Friday, March 8, 2013

புரை ஏறும் மனிதர்கள் - இருபது


புரை ஏறும் மனிதர்கள் - இருபது


இன்னும் ரியாத்தில்தான் இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால் வெளியில் செல்ல இயலவில்லை.

கேவிஆர் வீட்டிற்கு போக முடியாததும், திருவாலர் (ப்ரபா வந்து, 'லூசு சனியனே அது 'திருவாளர்'. திருவாலர்'ன்னா 'வால் உடைய மதிப்பிற்குரியவர்' ன்னு அர்த்தம். திருந்தவே மாட்டியா?' ன்னு சொல்லுவாள் பாருங்களேன்..) R. கோபி அவர்களை சந்திக்க முடியாததும் ஏமாற்றமாகிவிட்டது.

இப்படியெல்லாம் ஏமாற்றம் தோணாது முன்பெல்லாம். வயசாகிற காரணமா இருக்கலாம்ன்னு நினைக்கிறேன். நாளை கோபார் கிளம்ப வேணும்.

பேத்திகளுக்கு என கொஞ்சம் டேட்ஸ் ஒதுக்கி வைத்திருக்கிறேன் என முந்தைய டைரிக்குறிப்பு ஒன்றில் சொல்லியிருந்தேன் இல்லையா?.

.'சரி அதையாவது அனுப்பி வைப்போம். நம்ம பொழப்ப சொல்ல முடியாது' ன்னு சுதாரித்தேன். 'கூப்புட்றா சலாலுதீன் சேட்டாவ' ன்னு கூப்பிட்டு விஷயம் சொன்னேன்
.
'அதுக்கென்னடா செஞ்சுருவோம்' என்றார். இந்த சலாலுதீன் சேட்டா ஒரு ஆச்சரியம் . எல்லோருக்கும் உதவி செய்யவே பிறவி எடுத்தது போலவே துறு துறுன்னு (துருவா துறுவா ப்ரபா?) அலைவார். எனக்கு மட்டும் இல்லை. ரியாத் பேலஸில் எல்லோரிடமும் இப்படி ஒரு பெயர் எடுத்து வச்சிருக்கிறார்.

ராஜாவையும் சலாலுதீன் சேட்டாவையும் கனெக்ட் (கனெக்ட்டா கணெக்ட்டா ப்ரபா?) பண்ணேன். ராஜாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது,

'மாம்ஸ் ஒரு சின்ன விஷயம்..மீன் குழம்பு வச்சிருக்கேன். அதை சேட்டாட்ட கொடுத்தனுப்பலாமா?' ன்னு கேட்டார்.( இது சின்ன விஷயமா? நாக்கு செத்துப் போய் கெடக்கு)

'ஆஹா கொடுத்தனுப்புங்க'

டேட்ஸ் போய் மீன் குழம்பு வந்தது டும் டும் டும் டும்.
.
சேட்டா கொண்டு வந்து மீன் குழம்பை தந்தபோது சுப்ராவில் (டைனிங் ஹால்) இருந்தேன். முதலாளிக்கான மதியச் சாப்பாடு செட்டிங்கில் இருந்தோம் எல்லோருமா.

பிளாஸ்டிக்பை ரெண்டு மூடிய டப்பாக்களுடன் சுப்ரா நுழைந்த போது ஃபிலிப்பினோ நண்பன்கள் சூழ்ந்து கொண்டான்கள்.

ஆளுக்கு அவ்வஞ்சு ரியால் போட்டு புரட்டா கறி வாங்குகிற அளவிற்கு அவன்களை பழக்கி வைத்திருக்கிறேன். அவன்கள் சிக்கன் அடபோ எனக்கும் பிடிக்கும். பழக்கி வைத்திருக்கிறான்கள். எனவே பிளாஸ்டிக்பை, மூடிய டப்பான்னு வந்துட்டாலே சாப்பாடுன்னு ஜெனரலா தெளிவாகி விடுவோம். இப்படியான கூட்டங்களின் நடுவேதான் இந்த மீன்குழம்பும் மீன் வறுவலும் வந்திறங்கியது.

மீன் வறுவல் சாப்பாட்டிற்கு முன்பே முடிந்தது. மீன் குழம்பை எல்லோருமாக சாப்பாட்டில் தெளித்துக் கொண்டு சாப்பிட்டோம். சுர்ருன்னு இருந்தது எனக்கு காரத்தைச் சொல்லவில்லை. ருசி.

ராஜாவை அழைத்து, 'மீன் குழம்பை நெருப்புக்குத்தி வைக்கிறீங்களா மாப்ஸ்? லதா வைக்கிற மீன் குழம்பு போலவே இருந்தது'

'சும்மா மண் சட்டியில் வைத்ததுதான் மாம்ஸ்'

'இல்ல ராஜா..லதா மீன் குழம்பு ஆயிட்டு இருக்கும் போதே ஒரு கங்கை எடுத்து உள்ள போட்டுட்டு மூடி வைப்பாள். அந்த மாதிரி எதுவும் செஞ்சீங்களா?'

'இல்லை மாம்ஸ். கங்குக்கு எங்க போறது. வெறும் மண்சட்டிதான்'

'வீட்டில் கேஸ் வந்த பிறகு, கரியை கேஸ் அடுப்பில் தீ எடுக்கியில் நீட்டி முன்னையும் பின்னையும் வாட்டியபடி நின்னுக்கிட்டு இருப்பாள். கங்கானதும் வைத்து இறக்கப் போற மீன் குழம்பில் போடுவாள். எதுக்கு இவ்வளவு மெனக்கெடுறாள் மீன் குழம்புக்குப் போயி' ன்னு எத்தனையோ தடவை வந்திருக்கிறது.

சேட்டன்மார்கள் ஈரிழை வெள்ளைத்துண்டை தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டு தேங்காய்ப் பொடி வறுத்தும் ,மிக்ஸ்சியில் பொடித்தும் தும்மிக் கொண்டும் ஒரு மீன் குழம்பு வைத்து வருகிறார்கள்.

'ரைட்டு. தும்மிட்டார்கள். இன்னைக்கு மீன் குழம்பு' ன்னு ஹாலில் காய்கறியோ சாலட்டோ வெட்டிக் கொண்டிருக்கிற செம பிரில்லியண்ட் ஆன எனக்குப் புரிந்து விடும்.

பாருங்க.. மீன் குழம்பு இதுக்குள்ளயெல்லாம் சிக்காது. எப்பனா சிக்கும். அன்னைக்கு நாமளாப் பாத்து 'இதாண்டா மீன் குழம்பு' ன்னு வாரி குடிச்சிக்கிற தோணும்.

அப்படியான மீன் குழம்பை ராஜா அனுப்பித் தந்திருந்தார். வாரிக் குடிக்க முடியலை. அஞ்சு பேர்களை விட்டுட்டு எப்படி வாரிக் குடிப்பது?

மனுஷன் பிரியாணி செய்கிறார். மண் சட்டியில் மீன் குழம்பு செய்கிறார், டெர்ரர் கும்மி போட்டியில் முதலாவதாகவும் வருகிறார்..ஒரு மனுஷனுக்கு இவ்வளவு நல்லது ஆகாதுங்குறேன். என்ன நான் சொல்றது?

இவர் நம்ம செட்டுக்கு ஆகமாட்டார். மரியாதையா தள்ளி நின்னுக்கிற வேண்டியதுதான். பொண்ணக் கொடுத்திருக்கோம். நேக்குப் போக்காத்தானே நடக்கணும்.

ரியாத் வந்துட்டு ரெண்டு தடவ கோபியை அழைத்திருந்தேன். அதில் ஒரு தடவ,'ப்ளஸ்ல என்ன விசேஷம்?' ன்னு விசாரித்தேன்

'நம்ம கபீஷ் இருக்காங்கல்ல அவங்கள ஜெமோ குழுமத்தில் சேர்த்துக்கலயாம். ஒரு ப்ளஸ் விட்டுருந்தாங்க' என்றார்.

'ஆக்கா..நான் இல்லாமப் போய்ட்டனே..செம ஓட்டம் ஓடியிருக்குமே கமண்ட்டெல்லாம்'

'ஆமா. செம ஜாலியா இருந்தது' ன்னு சொன்ன கையோடு,'என்ன சேர்த்துக்கிட்டாங்க. போன மாசம்தான் சேர்ந்தேன்'

ரெண்டையும் ஒரே டயத்துல சொல்ல கோபியால்தான் முடிகிறது. (கபீஷ்க்கு இந்த விஷயம் தெரிய வேணாம் நண்பர்களே ப்ளீஸ்)

'கோபி வேல சரியா இருக்கு. ஒரு சாப்பாடு கேன்சல் ஆனாலும் புறப்பட்டு ஓடி வந்துர்றேன்'

'வேலைய பாருங்க பாரா. எங்க போயிறப் போறோம். இந்தத் தடவ இல்லைன்னா அடுத்த தடவ' என புத்தர் போல பேசினார். இவரும் நம்ம செட்டுக்கு ஆக மாட்டாரோ என வருத்தமாக வந்தது. (புத்தர் குரல் போல ட்ரையாக இல்லாமல் குழந்தையின் குரல் போல ரொம்ப உற்சாகமாக இருந்தது கோபியின் குரல்)

எரிச்சலுக்கு மேல் எரிச்சலாக வந்து கொண்டிருந்தது.

சனி மாலை 6.45 இருக்கும். சுப்ராவில் இருந்து இதை எழுதிக் கொண்டிருந்தேன். 7.30 க்கு எங்க வேலை ஸ்டார்ட் ஆவும். ஒரு ஃபோன் வந்தது பேலஸ் ஃபோன். சாப்பாடு கேன்சல் என்கிற தகவல்.
'நல்ல கருத்து நன்றி' ன்னு ராஜாவை அழைத்து விபரம் சொன்னேன்.

'ம்ம்ம்..வெளியில் இருக்கேனே மாம்ஸ்
'
'சரி பாருங்க மாப்ஸ். அடுத்த தடவ ட்ரை பண்ணலாம்'

'இல்ல கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எட்டு மணிப்போல கூப்பிடறேன் . சரியாகி வந்தால் வந்துர்றேன்' என்றார்.

'எல்லாம் சரியாகி வந்துடும்' ன்னு நினைத்துக் கொண்டு யூனி ஃபார்ம் அவுத்து எறிஞ்சுட்டு குளித்து சிவிலுக்கு மாறினேன்.

திருவிழாவிற்கு கிளம்பி இருக்கிற குடும்பஸ்திரி மாதிரி மேக்கப்லாம் ஏத்தி மேலேறி வந்து ராஜாவின் ஃபோனுக்காக காத்துக் கொண்டிருந்தேன். (ரியாத் பேலஸில் எங்க ரூம் அண்டர் கிரவுண்டில் உள்ளது. மேலேறி வந்தால்தான் சிக்னல் கிடைக்கும்)

7.35 க்கு ராஜா அழைத்தார்
.
'மாம்ஸ் சாரி.. டயத்துக்கு வரமுடியாது போல இருக்கு. தப்பா நினைச்சுக்காதிக..வேறொண்ணுமில்ல' ன்னுட்டு ஒரு சந்தோஷமான விஷயம் சொன்னார். (லயாவிற்கு தம்பி வரப் போறான் என நீங்க யோசிப்பீங்கன்னு தெரியும். இல்லை. இது வேற சந்தோசம். பகிர எனக்கு ரைட்ஸ் இல்லை. அவரா பகிர்ந்து கொண்டால் எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. கேட்டீங்களா?)

'அடப் பாருங்க மாப்சு எங்க போயிறப் போறோம் ' ன்னுட்டு ஆப்பரேசன் - 2 வை தேர்ந்தேன். (ஏத்துன மேக்கப்ப வேஸ்ட்டாக்க யாருக்குதேன் மனசு வரும்?)

கோபியை அழைத்தேன். சலாலுதீன் சேட்டாவை அழைத்தேன். சரியா வந்தது. கிளம்பிட்டேன்.

ஒரு விதமான பதட்டம் தொற்றிக்கொண்டது. கருவேலநிழல் ப்ளாக் திறந்த பிறகு இந்த புரை ஏறும் மனிதர்களுக்கென நான் தேடிக் கொண்டிருக்கிற மனிதர்களைப் பார்க்கப் போகிற பதட்டம்.

முதன்முதலாக நவாசுதீனை ஜெத்தாவில் வைத்து பார்க்கப் போன பதட்டம் போலவே இருந்தது. 'நான் அப்படியேதான் இருக்கிறேன். நாளுதான் மாறுது போல ன்னு என்னை எனக்கே பிடித்து வந்தது.வெளி தேசம் வந்த பிறகு நம்மை நமக்கே பிடிப்பது சும்மா இல்ல.. வெலகுங்க.. பிடிச்ச மாதிரி இருந்துட்டுப் போறேன்.

கோபாருக்கு வெல்கம் ஜூஸ் செண்டர்னா ரியாத்துக்கு அஜீசியா பண்டா என பழகி வருகிறது. (நிலாவை அங்குதான் பார்த்தேன். ராஜாவை முன்னாடியே பார்த்துட்டேன்)

கோபியை அஜீசியா பண்டா மெக்டொனாட்ல்ஸ் வாசலில் வைத்துப் பார்த்தேன்.

ஆறாப்பு படிக்கும்போது எனக்கு R.V. சரவணன் என்ற நண்பன் 'குட்டையா'ன்னு பெயர் வைத்தான். இப்ப கப்பலில் கேப்டனாக இருக்கிறான். ஆறாப்பு தொடங்கி டிகிரி முடிக்கிறது வரையில் இந்தப் பயபுள்ள கூடயே வந்துட்டு இருந்துச்சா.
நண்பர்கள் வீட்டிலும் (அம்மாப்பா முதற்கொண்டு) 'டே குட்டையன் வந்திருக்காண்டா' ன்னு உருப்படிக்கு அழைப்பார்கள். அப்ப அவ்வளவு கஷ்டம் தெரிந்ததில்லை.அப்ப எந்தக் கஷ்டம் தான் தெரிந்திருக்கு? சந்தோஷமாகக்கூட இருந்திருக்கு. உரிமையாய் அழைக்க ஒரு வேவ் லென்த் வேணும். அது நண்பர்களிடமிருந்தானே தொடங்கும்.

'ஏங்க கப்பல்சரவணன் உங்கள தேடிட்டு வந்துச்சே. பாத்துட்டீங்களா?'ன்னு எங்களுக்கு குழந்தைகள் வந்த பிறகு லதா கேட்டாள்.

'இல்லையே புள்ள என்ன சொன்னான்?'

'குட்டையன் இருக்கானாத்தான்னு கேட்டு வந்துச்சு '

'என்ன சொன்ன?'

'அங்கிட்டுதானே வந்தாப்ல.என்னைக்கு வீடு தங்கியிருக்காரு ஒங்க குட்டயருன்னு சொன்னேன்'

சில நேரங்களில்,'குட்டையா என்னப்பெத்தாரு ரேஷன்கடை வரைக்கும் போயிட்டு வந்துறேன்' ன்னு லதாவை சர்வ சாதாரணமா செல்லம் கொஞ்சுற அளவுக்கு இந்தப் பெயரை பழக்கி வைத்திருந்தான்கள். நானும் கூட குட்டயன்னா அது நான் மட்டும்தான்னு நம்பியே வந்திருக்கிறேன்.

அந்த நம்பிக்கையெல்லாம் ஈசியா தகர்த்தார் கோபி.

'ஏ.. இங்க பாருடா நம்ம விட குட்டயரு' ன்னு ஓடிப் போய் கட்டிக் கொண்டேன் அவர் அளந்தாரான்னு தெரியலை. நான் அளந்த வகையில் மில்லி மீட்டர் நான் உயரமாக இருந்தேன்.

நானும் 'குட்டையா' ன்னு அழைக்க ஒரு நாள் ஆள் வரும் என கனவிலும்கூட நினைச்சது இல்லை. அதா வாச்சது பாசு .

கோபிக்கு காரோட்டிக் கண்ணனாக வந்த அஸ்லாம் பாயிடம்,' வணக்கம் சார். நான் ராஜாராம்' என அறிமுகமாகிக் கொண்டேன். எனக்கு காரோட்டி வந்த சலாலுதீன் சேட்டாவை,' சேட்டா ரொம்ப நன்றி' என கை பற்றினார் கோபி.

சில விஷயங்கள் பாத்துத்தான் படிக்க வேண்டியதாகிறது. பிறகு நானும் சாரை தூக்கிப் போட்டுட்டு அஸ்லாம் பாயை அஸ்லாம் பாய் என்றே அழைத்தேன்.

கார்ல உக்காந்ததுமே 'கோபி சாப்ட்டுப் போயிருவோமா?' ன்னு கேட்டேன். பெரிய அன்னவெறி ஹசாரேவேவா இருப்பான் போலயேன்னு அவர் யோசித்திருக்கலாம். யோசிச்சா யோசிச்சுக்கிறட்டும். இதுக்குலாம் பயந்தா முடியுமா?

'வீட்டுக்கு போயிட்டு ஆர்டர் பண்ணலாம் பாரா. வீட்டுக்கு வந்துரும். வீட்டை குப்பையா போட்டு வச்சுருக்கேன்' ன்னு லைட்டா சீனப் போட்டாரு. 'அப்படி இல்லாட்டி அதெப்படி பேச்சிலர் வீடு' ன்னு நானும் ஒரு ஹெவி சீனைப் போட்டுக் காட்டினேன்.

கலகலன்னு பேசிக் கொண்டு கோபி வீடு சேர்ந்தோம். உள்ள போறதுக்கு முன்னால வாசலில் ஒரு கேபின். அதில் இருந்த ஆளிடம் என் இக்காமாவை கொடுக்கச் சொன்னார் கோபி.

இக்காமான்றது நம்ம ஓட்டர் ஐ.டி மாதிரின்னு வைங்களேன். ஓட்டர் ஐ.டியை நம்ம நாட்ல ஓட்டுப் போடப் போற நாள் அன்னைக்கு மாத்திரம் எடுத்து பர்சில் வைப்போம்.

இல்லாட்டியும் பிரச்சினை இல்லை. யாராவது நம் ஓட்டைப் போட்ருவாங்க. என்ன.. 'அண்ணே ஒங்க ஓட்டப் போட்டுட்டேன். வெட்டியா அலையாதீங்க' ன்னு ஒரு அழுத்து சைக்கிளில் வந்து சொல்லிட்டால் நமக்கும் திருப்தியா இருக்கும். (இப்படியான சிறு சிறு குறைகள் வளர் ஜனநாயக நாட்டில் யதார்த்தமே )

வக்காளி இங்கு வேற மாதிரி வச்சுருக்காய்ங்க. இக்காமா இல்லாமல் கக்கூஸ்கூட போக முடியாது.

இப்படியான இக்காமாவை கொடுக்கச் சொல்றாரே என சற்று யோசனையாக வந்தது. கொடுத்த ஆளிடம் மச்சம், மரு வகைகளை அடையாளப் படுத்தி வைத்துக் கொண்டு கோபி வீட்டிற்குள் நுழைந்தேன்.

ரொம்பப் பிடிச்சிருந்தது கோபி வீடு. கிளிக் கூண்டு மாதிரி லெச்சணமா இருந்தது. கிச்சனில் இருந்த டைனிங் டேபிளில் துவைத்த துணிகள் கிடந்தன. (ஒரு மனுஷனுக்கு எதுக்கு இம்புட்டுத் துணிகள்?)

டைனிங் டேபிளில் துணிகள் கிடந்தால், வாஷிங் மிஷினுக்குள் அமர்ந்து சாப்பிடுவாரா இருக்கும் கோபி என நினைத்துக் கொண்டேன். நினைக்க நல்லாருந்தது. அதிலும் வாஷிங் மிஷினை ஆன் பண்ணி சுத்திக் கொண்டே சாப்பிடுவாரா இருக்கும் என நினைப்பை நீட்டிப் பார்த்தேன். ரொம்ப நல்லாருந்தது.

பேசிக்கொண்டிருக்கும் போது 'இணையத்தில் எழுதுபவர்களை பத்துப் பேர்களைத்தான் நல்லா எழுதுறாங்கன்னு சொல்ல முடியும்..ஹேண்ட்ஸ் ஃபுல் ஆஃப்ன்னு சொல்வாங்க இல்லையா.?' என ஒரு சுவீப் ஸ்டேட்மென்ட் விட்டார்.

'ஆமாவா'ன்னு அவரயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு ஆறு பேர்கள் வரைக்கும் விரல் மடக்கினார். அதில் என் பெயர் இல்லை என்பதில் எனக்கு வருத்தம் சூழத் தொடங்கியது.
மிச்சம் நாலு பெயர்களை அதுசமயம் அவருக்கு ஞாபகம் வரலை

. 'மிச்ச நாலு பேர்கள் யாரு கோபின்னு?' ன்னு மனசு விட்டு கேட்டுறலாமான்னு தோணியது. பயமாகவும் இருந்தது.

இதில் இரண்டு விதமான ஆபத்துகளை சந்திக்க நேரலாம். ஒண்ணு மிச்ச நாலு பேர்களிலும் என் பெயர் இல்லாமலேயே போய்விடலாம். ரெண்டு கோபி பெயர் இருந்தாலும் இருந்துவிடலாம். முன்னதை விட பின்னது மிகுந்த ஆபத்தானது என சைலண்ட் ஆயிட்டேன்.

நான் எதிர்பார்த்த அளவெல்லாம் கோபி இலக்கியம் பேசவில்லை. என்னைக் குஷிப்படுத்த விரும்பி மொக்கையாக அடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார் என ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டேன். பார்த்ததும் சலாலுதீன் சேட்டாவை சேட்டா என அழைக்கிற ஒரு மனுஷனுக்கு என்னைக் குளிப்பாட்ட இம்மி நேரம் ஆகுமா? நான் சும்மாவே சிரிப்பேன். கோபி பேசப் பேச சிரித்துக் கொண்டே இருந்தேன்.

கோபி துணுக்கு தோரணங்களாக கட்டி ஆடுகிறார் மனுஷன். ரெண்டு தோரணங்களை மட்டும் இங்கு தொங்க விடலாம்.

கோபி வீட்டிற்குள் போனதுமே ஃப்ரிட்ஜில் இருந்த லபானை ஒரு டம்ளரில் ஊத்திக் குடித்தார். 'பாரா லபான் குடிக்கிறீங்களா?' என வேறு கேட்டார். இன்னும் பால்குடியே மறக்காத பாலகனைப் பார்த்து தயிர் குடிக்கிறீங்களா என கேட்கிறார். இவரை பதிலுக்கு அசிங்கப்படுத்தாமல் விடக்கூடாது எனக் கறுவி வைத்துக் கொண்டேன். சந்தர்ப்பமும் வாய்த்தது.

