முன்குறிப்பு:
இது கருவேல நிழலின் 50வது பதிவு.
அய்யா.., அம்மா.., வலையெழுத வந்த கதையை பதிவு செய்திருக்கேன் வாங்க அப்படின்னு கூப்பிட்டா வரமாடீங்கன்னு தெரியும். அதுனாலதான் சூட்டோட சூடா இந்த தலைப்பு! என்னையை கோபிச்சு பிரயோஜனம் இல்லை. கூப்பிட்ட பார்ட்டி நம்ம ரௌத்ரன்தான்! so, கொலைக்கருவி பார்ட்டிய இங்கே கிளிக் பண்ணி திட்டிட்டு வாங்க. வந்தது வந்துட்டீங்க பாஸ்! வாங்க உள்ள போய் பேசலாம்.. ஹி.. ஹி...
இனி வரலாறு:
"எங்க காலத்துல எல்லாம்" என்று யோசிக்கிற, பேசுகிற வயசும் வந்து விட்டதால் என் முந்தைய காலத்தையும், நிகழ்வையும் நினைத்து பார்க்கத்தான் வேண்டியது இருக்கிறது. ஏழெட்டு வயசு இருக்கும் போது இரவு ஏழு மணிக்கெல்லாம் கிராமம் இருட்டு பூத்து கிடக்கும். வீட்டில் சிம்னி விளக்கு புகைந்து கொண்டிருக்கும். தெரு முக்கில் ஒரு மினிட்டாம் பூச்சி மின் கம்பம்! எட்டு மணிக்கு விளக்கை ஊதி அணைத்து விட்டு பெரியவர்கள் குழந்தை செய்ய போய் விடுவார்கள். முன்பே செய்த குழந்தைகளான நாங்கள் குசு குசுவென பேசியபடி தூங்கி போய் விடுவோம்.
எவ்வளவு கால மாறுதல்களை இந்த "காலம்", கையில் உள்ள பனை ஓலை கொட்டானில் இருந்து எடுத்து, விதைத்த படியே போய் கொண்டே இருக்கிறது. முன்பு ஒரு கவிதை எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டு, அனுப்பிய கையோடு குறிப்பிட்ட பத்திரிக்கையும் வாங்க தொடங்குவேன். பிரசுரத்திற்காக காத்திருக்கிற காலங்கள், அதன் தீவிரத்தையும் கை இருப்பையும் பொறுத்தே இருக்கும். பிறகு கண்ணி அறுபடும். பிறகு அடுத்த கவிதை.
ஒரு கவிதை பிரசுரம் பத்து கவிதை எழுத ஆதாரமாக இருக்கும். ஒரு கவிதை பிரசுரமாகி விட்டால் மறு வாரமோ மறு மாதமோ அதன் விமர்சன தேடலில் பதைக்கிற மனசு சொல்லி மாளாது. கையெல்லாம் நடுங்கும்... பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம், அவ்வளவு பிரசுரங்கள், விமர்சனங்கள் தாங்கிக்கொண்டு எப்படி உயிரோடு இருக்கிறார்கள் என நினைக்கிறதும் உண்டு. முக்கியமாய் இந்த சந்தோசத்தை!... ஏழெட்டு கவிதை பிரசுரத்தில் ஒரே ஒரு விமர்சனம் பார்த்திருக்கிறேன். சரி, உங்கள் வழிக்கே வருகிறேன். ஒரு பின்னூட்டத்தை! கணையாழியில். ரவி சுப்ரமணியத்தின், "பா.ராஜாராம் கவிதை நன்று" என்பதாக. பத்து பதினைந்து குழந்தைகள் உள்ள வீட்டில் தகப்பனுக்கு தன் குழந்தைகளின் பெயர் சொல்லி அழைப்பதில் தடுமாற்றம் நிகழ்வது இயற்கையே... இந்த ஒத்த பிள்ளையோடு செத்து போக தெரிந்த என்னை மீட்டெடுத்தது மற்றொரு காலம்.
என் காலரை விலக்கி விட்டு பிடரியில் போட்டது வேறொரு காலம். வாணி ஒழுகியபடி வாசிக்க, எழுத எல்லாம் மறந்து போனது. அப்புறம் சவுதி வந்தாச்சு. கூட வந்த இரண்டு நண்பர்களும் வேறு நல்ல வேலை கிடைத்து போய் விட்டார்கள். கடைசியாக போன கபிலன் மனதளவில் மிக நெருங்கி இருந்தார். அவரும் போனதில் அறையின் வெறுமை முகத்தில் அறைந்தது. இனி தாங்காது என்றுணர்ந்து அறை மாறினேன். அங்கு கிடைத்தவர்தான் குமார் சேட்டா. அவரிடம் கணினியும் நெட் வசதியும் இருந்தது. தினமலர் தொடங்கி திண்ணை.காம் வரையில் வாசிக்க வாய்த்தது. வாசித்து கொண்டிருந்தேனே ஒழிய எழத தோணலை. ஓசியாக ஒருவரின் கணினியை எவ்வளவு காலம் உபயோகிப்பது? ஒரு சுபயோக சுப தினத்தில், குழந்தைகளின் தேவைகளை சுரண்டி ஒரு லேப்டாப்பும் வாங்கியாச்சு.
