
(Picture by cc licence, Thanks Daniel Paquet)
வணக்கம் நான் க.பாலாசி,
எப்டி இருக்கீங்க, நான் நலம். ஒண்ணுமில்ல என்னோட மேனேசர் வேலுஜி கணையாழி வச்சிருந்தார்.. அதுல உங்க கவிதை ஒண்ணு தட்டுபட்டது. அதான்.. கிட்டத்தட்ட 16 வருஷம் ஆகுது.. நெனக்கறப்பவே சந்தோசமா இருக்கும்ல .. சோ.. உங்களுக்காக.
***
தூங்குகிற மகனை
அருகே கிடத்தி படுப்பது வழக்கம்.
நான் - மகன் - இவள்
என்று துவங்கும் தூக்கம்.
சிறுநீர் கழிக்க எழும்போது
நான்-இவள்-மகன் என்றிருக்கும்.
பிறகு இவளுக்காக போக
எழுகையில்..
நானும் இவளும் போக
மகன் கிடப்பான்
கதவோர இடுக்கில்.
எப்ப, எப்படி நகர்வானோ?
இல்லை,
அவன் அப்படியே கிடக்க
நானும் இவளும் தான்
நகர்கிறோமோ என்னவோ?
பிரக்ஞையின்றி நகர்வது
நன்றாகத்தான் இருக்கிறது.
நானானாலும் இவளானாலும்
மகனானாலும்.
- பா.ராஜாராம்
(கணையாழி - ஜுன் 1995)
***
இப்படியாக ஒரு இதழும் வந்து சேர்ந்தது. இக்கவிதைக்கு '95- ல் என்ன தலைப்பு வைத்தேன் என நினைவில் இல்லை. 2011-ல் இந்த தலைப்பு வைக்க தோன்றியது. இதழ் இதழாக சேர்ந்தால்தானே பூ! கவிதைக்கு தலைப்பை விட இச்சூழலுக்கு தலைப்பு என எடுத்துக் கொள்கிறேன்..
தேடித் தர நண்பர்கள் இருக்கிறார்கள் என இனி எதையும் தைரியமாக தொலைக்கலாம்தான்- என்னை உட்பட! சற்றேறக்குறைய ஜீபூம்பாவிலும் இதையேதான் பேசியிருக்கிறேனோ?
பாலாசி, வேலுஜி, நன்றி!
***