டம்ப்ளரில் ஊத்தி கடைசி சொட்டு வரையில் விழணும் என தலையை அண்ணாந்தார். இப்பத்தான் அண்ணாக்க இருக்கார்
இதுதான்டா சமயம்ன்னு

'கோபி நீங்க CA ல்ல?. CA கஷ்டமான கோர்ஸ்ன்னு சொல்வாங்களே. எப்படி பாஸ் பண்ணீங்க.. அதுவும் நீங்க போயி?' என்றேன்.

'டூ தவுசனில் Y2K ன்னு ஒரு ப்ராப்ளம் வந்தது பாரா'

'ஆமாமா நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் கம்ப்யூட்டருக்கெல்லாம் எதோ பிரச்சினை வரப்போதுன்னு'

'அதேதான். கம்ப்யூட்டர் கோளாறா எனக்கு மார்க் அள்ளிப் போட்டிருக்கும் போல பாஸ் பண்ணிட்டேன்'

#

நமக்காக மொக்கையாக அடித்து தள்ளிக் கொண்டிருக்காரே அவருக்காக நாம் ஏன் அவருக்குப் பிடித்த இலக்கியம் பேசக் கூடாதுன்னு மனசு இறங்கி வந்தது.

'தி.ஜா கும்பகோணம் தானே கோபி?'

'பின்னே. தி.ஜா, எம்.வி வெங்கட்ராம், குடந்தை R.கோபி ராமமூர்த்தி எல்லோரும் கு,கும்பகோணம் தான்'

முதல் ரெண்டு ஆளுகளை வாசித்திருக்கிறேன். மூணாவது ஆள் மட்டும் பிடிபடாமல் கோபியைப் பார்த்தேன்.

'என்ன பாக்குறீங்க? நான்தான்' என்றார்.

ஏழாவது விரலையும் மடக்கிட்டாரே என எனக்கு வயித்தெரிச்சலாக வந்தது.

#

இப்படி கூட இருந்த நேரம் முச்சூடும் தான் சிரிக்காமல் எதிராளியை சிரிக்க வைக்கிற டேலண்ட் கோபிக்கு இருக்குங்குறேன்.

'பாலராஜன் கீதா சார் நீங்க வந்தா தகவல் சொல்லச் சொன்னார் பாரா' ன்னு இடையில் சொன்னார்.

'ஐயோ..கேவிஆர் வீட்டுக் போயிருந்தப்பவே இவரை சந்திக்க விட்டுப்போச்சு கோபி. கேவிஆர் வீட்டுக்கு பக்கத்துலதான் என் வீடும். தெரிஞ்சிருந்தா கண்டிப்பா வந்திருப்பேன்னு எனக்கு மெயில் கூட செய்திருந்தார்'

'நீங்களே பேசுங்க' என அவர் மொபைலில் இருந்து கால் பண்ணி எனக்கு கொடுத்தார்.

'வணக்கம் கோபி' எனத் தொடங்கினார் பாலராஜன் கீதா சார்.

'சார் வணக்கம். நான் ராஜாராம் பேசுறேன்'

'பாரா..நல்லாருக்கீங்களா? தொப்ளான் நல்லாருக்காரா? மஹா சசி நல்லாருக்காங்களா?' என ஒரு சொடுக்கலில் வீட்டில் உள்ள எல்லோர்களையும் விசாரித்தார். லதாவை விசாரிக்கவில்லை. (இது லதா தகவலுக்காக)
தொப்ளானை ஒரு லேண்ட்மார்க் ஆக்கி வைத்திருக்கிறேன். இனி அவனைப் பிடிச்சுதான் நம்ம இடத்துக்கு வரணும் என்பது போல. ரொம்ப சந்தோஷமாக இருந்தது /இருக்கிறது.

கோபி போனை வாங்கி,'கிளம்பி வாங்க. சாப்பிடுறதுக்கு இங்க வந்துருங்க' ன்னு கம்ப்பெல் பண்ணினார்.

அவரும் ஒரு டாக்ஸியைப் போட்டுக் கொண்டு கிளம்பி வந்துட்டார்.

பாலராஜன் கீதா சார் வந்தப்போ தம்மடிக்கிறதுக்காக கோபி வீட்டு காம்பவுண்டு வெளியில் வந்து பேசிட்டு நின்னுட்டிருதோம். கோபி சிகரெட் குடிப்பதில்லை. லபான் மட்டும்தான் குடிக்கிறார். (என்னைக்கு திருந்தி என்னைக்கு நல்லா வரப்போராறோ )

செம சிரிச்ச முகம் பாலராஜன் கீதா சாருக்கு. இவர ரெண்டு தடவ கட்டி இறுக்கிக் கொள்ளலாம் போலயேன்னு வந்தது. ஒரு தடவதான் வாய்த்தது. அடக்க மாட்டாமல், 'ஸ்மைலிங் ஃபேஸ் சார் உங்களுக்கு' ன்னு சொன்னேன். அவரும் நன்றி சொன்னார்.

பிறகுதான் ஞாபகம் வந்தது.கோபியை பார்த்தப்போ இந்த மாதிரி கமண்ட் எதுவும் வைக்கலையேன்னு.

சரி.. ஒரு பொய்யை வீணாக்க வேணாம் நாளப்பின்ன உதவும்ன்னு என்னை சமாதானம் செய்து கொண்டேன் .

பாலராஜன் கீதா சார், கோபி, நான் மூவருமாக கோபி வீட்டிற்குள் நுழைந்தோம். வந்து சற்று நேரத்திற்கெல்லாம் பாலராஜன் சார் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் படங்களை கோபிக்கும் எனக்கும் பரிசளித்தார்.

பச்சை பார்டர் வைத்த வெள்ளைப் பட்டில் அம்மன் மின்னினார்கள். (எனக்கு ஏன் இன்னும் இந்தப் பழக்கம் வரமாட்டேங்குது? யாரையாவது பார்க்கப் போனால் நம் ஞாபகமாய் எதாவது கொடுத்து வரவேணும் என்பது. சரி..டைனோஜி மாதிரி டீனேஜ்தானே எனக்கும். போகப் போக எல்லாம் தானா வந்துரும்)

'சரஸ்வதிக்கு எங்கும் தனி ஆலயம் இல்ல பாரா. அந்த ஏரியாவில் ரொம்பவும் பிரசித்தி பெற்ற ஆலயம் இது. வருஷம் தவறமால் போய்ட்டு இருக்கேன்' -பாலராஜன் சார்.

'சரஸ்வதில்லாம் கும்புடுறீங்க சரியா எழுத்து வரமாட்டேங்குதே?- கோபி

அவர் கொஞ்சம் ஷாக்காகி என் முகத்தைப் பார்த்தார்.

'என்ன சார் என்னைய பாக்குறீங்க. சொன்னது அவரு. வந்ததிலிருந்து வெளு வாங்கிக்கிட்டுருந்தேன் . நீங்க இப்பத்தானே வந்தீங்க. வாங்குங்க' ன்னு இரக்கமில்லாமல் நினைத்துக் கொண்டேன்.

அடி தாங்க முடியாமல் போகும்போதெல்லாம்,' அய்யோ அம்மா' ன்னு ஊரக் கூட்டி நம்ம ஆளுகளை வரவைத்து, அடியைப் பகிர்ந்து வாங்க வைப்பது ஏழுகடை ராஜதந்திரம் நம்பர் - 1

ரொம்ப வாடிட்டாரே பாலராஜன் சார்,' என்ன கோபி இப்படி சொல்லிட்டீங்க. நானும்தேன் ஆஞ்சநேயர் பக்தன். அதுக்காக என்னை தைரியசாலின்னு சொல்லிற முடியுமா?' என மடக்கலாமா என ஒரு ஐடியா வரத்தான் வந்தது.

'நீங்க ஆஞ்சநேயர் பக்தனா பாரா. அதான் அதே சாயலா இருக்கீங்க' என பூமராங் திரும்பினாலும் திரும்பலாம்.

ஒருத்தரைப் பத்தி புரிஞ்சுக்கிட்டா அப்புறம் வால் நீட்டக் கூடாது என்பது ஏழுகடை ராஜதந்திரம் நம்பர் -2.

பாலராஜன் சார் ஒரு கேமரா கொண்டு வந்திருந்தார். சின்னதா, அழகா, செப்பு போல. எனக்கு கேமராவைப் பிடிக்கும்.

கேமராவிற்கு பின்னால் நிற்க. (ஒரு காலத்தில் கேமரா மேனாக்கும்) முன்னால் நிற்பது என்றால் ஜெயிண்ட் வீலில் சுற்றுவது போல வயிறெல்லாம் கூசி வரும். இப்ப இப்ப பழகி வருகிறேன். (உதுத்துட்டேன்)

கட கடவென ஃபோட்டோ சூட் நடத்தினார் பாலராஜன் சார். நானும் கோபியும் மாத்தி மாத்தி போஸ் கொடுத்தோம். கேமராவில் உள்ளதுதான் வரும் என்று தெரியும். இருந்தாலும் நம்பிக்கைதானே வாழ்க்கை. வலிமையும் . என்ன கோபி?

'எங்கட்டையும் கேமரா இருக்கு. நாங்களும் எடுப்போம்ல' என கோபி ரூமிலிருந்து ஒரு கேமராவைத் தூக்கிக் கொண்டு வந்தார். மொரட்டுத்தனமான கேமரா அது. கூலிக்கு ஆள் வைத்துத்தான் தூக்கிட்டு போகணும் வரணும் போலான கேமராவாக இருந்தது. ஜிம்முக்கெல்லாம் போவாராக இருக்கும் கோபி. அசால்ட்டா சொந்த சத்துலயே தூக்கிக் கொண்டு வந்தார். வந்தவரால் கேமரா மூடியைத்தான் கழட்ட முடியவில்லை.

கொஞ்சம் முக்கினார். கொஞ்சம் முண்டினார். பிறகு நிறையவும் முக்கினார். நிறையவும் முண்டிப் பார்த்தார். ம்ஹூம். கேமரா வாய்ப்பு தரவில்லை. (அவர் குற்றமன்று)

'இப்படி கழட்டணும் கோபி' என பாலராஜன் சார் கவரின் இரு பக்க காதுகளை ப்ரெஸ் பண்ணியபடி கழட்டிக் காட்டினார். 'இவரை கூப்பிட்டுருக்கவே வேணாமோ' என கோபி யோசித்திருந்திருக்கலாம். யோசிக்க எல்லோருக்கும் உரிமை இருக்குதானே..

கோபி ஆர்டர் செய்த சாப்பாடு வந்தது. ரொட்டி, ரைஸ், தால், கடாய் வெஜிடேரியன், இன்னும் என்னென்னவோ.. சாப்பாடு விஷயங்களில் சரியாக ஞாபகம் வைத்திருப்பேன். இப்ப வரமட்டேங்குது. இப்படித்தான் புத்தியை பலநேரங்களில் கடன் கொடுத்து விடுகிறோம்... இல்லீங்களா வித்யா சந்திரசேகரன்? (இந்த விஷயத்தில் புத்தியை கடன் கொடுக்கவே மாட்டார்கள் வித்யா சந்திரசேகரன்- குசும்பன்)

ரூம் ரம்மியமான வாசனைகளால் நிறையத் தொடங்கியது(வாய் ஊறியது என்பதை எவ்வளவு டீசண்டாக சொல்ல வேண்டியதிருக்கிறது)

பாலராஜன் சார் சாப்பிட்டு வந்துட்டதாக மல்லுக் கட்டினார்..

'அட..உக்காருங்க சார். சும்மா கை நனைங்க'

உக்காந்து விட்டார்.

மூவரும் ஃ - னா போல தரையில் சம்மணம் கூட்டி அமர்ந்து கொண்டோம்.

தட்டு எடுக்க உள்ள போன கோபி, ;' ஆஹா ஒரு தட்டுதானே இருக்கு..இப்ப என்ன செய்றது?' என வந்தார்.

'ஆமாங்க இது ஒரு பிரச்சினை. இதுக்கு ரெண்டு அனாசின் சாப்பிட்டா சரியாகிடும்' ன்னு சொல்லத் தோணியது. சொல்ற நேரத்திற்கு சாப்பாட்டைப் பிரித்து விடலாம் என்பதால் செவ்வக சோத்து டப்பாவைத் திறந்தேன். சோத்து டப்பா மூடி கிட்டத்தட்ட ஒரு தட்டு போல மலர்ந்தது. ' கோபி இந்த மாதிரி தேவைகளை கால்குலேட் பண்ணித்தான் இப்படி ஒரு பாக்ஸ் போடுறாங்க போல. பாருங்க இப்ப இது தட்டாயிருச்சு' என்றேன்.

அரையரைக்கா புன்னகையை டெலிவெரி செய்த கோபி, 'என்னத்தையாவது சொல்லுங்க' என்றார்.

எப்பனாத்தான் சயிண்டிஃபிக்கா ஜிந்திப்பேன். அது பெரும்பாலும் இப்படித்தான் தோல்வியில் முடிகிறது. முருங்கை மரம் பிதுக்கும் பிசினிலிருந்து சாம்பிராணி ஃபேக்டரி தொடங்க முடியும் என்பது என் பழைய ப்ராஜக்ட். பதினோரு வயதில் ஜிந்திச்சது. இப்ப வரையில் கை கூட இயலவில்லை.. அப்ப செல்வராஜ். இப்ப இந்த கோபி. நண்பர்கள்தானே எதிரி.

பாதி ரொட்டி சாப்பிட்டு தள்ளி உக்காந்துகொண்டார் பாலராஜன் சார். (கை நனைச்சுட்டாராமாம்)

என் வண்டி போய்க் கொண்டிருந்தது. ஊறுகாய் இருந்தால் இன்னும் ரெண்டு கவளம் சாத்தலாம் போல வந்தது.

'ஊறுகாய் வாங்கி வச்சுக்குங்க கோபி. நம்ம ஊர் ஊறுகாயெல்லாம் இங்க கிடைக்குது'

'ஊறுகாய் வேணுமா பாரா? ஃபிரிட்ஜ்ல இருக்கு' என எழப் போனார் கோபி.

'நீங்க சாப்பிடுங்க. நான் எடுத்துட்டு வர்றேன்' ன்னு பாலராஜன் சார் எழுந்து போனார். ஃப்ரிட்ஜ் திறக்கிற சத்தம் கேட்டது. மீண்டும் ஃபிரிட்ஜ் மூடும் சத்தம் கேட்கவே காணோம். அந்த சத்தமும் வந்தால்தானே ஊறுகாய் வரும். இதுதானே லாஜிக்.

ஒரு கட்டத்தில் 'ரொம்பத் தடவுறாரே ஊறுகாய்க்குப் போயி பாலராஜன் சார்' ன்னு நான் எழுந்து போனேன்.

பல்லில் விரல் வைத்தபடி மலர்ந்து சிரிக்கிற எம்.ஜி.ஆர். ஃபோட்டோவை எல்லா அதிமுக காரர்கள் வீட்டிலும் பார்க்கலாம். அந்த ஃபோட்டோ இல்லையெனில் அது அதிமுகக்காரர்கள் வீடில்லை என அடித்துச் சொல்லலாம். அவ்வளவு பிரசித்தம் எம்.ஜி.ஆரின் அந்தப் புகைப்படம்.
( அந்த புகைப்படத்து எம்ஜியார் போலவே, பல்லில் கை வைத்தபடியும், திறந்த ஃபிரிட்ஜின் கதவு தானாக மூடிவிடாதபடிக்கு ஒரு கையில் தாங்கிக் கொண்டும் தேடிக் கொண்டிருந்தார் பாலராஜன் சார். ஊறுகாயை. (நெற்றியில் கோடுகள் கூட ஓடியது)

'அய்யயே இம்புட்டு சிந்திக்கிறாரே.. தள்ளுங்க சார்' ன்னுட்டு நான் ஊறுகாயைத் தேடத் தொடங்கினேன்.

ஃபிரிட்ஜின் மேல் தட்டில் வெள்ளரிக்கா கட்டு ஒண்ணு பிளாஸ்டிக் பிரிக்கப்படாமல் இருந்தது. இரண்டாவது தட்டில் ஒரு சதுர டப்பாக்குள் நாலஞ்சு சப்போட்டாப் பழங்கள் கிடந்தன.பக்கத்தில் கோபி குடிச்சுட்டு வச்ச லபான் கேன்
.
மூன்றாவது தட்டில் சில ஐட்டங்கள் இருந்தன. அவை யாவும் ஊறுகாய்க்கு பொருந்தாத சாயலில் இருந்ததால் என் நெற்றியிலும் கோடுகள் ஓடத் தொடங்கின.

எங்கள் குடும்பம் பாரம்பரியமான திமுக குடும்பம் என்பதால் பல்லில் கை வைக்கவும் யோசனையாக இருந்தது. யோசிக்க எல்லோருக்கும் உரிமை இருக்குதானே. தோல்வியை ஒப்புக் கொள்ள மனமின்றி, (பாரம்பரிய திமுக குடும்பத்திலிருந்து வந்ததால்) 'இதுல எங்க சார் ஊறுகாய் இருக்கு?' என்றேன் பாலராஜன் சாரைப் பார்த்து.

'அதானே..பக்கத்து வீட்டு ஃபிரிட்ஜ்ல வச்சுட்டாரோ?' என்றார் சார்.

வெடித்துத் சிரித்தேன்.

நாங்களாக பேசுவதும் சிரிப்பதையும் கண்ட கோபி விடு விடுவென எழுந்து வந்தார். 'இதென்ன ஊறுகாயா ஒங்க மண்டையா?' என்பது போல சப்போட்டாப் பழ சதுர டப்பாவை தூக்கிக் கொண்டு சாப்பிடட்ட இடத்திற்குப் போய் விட்டார். முழு முழு எலுமிச்சை ஊறுகாய். ஊறி உணங்கி சப்போட்டாவாக எங்களுக்கு காட்சி அளித்திருக்கிறது. காட்சிப் பிழேய். (பிழை ஊறியதால் பிழேய்)

'இது ஊறுகாயா? நான் சப்போட்டாப் பழம்னுள்ள நெனைச்சேன்" - பாலராஜன் சார்.

wise men thinks alike.

#

ஆச்சு. பாலராஜன் சார் கிளம்பும் நேரம் வந்துட்டது.'சரி கோபி,பாரா' ன்னு சார் கிளம்பியப்போ எதையோ பறிகொடுத்தது போல இருந்தது. சரி சார்ன்னு கூடவே கிளம்பி வந்தேன்.கோபி வீட்டின் சைடு சந்தில் பாலராஜன் சார் வந்த காருக்குள் தலை அண்ணாந்து தூங்கிக் கொண்டிருந்தார் ட்ரைவர். சார் அந்தப் பக்கத்து கண்ணாடி ஜன்னலை தட்டினார். உசும்பி விழித்த பிறகு நான் இந்தப் பக்கத்து ஜன்னலை தட்டினேன். திரும்பிப் பார்த்தார். கும்பிட்டேன் ..

பாலராஜன் சார் புறப்பட்ட கொஞ்சநேரத்தில் நானும் கிளம்ப நேரிட்டது. கோபி அஸ்லாம் பாயை அழைத்தார். பேலஸ் வந்துட்டது. பேலஸ் வாசலில் இறங்கி கோபியும் நானுமாக கட்டி அணைந்து கொண்டோம். கண்ணாடி வழியாக அஸ்லாம் பாயைப் பார்த்தும் ஒரு கும்பிடு வைத்தேன்.நேராக எட்டி என் ரூமிற்கு நடை வைத்துக் கொண்டிருந்தேன்.

சலாலுதீன் சேட்டாவை அழைத்து,' சேட்டா பேலஸ் வந்துட்டேன். கோபியே கொண்டு வந்து விட்டுட்டுப் போய்ட்டார் ரூமிற்கு நடந்து போய்ட்டு இருக்கேன்' ன்னு கூப்பிட்டேன். (கெளம்புற நேரத்துல கூப்பிட்றான்னு சேட்டா சொல்லி வைத்திருந்தார்)

'நீ அங்கயே நில்லு. நா இந்தா வர்றேன்'ன்னு சலாலுதீன் சேட்டா கிளம்பி வந்தார்.

கையில் கோபி பரிசளித்த ஸ்ரீலங்கா டீ பாக்கெட்டுகள் இருந்தன.

ரெண்டு பாக்கட்டுகளை எனக்கு வைத்துக் கொண்டு ரெண்டு பாக்கெட்டுகளை சலாலுதீன் சேட்டாவிற்கு பரிசளித்தேன்.

#

'எதுக்கு வேற யாருக்காவது கொடுக்கலாம்ல" என டீ பாக்கட்டுகளை எனக்கு கொடுத்தது போல பாலராஜன் சாருக்கும் கொடுத்தப்போ பாலராஜன் சாரின் கமண்ட் இது.

'அதான் உங்களுக்கு கொடுக்கிறேன்" ராஸ்கல் கோபியின் கமெண்ட் இது.


***

புரை ஏறும் மனிதர்கள்:

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14,15,16,17,18,19


Saturday, August 18, 2012

இலையுதிரும் சத்தம் - பத்து


பழம்பதி மாமாவிற்கு (அப்பாவின் சகோதரி கணவர்) 74 வயது. ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பணத்திலிருந்து ஒரு நகை அடகுக்கடை வைத்தார். கடந்த 14 வருடங்களாக அந்தக் கடையே வாழ்வாக வாழ்ந்து வந்தார்.

நெத்தி நிறைய திருநூறு பூசி, செல்லமா ஒரு சந்தன தீற்றல். பத்தாததுக்கு நடுவாந்திரமா ஒரு குங்குமப்பொட்டு வைத்து ஜெகஜ்ஜோதியா m- 80 யில் கடைக்கு கிளம்பிப்போன மாமாவை முந்தைய பயணத்தில் பார்த்து வந்திருந்தேன்.

நான்கு குழந்தைகள் அவருக்கு. எல்லோரையும் செட்டில் செய்து பேரன் பேத்திகள் விரல்களைப் பிடித்தபடி மாமா நடந்து வரும் அழகு ஒரு அழகுதான்.நம் வாணியங்குடி வீட்டிற்கு எதிர்த்தாப்லதான் மாமா வீடு.

முந்தைய பயணத்தில் ஒரு நாளை இங்கு குறிக்க விருப்பமாக இருக்கிறது. அப்பா வாழ்ந்த வீடு என அம்மா மட்டும் வாணியங்குடி வீட்டிலேயே தங்கி விட்டார்கள். ஆகையால் அடிக்கடி அம்மாவைப் பார்க்க ஓடி விடுவேன். (மறக்காமல் ஒரு குவாட்டர் நெப்போலியனையும் தட்டிக்கொண்டு போவது உண்டு)

அப்படித்தான் அன்னைக்கும் போயிருந்தேன். அப்படி இப்படின்னு அம்மாட்டப் பேசிட்டே இருந்துட்டு பூ போட்ட கூடைச் சேரைத் தூக்கினேன். அதை தூக்கினேனா அம்மாவிற்கு நான் எங்க போவேன்னு தெரியும்ன்னு நினைக்கிறேன். 'ஏண்டா மத்தியானத்துலையே' ன்னு கேட்டாங்க. 'சும்மா அப்படி காத்தாட ஒக்காந்திருக்கேன்ம்மா' ன்னுட்டு என் ஃபேவரைட் பிளேஸ்க்கு. வந்துட்டேன்.

நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ வாணியங்குடி வீட்டில் வலதும் இடதுமாக இரண்டு வேம்புகள் தலையை உரசிக் கொண்டு சும்மா கொள்ளுன்னு இருக்கும். ரெண்டும் சேர்ந்த நிழலில்தான் நாங்க நீஞ்சுறது வைக்கிறது. நாங்கன்னா நான், பெரியப்பா சித்தப்பா பசங்க, அத்தை மாமா பசங்க. இப்படி.

இப்ப எல்லோரும் அங்கிட்டு இங்கிட்டுமா கிடக்கிறோம். இப்பவும் இடது வேம்பு மட்டும் நகலாமல் அங்கனேயேதான் நிக்குது. வலது அவுட். வலது ஞாபகமாக அப்பா இறந்த பயணத்தில் ஒரு வாதா மரம் வைத்து வந்திருக்கிறேன். அதையும் நான் வலது வேம்புன்னுதான் அழைப்பேன்னு வைங்களேன்.

இப்ப என் ஃபேவரைட் பிளேஸ் உங்களால் உணர முடிகிறதுதானே. யெஸ்! இடது வேம்பு. அது சிந்தும் பால்ய நிழல். அம்மாவை பார்த்தது மாதிரியும் ஆச்சு. பால்ய நிழலில் ஒரு குவாட்டரை சாத்தியது மாதிரியும் ஆச்சு. இல்லையா?

கூடைச் சேர், சொம்புத் தண்ணி, டம்ளர் எல்லாம் செட்டாகி நிழலில் அமரும் போதுதான் கவனித்தேன் மாமா m-80 அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது.

'மதியச்சாப்பாட்டிற்கு வந்திருப்பாரா இருக்கும். பசிக்க மட்டும் இல்லைன்னா கடைய விட்டுட்டு வரமாட்டாரே மாமா' ன்னு நினைத்தபடியும் அம்மா வந்துராமன்னு நினைத்தபடியும் நெப்போலியனைத் தட்டித் திறந்தேன்.

கத்திரிக்காய் வதக்கியதையும், கொத்தவரங்காய் பொரியலையும் வெஞ்சனப் போணியில் வைத்துக் கொண்டு டால்ஃபின் போல நடந்து வந்தார்கள் அம்மா. ( அம்மாவிற்கு கால்வலி ) திறந்ததை மூடி மறைத்தபடி 'ஏம்மா?'என்றேன். 'சரி டக்குன்னு வாடா' ன்னுட்டு போய்ட்டாங்க.

ஒருபோதும் என் நெப்போலியனைப் பார்க்க அம்மாவை அனுமதித்ததில்லை. ஆனால் அம்மாவின் நெப்போலியனை அம்மாவிற்கு தெரியும் போல.

இந்த மனுஷன் வண்டி வேற நிக்குதே ( நம்ம வீட்டைத் தாண்டித்தான் இவர் கடைக்கு போற ரோடை பிடிக்கணும்) கெளம்பட்டும் ன்னு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்த்தேன். கதைக்காவல. வர்றது வரட்டும்ன்னு லைட்டா கொஞ்சம் போட்டுட்டு தெம்பா எந்திரிச்சு நின்னேன்.

வெள்ளையும் சள்ளையுமா மாமா வெளியில் வந்து m-80 சீட்டை ரெண்டு தட்டு தட்டிட்டு உக்காந்தார். கெளம்புடா கெளம்புடான்னு புத்தி சொல்லியது. கெளம்பி இடது வேம்பின் அடியில் நின்ற போர் பைப்பை ஸ்டார்ட் பண்ணி ஹோஸ் மூலமாக இளம் பிள்ளைகளாக நின்ற தென்னைகளுக்கும், கறிவேப்பிலை மரங்களுக்கும் (செடிதானே மரம்) நீர்பாய்ச்சத் தொடங்கினேன்.

டுபு டுபு ன்னு க்ராஸ் பண்ணிய மாமா சற்று நின்று, 'மாப்ள மத்யானத்துல தண்ணி அடிக்காதீங்க. செடிக பட்டுப் போகும்' என்றார்.
'சரிங்க மாமா' என்றாலும் மாமா யாரைச் சொல்றாருன்னு குழம்பி வந்தது.

அப்பாவுடன் சேர்ந்து தண்ணி அடித்திருக்கிறேன். அம்மாவிற்கு தெரியும். இனி யாருக்கு நான் தண்ணி அடிக்கிற விஷயத்தில் பயப்படணும் அல்லது யோசிக்கணும்?

யோசனை என்பது நெற்றியில் பூசியிருக்கும் திருநூறு அன்ட் ஸோ அன்ட் ஸோ மூலமா வருது.? நடத்தையில் வருவதுதானே. மாமா அப்படி நடந்து காட்டினார். நான் மட்டுமில்லை. ஊரே அப்படித்தான் மாமாவைக் கண்டதும் எந்திருச்சு நிக்கும்.

ஒரு அக்கு இல்லை. ஒரு பிக்கு இல்லைன்னு வாழற ஆளுக்கு ஊர் கொடுக்கிற மரியாதையாக இருக்கும்ன்னு நினைக்கிறேன். நானும் அந்த ஊரிலிருந்து கிளம்பி வந்தவன்தானே. எனக்கு மட்டும் என்ன கொம்பா இருக்கு?

இன்னைக்குப் பிறந்து இன்னைக்கே செத்துப் போகும் ஒரு ஈசலுக்குக் கூட தொந்திரவு நினைக்கக் கூடாதுன்னு வாழ்ந்து காட்டுகிற மனிதர்களின் மேல் எப்பவும் எனக்கு ஒரு பயம் பிடித்துக் கொள்ளும். பிறகு அது மரியாதையாகவும் பூத்து ஆடும். அந்த வரிசையில் பழம்பதி மாமாவை முதலாவதாக அடுக்குவேன்.

#

இந்த பழம்பதி மாமா எல்லாத்தையும் தொலைத்திருந்திருக்கிறார். இது எனக்கு சமீபகாகத்தான் தெரியவந்தது. கனடாவில் நிக்கிற தம்பி கண்ணன் போன் பண்ணி,

' டே நம்ம பழம்பதி மாமா கடைய கொள்ளயடிச்சிட்டாய்ங்ளாண்டா உனக்குத் தெரியுமா?' ன்னு கேட்டான்.

'என்னடா சொல்ற..எப்படா..ஏண்டா' ன்னு என்னென்னவோ கேட்டேன்.

'அது நடந்து ஆறேழு மாசம் ஆச்சு போல. நேத்து காளியப்பன் அண்ணன்ட்ட பேசும்போதுதான் சொன்னாரு. என்னண்ணே ஆறேழு மாசங்கிறீங்க. டெய்லிதானே போன் பண்றேன். ஒண்ணுமே சொல்லலையேண்ணேன்னு கேட்டதுக்கு என்னத்தடா சொல்லச்சொல்ற? நீங்க அங்கிட்டு கெடக்குறீங்க. எல்லாத்தையும் எதுக்கு கஷ்ட்டப் படுத்தணும்ன்னு விட்டதுதான். ஆயிரம் பவுனுக்கிட்ட இருக்குமாம். இப்ப ரொம்ப நெருக்கடியா இருக்குடா மாமாவுக்கு. என்ன வகையில் அவருக்கு ஆறுதல் சொல்றதுன்னு தெரியலன்னு சொல்றாரு. போலீஸ் ஸ்டேசனுக்கும் வீட்டுக்குமா அலைஞ்சுக்கிட்டு இருக்காராம். மிச்ச நேரம்லாம் நம்ம பிள்ளையார் கோயில்லயே கைலியக் கட்டிக்கிட்டு ஒரு துண்டையும் போத்திக்கிட்டு கெடக்குறாராம்டா. டெய்லி நூறு பேருக்கு மேல பதில் சொல்லிக்கிட்டு இருக்காராம். மாமாவுக்குலாம் இப்படி ஒரு சோதனை வரலாமாடா. பாவமா இருக்குடா மாமாவ நினைக்கும்போது. சிவாதேன் கெடந்து உருண்டுக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கான் போல. ( சிவா, மாமாவின் கடைசி மகன். சிவகங்கை ICICI வங்கியில் அப்ரேசராக இருக்கிறான். மூத்தவன் திருமுருகன். என் செட்டு. ஜெயவிலாசில் கண்டக்டராக இருக்கிறான். ரெண்டாவது மணிமேகலை. வாணியங்குடியிலேயே வாக்கப்பட்டிருக்கிறது. மூணாவது செல்வம். சென்னையில் ஏதோ ப்ரைவேட் கம்பனியில் இருக்கிறான்)

கண்ணன் பேசப் பேச ஐயோ.. ஐயோ.. ஐயோ.. என சொல்லிக்கொண்டிருந்தேன். ஐயோ'விற்கென தனியாக கண்கள் கலங்கும்போல. கண்களை மட்டும் கலக்கி விட்டுட்டு நம்ம வேலைகளை பாக்கப் போறது போலதானே இருக்கிறது நம்ம வேலைகளும்

ஆச்சா.

வேலையோடு வேலையாக சிவாவை அழைத்தேன். ( மாமாவை கூப்பிடறதுக்கு அவ்வளவு சக்தி இல்லை)
'அத்தான்' என்றான்

'இப்பதாண்டா தெரியும் சிவா. கண்ணன் சொன்னான்டா' ன்னு தொடங்கி கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வைக்கும் போது,'சிவா உனக்கு ஒரு கதை சொல்லவா. அப்பா எனக்கு சொன்னதுடா' என்றேன்.

'சொல்லுங்க அத்தான்'

'ஒரு மன்னர் அல்லது சக்ரவர்த்தின்னு நெனைக்கிறேண்டா. நளனோ என்னவோ. அப்பா பேரோட சொல்லியிருந்தாரு இப்ப ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. அவருக்கு கெட்டகாலம் தொடங்கியிருச்சாம். அதுனால ஒம்போது லெக்ஷ்மிக்களும் விடை பெற வந்திருக்காங்க. பார்ட்டி, சரிங்க போய்ட்டுவாங்க போய்ட்டுவாங்கன்னு ஒவ்வொரு லெக்ஷ்மிகளையும் உக்காந்து கொண்டே வழி அனுப்பி வைத்திருக்கிறார். கடைசியா தைரிய லக்ஷ்மி வந்தபோது எழுந்து நின்று கைகளை பிடித்துக் கொண்டு என்ன தாயீ நீங்களும் கெளம்புறீங்க. நீங்க ஒரு ஆளு மட்டும் நில்லுங்க. மத்த எட்டுப் பேர்களையும் திரும்பக் கொண்டு வர்றது என்னோட பொறுப்புன்னு சொன்னாராம். தைரியத்தை மட்டும் விட்டுறாத சிவா. சரியா. ' என்றேன்.

'சரிங்கத்தான்' என சிரித்தான். குரல் தழு தழுப்பாகவோ கரகரப்பாகவோ இருந்தது.

#
கம்ப்யூட்டர் பக்கம் வரமுடியாத வேலைகளில் இருந்தேன். வந்த போது தம்பி கண்ணனிடமிருந்து இப்படி ஒரு மெயில் வந்து கிடந்தது.
Dear annath, hope you are doing fine. I got a call from Siva (our palampathy mama son), and he was enquired that shall we publish a letter in our friends circle and ask for help such as advice or highligt this prob. until now nothing is progressing and police are grabing money when ever they visit police station

Mama is almost mad since the people who gave the gold troubling him to retrun their part of their gold. Can you please write up small note about mama,incident and the current situation and send back to me? I will show it to siva mapla, and may be we can share with our friends in the blog. even though, if we didnt receive any help, the news may spread and may get a help from some where.

Can you please do this favour and reply back at your leisure

thanks annath

#
சிவாவை அழைத்தேன். 'என்ன மாதிரி உதவிகள் வேணும்டா சிவா' என்று கேட்டதுக்கு,'போலீஸ் ஸ்டேசனில் ரொம்ப புவர் ரெஸ்பான்ஸ்த்தான். ஏழு மாசம் முடியப்போது. 1500 கஸ்டமர்கள்த்தான் அப்பாவோட முதலீடு உழைப்பு எல்லாத்தையும் விடுங்க. பப்ளிக் ப்ராபர்ட்டிய ஒழுங்கா நம்ம செட்டில் பண்ணனும்ல. கிடைச்சதைல்லாம் வச்சு உள்ளுக்குள்ளயே உருட்டிக் கொண்டிருந்திருப்பார் போல அப்பா. லாபத்தை பிரிச்சு இடங்கிடம் வாங்கிப் போட்டிருந்தாலும் சொத்துகளை வித்தடிச்சு கொஞ்சம் சந்திக்க முடியும். இது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது அத்தான். அப்பாவை இதிலிருந்து வெளியில் கொண்டுட்டு வரணும்ங்கிறது மட்டுமே தோணுது. கடைசி காலம் அத்தான். அவரை நிம்மதியா வச்சாப் போதும். அரசியல் லெவல்ல போலீஸ் உயரதிகாரிகள் லெவல்ல இந்த கேஸ் விஷயமாக பெர்சனல் இன்ட்ரெஸ்ட் எடுத்தால் நடக்கும்ன்னு தோணுதுத்தான்.

'சரி ஒண்ணு செய்யலாம் சிவா. விபரங்களை மெயில் செய். நான் கூகுள் ப்ளஸ்ன்னு ஒண்ணில் இருக்கிறேன். பெரிய உலகம் இது. அதில் அரசியல், பத்திரிக்கை, தொலைக்காட்சின்னு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை ஹைலைட் பண்ணப் பார்க்கலாம். ஆலோசனைகளை கேட்கலாம்' என சொன்னேன்.

#

இது என் மாமா கதை. இவருக்கு 1500 வாடிக்கையாளர்கள் எனில் அது 1500 குடும்பங்கள்தானே. என்ன தேவைகளுக்காக அவசர அவசரமாக இவரை அனுகியிருப்பார்கள். இந்த ஏழு மாதங்களில் எத்தனை குடும்பங்களின் சுப காரியங்கள் தள்ளிப் போயிற்றோ? மீட்க வரும்போது எப்பேர்ப்பட்ட மாமாவா இருந்தாலும் கைலியும் துண்டுமா பிள்ளையார் கோயிலில் கிடந்தால் பத்துமா?

இது மாப்ள சிவா கொடுத்த விபரங்கள்..

'எனது தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர். தற்போது அவர் 74 வயதை கடந்துவிட்டார் . ஸ்ரீ காமாட்சி கார்பரேசன் என்ற நகை அடகு கடையை சிவகங்கையில் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வந்தார். கடந்த ஜனவரி 24 ந் தேதி கடையின் பூட்டு மற்றும் பாதுகாப்பு இயந்திரப் பெட்டகம் உடைக்கப் பெற்று வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டன. நகைகளின் மொத்த எடை 6891.100 கிராம். அதாவது சுமார் 7 கிலோ ஆகும். இதன் மதிப்பு சுமார் 2. 00 கோடி. காவல்துறையில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சுமார் 1500 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என் தகப்பனாரின் மேல் இருந்த நம்பிக்கையாலும் அவரது நேர்மையான செயலாலும் பொறுமை காத்து வந்த வாடிக்கையாளர்கள் மாதங்கள் பல கடந்துவிட்ட நிலையில் தற்போது தினமும் எனது தந்தையாரை சந்தித்து நகைகளை உடனடியாக மீட்டுத்தருமாறு நூற்றுக் கணக்கானோர் வற்புறுத்துகின்றனர். இதனால் எனது தகப்பனார் மிகவும் மனம் உடைந்த நிலையிலும் வயது முதிர்ந்த காரணத்தினாலும் இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீள்வது எப்படி என்பது புரியாமல் கடவுளையும் காவல் துறையையும் மட்டுமே முழுமையாக நம்பி நல்ல செய்தியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.'

#
மக்களே,
எனக்கும் ஒண்ணும் புரியலை. எனக்கு என் மாமா மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார். எதையாவது நகட்டி மாமாவையும் கண்ணுக்கு தெரியாத 1500 குடும்பங்களையும் இதிலிருந்து விடுபட வைக்க முடிஞ்சுட்டா நான் எம்ஜியார்தான். வேறு வழியில்லாமல் உங்கட்ட கொண்டுட்டு வர்றேன். லேட்டஸ்ட்டா, போலீஸ் மெத்தனத்தை கண்டித்து வாடிக்கையாளர்கள் மற்றும் நம் ஊர்க்காரர்கள் பஸ் மறியலில் இறங்கியதாக கேள்விப்பட்டேன்.

அரசியலில், பத்திரிக்கையில், தொலைக்காட்சியில் இருக்கிற நண்பர்கள் இந்த விஷயத்தை ஃபிளாஷ் பண்ணினால், அழுத்தம் கூடி எங்கயோ இருக்கிற புரையோடிப் போயிருக்கிற சிவகங்கை போலீஸ் ஸ்டேசனின் பல் சக்கரங்கள் இயங்கலாம்.இயங்கி 1501 குடும்பங்கள் மூச்சு விட்டுக் கொள்ளலாம். அப்புறம் கடவுள் விட்ட வழி.

#

இது என் மொபைல் நம்பர் 00966502089705
மெயில் I.D rajaram.b.krishnan@gmail.com
சிவா மொபைல் நம்பர் 9865702140



Tuesday, March 20, 2012

இலையுதிரும் சத்தம் - ஒன்பது

ஏழுகடைக் கதைகள் - ஐந்தின் தொடர்ச்சி - 3

'எல்லாப் பயலுகளையும் சேத்துப் பாக்கும் போது நல்லாத்தாண்டா இருக்கு..சரி கதிரேசன் பாருக்கு விடுங்க' ன்னு சொல்லிட்டு வண்டிச் சாவியை கார்த்திட்ட கொடுத்துட்டு நான் பின்னாடி உக்காந்துக்கிட்டேன். ஒத்தையும் ரெட்டையுமா பயலுகள் எல்லோருமா வண்டிகளை விட்டோம்..

வண்டியை ஓட்டிக்கிட்டே, 'நைட்டு கொஞ்சம் ஓவராத்தான் போச்சோண்ணே.. ஃபார்மாலிட்டியால்லாம் பேசுன?' ன்னு கேட்டான்.

'என்னடா பேசுனேன்?'

'எனட்டப் போயி உதவி கிதவின்னு புலம்பின'

'ஞாபகம் வச்சுருக்கியா?'

'அப்ப தெரிஞ்சுதான் கேட்டியா..என்னண்ணே, தனியா பேசுவமா?'

'தனியா எதுக்குடா? பயலுகளுக்கு தெரியாம என்ன இருக்கு ..கடைலயே எல்லோருமா பேசுவோம்'

கதிரேசன் பார்ல எல்லோருமா ரவுண்டு கட்டி உக்காந்துக்கிட்டோம்.
முத்துராமலிங்கமும், செட்டியும் குவாட்டர்களை கொண்டு வந்து அடுக்கிக் கொண்டிருந்தான்கள். (பொதுவா எங்க செட்டு
ஷேர் போட்டு சரக்கு வாங்கிட்டு வந்தாலும் ஹாஃபாவோ ஃபுல்லாவோ வாங்கிட்டு வர மாட்டாய்ங்க. பிரிச்சு ஊத்தும் போது,' சொத்தை சரியாப் பிரி..நூலு கூடிருச்சு பாரு இந்த க்ளாஸ்ல' ன்னு குரல் விடுவாய்ங்க . இந்தப் பஞ்சாயத்து எதுக்குன்னு அவன் அவன் சொத்தை அவன் அவனே பிரிச்சு ஊத்திக்குவோம்)

'ஏ.. வழக்கம் போலதாம்ப்பா..தலைக்கு குவாட்டர்தான் கணக்கு. கார்த்தி மட்டும் இன்னைக்கு எவ்வளவு குடிக்கிறானோ குடிச்சுக்கிறட்டும். ரெண்டு வருஷத்துக்கு தண்ணிய நிறுத்தப் போறான்டா கார்த்தி. அடுத்த பயணம் நான் வர்றது வரையில் இனி தண்ணி அடிக்க மாட்டான். வரப் போற இந்த ரெண்டு வருஷத்துக்கு கார்த்திக்கு இதான் கடைசிக் குடி' ன்னு சொன்னேன்.

டக்குன்னு ஒரு அமைதி பரவுச்சு. கார்த்தியப் பாத்தேன். கார்த்தியும் என்னையப் பாத்துக் கொண்டிருந்தான். எல்லோரும் என்னையவும் கார்த்தியவும் பாத்துக் கொண்டிருந்தான்கள்.
எதிரில் உக்காந்திருந்த கார்த்தி கைய இழுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன். 'அண்ணே மேல சத்தியமா கார்த்தி' ன்னு சொல்லிக் கொண்டு இருக்கும் போதே விருட்டுன்னு கைய உருவிக்கிட்டான்

'இதான் கார்த்தி நேத்துக் கேட்ட உதவி. அண்ணன உண்மையிலேயே அண்ணனா நெனைச்சு வச்சுருந்தா எந்தலைல கை வச்சு இந்த ரெண்டு வருஷத்துக்கு இதான் கடைசிக் குடின்னு சொல்லணும் நீ. சொல்லலைன்னா எந்திருச்சுப் போயிருவேன். ஒருத்தன ஒருத்தன் சாகுறவரை பாத்துக்கிற வேணாம். ரொம்ப கேக்கலடா. ரெண்டு வருஷம்தான் நிறுத்தச் சொல்றேன். ரெண்டு வருஷங்கிறது சுண்டி ஓடிப் போகும்'

திடீர்ன்னு செட்டி 'கெக் கெக் கெக்' ன்னு அவனோட பிராண்டட் சிரிப்பைப் போட்டு அமைதிய கலைச்சான். 'சத்தியம் வாங்குற இடத்தப் பாரு' ன்னு திருப்பித் திருப்பி சிரிச்சுக்கிட்டே இருந்தான்.

'செட்டி எந்திருச்சு வெளிய போய்ட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வா. போகலைன்னு வை..செருப்பு பிஞ்சு போகும்'

'சரி..சரி..பேசு பேசு இனிமே சிரிக்கல' ன்னு வாயைப் பொத்திக் கொண்டும், தலையக் குனிந்து கொண்டு, குலுங்கிக் கொண்டுமிருந்தான். 'இப்ப வெளிய எந்திருச்சு போறியா என்னடா?' ன்னு எழுந்தேன். குனிஞ்சு கைலிய எடுத்து வாயில் திணித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே வெளியில் ஓடினான்.