சொந்தத்தில் கணினி வந்த பிறகு குடும்பத்தை நண்பர்களை தொடர்பு படுத்திக்கொள்வது எளிதாக மாறியது. தம்பி கண்ணன் (பெரியப்பா மகன்) கனடாவில் இருக்கிறான். (வானியங்குடியான்கள் எங்கெல்லாம் போய் விடுகிரான்கள் பாருங்கள்!. அது மற்றொரு வள்ளி திருமணம் பிறகு பேசுவோம்) அவனிடம் பேசிக்கொண்டிருந்த போது, "டேய்.. நீ கவிதை எல்லாம் எழுதுவீல்ல.. எழுதி அனுப்பு உனக்கு ஒரு ப்ளாக் திறக்கலாம்" என்றான். இந்த பிளாக் என்கிற வார்த்தையை கேள்விப்பட்டு சற்றேறக்குறைய மூணரை மாத காலம்தானாகிறது. "புதுசா எதுவும் எழுதலைடா... பழசை வேண்ணா வகை படுத்துறேன்" என்று மீண்டும் நான் எழுத தொடங்கினேன்.
இங்குதான் ரமேஷ் வருகிறார். ரமேஷ் கண்ணனின் குடும்ப நண்பர். கனாடாவில் பணிபுரிபவர். கண்ணன் என் பெரியப்பா மகன். எனக்கு எதுனா செய்யணும் என்பது நிலத்தடி நீரோட்ட இயற்கையே. இந்த ரமேஷ் எனக்கு யாருன்னே தெரியாது. உதவி செய்கிற மனசும், ஆழத்தில் கிடக்கிற அவரின் இலக்கிய ஆர்வம் காரணமாகலாம் என யோசிக்க வைக்கிறது. அல்லது எனக்கு நட்புன்னா உயிர். அவருக்கும், கண்ணனும் கண்ணனின் உறவுகளும் அப்படியே தோன்றி இருக்கலாம். பெரியம்மா மரபு கவிதைகள் எழுதுவார்கள். அவர்களுக்குத்தான் முதல் ப்ளாக். பிறகு சித்தப்பாவின் அழுத்தத்தின் அதிர்வுகள்! மூன்றாவதாக நம் கருவேல நிழல்!.
எழுதி அனுப்பிய முதல் கவிதையிலேயே என்னை நெருங்கிக்கொண்டார். அப்ப தொடங்கி இப்ப வரையில் கருவேல நிழலின் ஆத்மாவை கையிலெடுத்து கொண்டார். கொண்டார்கள்!
எழுதி அனுப்புவது மட்டுமே என் செயலாக இருக்கிறது. பார்த்து பார்த்து மெருகூட்டுகிறார்கள் இருவரும். போக, உங்களின் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதும், உங்கள் தளம் வந்து பின்னூட்டம் இடுவதும் இவர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டேன். உங்கள் கைகளை பிடித்துக்கொண்டு பேச இன்ஜினியர்களை அனுமதிக்க எனக்கு சம்மதமாகவில்லை. (இது உங்கள் சுந்தரின் நட்டு! இது போல்ட்டு! பொருத்தி பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்வார்களோ எனும் பயம்தான்!) என்னை முன்னாள் வைத்து இவர்கள் ரசித்து கொண்டிருப்பதாக உணர்கிறேன். இவர்களை முன்னால் வைத்து நான் ரசித்து கொண்டிருப்பதை இவர்கள் அறிவார்களா? ஏனெனில் என் எழுத்தை உயிரோட்டமாய் காட்சி படுத்துவதை பார்க்க அவ்வளவு அழகாய் சந்தோசமாய் இருக்கிறது. ஒரு கவிதை எழுதி, அனுப்பி, காத்திருந்து, பிரசுரமாகி, விமர்சனம் பார்க்கிற சந்தோசம் இதில் உடனுக்குடன் வாய்க்கிறது.
கிட்டத்தட்ட எழுத்து மறந்து போன நிலையில் (முன்பும் பெரிதாக எழுதி கிழித்ததில்லை என்றாலும்) இந்த சந்தோசம் அளவிட முடியாததாய் இருக்கிறது. இந்த மூணரை மாத காலங்கள் எனக்கு ரொம்ப புதுசு மக்கா. சாப்பாடு நெடி அடிக்கிற நிகழ்வில் இருந்து வெளி வருகிறேன்... முகமறியா என் நண்பர்கள், நண்பிகள், உறவுகள், எல்லோருடனும் அமர்கிறேன், பேசுகிறேன். சிரிக்கிறேன், பொழுதை எனதாக்கி கொள்கிறேன், நமதாக்கி கொள்கிறேன்.... இழந்த என் பழைய நட்பைகூட புதுப்பித்து கொள்கிறேன்!
இதுக்கெல்லாம் இந்த ரமேஷ், கண்ணனுக்கு என்ன செய்ய போகிறேன் என்கிற கேள்வி மட்டும்தான் இப்போதைக்கு புதுசு. அதிலும் கண்ணனுக்கு ஒன்னும் செய்ய வேண்டாம். உங்களுக்கு என்ன செய்ய போகிறேன் ரமேஷ்?
விடுங்கள் ரமேஷ்! எல்லோருமாய் ஒரு நாள் ஒரே குடும்பத்தில் பிறந்திரலாம்....
மிகுந்த அன்பும் நன்றியும் ரௌத்திரன்.
அப்படியே ஜியோவ்ராம் சுந்தர், நேசமித்ரன், ஷென்ஷி இவர்கள் வலையெழுத வந்த கதைகளையும் கேட்டுராலாமுன்னு இருக்கு ....பார்ப்போம்!
அன்புடன்,
பாரா