நீங்க இண்டேர்வியுவுல பாசாம். நாளைக்கு பாம்பே போகனுமாம்... விசா அங்க ரெடியா இருக்காம். ஒரு வாரத்திற்குள் நீங்க சவூதி வரணுமாம்"
யோசியுங்கள் அன்பர்களே. என் இடத்தில் நீங்கள் இருந்தாலும் இதையேதான் யோசிப்பீர்கள். "மனைவி,அனிதா,அப்துல் ரஹ்மான் எல்லோரும் கூட்டோ?"... அதையேதான் நானும் யோசித்தேன். கூடுதலாக, மற்றொரு யோ சனையும் இருந்தது. இன்டெர்வியுவில் நான் பேசிய ஆங்கிலத்திற்காக "கை எட்டும் தூரத்திற்கு வரட்டும் அவன்" என்று அப்துல் ரஹ்மான் விரும்புகிறாரோ என்று பலவாறு யோசித்து கொண்டிருக்கும் போதே, சவூதி வந்து விட்டது.
(Photo by CC licence Thanks #)
மும்பை போகிற வழியில், திரும்புகிற வழியில், ஏர்போர்ட்டில், விமா னத்தில் என நேரம் கிடைக்கிற போதெல்லாம் பொடியன்கள் இருவரி டமிருந்தும் கேட்டரிங் மொத்தத்தையும் கிரகித்து விட முயற்ச்சி செய்து கொண்டே இருந்தேன். அனிதாவும் "டே ய்.. அவருக்கு எதுவும் தெரியாதுடா... எல்லாம் சொல்லி கொடுங்கள்" என்று கேட்டிருந்தது. பொடியன்கள் என்றால் பாம் பொடியன்கள். கல்லூ ரி முடித்த கையோடு வந்திருப்பான்கள் போல. பிரபலமான பாட்ஸ் மேன்களுக் கு பின்னால் கிட்பேக் தூக்கிக்கொண்டு வருகிற தாத்தாபோல வந்து கொண்டிருந்தேன் அவர்களோடு. ஒரு கட்டத்திற்கு மேல் பொடியன்கள் சொல்லித்தருவதில் சுணக்கம் காட்டுவது போ ல உணர்ந்தேன். கையூட்டு கொடுத்து, சீட் வாங்கி, மூன்று வருட படிப்பெல்லாம் மூன்றே நாளில் என் சாக்கு பைக்குள் திணிக்க திணர் கிரார்களோ என்கிற "ஆசிரிய சந்தேகமும்" இருந்தது. மே லும் சக பயணியிடம் நான் வெறும் சாக் கு பை மட்டும் இல்லை என்கிற கௌரவ பிரச்சினையும் குறுக்கிட் டதால் கெத்தாக இருந்துவிட தீர்மானித்தேன்.
சவுதியில், குளிர் ஊட்டப்பட்ட அறை.. குளிர் சாதன பெட்டி.. தனி தனி கட்டில்.. டிவி.. இவை எல்லாம் பார்த்த சந்தோசத்திலும், காஸ் சி லிண்டெர், மளிகை பாக்கி போன் கால்கள் இல்லாத சவுக்கர்யத்தி லும் மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை. கடந்த மூன்று நாளில் ஒரே ஒரு அசம்பாவிதம் மட்டுமே நிகழ்ந்தது . இன்டெர்வியு செய்த அப்துல் ரஹ்மானுக்கு (அனிதா சொல்லியதால்) ஆளுக்கு ரெவ்வண்டு லுங்கியும், கொஞ்சம் லாலா கடை அல்வாவும் வாங்கி வந்திருந்தோம். அன்று மாலை அதை வாங்க வந்திருந்த அப்துல் ரஹ்மான் மேற்படி சாமான்களை பெற்று கொண்டு சும்மா போயிருந்திருக்கலாம். "மூ ன்று பேரில் யார் ராஜாராம் என்று கேட்டார்" இதில், பொடியன்களுக்கு என்மேல் வருத்தம்போல் தெரிந்தது. பொடியன்களை விட இதில் நான் வருந்தினேன் என்பதை பொடியன்களிடம் காட்டவில்லை. சகபயணி, சாக்குப்பை விஷயத்தில் சுதாரித்துவிட்டேன் என்று சொல்லி இருந்தேன்தானே.
மறு நாள் ஒரு தையற்காரர் வந்து அளவெடுத்து போனார். மூன்றாம் நாள் மாலையில் கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை, கழுத்தில் அணிய கருப்பு வவ்வால் மாதிரியான ஒரு சாதனம் கொண்டு வந்து தந்த மனிதரை நான் எங்கியோ பார்த்தது போல இருந்தது.
ஒரு திரைப்படத்தில் புரட்சி தலைவர் பெரிய மீசை வைத்து கன்னத்தில் மருவெல் லாம் ஒட்டி மாறுவேடத்தில் இருப்பார். மற்றொரு நபர், தலையில் வெள்ளை துண்டு போட்டு,மாட்டின் கருப்பு மூக்கணங்கயிற்றை துண்டு விழுந்துவிட கூடாது போல மூன்று சுற்று சுற்றி, புரட்சி தலைவரிடம் வந்து கை குலுக்கி, "வானத்தில் எத்தனை நட் சத்திரங்கள்" என்று கேட்பார். அதற்க்கு புரட்சி தலைவர் கூட, "அவை யாவும் நமக்கே சொந்தம் " என்பார். பதிலில் திருப்தியுற்ற அந்த மூக்கணாங்கயிற்று மனிதர் கையிலி ருக்கிற அந்த சின்ன பெட்டியை புரட்சி தலைவரிடம் தருவார்... கொஞ்சம் சிரமப்பட்டால் அந்த மனிதரை மீட்டெடுத்துவிட முடியு ம் ... முயற்ச்சி செய்யுங்கள்..
அச்சசல் அந்த மூக்கணாங்கயிற்று மனிதர்தான் மறுநாளும் வந்து பிரின்சசின் காரியதரிசி மோனாவிடம் அழைத்து போனார்.
மோனாதான் அந்த அம்மணி, முக களிம்பில் புத்திசாலித்தனம் கலந்து பூசிய அம்மணி!