'எல்லாத்தையும் வச்சுக்கிட்டு அசிங்கப்படுத்தணும்னு கிளம்பி வந்தியாண்ணே? ன்னு கார்த்தி கேட்டான். ரொம்பக் கலங்கலா இருந்தது முகம்.

'இது அசிங்கமாடா கார்த்தி..அப்டியா புரிஞ்சு வச்சுருக்க? ன்னு சொல்லிட்டு பர்ஸ் எடுத்து முத்துராமலிங்கம் கைல கொடுத்து, 'பயலுக எல்லோரும் குடிச்சதுக்கு அப்புறம் செட்டில் பண்ணிட்டு வந்து சேர்ரா நான் கெளம்புறேன்' ன்னு எந்திரிச்சேன்.

'எதுக்குண்ணே சீரியசாவுற? ..இது ஒரு மேட்டரா? சரி குடிக்கல விடு'

'நீயா ஏந்தலைல கை வச்சு சொல்லணும் கார்த்தி. மத்தபடி நம்ப மாட்டேன்'

'ஏ..லூசா நீய்யி? அவன்தான் குடிக்கலன்னு சொல்றான்ல. அப்றம் என்ன மயித்துக்கு தலைலல்லாம் கை வைக்க சொல்ற?' ன்னு முத்து கேட்டான்.

'கொஞ்ச நேரம் பொத்திக்கிட்டு இருக்கியா நீ?' ன்னு முத்தை அமட்டினேன்.

'இந்தா பாரு ஓந்தலைல கை வச்சு சொல்லிட்டு குடிச்சான்னு வையி நம்ம ரெண்டு பேரும் வாவு சாவு அத்துக்கிற வேண்டியதுதான்' ன்னு முத்து கோபமானான்.
கொஞ்ச நேரம் தலை குனிந்தபடியே உக்காந்திருந்தான் கார்த்தி.

தட்டி, 'கார்த்தி குடிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா. ஊருக்கு கிளம்பி வர்ற சந்தோசங்கள்ல இதுவும் ஒண்ணு. டெய்லி குடிக்கப்போறோம்ன்னு நினைக்கவே சந்தோஷமா இருக்கும். ஒருவேளை நீ சொல்லலைன்னு வையேன். இப்டியே எந்திருச்சுப் போறவன்தான். ஏழுகடைப் பக்கம் கூட வர மாட்டேன். சவுதில குடிக்க முடியாது தெரியும்ல. என்ன.. இந்த மூணு மாசமும் சவுதிலதான் இருக்கிறேன்னு நம்பிக்கிற வேண்டியதுதான். உனக்காக இந்த சந்தோசத்தை விட்டேன்னு நான் நெனைச்சுக்கிட்டாப்போகுது'

ரயில் புறப்பட்டுப் போனதுக்கு அப்புறம் ரயில்வே ஸ்டேசன் கெடக்குமே..அப்டி திடு திம்முன்னு இருந்தான். வறட்சியா ஒரு சிரிப்பு சிரிச்சுக்கிட்டான். எல்லோர் முகத்தையும் ஒரு ரவுண்டு சுத்தி வந்தான். பிறகு எழுந்தான். என் தலையில் கை வச்சு 'ஓம் மேல சத்தியம்ண்ணே. இதான் கடைசிக் குடி' ன்னான்.

'இங்க பாருடா' ன்னு கார்த்தி முகத்துக்கு நேர விரல் நீட்டி என்னவோ சொல்ல வந்தான் முத்து.

'அப்பா நீ நிறுத்து' ன்னு சொல்லிட்டு 'செட்டியக் கூப்புடுங்கடா தொடங்குவோம்' ன்னேன்.
'நான் எங்க போனேன்.. ஒளிஞ்சு நின்னு சீரியல் பாத்துகிட்டுருந்தேன்'ன்னு 'கெக் கெக் கெக்' குடன் வந்தான் செட்டி

தொடங்கினோம்.

பிறகு ரயில் வந்து நின்ன களை.

எல்லோரும் குடிச்சது போலவே குடிச்சான். எல்லோரும் நிறுத்தும்போது நிறுத்திக்கிட்டான்.'

டேய் உனக்கு ஃபுல் பெர்மிட்டா. இன்னைக்கு விட்டா ரெண்டு வருஷம்டி' ன்னு சொன்னேன்.

'போதும்ண்ணே'

நைட்டு ஏழு கடைக்கு வந்தான் கார்த்தி.

'நல்லா பூப்போல இறங்குதுடா கார்த்தி நெப்போலியன். என்னா டேஸ்ட்டுன்ற..தொண்டைக்கு வெளிய எதாவது பூ சிந்துதான்னு பாரேன்' ன்னு தொண்டைய கிட்டக்க கொண்டு போய் காட்டினேன்.

'பேசுண்ணே.. ஏம் பேச மாட்ட?' ன்னு சிரிச்சுக்கிட்டான்.

காலைல வெள்ளனமா எந்திருச்சேன். நேரா கார்த்தி வீடு. வாசப்படில காப்பி குடிச்சுக்கிட்டு உக்காந்திருந்தான்.

'என்னண்ணே?' ன்னான்

'என்னடா' ன்னுட்டு வீட்டுக்குள்ள போனேன். அம்மாவை, ரம்யாவை கூப்பிட்டு,'ரம்யா இது இங்க நம்பர். இது சவுதி நம்பர். நேத்தோட கார்த்தி தண்ணிய விட்டுட்டான். அவன் எப்ப தண்ணி அடிச்சாலும் எனக்குத் தெரியணும். ஒரு மிஸ்
கால் பண்ணு போதும்' ன்னு பேசிக்கிட்டு இருக்கும் போதே,'இப்டில்லாம் கொற வேஷம் போடுவாண்டா..இதை வச்சு நம்பிறாத'ன்னாங்க அம்மா.

'அம்மா அவன் தண்ணி அடிச்சா உங்களுக்கு தெரியாம இருக்காதுங்குறதுக்காக உங்கட்ட வந்து சொல்ல வந்தேன். அவ்வளவுதேன். மத்தபடி அவன் மேல நம்பிக்கை இருக்கு.. சரிம்மா' ன்னுட்டு கிளம்பும் போது வாசலில் இருந்தவன், 'தீயாத்தானே வேலை பாக்குற' ன்னு சொன்னான்.

மூணு மாசமும் எங்களோட உக்காந்து, நாங்க குடிக்கிறதப் பாத்துக்கிட்டு, சீச்சிகளை கொறிச்சிக்கிட்டு இருந்தான்.

அப்றம் இங்க வந்துட்டேன்.

'கார்த்தி இன்னும் 23 மாசந்தாண்டா இருக்கு நாம குடிக்க..இன்னும் 22 மாசம் கார்த்தி. 21 மாசம்டா' ன்னு மாசம் ஒரு தடவையாவது கார்த்தியை கூப்ட்டுக் கொண்டிருந்தேன்..
இந்த நேரத்துல கார்த்தி விஷயமா ரெண்டு மூணு நல்ல விஷயங்கள் காதில் விழுந்தன. '

மாமா கார்த்தி நம்ம சரவணன் (ஏழுகடைகாரனில் ஒருத்தன்னு இப்போதைக்கு வைங்களேன்..ஸ்டீல்ஸ் மற்றும் சிமென்ட் வியாபாரம் பார்க்கிறான்) கடைக்கு வேலைக்கு போறான் மாமா' ன்னு முத்துராமலிங்கம் கூப்ட்டிருந்தான்.

'கார்த்தி திருந்திருச்சு போல. பழனிக்கு போய்ட்டு வந்தேன், திருச்செந்தூருக்கு
போய்ட்டு வந்தேன்னு ரெண்டு தடவ வீட்டுக்கு வந்து பிரசாதம் கொடுத்துட்டுப் போச்சுங்க. யாராரோ திருந்துதுக.நாமதான் அப்டியே இருக்கோம்' ன்னு லதா பாட்டைத் தட்டி விட்டாள். சுமாராப் பாடுவாள் லதா. வேற ச்சாய்ஸ் இல்லைங்கிறதால அவள் எப்படிப் பாடினாலும் எனக்குப் பிடிச்சுதான் வரும்.

'மாமா ரம்யாவுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருச்சு மாமா. மாப்ள யாருன்ற?.. நம்ம யூஸ் மச்சாந்தான் 'ன்னு முத்து சொன்னப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது .

யூஸ் என்கிற U.செந்தில், (முத்து - கார்த்திக்கு அத்தை பையன்) ஏழுகடைக்காரரே. வக்கீல். நான் செந்தில்'ன்னு கூப்ட்டுருக்கேன். அவரும் அண்ணே'ன்னு கூப்ட்ருக்கார். விஷயம் கேள்விப்பட்டதும் செந்திலை அழைத்தேன். ,'என்ன மச்சான்?' ன்னு தொடங்கினேன்...
'ராஜாண்ணனா?..என்னண்ணே புதுசா மச்சான் போடுறீங்க?' ன்னு சிரித்தார் செந்தில்.
'எங்க வீட்டுப் புள்ளைய எடுக்கப் போறீங்கல்ல மச்சான். இனிப் பேரப் போட முடியுமா?'
'அட..என்னண்ணே நீங்க போயி' ன்னு கொஞ்ச நாள் வரைக்கும் 'அண்ணே' தான் போட்டுக் கொண்டிருந்தார்.

'எப்டி வேண்ணாலும் கூப்ட்டுக்குங்க மச்சான். நமக்கு இனி மச்சான்தான் நீங்க' ன்னு நெனைச்சுக்கிட்டே ஒரு எண்டிலிருந்து மச்சான் போட்டுக் கொண்டே இருந்தேன். விடாம நடந்தா பாதை பறிவது போல, மறு எண்டும் ஒரு நாள் மச்சான் போடக் கேட்டேன். இப்ப ரெண்டு பேருமே மச்சான்னுதான் கூப்ட்டுக்குறோம்.

கூப்பாடுபாட்டுக்கு இங்கனயே கெடக்கட்டும்..எங்க போயிறப்போது? நாம கார்த்திக்கு போவோம்..

'இன்னும் இருபது மாசம்தான் இருக்கு கார்த்தி நாம சரக்கடிக்க'

'இன்னும் பத்தொம்பது மாசந்தாண்டா'

' பதினெட்டுடா' ன்னு மாதந்தவறாம கூப்பிட்டு வந்தேன் கார்த்திய.

'அட என்னண்ணே நீ வேற?' ன்னு சவுண்டால்லாம் சிரிக்கப் பழகியிருந்தான் பய.

மாதங்கள் குறைந்து கொண்டே வந்தன...

இடையில் முத்துராமலிங்கத்திடம் பேசும் போது,' என்னடா இவன் உண்மையிலேயே நிறுத்திட்டானா? எதுக்கும் ஸ்டாண்டு பயலுகட்ட விசாரி மாப்ள. ஆச்சரியமா இருக்கு' ன்னு கேட்டேன்.

'இல்ல மாமா. சுத்தமாத்தான் இருக்கான். அடிச்சான்னா எனக்குத் தெரியாமப் போகாது. நானும் பயலுகட்ட கேட்டேன்ல. கேக்காமயா இருப்பேன்?.. அவரு அண்ணன் மேல சத்தியம் பண்ணி இருக்காராம். துதிக்க மாட்டாராம்ன்னு பயலுக சொன்னாய்ங்கல்ல..ஓந்தலை இது வரைக்கும் தப்பி இருக்கு மாமோய்' ன்னு சிரித்தான்.

'இன்னும் ஆறு மாசந்தாண்டா இருக்கு கார்த்தி' ன்னு கூப்பிட்டு பத்துப் பதினஞ்சு நாள் முடிஞ்சுருக்கும்ன்னு நினைக்கிறேன்...கார்த்தியிடமிருந்து போன் வந்தது' என்னடா கார்த்தி?' ன்னு கேட்டேன்.

'மன்னிச்சுருண்ணே. சரக்குப் போடப் போறேன்'

'என்னடா கார்த்தி ஏண்டா?' ன்னு சொல்லிக் கூட முடிக்கலை. போனை கட் பண்ணிட்டான். திருப்பிக் கூப்பிட்டுப் பாத்தேன். போனை க்ளோஸ் பண்ணி வச்சுட்டான். ரெண்டு மணிநேரம் போயிருக்கும்..ரம்யாவிடமிருந்து மிஸ்கால் வந்தது. கூப்பிட்டேன்.

'அண்ணே, கார்த்திண்ணே திருப்பி தொடங்கிருச்சு போலண்ணே..'

'தெரியும்த்தா..எனட்ட சொல்லிட்டுத்தான் அடிச்சான். இவ்வளவு நாள் நிறுத்தியிருந்தான்ல.. விடுங்கத்தா ஒரு நாள் அடிச்சுட்டுப் போறான். நான் திருப்பி கூப்ட்டேன். போன க்ளோஸ் பண்ணி வச்சுட்டான்'

'இல்லண்ணே..பஸ் ஸ்டாண்ட்ல சலம்பிக்கிட்டு நிக்குதாம். அம்மா என்னயக் கூப்ட்டு உங்களுக்கு சொல்லச் சொன்னாங்க' (ரம்யா திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாகி இருந்தது)

'அய்யயே.. இது தெரியாதேத்தா.. சரி நான் முத்தை கூப்பிடுறேன்' ன்னு முத்துராமலிங்கத்தை கூப்பிட்டேன்.

'இந்தா போன்லாம் பண்ணிட்டுத் திரியாத..காதுக்கு வந்துருச்சாக்கும்?' ன்னு கேட்டான்

'ரம்யா சொன்னுச்சுடா. செரி..நீ அவனப் போயி தூக்கிட்டு வந்து வீட்ல விட்ருடா. எழவக் கூட்டிரப் போறான்'

'ஒனக்கும் எனக்குமே அத்துப் போச்சு. இனி அவன் யாரு?'

'செரி விட்றா வெண்ண. ஒண்ணரை வருஷமா நிப்பாட்னான்ல்ல. ஓந்தலைல நா அடிச்சிருந்தாலும் ஏந் தலைல நீ அடிச்சிருந்தாலும் பத்து நாளுக்கு நிறுத்திருப்பமா? ஒரு அலைன்மெண்ட்ல போயிட்டு இருக்கானே..பத்து நாளைக்கு நிறுத்துனாக் கூட தெளிஞ்சுருவானேன்னு நெனைச்சதுதான். இதுல போயி ரூல்ஸ புடிச்சுப் பாத்துக்கிட்டு இருக்க?'

'போன வய்யி மாமா. வாய்ல வந்துரும்'

'இப்ப என்னடா சொல்ற?..போவியா மாட்டியா?' ன்னு கேட்டுக்கிட்டே இருக்கும் போதே கட் பண்ணிட்டான்.

பத்து நிமிஷம் அவனக் கூப்டுவமா இவனக் கூப்டுவமான்னு யோசிச்சிக்கிட்டே இருந்துட்டு. திருப்பியும் இவனயே கூப்ட்டேன்.

'போய்ட்டுத்தேன் இருக்கேன் மாமா. முத்துமஹாலை தாண்டிட்டேன்.அஞ்சு நிமிஷம் கழிச்சு நீயே கூப்டு மிஸ்கால் பண்ணக் கூட போன்ல காசு இல்ல. ஓம் போன் வந்தோன்ன அவன்ட்ட கொடுக்குறேன். நீந்தானா பேசு. எனக்கு அவன்ட்ட பேச ஒண்ணுமில்ல' என்றான்.

பண்ணேன்.

'என்னண்ணே?' என்றான் கார்த்தி. நான் பேசத் தொடங்குவதற்கு முன்னாலேயே, 'சரக்கெல்லாம் விட்டுட்டு ஸ்ட்ரைட்டா இருக்கணும்னு நெனைச்சா தொண்ணையா நெனக்கிறாய்ங்கண்ணே. வா..ந்தா நிக்கிறேன்ல. தனியாத்தானே நிக்கிறேன். பொருதிப் பாரு. பொட்டை மாதிரி சாட பேசுற. க்காளி கார்த்திடா' ன்னு கார்த்தி குரல் கேட்டது.

'கார்த்தி.. கார்த்தி' எனக் கொஞ்ச நேரம் கூப்ட்டுக் கொண்டே இருந்தேன். அவம்பாட்டுக்கு பேசிக் கொண்டே இருந்தான்.

'சொல்லுண்ணே..கேக்குது..தொண்ணையா நெனைச்சுப்புட்டாய்ங்கண்ணே'

'போன முத்துட்ட கொடு'

'ந்தா ஒனட்டப் பேசணுமாம்'

'யாருடா..என்ன பிரச்சினைடா?' ன்னு முத்துட்ட கேட்டேன்.

'ஊறுகா மாமா. அவம் போதைக்கு நீ நால்லாம் ஊறுகா' என்றான்.

'இவன் ஒருத்தன்'னு நெனைச்சுக்கிட்டே 'அவன்ட்ட கொடுடா' என்றேன்.

'அண்ணே' என்றான்.

'முத்து வண்டில ஒக்கார்றீங்களா கார்த்திப்பா' என்றேன்

'என்னண்ணே சொன்ன திருப்பி சொல்லு?

'வண்டில ஒக்காருங்க கார்த்திப்பா. போதும். வீட்டுக்குப் போலாம்'

'கார்த்திப்பா இல்ல.. கார்த்திப்பா இல்ல..கார்த்திப்பா இல்ல' எனக் கொஞ்ச நேரம் கார்த்தி புலம்புவதும், முத்துவின் m-80 ஸ்டார்ட் பண்ணுகிற சத்தமும் காதில் விழுந்தன.


-தொடரும்

*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3,4,5,6,7,8




Monday, February 27, 2012

இலையுதிரும் சத்தம் - எட்டு

ஏழுகடைக் கதைகள் - ஐந்தின் தொடர்ச்சி - 2

குண்டுக்கார்த்தியும், நானுமா சரக்கப் பிடிச்சுக்கிட்டு புதூர் கம்மாக்கரை மாமரத்துக்கு போய்ட்டோம். இந்த மாமரம் பேசாதவனைக் கூட மடில கிடத்திக்கிட்டு 'உங்கு சொல்லு..உங்கு சொல்லு' ன்னு பேச வச்சுப்புடும் பாத்துக்கிடுங்க.(இந்த மாமரம் குறித்து ஒரு புரை ஏறும் மனிதர்களில் கூட பேசியிருப்பேன்..என் வாழ்க்கையோட ரொம்ப நெருக்கமான ஒரு உயிர்ன்னு இப்போதைக்கு எடுங்களேன்)

மாமரத்தின் நிழலில் 'வாங்கடா வாங்கடா..நீங்க உக்காரலைன்னா நான் எதுக்குடா?' ங்கிறது போலவே எந்த நேரமும் குளிர்ச்சியா ஒரு மடை இருக்கும். அதுல உக்காந்துக்கிட்டு கொண்டு போன சரக்கு சங்கதிகளை ஒழுங்கு பண்ணிக்கிட்டு இருந்தேன்.

கார்த்தி நின்ன வாக்குலையே பாட்ல திறந்து மட்ட மல்லாக்க சரக்க கவுத்துனான். 'ஏண்டா பறக்குற?..என்னத்துக்குடா ஆகுறது தண்ணி கலக்காம அடிச்சா? ன்னேன். 'ஆமா இதை தண்ணி வேற ஊத்தி அடிப்பாக' ன்னு நெளிஞ்சு கொடுத்தான். 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது' போல முதல் ரவுண்ட முடிச்சிட்டு அவனே பேசட்டும்ன்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்...

'அண்ணே நம்ம மாடி வீட்ல ஒரு ஐயர் வீடு குடி வந்தாய்ங்கண்ணே.'
(கார்த்தி அம்மாவுக்கு ஏழெட்டு வீடுகள் சொந்தமா உண்டு. அப்பவே பத்தாயிரத்திற்கு மேலாக வாடகை வந்து கொண்டிருந்தது. ஒரே பய இவன். கார்த்தி அக்காவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க அம்மா. தங்கச்சி வீட்ல இருக்கு. இவன் செருப்பு கூட போடாம சிவகங்கை ரோடு பூராமா திரிஞ்சான்)

'சரி'

'ஐயருக்கு ரெண்டு பொம்பளைப் புள்ளைகண்ணே. மூத்தத கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாரு. ரெண்டாவது புள்ள ப்ளஸ் டூ
பெயிலாகி தையலுக்கு போய்ட்டுருந்துச்சு'

'சரி'

'அது நம்மள கொஞ்சம் ட்ரான்சாக்சன் பண்ணுச்சு'

'ட்ரான்சாக்சன்னா?'

'அதாண்ணே..பார்வைய போட்டுச்சு'

'ஓ.. சரி. மூத்ததா ரெண்டாவதாடா?'

'ரெண்டாவதுண்ணே. மூத்ததுதேன் கல்யாணம் பண்ணி போயிருச்சுல்ல. சீரியஸா பேசும்போது கூறுகெட்டதனமா எதாவது கேப்ப' ன்னு லைட்டா சிரிச்சுக்கிட்டான்.

'ஓஹோ.. சரி சரி சொல்லு சொல்லு'

'என்னையதேன் உனக்கு தெரியும்ல.நமக்கு புள்ளைகன்னாலே ஆகாது. என்னவோ இந்தப் புள்ளைய மட்டும் கொஞ்சம் புடிச்சுப் போச்சுண்ணே'

கார்த்தியோட முகத்தை இவ்வளவு அழகா வேறெப்பவும் பார்த்ததே இல்லை நான். பேச்சுக்கு பேச்சு நெளிந்தான். குழைந்தான். காலரை தூக்கி விட்டான். சின்ன சின்னதா சிரிச்சுக்கிட்டான். சிரிப்பது நினைவு வந்தது போல நிறுத்திக்கிட்டான். திருப்பியும் சிரிச்சான்.

'அட இஞ்ச பார்றா காலத்துக்கு வந்த கோலத்த' ன்னு நினைச்சுக்கிட்டே அவன் முகத்தையே பாத்துக்கிட்டிருந்தேன்.

'ஆளு அம்சமா இருக்கும்ண்ணே' ன்னு திடீர்ன்னு சொன்னான். சொன்ன போது லேசா கண் கலங்கியிருந்தான்.

'சரிடா.. மேட்டருக்கு வா'

'அது மாடில நின்னுக்கிட்டு பார்வைய போடும். நான் நம்ம வீட்டு வாசப்படில உக்காந்துக்கிட்டு பார்வைய போடுவேன். வெளிய அலையிறது குறைஞ்சு போயி வாசப்படிலேயே இருந்தனா, அம்மா போட்டுக்கிருச்சு போல. உள்ள பாவம் பத்தாதுன்னு ஐயர் வீட்டுப் பாவம் வேறயான்னு சாடைய போட்டுச்சு. அப்புறம் அங்க உக்கார்றத விட்டுட்டு அந்தப் புள்ள தையலுக்கு போற வர்ற வழில நின்னு பாத்துக்கிட்டு திரிஞ்சேன்'

'சரிடா..புடிச்சிருக்குன்னு அதுட்ட சொல்லிட்டியா இல்லையா?'

'சும்மாருண்ணே ..நீபாட்டுக்கு அசால்ட்டா கேக்குற. அந்தப் புள்ள பாக்கும் போதே உள்ள எனக்கு டவுசர் கழண்டு போகும்ண்ணே. எங்கிட்டுப் போயி புடிச்சுப் போச்சுன்னு சொல்லச் சொல்ற?'

'ஆமடா..பயப்பட வேண்டியதுக்கல்லாம் பயப்படாதீக '

'நீயும் சாடையப் போடாம செத்த நான் சொல்றத மட்டும் கேட்டுக்கிட்டே வா. நான் இந்த கேஸ் விஷயமா உள்ள போய்ட்டு வந்தனா? வந்து பாத்தா வீட காலி பண்ணிப் போய்ட்டாய்ங்கண்ணே'

'எங்க போய்ட்டாங்கடா?'

'அதான் தெர்லண்ணே. ஐயர் வீடு எங்கன்னு அம்மாட்ட கேட்டேன். காலி பண்ணி போய்ட்டாங்கன்னு சொன்னுச்சு. காலி பண்ணி?ன்னு கேட்டேன். காலி பண்றவங்கல்லாம் சொல்லிட்டா காலி பண்றாங்கன்னு சொல்லிருச்சு. அம்மாவுக்கு தெரியாம இருக்காதுண்ணே. ஐயர்ட்ட ஜோசியம்லாம் இது பாத்துக்கிட்டு திரிஞ்சிச்சு. கொஞ்சம் அம்மாவை கரெக்ட் பண்ணி பேசி எங்க போயிருக்காய்ங்க என்ன ஏதுன்னு விசாரிக்கணும்ண்ணே. நீன்னா கொடைஞ்சு விசாரிச்சுருவ' ன்னான்.

'போடாப் போடா..இதைப் போயி எப்டிடா நான் அம்மாட்ட கேக்குறது?'

'அண்ணே உனக்கு பேசத் தெரியும்ண்ணே. அந்தப் புள்ளைய மறக்க முடியலண்ணே. உன்னால முடியும்ண்ணே' ன்னு சொன்னப்போ ரொம்பக் கலங்கலா இருந்தான்.

'விட்றா நம்ம வேற வகைல விசாரிக்கலாம்'ன்னு சொல்லிட்டு இந்த மேட்டரையே மறந்துட்டேன். அடுத்தவன் பிரச்சினை நமக்கு எப்பவும் சல்லி மேட்டர்தானே...

காலம் ஆடிய பாப்பா நொண்டியில் சவுதிப் பக்கம் ஒதுங்குனனா..
பயலுகள் எல்லோரும் மிஸ்கால் பண்ணுவாய்ங்க. நாங்கூப்புடுவேன். 'செட்டுக பூராம் சேந்துருக்கோம் மாமா. ஓங்குரல் கேக்கணும் போல இருந்துச்சு' ம்பாய்ங்க. ஒரு செக்கென்ட் இங்கருந்து அங்க போய்ட்டு இங்க வந்துருவேன்.

ஆனா இவன் மட்டும் அப்படி இல்லை.(மொபைல் வசதி எல்லோருக்கும் வந்தது மாதிரி கார்த்தி வரைக்கும் கூட வந்திருந்தது) இவன் நேரடியா கூப்பிடுவான். நாந்தான் கட் பண்ணி கூப்புடுவேன். 'ஏண்ணே நீங் கூப்புடுற.எனட்டதான் காசு இருக்குல்ல. இல்லாட்டி கூப்டுவனா?'ம்பான்.

'சரிடா என்ன விஷயம்?'ன்னு கேட்டா

'தேனில திரியுறேன்ண்ணே. ஐயர் வீடு இங்க மாறி வந்துட்டதாக கௌரிப் பிள்ளையார் ஜோஸ்யர்ட்ட துப்பு வெட்டுனேன். இதோட நாலஞ்சுவாட்டி வந்துட்டேண்ணே. கங்கு கங்கா தேடிக்கிட்டு இருக்கேன். கண்டுபுடிச்சுப்புடுவேண்ணே 'ம்பான்.

'ஓ.. மாமர மேட்டரா' ன்னு நினைவு வந்து, 'சரி கார்த்தி. பாத்துட்டா கூப்டு' ன்னு முடிச்சுருவேன்.

ரெண்டு வருஷம்ங்கிறது எத்தனையோ நாட்கள்தானே. அதுக்குள்ள எவ்வளவோ நடக்கும்தானே. அதுல ஒரு நாள்ல கார்த்தி தங்கச்சி திருமணம் முடிந்தது. மற்றொரு நாள்ல கார்த்தி அம்மா இறந்து போய்ட்டாங்க...

குண்டுக்கார்த்தி அம்மா இறந்து போனது, தங்கச்சிக்கு கல்யாணம் நடந்தது எல்லாம் அப்படியே இருக்கட்டும். நம்ம கொஞ்சம் முன்னால போய்ட்டு வருவோமே... ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போச்சு. ( அம்மா இறப்பு, தங்கச்சி கல்யாணத்திற்கு முந்திய காலம்)
சவுதியிலிருந்து ஊருக்கு பயணம் வைக்கிறப்போல்லாம் என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. வீடு சேர்ந்த மறுநாள் காலைலேயே வண்டிய தட்டுவேன். பயலுக எல்லோர் வீட்டுக்கும் ஒரு ஃப்ளையிங் விசிட்.

பயலுகளை ஏழுகடையில் பிடிச்சுப்பிடலாம். பயலுகளோட மனுஷங்கள, புள்ளைகள, குழந்தைகள, பாக்கணும்ன்னா வீடு போய் பாத்தால்தானே?. ரெண்டு வருசமா கொக்கா?' ங்றத காட்டித் தரும் பாருங்க இந்தக் காலம். முக்கியமா குழந்தைகளிடம் தாண்டவம் ஆடி வைத்திருக்கும். நம்பவே முடியாம வரும். குழந்தைகள்'ன்னா அதுக்கும் தொக்கு போல.

சூரி அண்ணன் வீட்டிலிருந்து தொடங்குவேன்.

போய் இறங்கியதுமே, 'என்ன கொழந்தனாரே நீங்க எப்ப வந்தீங்க?..நீங்களும் வந்து விழுந்துட்டீங்களா.. இனி ஊரு ரெண்டு பட்டுப் போகுமே' ன்னு சுந்தரி அத்தாச்சி (சூரி அண்ணன் வீட்ல ) சிரிக்கும்போது ஆட்டமேட்டிக்கா எனக்கும் சிரிப்பு வந்துரும்.
ரெண்டு வருசமா கேக்காத குரல். பாக்காத சிரிப்பு. சிரிப்புக்குல்லாம் சுச்சா வைக்க முடியும்? தானா பொரிந்து தள்ளிவிடும். இல்லையா?

'நைட்டு வந்தேன் அத்தாச்சி. இதென்ன ரெண்டு வருஷத்துக்குள்ள பயலுகள்லாம் வளந்து மனுஷங்களாகி நிக்கிறாய்ங்க? ன்னு சிரிப்பேன். ( சூரி அண்ணனுக்கு பெரியமருது, சின்னமருதுன்னு ஒரு ரெட்டையர்கள். வாஞ்சிநாதன் மூணாவது. வாஞ்சி சசி கிளாஸ்மேட்)

'அண்ணே எங்கத்தாச்சி?

'அங்கிட்டுதானே வந்தாக கடையப்பக்கம். ஆமா நீங்க என்ன மெலிஞ்சு வந்திருக்கீங்க கொழுந்தனாரே? என்றோ 'செத்த கலரா வந்துருக்கீங்க இந்தத் தடவ' என்றோ அத்தாச்சி கண் மூலமாக என்னைப் பாக்க வைப்பாங்க- கண்ணாடி காட்டாத என்னை..

'அட நம்மளும் குழந்தைதான் போல' ன்னு ஒரு துள்ளல் பிறக்கும்.

'வீட்லருந்து வர்றேன் அத்தாச்சி இன்னும் கடையப் பக்கம் போகல..அண்ணே எப்டி இருக்காரு?'

'என்னத்தப் போங்க கொழந்தனாரே.. ஒரு காலத்துல அப்டி இருந்தோம் ஒரு காலத்துல திருந்துனோம்ன்னு இல்லாம அப்டியேதான் இருக்காக. சுகர வச்சுக்கிட்டு குடிக்கலாமா கொழந்தனாரே.. தனக்கா தெரியவேணாம்?' ன்னு ஒரு பாட்ட எடுத்து விடுவாங்க.

'ஆளுகன்னா அப்டியேதான் இருக்கணும் அத்தாச்சி. பொட்டல்கதான் வீடு வாசலுமா வச்சுக்கிட்டு பழைய அடையாளத்த காட்டாம கெடக்குதுக. மனுஷய்ங்கள பாத்தது மாதிரியே பாத்தாத்தானே நல்லாருக்கும்'

'ஒங்கட்டப் போயி சொல்றேன் பாருங்க. சேந்ததுபூராம் சிவலிங்கம்' ன்னு சிரிப்பாங்க சுந்தரி அத்தாச்சி.

அந்த சிரிப்போடையே அடுத்து முத்துராமலிங்கம் வீடு.

'அய்யோ..அண்ணே வந்துட்டீங்களா? ன்னு பாத்ததும் நெஞ்சுல கைய வச்சுக்கும் மீனா (முத்துராமலிங்கம் வீட்ல)

'என்னத்தா சந்தோஷப்பட்றியா ஷாக் ஆகுறியா?'

'சந்தோஷமாவும் இருக்குண்ணே ..இனி இவுக மாமா வாங்கிக்கொடுத்துச்சு மாமா வாங்கிக் கொடுத்துச்சுன்னு டெய்லி குடிச்சிட்டு வருவாகளேன்னு ஷாக்காவும் இருக்குண்ணே' ன்னு கெடந்து சிரிக்கும்.

'இப்டி வேற போட்டு வச்சுருக்கானா..டெய்லி வாங்கிக்கொடுக்க எவன் வீட்டுக்குத்தா போறது? போயி அவனை கடைல வச்சுக்கிறேன்' ன்னு சொல்லிட்டு வருவேன்.

ஆக, எல்லா வீட்லயும் ஒரே பாட்டுதான். ஒரே பாட்ட வேற வேற மெட்ல கேக்குறது நல்லாத்தான் இருக்கும். சிப்பு சிப்பாக்கூட வரும். அப்படி,. ஒரு பயணத்துல குண்டுக்கார்த்தி வீட்டுக்கு போயிருந்தேன். அம்மா கட்டில்ல படுத்திருந்தாங்க. 'என்னம்மா முடியலையா?" ன்னு பக்கத்துல உக்காந்தேன். கொஞ்ச நேரம் முகத்தையே தேடிக் கொண்டிருந்தாங்க.

'ராஜால்லம்மா' ன்னு சொல்ல சங்கட்டமாகத்தான் இருந்தது. சொன்னேன். 'டேய்..நீ எப்ப வந்தே?ன்னு எந்திரிச்சு உக்காந்து கைகளைப் பிடிச்சுக்கிட்டாங்க. எத்தனையோ தடவ கைகளை பிடிச்சுக்கிட்ட கைகள். 'நீ சொன்னா கேப்பாண்டா' ன்னு கன்னங்களை வருடிய கைகளும் கூட. அந்தக்கைக்கு முன்னால உக்காந்துக்கிட்டு, இந்தக்கையை ராஜால்லமான்னு சொல்ல வைத்தது காலக் கை. கொஞ்சம் அதை இதை பேசிட்டு, 'இவன எங்கம்மா?' என்றேன்.
'
சாப்ட்டு போயிருக்காரு துரை. இனி மத்தியான சாப்பாட்டுக்குத்தானே வருவாரு. ஸ்டாண்ட்ல கெடப்பாரு. ஆளப் பாத்தியா?'

'இல்லம்மா'

'ஆளப்பாத்தா அரண்டு போவடா. குடிதாண்டா இவனை திங்குது. ஏதோ ட்ரீட்மெண்டு க்ரீட்மெண்டுங்கிறாய்ங்களே..காசு போனாலும் போய்ட்டுப்போது, அப்டி எதுனா செஞ்சு நீ வந்ததோட சரி பண்ணிட்டுப் போடா'

'அடப் போங்கம்மா.. ட்ரீட்மென்ட்லாம் எடுத்தா அப்புறம் குடிச்சான்னா பெரிய ரிஸ்க். வேறமாதிரி இவனை நிறுத்த வச்சுப்புடுவோம். பேசாம இருங்க' ன்னு ஆறுதல் சொல்லிட்டு ( ஆறுதல்லாம் நல்லாத்தான் சொல்வேன். காரியம் பாக்கத்தான் கடுப்பா இருக்கும்) நேர பஸ்ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போனேன். பயலக் காணோம்.
புதுப் புது ஆட்டோ டிரைவர்கள் வேற. 'குண்டுக்கார்த்தி' ன்னு பேச்செடுத்தேன் ஒரு டிரைவரிடம்..

'பார்ல பாருங்க சார். செத்த முன்னாடி உள்ள போனாப்ல' ன்னு சொன்னார். பார்ல தேடினேன். காணோம். 'பீச் வரையில் வந்துட்டு காத்து வாங்காமல் போனால் நம்ம சமுதாயம் மதிக்காதே' ன்னு ஒரு நினைப்பு வந்து மத்தியான ஓட்டத்துக்கு ஒரு குவாட்டரை பிடிச்சுக்கிட்டு ஏழுகடை வந்துட்டேன்.

வந்து ஒரு கட்டிங் போட்டிருப்பேன்..

வேகு வேகுன்னு லுங்கில வந்தான் கார்த்தி...

ஒரு முழு மனுஷன தண்ணி இவ்வளவு தின்னுருமா என்ன?..

வந்த குண்டுக் கார்த்தி கைகளைப் பிடிச்சுக்கிட்டான். முதல் தடவ பாக்குற போது பயல்கள் எல்லாம் 'மாமோய்' ன்னு ஒரு சவுண்டு விட்டு கட்டி இறுக்கி, தூக்கி, ஒரு குலுக்கிக் குலுக்கி, நிலத்தில் குத்துவாய்ங்க. இந்தப் பக்கிக்கு அதுலாம் தெரியாது. பெரிய வெண்ண மாதிரி கையக் கொடுப்பான். நாமாக கட்டி இறுக்கிக் கொண்டால்தான் உண்டு.
அப்படி கட்டிக் கொள்ளும் போதும் அவன் வாசனைய நாம குடிச்சாலும் குடிச்சுப் புடுவோம' ங்கறது போலவே வழுக்கிக் கொண்டும் நழுவிக் கொண்டும் இருப்பான். இந்தத் தடவையும் அப்படித்தான் இருந்தான். நழுவி.. விட்ட கையை மீண்டும் எடுத்து கைகளுக்குள் வச்சுக்கிட்டு, 'எப்பண்ணே வந்த?..என்னண்ணே நீ கூட சொல்லல அண்ணே வரப்போதுன்னு?' ன்னு முத்துராமலிங்கத்தைப் பாத்தான்.

'எங்கடா நீ ஏழுகடைப் பக்கம் வந்த? உன்னையப் பாத்தே நாலஞ்சு மாசம் இருக்குமா? நீ வந்தா இங்கிட்டு வர்றதுதான் மாமா. போய்ட்டேன்னு வைய்யி.. பய ஆட்டோ ஸ்டேண்டுக்கு போயிருவாரு. அப்புறம் என்ன மயித்த சொல்லச் சொல்ற?'

'சரி என்னடா கார்த்தி இப்டி மெலிஞ்சு போய்ட்ட? குண்டுக்கார்த்திங்கற பேர காப்பாத்தவாவது சேமா இருக்குறது இல்லையா?..என்ன புள்ள போ'

'இதாண்ணே நடக்க வைக்க நல்லாருக்கு'

'தம்பி டெய்லி ஜாக்கிங் போறாப்ல மாமா. வாக்கிங் கூட இல்ல. ஜாக்கிங். உடம்ப கண்ட்ரோல்ல வைக்கணும்ல'- முத்துராமலிங்கம்.

'நம்ம ஒண்ணு பேசுனோம்ன்னா இது ஒண்ணு பேசும்'ன்னு சிரித்தான் கார்த்தி. சிரிப்பும் கூட மெலிஞ்சு போய்தான் இருந்தது.

'காலைலயே ஊத்திர்றான்ன்னு கேள்வி மாமா. நம்மல்லாம் சந்தோசத்துக்குத்தானே குடிக்கிறோம். இவன் சரக்கப் போட்டுட்டு புடிக்காத முகமா தேடி அலையிரானாம் மாமா. நீ இங்க வர்லன்னாலும் உன் சங்கதியெல்லாம் வாங்கிதாண்டி வச்சுருக்கேன்'- முத்து.

'வந்தோன்னையே பத்த வைக்குது பாருண்ணே. தெரியாமையா ஏழுகடைக்காரய்ன்ங்க இதுக்கு பரட்டைன்னு பேர் வச்சாய்ங்க'
'
கட்டிங் இருக்குடா..போட்றியா?'

'போட்ருக்கேண்ணே. நீ சாப்டு..வீட்டுக்கு வந்து கைலிக்கு மாறிக்கிட்டு இருந்தேன். அம்மா சொன்னுச்சு நீ வந்திருக்கன்னு. அப்டியே கெளம்பி வந்துட்டேன். சாப்ட்டு போடான்னு கத்துச்சு. ந்தா வந்துர்றேன்'த்தான்னு வந்தேன். வீட்ல சாப்டுவோமாண்ணே. அம்மா வச்ச மீன் குழம்பு இருக்கு. நேத்துக் குழம்புண்ணே'

'இல்லடா கார்த்தி. நேத்துதானே வந்தேன். வீட்டுக்கு சாப்டப் போகலைன்னா லதா கத்துவா. இவளும் எதுனா கவுச்சி கிவுச்சி எடுத்துத்தாண்டா வச்சுருப்பா. நீ வாயேன் நம்ம வீட்டுக்கு. பேசிக்கிட்டே சாப்டுவோம்'

'சரக்குல இருக்கும்போது என்னைக்குண்ணே வீட்டுக்குல்லாம் வந்திருக்கேன். நீ சாப்ட்டு வா. சாயந்திரம் பாப்போம்'

மிச்ச கட்டிங்கையும் போட்டுட்டு வீட்டுக்கு போய்ட்டேன்.

சாயந்திரமா ஏழுகடை..நைட்டு ஓட்டம்.

'எங்கடா இந்தக் கார்த்திப் பயலக் காணோம்.?

'வருவான் வருவான். நீ ஸ்டார்ட் பண்ணு. நான் கடையல்லாம் எடுத்து வச்சுட்டு வர்றேன்..கொஞ்சப் பயலுகள் உன்னை தேடி வந்துட்டுப் போனாய்ங்க. மாமா' ன்னு முத்து சொன்னான்.

'நாளைக்கு பயலுகளுக்கு நம்ம பார்ட்டிய வச்சுவிட்ரணும்டா மாப்ள'

(ஊருக்கு போய்ட்டு ஒரு நாள், ஒரே ஒரு நாள், எல்லாப் பயலுகளுக்கும் சரக்கு வாங்கித் தருகிற பழக்கத்தையும் கடைப் பிடித்து வருகிறேன். 'இங்க பாருங்கடா..குவாட்டர்தான் கணக்கு. குவாட்டர்க்கு மேல போச்சுன்னா அவன் அவன் பாடு. குவாட்டர்க்குள்ள எவ்வளவு குடிச்சிக்கிற முடியுமோ குடிச்சிக்கிருங்க. அதுவும் இன்னைக்கு மட்டும்தான்' ன்னு அனவுன்ஸ் பண்ணிதான் கூட்டிட்டுப் போவேன்)

' இதுக்குப் பேரு பார்ட்டின்னு வெக்கமில்லாம சொல்லிக்க. குவாட்டர் வாங்கித் தரப் போறேன்னு சொல்லு'- முத்து

'அட வெண்ணைகளா..சீச்சியோட (ஸ்நாக்ஸ்) நம்ம செட்ல யாருடா சரக்கு வாங்கிக் கொடுத்துருக்கீங்க? ஒன்லி ராஜாராம். தி கிரேட் ராஜாராம்டா'

தும்முவான் முத்து. தெறிக்கும் எச்சில்.

வீட்டுக்கு கிளம்புற நேரமா ஆட்டோவுல வந்திறங்கினான் கார்த்தி. டைட்டா இருந்தான். தலை தொங்கி முகம் வேர்த்திருந்தான். 'என்னடா வரும்போதே போட்டுட்டு வந்துட்ட..இங்க வந்து போட்ட்ருக்கலாம்ல?' ன்னு கேட்டேன்.

சட்டைய தூக்கி, பேண்ட்டில் சொறுகி இருந்த ஒரு ஹாஃப் நெப்போலியனை உருவி' ஓம் பிராண்டுதாண்ணே சாப்டு' ன்னு கொடுத்தான்.

'நான் ஏற்கனவே ஆறப் போட்டுட்டனடா கார்த்தி ..உனக்குத்தான் தெரியும்ல ஆறுக்கு மேல போய்ட்டா அண்ணனுக்கு வாயக் கட்டிரும்ல'

'அதுலாம் ஒண்ணும் நொட்டாது. போடு சும்மா'

'டேய் ஏற்கனவே மாமா ஆறப் போட்ருச்சு. கூடப் போட்டுச்சுன்னா பல்லு வாயில்லாம் கட்டி சிரிச்சுக்கிட்டே இருக்கும். அது அப்டியே இருக்கட்டும் நாளைக்கு போட்டுக்குவோம். மாமா நீ வீட்டுக்கு கெளம்பு.

'இந்தா, ஒனட்டப் பேசுனனா.. சம்மன் இல்லாம ஆஜர் ஆகுற..ஒடைச்சு ரெண்டு பேருக்குமா ஊத்து. அண்ணனோட ஒரு சிப் அடிக்கணும்'

'போடுன்னா போட்றா..சும்மா பேசிக்கிட்டே இருக்க?' - நான்

'அண்ணே இந்த லந்தல்லாம் கொடுக்காத. எனக்கு நீ என்ன பேசுறன்னு தெரியும்..ரெண்டு க்ளாஸ்ல போடச் சொன்னா மூணு க்ளாஸ்ல போடுது பாரு. எப்டி ஆளுன்ற அண்ணன்?' ன்னு சிரித்தான் கார்த்தி.

க்ளாசில் இருந்ததை கல்ஃபா ஏத்தினேன்.

கொஞ்ச நேரம் கடலை உடைத்துக் கொண்டிருந்த நினைவு. பிறகு 'வீடு வீடு வீடு' ன்னு ஒரு தேவை தொடங்கிருச்சு. கெளம்புறதுக்கு முன்னால கார்த்தியிடம் கேட்டேன், 'கார்த்தி உனட்ட என்னைக்காவது உதவின்னு கேட்டுருக்கனா கார்த்தி?'

'இல்லையேண்ணே.. ஏண்ணே?'

'ஒரு உதவி கேக்கட்டுமா கார்த்தி?'

'கேளுண்ணே'

'நாளைக்கு கேக்குறண்டா. ரெண்டு பேருமே டைட்டா இருக்கோம். இப்பக் கேட்டா தைக்காது'
'அட சொல்லுண்ணே..எனக்குத் தூக்கம் வராது. இப்டில்லாம் கேட்டது இல்லையண்ணே நீய்யி. யாரையும் தூக்கணுமா?

'ஆமடா.தூக்கி.. என்னைய சவுதி போகவிடாம இங்கிய செம்முங்க. புள்ள குட்டில்லாம் தெருவுல நிக்கட்டும்'
'
என்னண்ணே சொல்லுது இது?' ன்னு முத்துவிடம் கேட்டான்.

'நாந்தேன் முன்னாடியே சொன்னேன்ல.. இனி நீதான் தூக்கி சுமக்கணும்'

'போங்கடா புழுத்திகளா.யாரை யாரு தூக்கி சுமக்குறது?' ன்னு கிளம்பினேன்.

'இந்தா அடங்கு. இப்டியே போனா அய்த்தை நாளைக்கு என்னையதேன் செருப்பக் கழட்டி அடிக்கும். உனக்கென்னங்கறது போல நீயும் சிரிப்ப. கார்த்தி, வாழைப்பழம் வெத்தலைசெட்டு கேட்டுட்டு இருந்துச்சு மாமா. அந்த நேரத்துல நீ வந்து இறங்கிட்டியா..அப்படியே ரெண்டு புரட்டாவ பிச்சுப் போட்டு சால்னா ஊத்தி கட்டி வாங்கிக்க..இப்டியே இது வீட்டுக்கு போச்சுன்னா ஊரக் கூட்டிரும்' ன்னு சொல்லி அவன் வண்டிச் சாவியை நீட்டினான்.

'கார்த்தி நாலு வெத்தலை செட்டு' - நான்

'நாலு செட்டு யாருக்கு மாமா?'-

'என்னிடம் இரண்டு குழந்தைகள் உண்டு மிஸ்ட்டர் முத்துராமலிங்கம்'

'புள்ளைகளுக்கும் வெத்தலை போட்டுப் பழக்கிட்டியா?'

'வெத்தலைய ஈரம் போக நல்லா திருப்பித் திருப்பி தொடைல தடவனும் மாப்ள. புரட்டிப் போட்டு வகுடெடுத்தது போல காம்பு கிழிக்கணும். இந்தா இத்தினிக்கூண்டு சுண்ணாம்ப எடுத்து..புள்ளைகளுக்குதானே அந்த லெவல் போதும்.. பட்டும் படாம ரெண்டு இழு இழுத்து கிரேன் பாக்க ஓடைச்சுக் கொட்டி, பீடா மாதிரி சுருட்டி, புள்ளைக வாய்ல வச்சு விடணும். ரெண்டு மெல்லுல வாயெல்லாம் செவப்பா புள்ளைக சிரிக்குங்க பாரு. ச்.. ச்..ச்..அது ஒரு தனி குவாட்டர்டா மாப்ள .வாழப் பழகுங்குடா வீணாப் போனவய்ங்களா'

'சரித்தேன்'ன்னு அதிசயமாய் கொஞ்சம் மலர்ந்து சிரிச்சுட்டு வண்டிய எடுத்துட்டுப் போனான் கார்த்தி.

'ஆமா அவன்ட்ட என்னமோ உதவி கிதவின்னு கேட்டுட்டு திரிஞ்ச. நிதானதுலதான் இருக்கியா?'

'நாளைக்கு கேக்குறேன்னு சொன்னேன்ல. உனக்கு தனியா சொல்லணுமா ?

'சரிங்க எசமான்'

கார்த்தி திரும்பி வந்து, ரெண்டு பேருமா வீடு வந்து என்னையவும் விட்டுட்டு வண்டியவும் உள்ள தூக்கி வச்சுட்டுப் போனாய்ங்க.

'வாங்க..வாங்க என் செல்லக் கன்னுக்குட்டிகளா' ன்னு ரெண்டு கைகளையும் நீட்டி வீடேறினேன்.

'எறுவமாடு..எறுவமாடு வர்ற வரத்தைப் பாரு' என்றாள் லதா.

'சத்தியம் நீயே தர்ர்ர்ரர்ருமத் தாயே குழந்தை வடிவே தெய்வமகளே' ன்னு கூடுமான வரைக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராமல் பாடிக் காட்டினேன்.

'ஓம்சக்தி தாயே இன்னும் எம்பத்தெட்டு நாளைக்கு இந்தக் கொடுமையெல்லாம் பாக்கணுமே'

'நம் குழந்தைகளும் கூட வளர்ந்து விட்டார்களே.. என்ன உரமிட்டீர்கள் காரியதர்சி?

'செருப்பும் வெளக்கமாரும்'

'ஆமாவா என் அன்புச்செல்வங்களே?' என குழந்தைகளிடம் கேட்டேன்.

'செம்ம போர்'ப்பா என்பது போல மஹா வலது கை கட்டை விரலை கழுத்தில் வைத்து அறுத்துக்கொள்வது போல சைகை செய்தாள். சசி கெக்களி போட்டுக் கொண்டிருந்தான்.

'தாய்த்திருநாட்டில் தமிழ் பேசி எவ்வளவு காலமாயிற்று. ஊறு செய்யும் இந்த குட்டிச் சாத்தான்களை மன்னியும் நன்னரே'

நாளை வந்தது. ஏழுகடை களை கட்டியிருந்தது..

-தொடரும்

*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3,4,5,6,7


Sunday, February 5, 2012

இலையுதிரும் சத்தம் - ஏழு

ஏழுகடைக் கதைகள்- ஐந்தின் தொடர்ச்சி -1

கார்த்தியோட சேர்ந்து எட்டுப் பத்து பயலுகள் உள்ள போய்ட்டாங்க. இதுல சித்தப்பா ராமச்சந்திரத்தேவர் அடக்கம். (ராமச்சந்திர தேவர் - முத்து, கார்த்தி சித்தப்பா) பீஸ் புடுங்குனது போல ஆகிப் போச்சு.

p.c ரவி அண்ணே வேற சர்ர்ரக்குன்னு ஜீப்ப ப்ரேக் அடிச்சு, 'டேய்..ஸ்டேசன்ல நோட்டட் பாய்ன்ட் ஏழுகடை இப்ப. எந்த நேரமும் வருவாய்ங்கடி.. முங்கி நடந்துக்குங்க' ன்னு சொல்லிட்டுப் போனாரு. ரவி அண்ணே சொன்னது மாதிரிதான் நடந்துச்சு. ஆஊ ன்னா வண்டி வந்து நிக்கும். 'என்ன இங்க கூட்டம்? எதுக்கு உக்காந்திருக்க? நீ கடக்காரனா? ன்னு ஜீப்ல உக்காந்துக்கிட்டே எஸ்.ஐ. பேசுவாப்ல. பயலுகள் டக்குன்னு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சிருவாய்ங்க.

தலவாசல்ல நாங்கபாட்டுக்கு சரக்கடிச்சிட்டு இருப்போம். மாறி, ஏழுகடைக்குப் பின்னாடி, வேலிக்கருவைக்கு நடுவுல ஒரு எலெக்ட்ரிக் போஸ்ட் சாஞ்சு கிடக்கும். எலக்ட்ரிக் வயர்ல உக்காந்திருக்கிற சிட்டுக்குருவிகள் மாதிரி அதுல உக்காந்து சரக்கத் தொடங்க ஆரம்பிச்சிருந்தாய்ங்க பயலுகள். 'இப்டி வெளிச்சத்த சாச்சுப்ட்டானே கார்த்தி' ன்னு தோணும். 'வா மாமா' ன்னு வேற கூப்டுவாய்ங்க.

'இல்லடா. நான் தண்ணிய விட்டுட்டேன்' ன்னு வீட்டுக்குப் போறது போல சூ காட்டிட்டு சந்துக்குள்ள விழுந்து தொண்டி ரோடப் பிடிப்பேன்.

பிடிச்சு.. ஒரு முறுக்கு முறுக்கி பஸ் ஸ்டாண்ட் ஒயின்ஸ் ஷாப். ஒரு குவாட்டர வாங்கி பேண்ட் பாக்கட்ல போட்டுக்கிட்டு நேர லதாமங்கேஷ்கர் வீடு . (லதா மங்கேஷ்கர் -நம்ம லதாதான். லதாவின் முழுப் பெயர் அரியநாச்சி (எ) லதாமங்கேஷ்கர். ஹிந்திப் பாட்ல மயங்கக் கூடாதாங்க என் மாமனார்?)

'ஆத்தாடி.. ஏம் புள்ள இன்னைக்கு சீக்கிரம் வந்துருச்சே. சுத்தி வைக்கணும்'ன்னு லந்தக் கொடுப்பாள் லதா.( நம்ம டர்ர்ரு மேட்டர பொண்டாட்டிட்ட காட்ட முடியுமா..காட்டுனா கிரீடம் இறங்கிறாது?) 'இவனைப் போன்ற நல்லார் ஊரில் யாரும் இல்லார்' ரேஞ்சில் லதா முட்டைப் பொரியலோ, உப்புக்கண்டம் வறுவலோ சைடுக்காக அளித்து, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவாள்.

வீட்டில், மொட்டை மாடிதான் சரக்கடிக்கிற ஸ்பாட். அடிச்சிட்டு, குண்டா எதுனா நட்சத்திரம் தெரியுதான்னு மல்லாந்து தேடிக்கிட்டு இருப்பேன்.

திருச்சி ஜெயிலில் இருந்தான் கார்த்தி.

'வாய்தாவுக்கு கூட்டிட்டு வர்றாய்ங்க மாமா கார்த்திய. பாக்க வர்றியா?' ன்னு ஊடால கேப்பாய்ங்க. 'இல்லடா' ன்னு சொல்லிருவேன். போய்ட்டு வந்து, 'ஒன்னத்தான் மாமா கேக்குறான். வந்துருக்லாம்ல' ம்பாய்ங்க. ரெண்டு வாய்தாவுக்கு பல்லக் கடிச்சிக்கிட்டுப் பாக்க போகாமத்தான் இருந்தேன். மூணாவது வாய்தாவுக்கு கார்த்தி அம்மா கூப்ட்டு விட்டாங்க. கார்த்தி உள்ள போனதுக்கு அப்புறம் வீட்டுப்பக்கம் கூட எட்டிப் பாக்கல. சும்மாவே, 'நீ சொல்லக் கூடாதாடா..திருந்த மாட்டேங்கிறானடா' ன்னு சொல்லிட்டே இருப்பாங்க.' இந்த டயத்துல போயி எப்டி அம்மாவப் பாக்க?'ன்னு போகாம இருந்ததுதான்.

கூப்ட்டுட்டா போகாம இருக்க முடியாதுல்ல?.. போனேன்.

கண்றாவியா இருந்தாங்க அம்மா. 'நாளைக்கு வாய்தாவுக்கு வர்றானாம்லடா. என்னையும் கூட்டிட்டுப் போங்கடா' ன்னு கன்னத்தைப் பிடிச்சிக்கிட்டு கெஞ்சுனாங்க. 'என்ன கொடுமடா?' ன்னு இருந்தது அந்த நேரத்தில் அந்த முகம். 'சரி கெளம்பி இருங்கம்மா. 'வண்டிக்கு சொல்லிறட்டா' ன்னு கேட்டேன். (அம்மாவால ஸ்லாங்கமா நடக்க முடியாது)

'சொல்லிரு. சமைச்சு எடுத்துக்கிறவாடா.. சாப்ட விடுவாங்களா கோர்ட்ல?' ன்னு கேட்டாங்க. அதுலாம் விடுவாங்கம்மா. நீங்க எடுத்துக்குங்க'ன்னு சொல்லிட்டு, அன்றிரவு டைட்டா சரக்கப் போட்டுக்கிட்டேன்.

சிவகங்கை கோர்ட்ல,'பயபுள்ளைகள் எம்புட்டு நேரம் உக்காந்திறப் போறாய்ங்க'ங்கிற மாதிரி ஆல மரம் நல்லா விரிஞ்சு கிடக்கும். செத்த நேரத்துக்கு நாங்களும் உக்காந்திருந்தோம். வேனுக்குள்ள அம்மா தங்கச்சிகள் இருந்தாங்க. கங்கு கங்கா பயலுகள் சிகரெட் குடிச்சிட்டு நின்னாய்ங்க. ஆட்டோ ஸ்டாண்டுலருந்து வேற கெடைப் பயலுகள் வந்துருந்தாய்ங்க.

தாடி கீடில்லாம் வச்சு கார்த்தி மொறட்டு ஆளா வந்திறங்கினான். பார்த்ததும்,'அண்ணே' ன்னு கையப் பிடிச்சுக்கிட்டான். கையப் பிடிச்சுக்கிட்டே சுத்திமுத்தி பார்வைய வீசி பயலுகளுக்கும் கைய தூக்கி காட்டிட்டு இருந்தான்.

'அம்மா தங்கச்சிகள்ல்லாம் வந்திருக்காங்கடா..வேன்ல உக்காந்திருக்காங்க' ன்னு வேனக் காட்டினேன். படக்குன்னு வேன திரும்பிப் பார்த்தவன்'அவய்ங்கலல்லாம் எதுக்குண்ணே கூட்டிட்டு வர்றே. ஒப்பாரி வப்பாய்ங்களேண்ணே' ன்னு சொன்னான். சொன்னாலும், மினுங்குச்சு முகம்.

'நா எங்கடா கூட்டிட்டு வந்தேன்?' ன்னு சொல்லிட்டு வேனுக்கு நகர்ந்தோம்.

'ஓந் தல எழுத்தாடா?..இப்டி ஒருத்தனா பெறந்து, போகாத இடத்துக்கு போயி செய்யாத காரியமெல்லாம் செஞ்சு..இந்தக் கொடுமையெல்லாம் என்னப் பாக்க வச்சுட்டு எனக்கென்னன்னு போய் கிடக்கானே அந்த மனுஷன் ' ( கார்த்தி அப்பா மலேசியாவில் இருக்கிறார்ன்னு கேள்விப் பட்டிருந்தேன்) ன்னு வாய்ல புடவ தலைப்ப வச்சுக்கிட்டு அழுதாங்க.

'சொன்னேன்ல' ன்னு என்னை திரும்பிப் பார்த்தான் கார்த்தி. 'சரிம்மா. அவனுக்கு சாப்பாடப் போடுங்க. மத்தவங்களையும் கூப்டுடா' ன்னு கார்த்திட்ட சொன்னேன். எல்லாரு வீட்லருந்தும் சாப்பாடு வந்திருக்கும்ண்ணே.ஆத்தா.. நீ ஓன் சங்க நிறுத்திட்டு சாப்பாடப் போடுறியா . கூப்ட்ருவாய்ங்க'

மீன் குழம்பு.

பெரிய பெரிய உருண்டையா உருட்டி வாய்ல வச்சுக்கிட்டே, 'நாக்கு செத்துப்போயி கெடந்துச்சுண்ணே'ன்னு லைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சான். அவனோட பெஸ்டு சிரிப்பு எதுன்னு எனட்ட கேட்டா அதத்தான் சொல்லுவேன். மயிரு..சிரிக்கும் போது கண்ணு கலங்க எங்க எந்த மயிராய்ங்களால முடிஞ்சிருக்கு? சூடு தாங்க முடியாம முகத்த திருப்பிக்கிட்டேன்.

நூத்தி சொச்ச நாளாச்சு கார்த்திக்கு ஜாமின் கிடைக்க..

ஏழுகடைல பட்டுத் திருந்துனவனும் இருந்தாய்ங்க. பாத்துத் திருந்துனவனும் இருந்தாய்ங்களா... அப்படித்தானே இருக்கணும் இவனும். சொல்லப் போனால் இவன் ஏழுகடைக்காரனே இல்லையோன்னு தோணியிருக்கு நிறையத் தடவ.

இங்கிட்டு (சவுதி) வந்தப்புறம் பயலுகள்ட்ட பேசும் போதெல்லாம்,' ஸ்டாண்டுலதான் மாமா கெடக்கான். என்னத்த அவன் திருந்தி?..'ன்னு மகாத்மா கணக்கா ஸ்டேட்மெண்ட் கொடுப்பாய்ங்க.

'கேஸ் என்னடா ஆச்சு?'

'ட்ரையல் போயிட்டிருக்கு மாமா'

முதல் பயணம். மூணு மாச லீவு. மூணு மாசமும் ஏழுகடைலதான் கிடந்தான்.

ரெண்டாவது பயணம். மூணு மாச லீவு. மூணு மாசமும் ஏழுகடைலதான் கிடந்தான்.

'நீங்கதாண்டா அவன சரியாத் தூக்கல.. இப்ப மட்டும் எப்டி வர்றான்..இங்கயே கிடக்கான்? இதுக்குதானடா அலையிறான்' ன்னு மப்பு கூடுன ஒரு டயத்துல பயலுகள்ட்ட காரசாரம் பண்ணேன்.

'இதுக்குன்னு எதை சொல்ற?' ன்னு கேட்டாய்ங்க.

'இந்த இதுதாண்டா'ன்னு எதையோ தேடுனேன். ஒண்ணும் கிடைக்கல.. 'போங்கடா நீங்களும் ஒங்க ஏழு கடையும்' ன்னு தள்ளாடி நடந்து வீட்டுக்கு போயிட்டேன். போயும் விடலயே, 'இந்தப் பயலுக சரியில்ல புள்ள' ன்னு லதாட்ட தொடங்குனனா..'சாப்ட்டு வந்துட்டீகளா..சாப்டணுமா?' ன்னு சப்ஜெக்ட்டுக்கு சம்பந்தமில்லாத கேள்வியக் கேட்டாள். 'அய்யய்யே.. வீட்டுக்கு வந்துட்டமா?' ன்னு தெளிஞ்சுட்டேன்.


ரெண்டாவது பயணத்தப்போ 'அவுட்டர்ல போயி தண்ணி அடிச்சுட்டு வருவோமாண்ணே?' ன்னு கார்த்தி ஒரு நாள் கூப்ட்டான். 'ஏண்டா?' ன்னு கேட்டதுக்கு, 'கொஞ்சம் பேசணும்ண்ணே'ன்னு சொன்னான்.

நம்புவீங்களா.. இந்தக் கார்த்தி காதல் வயப்படுவான்னு?

-தொடரும்

*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3,4,5,6



Friday, January 27, 2012

இலையுதிரும் சத்தம்- ஆறு

ஏழுகடைக் கதைகள்- ஐந்து

ஏழுகடை செட்லயே குண்டு கார்த்தியத்தான் சுத்த வீரன் என்பேன். எங்க யாரையும் எதிர் பார்க்க மாட்டான். தனியாப் போவான். நெத்திக்கு நெத்தி முட்டுவான். அடுத்த சீன்ல ஆஸ்பத்திரியிலோ போலீஸ் ஸ்டேசன்லயோ இருப்பான்.

ஒரே மாதிரி இருந்தது இல்லை ஏழுகடை. ஒரு நாள் சிரிப்பும் கூத்துமா போனால் ஒரு நாள் குய்யோ முறையோன்னு எழவு வீடு மாதிரி ஆயிரும். 'அவன தொட்டுப்டாய்ங்க இவன தொட்டுப்டாய்ங்க' ன்னு உசும்புவாய்ங்க பாருங்க . எனக்கு அல்லயப் பிடிக்கும்.

'டேய்.. இருங்கடா சூரி அண்ணே வரட்டும். பேச சொல்லலாம்'ன்னு கொஞ்சம் தண்ணி தெளிப்பேன்.

'என்ன பேசச் சொல்ற?.. ரத்தத்தோட வந்துருக்கான். எதா இருந்தாலும் ரத்தம் பாத்துட்டு பேசலாம். நீ ஓம் பிள்ளமகன் வேலைல்லாம் பாக்காத' ன்னு சாதில கொண்டு போய் சாத்திருவாய்ங்க. அப்புறமெல்லாம் பதட்டத்தோட வேடிக்கை பாக்குறது மாதிரிதான் இருக்கும் .

பொருளெல்லாம் அள்ளி வண்டில போட்டுட்டு கிளம்பும் போது கேப்பாய்ங்க, 'வர்றியா என்ன?'

'இருங்கடா இந்தா வர்றேன்' ன்னு என் வண்டிய ஸ்டார்ட் பண்ணுவேன். ஒரு முறுக்கு. நேர ஆஞ்சநேயர் கோயில். பார்ட்டி ஸ்டாண்ட்டட்டிஸ்ல நின்னுக்கிட்டு இருப்பாப்ல. 'யய்யா.. இவய்ங்களோட போறேன். போலீஸ் கேஸ்ன்னு வராம பாத்துக்கிறது ஓம் பொறுப்பு' ன்னு 'அட்டேஏஏஏன்சன்' பண்ணிட்டு வருவேன்.

இப்டி எல்லாப் பயலுகளும் அட்டேஏன்சன் பண்ணினாய்ங்களான்னு தெரியாது. ஆனா சாயல வச்சு சொல்ல முடியும். பய நம்மளவிட டர்ர்ர்ரா இருக்கான்னு. அப்படி, சாயல மோந்ததுல கார்த்திதான் சுத்த வீரன். எங்களோட வந்தாலும் சரி, ரத்தம் ஒழுக வாங்கிக் கட்டிக்கிட்டு வந்தாலும் சரி சும்மா கல்லு மாதிரி இருக்கும் அவன் முகம். கல்லுல போயி என்னத்தப் படிக்க?

இங்க ஒரு கட் கொடுத்து டாப் ஆங்கிள்ல இருந்து குண்டு கார்த்திய ஜூம் பண்ணலாம்.

குண்டு கார்த்தி முத்துராமலிங்கம் தம்பி. (சித்தி மகன்) ஆனா, எனக்குதான் தம்பியாப் பிறந்தது போலவே இருந்தான். (சுத்த வீரன் மேட்டரை தவிர) இவய்ங்க எல்லோரும் என்னை மாமான்னு கூப்ட்டா லதாவை அய்த்தைன்னு சரியா முறை வச்சு கூப்டுவாய்ங்க. கார்த்தி மட்டும்தான் என்னைய அண்ணன்னு கூப்டுக்கிட்டே லதாவையும் அக்கான்னு கூப்டுவான்.

பஸ்ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட்ல இருந்த கார்த்திய நாந்தான் ஏழுகடைக்கு கூட்டிட்டு வந்தேன்.

'ஓந் தொம்பி பஸ் ஸ்டாண்ட்ல சலம்பிக்கிட்டு இருக்கானாம். ரம்யா போன் பண்ணுச்சு (ரம்யா- குண்டு கார்த்தி தங்கச்சி) போய் கூட்டிட்டு வா' ன்னு முத்துராமலிங்கம் ஒரு நாள் சொன்னான்.

நம்மட்டதான் எப்பவும் ஒரு டி.வி.எஸ்-50 இருக்குமே. போனா, 'வோத்தா வாங்கடா..' ன்னு சட்டை பட்டன்லாம் கழண்டு தொங்க சலம்பிக்கிட்டு இருந்தான். வண்டிய அவன ஒட்டி நிறுத்தி,'வண்டில ஏறுடா'ன்னு ஏழுகடைக்கு கூட்டிட்டு வந்தது நேத்து நடந்தது போலவே இருக்கு.

வந்த சோர்ல..'எங்க யாருக்காவது கேஸ் இருக்காடா? போறமா நலுக்குப் படாம வந்துர்றம்ல' ன்னு சொன்னேன். அவனும் சொன்னான்,' போனா கொத்தணும்ண்ணே. குசு போடவா போறது?'

அப்புறப்புறம் கள்ளு இறக்க ஏறுகிறவனின் கவட்டையில் தொங்குற சுரக் குடுக்கை மாதிரி ஆகிப் போய்ட்டான் எனக்கு...

'வீட்ல வந்து இறங்கிட்டு ஆட்டோவுக்கு காசு கொடுக்கிறேன்..வேணாம்க்கான்னு ஆட்டோக்காரன் போய்ட்டான்' ன்னு லதா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

'பய ஆட்டோ ஸ்டாண்டுல இருக்கான் போல' ன்னு நினைச்சுக்குவேன்.

'அப்பா கார்த்திண்ணே மஜீத் ரோட் முக்குல சிகரெட் குடிச்சிட்டு இருந்தாங்களா... என்னப் பார்த்தோன்ன, சிகரட்ட கீழ போட்டுட்டு என்னத்தா..எங்க போறன்னு கேட்டாங்க. என்னப்பா எனக்குப் போயி பயப்படுறாங்க?' ன்னு மஹா பேசி கேட்டிருக்கிறேன்.

'அதுக்குப் பேரு பயம் இல்லடா' ன்னு நினைச்சுக்குவேன்.

பேண்ட் போட்டுட்டு வந்தான்னா கார்த்தி, வாய்தாக்கு போறான்னு அர்த்தம். 'மாச முச்சூடும் பேண்ட் போட வாச்சிருக்கில்லடா கார்த்தி?' ன்னு ஊடால ஊடால கேப்பேன். தச்சிர மாட்டாதான்னு கேக்குருதுதான். லைட்டா சிரிப்பான். கார்த்தி அப்டியே ரைட் ஆப்போசிட் செட்டிக்கு. அதிர்ந்து பேச மாட்டான். சிரிக்க மாட்டான்.

'இங்க சிரிக்கணும்டா கார்த்தி...எல்லாப் பயலுகளும் சிரிக்கிறாய்ங்கல்ல..அப்ப ஏதோ சிரிப்பு இருக்கத்தான் வேணும்' ன்னு எழுப்பணும் . 'சரி சிகரட்டக் கொடு' ன்னு குடிச்சுக்கிட்டு இருக்கிற சிகரெட்ட கேப்பான்.

எப்ப சிகரெட் பத்த வச்சாலும் பாதிய தாண்டிட்டா,'அதுல என்ன இருக்குன்னு இப்டி சுண்ற .தா' ன்னு கை நீட்டுவான். 'மூர்த்தி இவனுக்கு ஒரு சிகரெட் கொடுடா. முழு சிகரெட்ட குடிக்க விட மாட்டேங்குறான்' ன்னு மூர்த்திட்ட ஒரு தடவ சொல்லிட்டேன். 'டேய் கார்த்தி டேய் கார்த்தி'ன்னு கூப்டக் கூப்ட எந்திரிச்சுப் போய்ட்டான்.

முத முதல்ல நான் கார்த்திக்கு ஒரு செருப்புதான் வாங்கிக் கொடுத்தேன். வாங்குதோங்கா பேண்ட்லாம் போட்டுக்கிட்டு செருப்புப் போடாம வர்ற ஆள யாரையாவது பார்த்திருக்கீங்களா? அப்படிப் பார்த்தா நீங்க குண்டுக் கார்த்தின்னு எடுங்க. எடுக்காட்டி, 'டேய் ராஜா டேய் ராஜான்னு' நீங்களும் கூப்ட கூப்ட நானும் எந்திரிச்சுப் போயிருவேன்.

நம்ம என்ன செய்யப் போறோம்ன்னு அவன்ட்ட காட்டக் கூடாது. காட்டினா வண்டில ஏற மாட்டான். திடு திப்புன்னு 'கார்த்தி வாடான்னு கூப்பிடணும் எல்லாப் பயலுகளும் 'எங்க மாமா?'ன்னு கேப்பாய்ங்க. இவன் ஒண்ணுமே கேக்க மாட்டான். எம்பாமலை மாதிரி எந்திரிச்சு காலை வீசி பின்னாடி உக்காருவான். 'ஏண்டா எங்க போறோம்ன்னு கேக்கவே மாட்டியாடா ?' ன்னு ஒரு தடவ கேட்டேன்.

'நீம் போயி எங்கண்ணே கூட்டிட்டுப் போப் போற? ஒண்ணு பாரா (Bar) இருக்கும். இல்லாட்டி ஆஞ்சநேயர் கோயில்' ன்னு சொன்னான். கேக்காமையே இருந்திருக்கலாம்ன்னு சில கேள்விகளை கேட்ட பிறகுதானே தெரிஞ்சு தொலைக்குது.

'இவன் சைசுக்கு செருப்பெடுங்க அத்தா' ன்னு ரஃபீக் அத்தாட்ட சொன்னப்போ, ' ஏண்ணே?' ன்னு கேட்டான். 'இருக்கட்டும்டா' ன்னு சொன்ன ஞாபகம். வெறும் ஸ்லிப்பர்தான்.சொளகு மாதிரியான காலின் சூட வெறும் ஸ்லிப்பர் தாங்குனாப் போதாதா?

ரெண்டு மூணு நாளைக்குதான் போட்டுட்டு இருந்தான் அந்த ஸ்லிப்பர. திருப்பி வெறுங்காலும், வாங்கு தோங்கு நடையும். காலப் பாத்ததுமே அவனே சொல்லிட்டான். 'தொலைச்சிட்டண்ணே'

'செரி விட்றா செருப்புதானே' ன்னு சொன்னாலும் வலிச்சது. அடுத்த நாள் (உடனே கூப்ட்டா சுதாரிச்சிருவான்) வழக்கம் போல தாக்காட்டி ரஃபீக் அத்தா கடைய்ல வண்டிய நிறுத்தியதும், 'என்னைய அசிங்கப் படுத்துறியா?' ன்னு வண்டிலருந்து இறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். பஸ் ஸ்டாண்ட் பக்குதுலதான் ரஃபீக் அத்தா கடை. அத்தாவும் கொஞ்சம் கெட்டிக்காரரு.

'கார்திக்குதானே அத்தா. தொலைச்சுப்ட்டானா?'ன்னு கேட்டாரு.

'ஆமத்தா இவனோட அழக் கொடுக்க முடியல'

'கார்த்தி என்ன வேணும்த்தா'

'தம்பி அத்தா'

'அவுங்க மற வீடுல்லத்தா'

'ஆம அத்தா நீங்க செருப்பெடுங்க..சைஸ் தெரியும்ல?'

'இது சரியா வரும்..இப்பதானேத்தா வாங்கிட்டுப் போனீங்க. நமக்கு ஆளப் பாத்தோன்னயே சைச சொல்ல வரும்த்தா'

ஆட்டோ ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்தவன,'ஏறுடா' னு வண்டில கூட்டிட்டு வந்து வண்டிப் பெட்டிய திறந்து, செருப்ப எடுத்து கீழ போட்டு,'நீ எத்தனை தடவ தொலைச்சாலும் திருப்பித் திருப்பி வாங்கிட்டுத்தாண்டா இருப்பேன். செலவுதானடா அண்ணனுக்கு?' ன்னு சொல்லிட்டு அவன் முகத்தப் பார்த்தேன்.

அவனும் கொஞ்ச நேரம் முகத்தையே பார்த்துக்கிட்டு நின்னவன் திடீர்னு நெத்தியிலையே சொத்'ன்னு சத்தம் கேக்குறது மாதிரி ஒரு அடி அடிச்சுக்கிட்டு செருப்பெடுத்துப் போட்டுக்கிட்டான். ஓடாத் தேயுற வரைக்கும் போட்டுக்கிட்டு திரிஞ்சான். அப்புறம் செருப்பு இல்லாம கார்த்தியப் பாத்தது இல்ல. இந்த செருப்பு மேட்டரைப் போயி பருப்பு மேட்டர் மாதிரி பேசுறேன்னா அதுக்கு காரணம் இல்லாமையா இருக்கும்?

'உனக்கும் ட்ரீட்மெண்ட் வருதேடா'ன்னு எனக்கும் ஒருத்தன் ட்ரீட்மெண்ட் தர்றானா அதை நான் பேசித்தானே ஆவணும்.

அல்ல சில்ல, வெத்து சவுண்டு, கீர்றது வைக்கிறது, பீர் பாட்டில் உடைசல் இப்டி பெட்டிக் கேசா போயிட்டிருந்த கார்த்தி ஊணி நின்னான் ஒரு 302 -வில் (பிரபலமாக அறியப்பட்ட வக்கீல் தியாகராஜன் கொலை வழக்கு)

பாடி டெம்ப்பரு பேஸ்மெண்ட் வீக்குங்கிறதால குலுங்கிப் போச்சு ஏழுகடை...


-தொடரும்


*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3,4,5


Wednesday, January 18, 2012

இலையுதிரும் சத்தம்- ஐந்து

ஏழுகடைக் கதைகள்- நான்கு

ஏழுகடையில் செட்டி (எ) ஸ்ரீதர் எப்படி ஒதுங்கினான்?

யாருக்கும் தெரியாது. ஏழுகடையில் யார் எப்போ ஒதுங்கினார்கள் என்பதெல்லாம் யாரும் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. காத்துல பெறல்ற எல மாதிரி காத்தோட காத்தா வந்து ஒட்டுனதுதான் எல்லோருமே அங்க. இப்ப யோசிச்சு பாக்குறப்போ ஏழுகடை புள்ள புடிக்கியாத்தானே இருந்துருக்கு. புடிச்சு வச்சுக்கிட்டு, வாழ வச்சுக்கிட்டு, வாழ்ந்துக்கிட்டு, இழந்துக்கிட்டு ..

ஸ்ரீதருக்கு செட்டின்னு பேர் வந்ததுக்கு காரணம் அவனோட கால்குலேசன். ஒரு பாருக்கு போறோம்னா செட்டி கூட இருந்தா கணக்கு வழக்குப் பத்தி கவலைப் படமாட்டோம். இத்தனை தண்ணி பாக்கெட், இத்தனை ஆம்லட், இத்தனை சிகரெட், இத்தனை குடல் குந்தாணின்னு எழுதி வச்சுக்கிட்டே வருவான். தனியா சிகரெட் அட்டை போட்டு எழுத மாட்டான். மனசுக்குள்ளயே எழுதிக்கிட்டு வருவான்.

'ஹல்லோ தம்பி / அண்ணே காசு வேணும்ணா கேட்டு வாங்கு. கணக்குல எர்ரர் அடிக்காத' ன்னு செட்டி சொல்லிட்டான்னா அன்னைக்கு பஞ்சாயத்துதான். 'இத்தன தண்ணிப் பாக்கட்டா, இத்தனை இதுவா, இத்தனை அதுவா'ன்னு புட்டு புட்டு வைப்பான். காதுல பென்சில் சொறுகி வச்சுக்கிட்டு கைல சிகரெட் அட்டை வச்சுருக்கிற தம்பிக்கோ அண்ணனுக்கோ 'இவன் குடிச்சானா இல்லையா?'ன்னு டவுட் வந்துரும்.

'அவன் காசு நமக்கு எதுக்கு மாமா? நம்ம காசு என்ன மரத்துலயா காய்க்குது?' ன்னு பார விட்டு வரும்போது காலர தூக்கி விட்டுட்டு குனிஞ்சு அவன் நெஞ்சுலயே ஒரு ஊது ஊதிக்கிருவான்..'செரி விட்றா மாப்ள..'ன்னு அணைச்சு கூட்டிட்டு வர்ற மாதிரி ஆயிரும்.

வெயிலுக்கு தகுந்த மாதிரி ஏழுகடையில் உக்காந்திருப்பான் செட்டி. ஏழாம் நம்பர் கடையில் செட்டி உக்காந்திருக்கான்னா ஒண்ணாம் நம்பர் கடையில் வெயில்ன்னு அர்த்தம். ஒண்ணாம் நம்பரில் ஒக்காந்திருந்தா வெயில் ஏழுல. வெயிலுக்கு தகுந்த மாதிரி நகந்துக்கிட்டே வருவான். வெயில் தொடங்கியதுல இருந்து, இருள் தொடங்குறது வரையில் ஒரு ஆளு ஒரு லெக்குலயேவா இருக்க முடியும்?

இருந்துருக்கானே செட்டி..

ஏழுகடையிலிருந்து சிரிப்பு சத்தம் அலையலையாக வந்து கொண்டிருந்தால் செட்டி ஸ்பாட்ல இருக்கான்னு அர்த்தம். யாரையும் விட்டு வைக்க மாட்டான். சூரி அண்ணன் தொடங்கி நண்டுசிண்டு வரைக்கும்.

'ராஜா மாமா என்ன ஒரு மாதிரி கெந்துற.. நைட்டு அய்த்த டாப்பு நீ டவுனாக்கும்'ம்பான் நடந்து வரும்போதே. 'என்ன எழவ சொல்லிட்டான்னு இவிங்க இந்தக் கொலவைய போடுறாய்ங்க?'ன்னு வரும். லேட்டாதான் புரியும்.

'சூரிமாமா சக்திசுகர்ல இருந்து வேன் வந்து வெய்ட்டிங்லயே இருந்துட்டு இப்பதான் போனாய்ங்க' என்பான் சூரி அண்ணன் வந்து இறங்கும் போதும்.

'என்னடா..எதுக்குடா?'

'ஏதோ டன்னுக்கு மூட கொறையுதாம். நம்ம ஃபேக்டரில கெடைக்குமான்னு கேட்டுதேன்'

'செருப்பு பிய்யப்போது பாரு' ( சூரி அண்ணனுக்கு சுகர் உண்டு)

'ஏழுகடைபக்கம் ஓட்டாம சுத்தி ஓட்டுங்க' ம்பா வண்டில ஒக்கார்றப்பல்லாம் லதா 'ஏம் புள்ள?' ன்னு கேட்டா செட்டிப்பய எதுனா கத்துவான்'ம்பாள். 'அரிசி மூட்டை நழுவுது மாமோய். அமுக்கி ஓட்டு'ன்னு குரல் விட்டான் ராஸ்கல் ஒரு தடவ. நாம மறந்துர்றோம். பொம்பள மறப்பாளா?.

'எங்கண்ணே சொந்த ஃபண்டுல இருந்து ஒரு சிகரெட் வாங்கிக் கொடுத்துருக்கே..இதக் குடிக்கிறதா வச்சு வச்சுப் பாக்குருதா ஆ டமுக்கு டப்பா ஆ டையா டப்பா' ன்னு ஓடி ஓடி ஒண்ணாம் நம்பர் கடையில் இருந்து ஏழாம் நம்பர் கடை வரையில் காட்டிக் காட்டி கெக்கு கெக்கு'ன்னு சிரித்துக் கொண்டு வந்தான் ஒருநாள்.

'கேவலப்பட்ட பய புள்ளை..கேவலப் படுத்துது பாரு மாமா' ன்னு முத்துராமலிங்கம் சொன்னப்போதான்..

'ஆ.. நீயா?'ன்னு நீயா பட ஸ்ரீப்ரியா மாதிரி கண்கள் மினுங்க முத்துராமலிங்கத்தைப் பார்த்தோம். அவனும் எங்கள் பார்வைத் தீண்டலில் இருந்து தப்பிக்க கட்டிலுக்கு மேலாகவும் கீழாகவும் நழுவிக் கொண்டிருந்தான்- கமல் போலவே. .

நீயா படம் மட்டும் பாக்காட்டி இவ்வளவு டாக்ட்டிஸ் வந்துருக்குமா முத்துக்கு?

நாங்க போக, போற வர்ற பொம்பளைப் புள்ளைகளையும் ஒரண்டை இழுத்து தொலைவான் செட்டி. எங்க பயலுக யார்ட்டையுமே இல்லாத பழக்கம் அது. லவ்லாம் பண்ணுவாய்ங்க. புடிச்சுப் போயி பின்னாடியேவும் சுத்துவாய்ங்க. 'அப்ஜக்சன் யுவர் ஆனர்' வந்துருச்சுன்னா தெறிச்சுருவாய்ங்க. ரெண்டு நாளைக்கு மொறட்டுத்தனமா தண்ணி அடிச்சுட்டு பூப்போல தெளிஞ்சு அடுத்த பூ பறிக்க போயிருவாய்ங்க.

'எங்கிருந்துடா வந்து தொலைச்ச.. யார்ட்டயாவது இந்தப் பழக்கம் இருக்காடா. மூஞ்சியும் மொகரையும் பாருன்னு திட்டிட்டுப் போகுது அந்தப் புள்ள...உன்னைய திட்டுதா என்னைய திட்டுதான்னு பாக்குறவய்ங்களுக்கு தெரியுமாடா?'ன்னு கேட்டா..

கெக்கெக்ன்னு சிரிச்சுக்கிட்டே, 'பாத்துட்டியா?'ம்பான். 'இனிமே எங்கயும் எங்களோட வராத. இவன தொலைச்சு தல முழுகிட்டுதாண்டா கெளம்பனும் நம்ம' ன்னு பயலுகள்ட்ட சொன்னாலும், 'சரி மூடு ஓன் நயங் கோமணத்தை' ன்னு திருப்பியும் கெக்கு கெக்கு போடுவான்.

ரெண்டு வகையான பிசினஸ் பண்ணி அதில்தான் பசியாறி வந்தான் செட்டி. சீட்டுக் கச்சேரி மெயினு. கபடி சைடுல. சிவகங்கை சுத்துப்புறத்துல செட்டிய தெரியாத கபடி க்ளப் இருக்காது. வந்து தூக்கிட்டுப் போயிருவாய்ங்க. அடிச்சிட்டு வந்தான்னா அப்படி ஒரு நுரை பொங்கும் அவன் முகத்துல. இதர டிட்டெர்ஜன்ட், வில்லை, பார், எதனையும் மிஞ்சும் வெண்மை அந்த நுரை.

அப்புறமெல்லாம் சீட்டுக்கு கிளம்பிருவான். விவரம் தெரிஞ்ச ஏழுகடைப் பசங்க செட்டி ஒக்காந்திருக்கிற சபைல ஒக்கார மாட்டாய்ங்க. தெரிஞ்சுக்கிட்டாய்ங்கள்ல அப்புறம் ஒக்கார லூசா?

எனக்கென்னவோ இந்த சீட்டு மட்டும் வரவே இல்லை. அதிர்ஷட்டம் மற்றும் மூளை உபயோகிக்கிற மேட்டர்னால கூட இருக்கலாம். அதுனாலதான் பெரும்பாலும் இந்த ரெண்டும் தேவை இல்லாத அம்மாப்பா விளையாட்டோடவே நின்னுக்குவேன்.

ஆனா இவய்ங்க கச்சேரி நடத்துற இடத்துக்கு போறது உண்டு. ஆளரவம் இல்லாம ஏகாந்தமா இருக்கும். ஒரு குவாட்டற மட்டும் கைல புடுச்சிட்டு போய்ட்டோம்ன்னு வைங்க அன்னக்கி சும்மா அன்னக்கிதான்.

இப்படியே போயிட்டிருந்த செட்டி எங்க எல்லாத்தையும் ஒரு திருப்புமுனைக்கு தள்ளினான்...

கடைக்கு வந்தேன். கொஞ்சம் இனிஷியல் ஒர்க்லாம் பாத்துட்டு முத்து கடைக்கு வந்து, 'எங்கடா இவன்?' ன்னு கடைல இருந்த செந்தியிடம் கேட்டேன். 'செட்டி அண்ணே ஒரு அக்காவ கூட்டிட்டு வந்துருச்சுண்ணே. ரெண்டு பேரையும் ஒளிச்சு வைக்க அண்ணே எங்கயோ போயிருச்சு' ன்னு சொன்னான்.

'இழுத்துட்டாய்ங்களா?' ன்னு நெனைச்சுக்கிட்டே ஒரு தம்ம பத்த வச்சேன். சாயந்திரமா வந்தான் முத்து..

'என்னடா?'

'இவந்தேன். ஒரு புள்ளைய கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணி வய்யின்னு நிக்கிறான் மாமா. இந்தப் புள்ள தொண்டி போல. போன்லயே புடிச்சிருக்கான். கொஞ்ச நாளா போன்லயே பேசிக்கிட்டு திரின்ஜ்சான்ல. அவய்ங்க மீன் பறவாஸ் மாமா. வெட்டி கடலுக்குள்ள போட்ருவாய்ங்க. நீயும் இல்ல சூரி மாமாவும் இல்ல. டக்குன்னு வெக்கேட் பண்ணி கல்லல்ல நம்ம சொந்தக்காரய்ங்க தோப்புல விட்டுட்டு வந்துருக்கேன்'

'என்னடா சொல்ற? இவன நம்பி எப்டிடா கல்யாணம் பண்ணி வைக்கிறது?'

'என்ன பண்ணச் சொல்ற? இந்த மொகற இல்லைன்னா அந்த மொகற செத்துப் போவேங்குது. அந்த மொகற இல்லைன்னா இந்த மொகற செத்துப் போவேங்குது'

'இவனுக்கே நம்மல்லடா சோறு போட்டுக்கிட்டு இருக்கோம்'

'நீ எங்க போட்ட? நால்ல போட்டுட்டு இருக்கேன். இதுல இந்தப் புள்ளையவும் கொண்டுபோய் அடைச்சா என்னைய வெறட்டி விட்ருவாய்ங்க மாமா'

'சரிடா..அவன தனியாவா விட்டுட்டு வந்த? அவம்பாட்டுக்கு பொலிச்சல போட்டுறப்போறான்டா'

'அதுலாம் ஆளுப்பேரு இருக்காய்ங்க சுத்தி. இப்ப மேட்டர் என்னன்னா சூரி மாமாட்ட நீதான் பேசுற'

'டேய்..இவர்ட்ட ஓத்தாமட்டை வாங்க முடியாதடா?'

'போ..அப்ப நம்மளே கொண்ணுருவோமா செட்டியவும் அந்தப் புள்ளையவும்?'

'இவன் யார்றா இவன்..அதுக்கா சொல்றேன்?'

'இதுலாம் புதுசா மாமா..நீ தான் சரியா மண்டய கழுவி பேசுவ'

'இப்டியே ஏம்மண்டய கழுவுங்கடா'

செட்டிக்கு திருமணம் முடிந்தது.

மத்த வேலையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு இதே வேலையா இருந்து ரெண்டு அழகழகான பெண் குழைந்தைகளை பெற்றெடுத்தான். துயரம் என்னன்னா..

இவ்வளவுக்கு அப்புறமும் செட்டி அப்படியேதான் இருக்கிறான். இந்த டைரிக் குறிப்பிற்காகவே இன்னைக்கு முத்துக்கு போன் பண்ணி 'செட்டி எப்டிடா இருக்கான்?'ன்னு கேட்டேன்.

'காளையர்கோயில்ல திரியிறான்னு கேள்வி மாமா'ன்னு சொன்னான்.

*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3,4


Friday, November 25, 2011

புரை ஏறும் மனிதர்கள் - பத்தொன்பது

தேவதைகள் வாழும் வீட்டிற்குப் போயிருந்தேன்...

லயா பிறந்த நேரத்தில் சென்னையில் மணிஜி ஆஃபிசில் வைத்து ராஜாவை (கே.வி.ஆர்) முதல் முறையாக பார்த்தது. 'என்ன ராஜா நீங்க எப்போ வந்தீங்க?' ன்னு கேட்ட போது, 'ரெண்டாவது பெண் குழந்தை பிறந்திருக்கு சார். வைஃப்ப டிஸ்சார்ஜ் பண்ணி இப்பதான் வீட்ல விட்டுட்டு வர்றேன்' ன்னு சொன்ன நினைவு. சொடுக்கலில் பதினோரு மாதம் ஓடி விடுகிறது.

ரொம்ப நாளாகவே நிலா, லயா பார்த்து வரணும் என்று நினைத்துக் கொண்டிருந்தது, இந்த ரியாத் பயணத்தில் வாய்த்து விட்டது. இந்தப் பத்து வருஷத்தில் ரியாத் பேலசை விட்டு முதல் முறையாக வெளியில் வருகிறேன். ரியாத் பேலஸில் இருக்கும் சலாலுதின் சேட்டா, பண்டா என்கிற அங்காடி வளாகத்தின் முன்பாக ராஜாவிடம் என்னை ஒப்படைத்தார்.

நிலாவும் வந்திருந்தாங்க தாத்தாவைக் கூட்டிப் போக..புதுசாக ஒரு ஆளைப் பார்த்தால், எல்லாக் குழந்தைகளும் வைத்திருக்கிற முகத்தையே வைத்திருந்தாங்க நிலா. 'என்னடா பாக்குற?..மாமாடா என்று சற்று தடுமாறி , பிறகு ' தாத்தாடா' என்று நிதானித்தேன். (பழைய நினைப்பு போக இன்னும் கொஞ்சம் நாளாகும் போல). 'தாத்தான்னு சொல்லிட்டீங்களா? நான் அங்கிள்ன்னு சொல்லி கூட்டி வந்தேன்' என்று ராஜா சிரித்தார் .

தட்ஸ் ஆல் யுவர் ஹானர்..

பிறகு நிலா பேச்சுல புடிச்சாங்க பாருங்க ஒரு பிடி..

ரியாத் தெருவில் உள்ள கட்டிடங்களையெல்லாம் இது இந்த கட்டிடமாம். அது அந்த பில்டிங்காம். இதுல அந்த அங்கிள் வேலை பார்க்கிறாராம். அதுல அந்த அங்கிள் வேலை பார்க்கிறாராம். இவுங்க ப்ரீ கேஜி படிக்கிறாங்களாம். ராஜாப்பாதான் ஸ்கூல்ல கொண்டு போய் விடுவாங்களாம். அப்பாவை பெயர் சொல்லி ஒட்டினாற்போல ஒரு 'ப்பா' சேர்த்து குழந்தை அழைப்பது எவ்வளவு அழகாய் இருக்கு தெரியுமா?

வீடு போய் சேரும் வரையில் வாய் ஓயவில்லை.

வீடிறங்கி மாடிப்படி ஏறிக் கொண்டிருக்கும் போதே பிரியாணி வாசனை தூக்கியது. 'ராசாராமா அடிச்சடா லக்கிப் ப்ரைஸ்' ன்னு வயிறை தடவிக் கொடுத்துக் கொண்டேன். 'பொறு பங்காளி வரும்ல..எதுக்கு பொங்குற?' ன்னு அவ்வபோது என் வயிறை தடவித் தரவேணும். பாடி லாங்க்வேஜ் புரிஞ்சிக்கிட்டு அதுவும் படுத்துக்கிரும். எல்லாம் நம்ம பழகித் தர்றதுலதானே இருக்கு.

ரொம்ப நாள் பழகியவர்கள் போலான வாஞ்சையுடன் சிரித்து வரவேற்றார்கள் நிலா அம்மா. நிலா அம்மாவைப் பார்க்கையில் எனக்கு மஹாவைப் பார்ப்பது போலதான் இருந்தது. என்ன.. நிலா அப்பாவை நிலா ராஜாப்பா என்கிறாள். மஹா அப்பாவை மஹா வெறும் அப்பா என்றுதான் அழைக்கிறாள். மகள்கள் எப்படி அழைத்தால்தான் என்ன? அல்லது சிரித்து வரவேற்றால்தான் என்ன..

இரண்டாவது நிலா அம்மாவை சந்திக்கிறேன். முதல் நிலா அம்மா மணிஜி வீட்டில். அவுங்க பெரிய நிலா. அதுனால பெரிய நிலாம்மா. இவுங்க சின்ன நிலா. அதுனால சின்ன நிலாம்மா.

பதிவ நண்பர்களுக்கு நிறைய நிலாக் குழந்தைகள் இருந்து, 'மீடியம் நிலாம்மா, நடுசென்டர் நிலாம்மா, ஒண்ணு விட்ட நிலாம்மா' என்று நிறைய நிலா அம்மாக்கள் இருந்தாலும் இன்னும் நல்லாத்தான் இருக்கும்.

'இவன் யார்றா இவன். இவம் பாட்டுக்கு ஏறி உள்ள வர்றான்' என்பது போல லயாக்குட்டி பாத்தாங்க. 'ஆத்தாடி.. இவுங்க யாரு?' ன்னு நானும் சிரித்து வைத்தேன். ரெண்டு குழந்தைகளும் ரொம்ப ஃபிரெண்ட்லி. கூப்பிட்டதும் ' பச்சக்' ன்னு ஒட்டிக்கிறாங்க. வாக்கரை நகர்த்தி தானும் நகர்ந்து கொண்டிருந்தாங்க லயா குட்டி. (இவனை நகர்த்தி தானும் நகரும் சப்பரத் தெய்வம்- நன்றி குமார்ஜி)

வீடு பூராம் நிலா கிறுக்கிய ஓவியங்கள்தாம். அது என்ன இது என்ன என கொஞ்ச நேரம் ஓவியங்களை எல்லாம் காட்டித் தந்து கொண்டிருந்தாங்க நிலா. தாத்தாவுக்கும் பேத்திக்குமான உலகை விரித்து விரித்துக் காட்டிக் கொண்டிருந்தாங்க. 'அப்படி இழுத்து, இப்படி வளைத்து இப்படி கோடு போட்டால் ரெண்டு' என எண் இரண்டை வரைந்தது குறித்து விளக்கிக் காட்டின்னாங்க. 'ஆமாவா?'எனத் தெளிந்து கொண்டேன்.

பஃக்ருதீன் சார், இரண்டு வருடங்கள் முன்பாகவே கருவேலநிழல் கவிதைகள் வாசித்தது குறித்து மெயில் செய்திருந்தார். அவருக்கு ஒரு பதில் மெயில் கூட செய்யவில்லை நான். அவரை ராஜா வீட்டில் சந்தித்த போது சொல்லொண்ணா குற்றவுணர்ச்சி துருத்தியது. 'அட..விடுங்க சார்' என்பது போல சாதாரணமா கட்டி, சாதாரணமா அணைத்து, சாதாரணமா சிரித்து, சாதாரணமாக பேசினார். அசாதாரணமான தருணங்களை தர சாதாரண மனிதர்களால்தான் முடியும் போல. - நன்றி பஃக்ருதீன் சார்!

ராஜா வீட்டில் மற்றொரு சுவராசியமான மனிதரையும் சந்தித்தேன். லக்கி ஷாஜஹான் சார்! 'உங்களுக்கும் சேர்த்து சமைச்சுட்டேன் ஷாஜஹான். நீங்க வராட்டி பார்சல் கட்டி பஃக்ருதீன்ட்டயாவது கொடுத்தனுப்புவேன். அதுனால நீங்களே வந்துருங்க. இது ரெக்வஸ்ட் இல்ல. ஆர்டர்' என்று ராஜா அவரை கூப்பிட்ட போது கூடிய சுவராசியம், வந்து, அவ்வபோது அண்ணாந்து சிரித்து, சோபாவில் கால் மடக்கி அமர்ந்து, ரெண்டு மூணு தடவையாக பிரியாணி கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டு, 'இப்டி சாப்புடுற ஆளுகதான் சமைக்கிறவனை சந்தோசப் படுத்துறாங்க' என ராஜா வாயாலயே சொல்ல வைத்து..இதை ஒருவேளை ஷாஜஹான் சார் வாசித்தால் எப்படி அண்ணாந்து சிரிப்பார் என்பது வரையில் மனசில் சம்மணம் கூட்டி அமர்ந்திருக்கிறார். - ஷாஜஹான் சார், உங்களுக்கு என் அன்பு!

உண்மையில் மிக அருமையாக பிரியாணி, மட்டன் குழம்பு செய்திருந்தார் ராஜா. ஸ்பாட்லயே டைட்டா கட்டிக்கிட்டு, ஸ்லாங்கமா பார்சலும் கட்டிக்கிட்டேன். கிளம்பிய தருணம் நிலா முகம் வாடிட்டாங்க..'ஏண்டா.. தாத்தா நாளைக்கு வர்றண்டா' ன்னு சொன்னேன். மஹா, மாடியில் இருந்து கீழிறங்கி, காம்பவுண்டு கதவு திறந்து, முகத்தையும் வெளியில் நீட்டி, போறது வரையில் பாத்துக்கிட்டு நின்னாங்க. மஹான்னா சொன்னேன் நிலா அம்மாவை?.. இனி மஹாவைப் போயி நிலா அம்மான்னு சொல்றனோ என்னவோ?

எனக்கு ஒரு தம் அடிச்சா தேவலாம் போல இருந்தது. கூட வர்ற நிலா கண்ணைக் கட்டி, ஒரு மர மறைவில் நின்று, தம் கட்டி ஆசுவாசமானேன்...

நிலா, ராஜா, பஃக்ருதீன் சார், ஷாஜஹான் சார் எல்லோருமா வந்து பேலஸ் வாசலில் இறக்கி விட்டுப் போனார்கள். என் இளவரசரின் அரண்மனைக்குள் ஒரு ராஜாவைப் போல நுழைந்தேன்.

பாவம் என் முதலாளி. வெறும் இளவரசர்தான்.


***

புரை ஏறும் மனிதர்கள்:

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14,15,16,17,18


Saturday, October 22, 2011

இலையுதிரும் சத்தம் - நான்கு

ஏழுகடைக் கதைகள்

லதா & லதா போட்டோஸ் & வீடியோஸ்
ஏழுகடையில் ரெண்டாம் நம்பர் கடையில்,'லதா & லதா போட்டோஸ் & வீடியோஸ்' ன்னு ஒரு கடை வச்சுருந்தோம் நானும் நன்பன் மதியும் சேர்ந்து' ன்னு முன்பே சொல்லியிருக்கிறேன் இல்லையா? அவன் மனைவியின் பெயரும் லதா என்பதால் அந்தப் பெயர்.

'ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுறோம். பேசாம மடத்துக்கு மனைவிகள் பேரே வச்சுட்டா என்ன?' ன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சே அந்தப் பெயர் வச்சோம்.

நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சு. 'லெஃபட் ரைட் லெஃபட் ரைட்' ன்னு. ஆச்சா? அப்புறம் குண்டக்க மண்டக்க ஆகிப் போச்சு எல்லாம். நான் இங்க வந்துட்டேன். வந்து கொஞ்ச நாள் கழிச்சு லதாவிடம் பேசும்போது சொன்னாள், 'ஏங்க ரெத்தினம்ன்னு ஒருத்தர் உங்கள தேடித்தேடி வந்துட்டுருக்கார். என்னவோ கல்யாண நெகட்டிவ் வேணுமாம்'

'மதிய பாக்கச் சொல்லு புள்ள. நம்ம வீட்ல ஒரு நெகட்டிவும் இல்ல'

'பாத்துட்டாராம். மதிதான் இங்க போகச் சொன்னுச்சாம்'

'அப்படியா? அப்ப நெகட்டிவ் பழுத்து பாசிட்டிவ் ஆயிருச்சுன்னு சொல்லிரு'

'எல்லாம் பேசுவீக அங்க இருந்துக்கிட்டு'

##

P. சேவுகமூர்த்தி டீ- ஸ்டால்

ஏழு கடையில் அஞ்சாம் நம்பர் கடையில் மூர்த்தி டீக்கடை வச்சுருந்தான். ரெண்டு பென்ச் வெளியில் போட்ருப்பான். கொஞ்சப் பேர் அதுல உக்காந்துக்கிட்டு மிச்சப் பேர் நின்னுட்டு இருப்போம்.

'டேய்...நீங்களே உக்காந்துக்கிட்டா வர்ற கஸ்டமர் எப்படிடா உக்காருவாங்க?' என்றான் மூர்த்தி ஒரு நாள்.
'கஸ்டமர் வந்தாத்தான் எந்திருச்சுருவோம்ல' - செட்டி.
'பெஞ்சு ஃபுல்லா இருந்தா உக்காந்து டீ குடிக்கிறவன் வரமாட்டாண்டா'
'ஆமா இந்த டீயை உக்காந்து வேற குடிக்கணுமாக்கும் - மணி (எ) கிண்ணி மண்ட
'மண்டக் கர்வமா பேசாதீகடா. அழிஞ்சு போவீக'
'இப்ப என்ன உனக்கு? இதுல இருந்து எந்திரிக்கணும். அம்புட்டுத்தானே? எந்திரிச்சாச்சு. அய்யா கஸ்டமரு, ஆத்தா கஸ்டமரு, வாங்க வாங்க வாங்க உக்காருங்க. டீ குடிங்க பேப்பர் படிங்க ஒரு வடை எடுத்து கடிங்க. வாங்க வாங்க வாங்க' - முத்துராமலிங்கம்
இப்படியே பொழுது போய்க் கொண்டிருக்கும். பால் மஞ்சள் தட்டிவிடும் .
'மஞ்சப் பால்ல இருந்து ஒரு டீ போடு மூர்த்தி அண்ணே' - அமரன் கார்த்தி .
'காச வைங்க வெண்ணைகளா'
'மூர்த்தி அண்ணே, கடைய பாத்துக்குறோம் நீ போய் ஒரு டீ சாப்ட்டு வா'- குண்டு கார்த்தி
அடிக்க விரட்டி, கு. கார்த்தியும் ஓடி, கழுத்துப் பிடியா கொண்டுவந்து 'என்ன சொன்ன..என்ன சொன்ன?' என்றான் மூர்த்தி.
'கழுத்த விடுண்ணே. வலிக்குது. ஓங் கடைய விட்டா நாதி இருக்காண்ணே எங்களுக்கு' . நெருக்கிப் பிடிச்சு கேட்டா நெஞ்சுல விழுந்து நக்கிர்றீகளடா ' என்ற மூர்த்தி இப்போ மலேசியாவில் இருக்கிறான். கிண்ணி மண்ட, அமரன் கார்த்தி துபாயில். முத்துராமலிங்கம், செட்டி சிவகங்கையில். நான் இங்க வந்தாச்சு. குண்டு கார்த்தி செத்துப் போனான்.
நெஞ்சுல விழுந்து நக்க இப்ப ஆள் இருக்கா என்னன்னு தெரியல ஏழுகடைல.
##

மணி அத்தானின் மல்ட்டி ஹோட்டல் சென்ட்டர்

ஏழாம் நம்பர் கடையில் சுப்பிரமணி அத்தான் ஹோட்டல் வச்சுருந்தார். ஹோட்டல்னா ஹோட்டலேவா? ஹோட்டல் மாதிரி இருக்கக் கூடாதா என்ன ஒரு ஹோட்டல்?. நாலு பசங்க, கலா அக்கா, அத்தான் எல்லோரும் ஹோட்டல்லயேதான் கிடப்பாங்க. கலா அக்காவ அக்கான்னு கூப்பிடும் போது சுப்பிரமணி அத்தானை அத்தான்னுதானே கூப்பிட முடியும். ஹோட்டல் எப்படி ஹோட்டல் மாதிரியோ அப்படித்தான் சுப்பிரமணி அத்தானும் அத்தான் மாதிரி. சொந்த அத்தானைத்தான் அத்தான்னு கூப்பிடனும்'ன்னு என்ன சட்டமா இருக்கு?



ஹோட்டல்பாட்டுக்கு ஹோட்டல் இருக்கும். சீசனுக்கு தகுந்த மாதிரி சீசன் பிசினசும் பண்ணுவார் சுனா பானா அய்த்தான். இளநி கிடைக்குதா இளநி. கரும்பு கிடைச்சா கரும்பு. பிசினஸ் பியூப்பில்'ட்ட அவர் டீலிங் ஏரியாவே கலங்கிப் போகும். ரெண்டு உதாரணம் மட்டும் இங்க சொல்லலாம்.
'என்ன தண்ணியே இல்ல எளனியில?' -கஸ்டமர்
'ம்ம்ம்..நீரோட்டம் பாத்து இனிமேதான் கிணறு வெட்டணும் எளனிக்குள்ள'
'தடியாவே இல்ல கரும்பு?'- கஸ்டமர்
'இதை விட தடியா வேணுமா? அப்ப மரக்கடைக்குப் போ'

##

முத்து டூ வீலர் வொர்க் ஷாப்

ஏழுகடையில் ஆறாம் நம்பர் கடையில் டூ வீலர் வொர்க் ஷாப். வச்சிருந்தான் டூல்ஸ்முத்து. வரும்போது வெறும் முத்துதான். ஏழுகடையில் எல்லோருக்கும் ஆட்டோமேட்டிக்கா ஒரு பேரு வந்துரும். அப்படித்தான் இவன் டூல்ஸ்முத்து ஆனதும். ஒரு நாள் ஏழுகடை வந்து வண்டிய நிறுத்துறேன். டூல்ஸ்முத்து மனைவி கடை வாசல்ல நிக்கிறாங்க. 'என்னத்தா இப்படி நிக்கிறீங்க?' ன்னு கேட்டேன்.

'இவுங்கள பாக்க வந்தேன். காணோம்ண்ணே' என்றார்கள். 'ஸ்க்ரூட்ரைவரு (டூல்ஸ்முத்து ஹெல்பருக்கு வந்த பெயர்) எங்கடா இவன்?' 'எங்கன்னு சொல்லலண்ணே. இங்கிட்டு வண்டில போனாக' ன்னு திசையைக் காட்டினான். பிறகு முத்துராமலிங்கத்திடம் வந்து விசாரித்தேன்.
'எங்கடா போயிருக்கான் இவன். பாவம் அது வந்து நின்னுட்டு இருக்கு?'
'மாமா திட்டாத. ரெண்டு பேரும்தான் சரக்க ஸ்டார்ட் பண்ணோம். இவன் மட்டையாய்ட்டான். ஏங்கடைல படுக்க வச்சுருக்கேன்'

'வேலை டயத்துல அடிக்காதீகடான்னா கேக்குறீகளாடா?' ன்னு ஒரு அட்வைச பிச்சு எறிஞ்சுட்டு ( நான் அட்வைஸ் பண்றதுக்கும் உலகத்துல இருக்கிற ஒரே இடம் ஏழுகடைதான் என்பதாலோ என்னவோ ரொம்ப பிடிக்கும் இந்த இடத்த) 'எதுவும் அவசரமாத்தா.. இவன் வர லேட்டாகும் போலயே' ன்னு கேட்டேன் டூல்ஸ்முத்து மனைவியிடம்.

'அரிசி பருப்பு ஒண்ணு இல்லைண்ணே வீட்ல. இந்தா வர்றேன்னு வந்தாக அதான் தேடி வந்தேன்' . தூக்கி எறிந்தது அந்த முகம். பிறகு முத்துராமலிங்கம் என்னிடம் இருந்த காசை கொஞ்சம் பொறுக்கி 'இதக் கொண்டு போத்தா. வந்தோன்ன வரச் சொல்றேன்' என்றேன். 'இல்லண்ணே திட்டுவாக அவுக' ன்னு வாங்காமையே போயிருச்சு.

இந்தப் பயணத்தில் நானும் லதாவும் ஏழை காத்த அம்மன் கோயிலுக்கு நம்ம குடும்ப வண்டி டி.வி.எஸ்-50 ல் போனோம்.போற வழியில் இடைய மேலூரில் நிக்க வேண்டியது வந்தது. நின்ன இடம், 'ஸ்ரீ விநாயகா ஆட்டோ ஒர்க்ஸ்'

'அண்ணே' எனக் கூவினான் டூல்ஸ்.

'வா, டீ சாப்டு' ன்னு கூட்டிட்டுப் போனான். பேச்சு அப்டி இப்டி போய்ட்டு அதில் வந்து நின்றது. 'ரெண்டு வருஷம் ஆயிருச்சுண்ணே தண்ணிலாம் விட்டு. ஒத்திக்கு வீடு பிடிச்சு இங்க வந்துட்டேன்' என்றான். நெற்றியில் பட்டையெல்லாம் அடிச்சு சும்மா கும்'ன்னு இருந்தான் டூல்ஸ். .

'ஏழுகடைய விட்டுப் போனாத்தான் எல்லாத்துக்கும் விமோச்சனம்' என்றாள் லதா டீ சாப்பிட்டுக் கொண்டே.

'சும்மாருக்கா. அதுலாம் ஒரு லைஃப். என்னண்ணே?' என்றான் டூல்சும் டீ சாப்பிட்டுக் கொண்டே.

*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3